Tuesday, December 25, 2012




சுற்றிக்கொண்ட மாயவலை!!




மனதெங்கும் வியாபித்த அந்த‌
மாயவலை தற்செயலாய்
சுற்றிக்கொண்டது தான்
உறுதியில்லாத நூல்களினாலும் 
உண்மையில்லா பிணைப்புக்களினாலும்
ஊருக்காக பின்னப்பட்ட‌து...

உதடுகள் மட்டும் மலரும் புன்னகைகள்
உயிரில்லாத உச்சரிப்புக்கள்
ஊமையாய்ப் போன நேசங்கள்என்பவற்றால்
நிறமூட்டப்பட்ட அந்த‌மாயவலைதான் மிக 
மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டது
சிக்கிக்கொண்ட இதயவலிகள் மட்டும்
கண்ணீர் பூவை சொரிந்துகொண்டே இருந்தது...

அபத்தமான பொய்களெல்லாம்
அலங்காரமிட்டுக்கொண்டு
வெட்கமேயில்லாமல் வெளியேவந்தது
மெய்யைப்போன்று...

நிஜங்களைப்போல வேடமிட்டாலும்
நீர்த்துப்போய் விடுகின்றது பல சந்தர்ப்பங்களில்...

பிரியமில்லாத பரிவுகள்
அன்பேயில்லாத ஆதரவுகள்
உண்மையில்லா உருகுதலகளென்று
வெற்றுத்தனங்களை ஒப்புவித்துக்கொண்டிருக்கும்
இந்த மாயவலையில்
ம‌னதை சிக்கவைப்பதென்பது
எத்தனைமடமையென்று 
மனங்களுக்கு மட்டும் புரிவதேயில்லை
மாயவலை மிக‌
மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது...!!

No comments: