Wednesday, December 26, 2012


துலங்கிடுமோ மாயமான மாயமிது !!


வீடுகள் தோறும் வீதி வரையினில்
காடுகள் போலொரு கருமை படர்ந்தே
பாடுகள் தொடரும் பாதையெங்கிலும்
பாவம் எம்மக்காள் பயத்தினிலே...

வன்மம் நெஞ்சிலே வளர்த்த மிருகங்கள்
ஜென்மம் காத்திட வரைந்த உருவங்கள்
பெண்கள் மத்தியில் பீதியும் கிளம்பிட‌
பெலனில்லா மனங்களாய் புவியினிலே...

கல்லோடும் வாளோடும் காளையர்க ளிரவில்
பொல்லோடுந் தடியோடும் புலரும்வரை இருட்டில்
வல்லோர்கள் கூடிட்ட வேளையிலும் மாயனாய்
வந்ததும் பறந்தானாம் சிக்காமலே...

வாய்வழியாய் வந்திட்ட வதந்தியு மிங்கே
வானளவே விரிந்து வியாபித்தும் நின்றது
நோய் போலெமை பீடித்து மனதில்
நோக்க‌மெல்லாம் சிதறிட்டு பித்தானது...

காவலோனே காவலோனே காத்திரமாய் நீரும்
பாவப்பட்ட மக்களினை காத்திடுவீர் பாரும்
ஏவலோனாய் வந்துபோகும் மாயந்தனை தீரும்
ஏளனமேசெய்யாமல் வேகமாய்நீவீர் வாரும்...

No comments: