Tuesday, December 25, 2012


புது வருடம் பிறக்குது


வசந்தம் எங்கள் வழிகளில் நின்று
சுகந்த கீதம் பாடுது
கசந்த வாழ்வின் கறைகள் போக்க‌
கசக்கியின்பம் ஊற்றுது...


காலைவானம் பாலைப்போல‌
தூயவிடியல் தருகுது
நாளை எங்கள் சோலைப்பூக்கள்
தாம்பூலந் தருவதாய்ச் சொல்லுது...


கத்தியேந்தி வந்த நெஞ்சங்கள்
கைகள் கோர்க்கத்துடிக்குது
புத்திபுகட்டிய பத்திய வாழ்வு
புதிய பாதை திறக்குது...


தேசம் எங்கள் தேசமென்று
பாசப்பறவைகள் பறக்குது
தோஷமென்று சொல்லி விரட்டிய‌
வேஷம் கலைந்து ஓடுது...


புத்தம்புதிய கீதம்பாடி புதுவருடம் பிறக்குது
நித்தமெங்கள் இதயம்மகிழ புத்தாண்டு மலருது
தத்தம் செய்து அன்பைநாளும் வளர்த்திடுவோம்
சுத்தமான உலகமொன்றை இந்நாளில் இயற்றிடுவோம்...

No comments: