Saturday, December 29, 2012

அத்தைமகனுனை கண்ட ஆனந்தத்தில்!!



உள்ளம் உன்னோடு போனதென்ன‌
உலகம் நீயென்று ஆனதென்ன
எல்லா உறவும் உனக்குள்ளென -என்
எதிர்காலம் சொல்லும் விந்தையென்ன‌.......

கோபத்தில் பேசாது இருந்தபோதும்
கோடையில் தாகமாய் நானிருந்தேன்
ஆபத்தை கண்ட குழந்தைபோல -உன்னை
ஆவலாய் பார்த்திடத் துடித்தேன்...

தூரங்கள் நீண்டிட துவண்டுபோனேன்
தூதாக கவியனுப்பி காத்திருந்தேன்
பாரத்தின் கொடுங்கோன்மை தாளாமலே
பாதையை தொலைத்த பாதமானேன்...


வானோடு நிலவுக்கு வஞ்சமென்ன‌
வாராமல் எனைதாண்டி போனதென்ன‌
மானோடு தொலைந்திட்ட சீதைபோல‌
மாயவனே உனக்குள்ளே தஞ்சமென்ன...


ஒதுங்கி யொதுங்கி சென்றாலும் பின்னலே
ஒட்டிக்கொண்டு வருகின்றாய் நினைவாலே
அடங்கியிருந்த ஆசையெல்லாம் முன்னாலே
அள்ளி தெளிக்குதென் கண்ணாலே...


இத்தனைநாள் அடக்கிய சோகமெல்லாம்
இதயத்தை வாட்டிய தாக்கமெல்லாம்
அத்தைமகனுனை கண்ட ஆனந்தத்தில்
ஆறாக பெருகியது விழியோரத்தில்....

No comments: