Sunday, August 28, 2016

44வது படைப்பாளி கவிதாயினி ராஹிலா ஹலாம் (26.08.2016)


http://kalkudahnation.com/49401


வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களை ச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர் பெண் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 44வது படைப்பாளியாக இணைகிறார் சிறுகதை எழுத்தாளரும் கவிதாயினியுமான‌ ராஹிலா ஹலாம் அவர்கள். //பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று 'பெண்' என்பதே. ஆணாதிக்கம் இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக, சில இடங்களில் வெளிப்படையாக கூட ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும்// என பெண்ணியகருத்துக்களோடும் குடும்பம் சமூகம் குழந்தைகள் பற்றியும் பல சுவாரஸ்யமான விடயங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார். இவரின் வித்தியாசமான பதில்களுடன் இணைந்துகொள்ளலாம்




01.தங்களது கல்வி தொழில் குடும்பம் பற்றி?


நான் கொழும்பு அல் ஹிதாயா மகாவித்தியாலயத்தில் கல்விகற்றேன். உயர்தர பரீட்சைக்கு பிறகு பெண்களுக்குரிய இரசனை மிகுந்த சமையற் கலை, துணிகளில் நிறங்களை கொண்டு வரைதல் (painting), மட்பாண்டங்களில் வரைதல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு சான்றிதழ்கள் பெற்றேன். பின்னர் தட்டச்சு முறையாக பயின்று சான்றிதழ் பெற்றேன். அதனை தொடர்ந்து தனியார் அறிவிப்பாளர் பயிற்சி விளம்பரம் ஒன்றினை பத்திரிகை ஒன்றில் கண்டதன் பிறகு அந்த பயிற்சியினை பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றேன். 2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் fm வானொலிகளும் அதன் அறிவிப்பாளர்களும் மிகவும் பிரபல்யமாக இருந்த காலம் அது. ஒருவேளை என்னுடைய இந்த பயிற்சிக்கு அதுவும் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம். அந்த பயிற்சியினை தொடர்ந்து 2003ம் ஆண்டு இணைய தமிழ் வானொலி ஒன்றின் அறிவிப்பாளராக இணைந்துகொண்டேன். சில இடைவெளிகள் ஏற்பட்டாலும் அதுவே எனது விருப்பத்துக்குரிய தொழிலாக அமைந்து விட்டது.
எனது குடும்பம் என்றால் எனது பெற்றோர், எனது கணவர், எனது இரண்டு செல்ல மகன்கள் அடங்கிய சிறிய குடும்பம். எனக்கு ஒரு மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனது குடும்பம் என்றால் எனது பெற்றோர், எனது கணவர், எனது இரண்டு செல்ல மகன்கள் அடங்கிய சிறிய குடும்பம். எனக்கு ஒரு மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனது பெற்றோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். எனது கணவர் கணக்காய்வாளராக தொழில் புரிகிறார். மூத்த மகன் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் தரம் 2ல் கல்விகற்றுக்கொண்டு இருக்கின்றார். இளைய மகனுக்கு 2 வயது பூர்த்தியாகியுள்ளது.

02. எப்போது தங்களுக்கு இலக்கியம் மீது ஆர்வம் ஏற்பட்டது?

அநேகமாக சாதாரண தரம் கற்கையில் பாடசாலையில் அதிகளவான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிட்டியதே இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட வித்திட்டது எனலாம்.

03. இதுவரை சுமார் எத்தனை படைப்புக்களை படைத்திருப்பீர்கள்? அவை வெளிவந்த தளங்கள்?

அதிகளவில் இல்லை. நூறிற்கு மேல் கவிதைகளும், ஒருசில சிறுகதைகளும், இரண்டு நூல் விமர்சனங்களும் எழுதியுள்ளேன். நான் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், விமர்சனம் என்பன தினகரன், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, மித்திரன், போன்ற பத்திரிகைகளிலும் பயில்நிலம், சிறகுகள், பேனா, நீங்களும் எழுதலாம், பூங்காவனம், வண்ண வானவில், கொழுந்து போன்ற சஞ்சிகைகளிலும் ஒருசில இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன. என்னுடைய இரண்டு கவிதைகள் என்னுடைய குரலில் பதிவாகி லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. முக்கியமாக என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் 'ஆஷிகா' என்ற புனைபெயரிலேயே எழுதி வருகிறேன். 2012ம் ஆண்டு கொழுந்து சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரத்துவமான மலையக சமூக சேவகி திருமதி இராஜேஸ்வரி கிருஷ்ணசுவாமி ஞாபகார்த்த பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதை போட்டியில் 65 பெண் எழுத்தாளர்கள் பங்குபற்றினார்கள். அதில் 3வது பரிசு 'குப்பைவண்டி' என்ற என்னுடைய சிறுகதைக்கு கிடைத்தது.





04. எவ்விலக்கிய வகைகளை எழுதுகின்றீர்கள்?

கவிதை, சிறுகதை, விமர்சனம், கட்டுரை, போன்றவைகளை எழுதி வருகிறேன்.


05. உங்களது படைப்புக்களில் எவ்வகையான விடயங்களை வெளிக்கொணர விரும்புகின்றீர்கள்?


என்னுடைய படைப்புக்களில் சமூகத்தில் நடக்கின்ற, நான் காணுகின்ற விடயங்களையும், அறியாமல் பலர்விடும் தவறுகளையும் வெளிக்கொணர விரும்புகிறேன்.


06. நூல் வெளியிடும் எண்ணம் பற்றி?

நூல் வெளியிடும் எண்ணம் நிரம்பவே இருக்கின்றது. சிலவருடங்களுக்கு முன் அதற்கான ஆயத்தங்களும் மேற்கொண்டேன். ஒருசில காரணங்களால் தற்காலிகமாக அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துள்ளேன். சந்தர்ப்பம் அமையும் பொழுது என்னுடைய கன்னி நூலை வெளியிடுவேன்.



07. தற்போது உங்களுக்கு ஏனிந்த இலக்கிய ஈடுபாட்டில் ஓய்வு?

சரியாக சொன்னால் தற்காலிக ஓய்வு என்றுதான் கூறவேண்டும். சிறிய மகனை பராமரிப்பதில் நேரம் சரியாக உள்ளது. இன்னும் சரியாக சொல்வதென்றால் நான் எழுதுவதற்கு பேனா எடுத்தால் அதை பறிப்பதிலேயே அவர் கவனமாக இருக்கிறார். வெகு விரைவில் மீண்டும் பத்திரிகை , சஞ்சிகைகளுக்கு எழுத ஆரம்பிப்பேன்.

08.பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வற்கும் தம்மை வெளிப்படுத்துவதிலும் குடும்ப வாழ்க்கை தடையாக இருக்கின்றது என நினைக்கின்றீர்களா?

இல்லை. முதலில் அது தற்காலிக தடையே. குடும்பத்தினர் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் தடையே இல்லை. அவர்களின் உதவியுடனேயே திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தம்மை வெளிப்படுத்தவும் முடியும். அதனால்தான் இன்று தமிழ்மொழி உலகில் பல பெண் எழுத்தாளர்கள், கவிதாயினிகள் உலாவருகிறார்கள்.



09. பல தடைகளை தாண்டியே பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனையாக நீங்கள் காண்பது?

பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று பெண் என்பதே. ஆணாதிக்கம் இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக, சில இடங்களில் வெளிப்படையாக கூட ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும். அடுத்து பொருளாதார தடை. இக்காலத்தை பொறுத்தவரை பொருளாதாரம் என்பது ஒரு விடயத்தை சாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த காரணியாக நேரத்தை குறிப்பிடலாம். ஒரு பெண் குடும்பத்தை நிர்வகித்துக்கொண்டு சாதிப்பது என்பதே ஒரு பெரிய சாதனைதான்

10. பெண்களுடைய வளர்ச்சிகளில் நீங்கள் பெருமைப்படும் விடயம் மற்றும் விசனப்படும் விடயம் பற்றி கூறமுடியுமா?

பெண்களுடைய வளர்ச்சியில் பெருமை என்று கூறினால் அதிகளவான பெண்கள் விளையாட்டுத்துறை, இலக்கியத்துறை, என பல்வேறு துறைகளில் சாதிக்கின்றார்கள். விசனம் என்னும் போது பெண்கள் விளம்பர பொருளாக மாறி வருவதையிட்டு கூறலாம்.

11.பெண்ணியம் பற்றி தங்களது பார்வை?

பெண்ணியம் என்பது என்னுடைய பார்வையில் தற்காலத்தில் பெண்கள் பெண்களாக மதிக்கப்படுவதில்லை. சினிமாவிலும் கதைகளிலும் குறிப்பிடுவது போன்றல்லாமல் பெண்களுக்குரிய இடம் வழங்கப்படுவதில்லை.





12. பெண்ணியத்துக்குள் எவ்வெவ் விடயங்கள் பேசப்படவேண்டும் என எண்ணுகின்றீர்கள்?

பெண்ணியத்துக்குள் பெண்களுக்குரித்தான அனைத்தும் பேசப்பட வேண்டும். உதாரணமாக பெண் உரிமை, சுதந்திரம், விருப்பு வெறுப்பு, உணர்வு போன்றவைகளை குறிப்பிடலாம்.

13. இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கும் அநுபவம் பற்றி?

சில இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளேன். நூல் வெளியீடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். இது ஓர் சிறந்த அனுபவம் பல படைப்பாளிகளை நேரடியாக சந்தித்து இலக்கிய விடயங்கள் பற்றி பேசவும் நட்புறவை வளர்த்துகொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.



14. தங்களைக்கவர்ந்த இலங்கைப் படைப்பாளர்கள்?

மூத்த எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி, அஷ்ரப்ஷிஹாப்தீன், கிண்ணியா அமீர்அலி, வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ H.F. ரிஸ்னா போன்றவர்கள் என்னை கவர்ந்த எழுத்தாளர்கள்.

15. இன்றைய பெற்றார்கள் தம் பிள்ளைகளை அளவுக்கதிகமான‌ கல்வி மற்றும் இதர வகுப்புக்களில் திணிப்பதால் சிறுவர்கள் மானசீகமாக பாதிக்கப்படுவதோடு இறுக்கத்துடன் காணப்படுவதாக கூறப்படுகின்றது இதுபற்றி?
நிச்சயமாக. அதிகளவான கல்வி திணிக்கைகளால் சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் மற்றவர்களிடம் பாராட்டை பெற பேராசைபடுவதால் சிறுவர்கள் அதிகளவில் புள்ளிகள் பெற வேண்டும். இதனால் ஓய்வின்றி பல வகுப்புகளுக்கு இந்த சிறார்கள் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. முடிவில் இந்த சிறுவர்கள் ஒருவித மனஇறுக்கத்துக்கு ஆளாகி உளவியலாக பாதிப்படைகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அதிசிறந்த புள்ளிகளை எதிர்பார்க்காது பிள்ளைகள் அடுத்த வகுப்புக்கு சித்தி எய்தக்கூடிய புள்ளிகளை பெற அவர்களுக்கு இலகு கல்வியினை வழங்க வேண்டும். புள்ளிகளை பாராது உள்ளங்களை பார்த்தால் ஆரோக்கியமான மனநிலை கொண்ட எதிர்கால சந்ததியினரை காணலாம்.



16. வேலைக்கு செல்லும் பெற்றாரினால், பிள்ளைகள் அரவணைப்பு எனும் விடயத்தினை இழந்துபோகின்றார்கள் இதனால் பல பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது இதற்கான வழியாக நீங்கள் கூறவிரும்புவது?

ஆம். பல குடும்பங்களில் பொருளாதார சூழ்நிலை காரணமாக இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அரவணைப்புக்கு ஏங்கக்கூடிய குழந்தைகளாகவும், முரட்டு சுபாவமுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெற இதுவே காரணமாக அமைகிறது. குழந்தைகளை உரிய பாதுகாப்பான முறையில் அவர்களை பராமரிப்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்வதே சிறந்தது.

17. சிறுவர்கள், தொலைக்காட்சி கணனி இன்டநெட் போன்ற விடயங்களில் அதீத ஈடுபாட்டை காட்டுகின்றார்கள் இது எல்லா நேரங்களிலும் நன்மை பயக்கின்றதா ஓர் தாயாக ஏனைய பெற்றாருக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

நவீன காலத்தைப் பொறுத்தவரையில் நற்பலன்களை பெறுவதைவிட இலகுவாக கெடுதியானவைகளே எங்களை வந்தடைகின்றன. இது போன்றுதான் குழந்தைகளையும் தொலைக்காட்சி, இணையம், கணனி என்பன தீயவைகளால் ஆள முயற்சிக்கின்றது. எல்லா நேரங்களிலும் நன்மை பயப்பதில்லை. அளவோடு அவர்களுக்கு அதனை வழங்குவதுடன் எப்பொழுதும் நாமும் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு உகந்த கார்டூனா? உகந்த பாடலா? இதன் மூலமாக அவர்களுடைய மனதில் வன்முறை போன்ற தீய எண்ணங்கள் உருவாகுமா? என நாம் எப்பொழுதும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.



18. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சுவாரஸ்யம் பற்றி உங்களது அனுபவத்தினூடாக கூறுங்கள்?

குழந்தை வளர்ப்பு என்பது இனிமையான ஒரு கலை. ஒவ்வொருநாளும் ஒரு பாடத்தினை கற்கலாம். தினம் தினம் புது புது யுத்திகளை கையாளவேண்டும். குழந்தைகளின் அதிபுத்திசாலித்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறுவதும் ஒரு இனிமையான சந்தர்ப்பம்தான். நாளுக்கு நாள் அவர்களுடைய வளர்ச்சியினை பார்ப்பதும் சுவாரஸ்யமே. மொத்தத்தில் நம்மை அறியாமலே நாட்கள் கடந்துவிடும். குழந்தை வளர்ப்பு... சுவாரஸ்யமான நூல் வாசிப்பு.....

19. குடும்பம் இலக்கியம் உங்களது தனிப்பட்ட திறமைகள் தொடர்பாக இருக்கும் கனவு பற்றி?

மூன்றும் ஒன்றாய் கலந்த, கைகோர்த்த கனவு. நூல் வெளியீடு, தொடர்ந்தும் வானொலி அறிவிப்பாளினியாக கடமை புரிதல்,இன்னும் அதிக அதிகமாக எழுத வேண்டும் என்கின்ற அவா, என்னுடைய பிள்ளைகளும் இந்த ஆற்றல்களை பெற்றவர்களாக எதிர்காலத்தில் வரவேண்டும் என்கின்ற கலவையான கனவு எனக்குள்.



20. கல்குடாநேசன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?

கல்குடாநேசன் வாசகர்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. வாசகர்களாகிய உங்களுக்குள்ளும் பல திறமைகள் மறைந்திருக்கும். அவற்றை முடியுமானவரை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் மனதை இலகுவாக்கும். அப்போதுதான் எமது திறமையை மற்றவர்களும் புரிந்துகொள்வார்கள்.
"சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது..... துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது.... ********************************************** உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட‌ முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே.... ************************************************ மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்....." ********************************************** என்ற பாடல் வரிகள் கூட அதனையே உணர்த்துகின்றது. உங்கள் திறமையினை வெளிப்படுத்துவதால் உள்ளம் மகிழ்கிறது. அதனால் ஆரோக்கியமாக வாழ முடியுமாகின்றது. உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும் ராஜ் சுகாவுக்கும் நன்றிகள். வணக்கம்.




தமிழ் ஓதர்ஸ் இணையத்தில் (25.08.2016) "சேராத நம்முறவ நெனச்சி.."

http://www.tamilauthors.com/03/697.html



Monday, August 22, 2016

தொடர்ந்து வந்திடாதே

திட்டித்துரத்தியும்
திரும்பிவரும்  உனக்குள்
தன்மானமில்லா நேசமா
தகுதியில்லா வேஷமா

தொல்லைகள் காதலாவதில்லை
தொந்தரவுகள் காவியமாவதுமில்லை
தொலைக்க நினைக்கிறேன்
தொடர்ந்து  வந்திடாதே......


(ஒரு  சகோதரனின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது

தொடராதே...

தொடராதே...

நிழல்கள்
நிலவுள்ளவரையென்பதும்
வண்டுகள்
தேனுள்ளவரையென்பதும்
நானும் அறிவேன்

பறப்பதெல்லாம்
பறவையென்றால்
சிறகுக்கென்ன மதிப்பு??

தொடராதே...

குப்பைக்கே

பசிக்கும்போது  கிடைக்காத புரியாணியும்
பாதைவிலகும்போது  கிடைக்காத  உபதேசமும் குப்பைக்கே!!

தகுந்த நேரத்தினை

நாம் விரும்புவதை இறைவன்  தரவில்லையென  புலம்பாதீர்கள் நம் கனவுகளை அவர்  அறிந்திருக்கிறார்  என்பதில் திருப்திகொள்ளுங்கள். தகுந்த நேரத்தினை அவர்  மட்டுமே  அறிவார்

ஆயுதம்

என்னை  வெல்லும் ஆயுதம், அன்பெனும் கிடங்குக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது.

உன்னை விடாதே

அறிவுக்கு கடிவாளமிடாதே
ஆசைளுக்கு அதிக‌ சுதந்திரம் கொடுத்துவிடாதே
இல்லையெனில் ஆபத்து  உன்னை   விடாதே.....

ஆடம்பரங்களில் இல்லை

நிலவு  தராத  இன்பத்தை   திருப்தியை, நீண்ட  ஆயுளில்லா மெழுகுவர்த்தி  தந்துவிடுகின்றது.

(வாழ்க்கையின்  இன்பங்கள் ஆடம்பரங்களில் இல்லை)

Sunday, August 21, 2016

நிழலுக்கா

வெயிலுக்கு குடையில்லையென கவலை கொள்ளாதே தூரத்தில்
விருட்சம் ஒன்று காத்திருக்கலாம் நிழலுக்கா......


எரிமலை

பூமிக்கு
புகைப்பழக்கம்
எப்போது  வந்தது
எரிமலை

Saturday, August 20, 2016

காதலில் உண்டோ கண்ணாளா

நீ
நான்
நம் அருகாமை
நம் அறியாமை
அதுதரும் அந்யோன்யம்...

சிதறும் சிந்தனை
சிறையெடுக்கும் பார்வைகள்
சிதையாத கட்டுப்பாடுகள்...

பயமில்லா நிமிடங்கள்
பதுங்கித்திரியா நிகழ்வுகள்
பதறாத வார்த்தைகள்...

உரிமையின் நீளங்கள்
உலகறியும் ஞானங்கள்
உள்ளத்தை மதிக்கும் தெளிவுகள்...


இதெல்லாம்
இன்றைய  காதலில் உண்டோ கண்ணாளா
இதற்குத்தான் காத்திருந்தேனா மணவாளா!!

பேசிப்பேசி

பேசிப்பேசி
போதையேற்றினாய்
பேசாமலென்னை
பேதையாக்கினாய்..!!

அவர்கள்

அவர்கள்
கலிகால அட்டைகள்
காயமில்லாமல்
இரத்த முறுஞ்சுவார்கள்....

அவர்கள்
தொடர்நாடகங்களின்
காலங்களையும் தோற்கடிப்பார்கள்
வேதன உயர்வு பற்றிய‌
மேடையேற்புகளில்...

அவர்கள்
பாதையோர வியாபாரிகள் போல‌
வெளிநாட்டுக்கு
எம் பிள்ளைகளைக்காட்டி
தம் பிள்ளைகளை
பண்டிதராக்குவர்...

அவர்கள்
தெரு நாய்களைப்போல‌
குரைத்துக்கொண்டே  இருப்பர்
கடிக்க மாட்டார்கள்...

நாங்கள் பொத்திவளர்த்ததும்
போற்றி வளர்த்ததும் இப்படித்தான்!!


(21.05.2011ல் எழுதப்பட்டது)

உன்கலையும்

உங்களைப் பிடிக்கும்
உன்கலையும் பிடிக்கும்

Friday, August 19, 2016

எடிசன்கள்

படி  படியென திணிக்காதீர்
படிப்பொன்றும் பிணியல்லவே
மருந்தாய்   பருக்குவதற்கு
எடிசன்கள் திணிப்பை விட‌
திறமையைத்தான் நம்புகிறார்கள்!!

(2011ல் எழுதி லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது)

கதைகதையாய் பேசப்போகின்றேன்....


காய்ந்துபோன இத்தேசத்தின்
கறைகள் பற்றி  நான்  பேசப்போவதில்லை
மாய்ந்துபோன மனிதம் பற்றியோ
மாற்றமுடியாத  உள்ளங்கள் பற்றியோ
மாற்றியமைப்பது  பற்றியோ நான் பேசப்போவதில்லை...


நன்றி மறக்கும்  நட்பு பற்றியோ
நாகரிகம் மறந்த நளினங்கள் பற்றியோ
குழிபறிக்கும் கூட்டங்கள்  பற்றியோ
குரோதங்கள்  வளர்க்கும் உறவுகள் பற்றியோ
நான் ஒருபோதும் பேசப்போவதில்லை....


வக்கிர  பார்வையின்  வளர்ச்சி பற்றியோ
உக்கிர நெஞ்சங்களின் உதாசீனங்கள் பற்றியோ
அக்கிரமக்காரரின் அட்டூழியங்கள் பற்றியோ
பற்றியெரியும் பாவக்கறைகள் பற்றியோ
நான் இனி  பேசப்போவதில்லை...


துடிப்பே  இல்லாத  துரோகங்கள் பற்றியோ
துவண்டுவிடும் இரக்கங்கள் பற்றியோ
பதைப்பே  இல்லாத  பழிவாங்கல்கள் பற்றியோ
பணத்தை  நோக்கிய பாசங்கள் பற்றியோ
நான் பேசப்போவதேயில்லை....



சுவாசம் அடங்கும் கடைசி மணித்துளிபற்றி
சுதந்திரமாய்  பிரியப்போகும் இறுதிமூச்சு பற்றி
சேமித்துவைத்த  நன்மைகள் பற்றி
சேர்க்க முடியாத  நல்லவைகள் பற்றி இனி
அதிகமாய்  பேசப்போகின்றேன்....


கல்லறைக்குப்  பின்னால்  கட்டப்பட்டிருப்பவை பற்றி
கண்மூடியபின் காணுமுலகம் பற்றி
கடவுளின் தராசில் உயர்வு  தாழ்வு  பற்றி
கரைந்து  போகுமுடலும் கரையா  உயிர்பற்றியும்
கணக்குவழக்கில்லாது  கதைகதையாய்  பேசப்போகின்றேன்....

மாமனிதனென் பேன்...

முயற்சி  இல்லாதவனை
முடவன்   என்பேன்
பயிற்சி  எடாதவனை
மூடன்  என்பேன்...

உனது  சோற்றை 
உருவாக்கு என்பேன்
தினக்கூலி எனினும்
உழைத்துன் என்பேன்...

கையேந்தி நிற்பது
கையாலாகாத் தனமென்பேன்
ஏந்திய  கைகளுக்கிடுவது
இறைத்தன  மென்பேன்...


கனவே  இல்லாதவன்
கடனாளி  என்பேன்
தனக்கானதை  தேடாதவன்
நோயாளி என்பேன்...

இலக்கே  இல்லாதவனை
இயலாதவன்  என்பேன்
வழக்கத்தை  மாற்றுபவன்
பலசாலி என்பேன்..

வெற்றியை நேசிப்பவன்
சாதனையாளன்  என்பேன்
எதிர்நீச்சல் போடுபவனையே
மாமனிதனென்  பேன்...

தோல்வியுடன்  என்றும்
தோழமை கொள் என்பேன்
வீழ்ச்சியின் பாடங்கள்தான்
வழிகாட்டி யென்பேன்...

கண்ணீரை ஆயுதமாக்குபவன்
கண்ணில்லாத  வனென்பேன்
மண்ணுயிரை மதிப்பவன்
மகத்துவமானவனென் பேன்...

போராட்டத்தை ஏற்பவன்
புகழுக்குரியவன்  என்பேன்
சீரான  வாழ்வுக்குரியவனை
சிறப்பான வனென்பேன்...

கடமை இல்லாதவனை
கபோதி என்பேன்
பொறுப்பை  சுமக்காதவன்
பிணம் என்பேன்.....

Thursday, August 18, 2016

43வது படைப்பாளி புகைப்படக்கலைஞர் ரமீனா அன்சார் (19.08.2016)

http://kalkudahnation.com/48788





வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களை ச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர்  இளைய படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். 

கல்குடா  நேசனின் 43வது படைப்பாளியாக இணைகிறார் புகைப்பட  கலைஞரான ரமீனா அன்சார்  அவர்கள். இவர் பாணந்துறையை பிறப்பிடமாகக்கொண்டவர்  தற்போது தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றிலிருக்கின்றார். விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த  அவரை கல்குடா  நேசனுக்காக அணுகினோம் அவரது அவசர  வேலைகளுக்கு மத்தியில் எமது  கேள்விகளுக்கு சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்த  அவருக்கு எமது  வாழ்த்துக்களோடு  நேர்காணலில் இணைவோம்.


(புகைப்படத்தினம் கொண்டாடும் இந்த இனிய நாளில் கல்குடா நேசன் வழங்கும் நேர்காணல் பகுதியில் ஓர் புகைப்படக்கலைஞரை அறிமுகம் செய்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியும் பெறுமையுமடைகின்றோம். கல்குடாநேசன் சார்பாக புகைப்படக்கலைஞர் சகோதரி ரமீனா அன்சார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அனைத்து புகைப்படத்துறைசார் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்)


01. தங்களைப்பற்றிய   அறிமுகம் எமது வாசகர்களுக்காக? 


பெயர் ரமீனா அன்சார், இலங்கையில் பாணத்துறை பிறப்பிடம் .  அம்பலந்துவை முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன்
. உயர் கல்வி களுத்தறை மகளிர் மகா  வித்தியாலயத்தில் முடித்தேன்  தற்போதுமத்திய கிழக்கில்  பணிபுரிகின்றேன்.


02.  தங்களின் தொழிற்துறை பற்றி?

 கம்பியூட்டர் எம்ப்ரோய்டைரி டிசைனர்& போட்டோகிராபர்

03.புகைப்படத்துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

முதலில் செல்போனில்  தொடங்கிய எனது தேடல் .இயற்கை காட்சிதான் எனது முதல் புகைப்படம்..  குவைத் போன்ற பாலைவன நாட்டில்  இயற்கை காட்சிகள் இல்லை
இருப்பினும் என் பயணத்தை தொடர்ந்தேன்


04.இந்தப்பாதையில் நீங்கள்  சந்தித்த  சவால்கள்?

பெண் என்ற முறையில் இந்த துறையே சவால் தான் என்னை  பொறுத்த வரை.

05.முஸ்லிம் பெண் என்ற  வகையில் உங்களுக்கு பல வரைமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கும் அதனுடன் உங்கள் புகைப்படத்துறை வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்?

இன்றய நவீன உலகில்  பல துறையில்  பெண்கள் சாதித்து வருகிறார்கள். நம் ஒழுக்கத்தை பேணி எத்துறையிலும்
சாதிக்கலாம் என்பதே என் கருத்து.

06.இத்துறையில் தங்களுக்கு  கிடைத்த வெற்றிகள் பாராட்டு பரிசுகள் பற்றி?

குவைத் இளங்குயில் வழங்கிய பொதுநல வேந்தர்  அவார்ட்.
 ஒன்லைன் சிங்கில் போட்டோகிராப்பில் பல முறை  அவார்ட் கிடைத்துள்ளது



07.பொதுவாக வெளியுலகிற்கு வரும் பெண்களுக்கு பல எதிர்ப்புக்கள் சவால்கள் காணப்படுகின்றது  இவற்றை எவ்வாறு எதிர்நோக்கவேண்டும்  என நினைக்கின்றீர்கள்?

ஒவ்வொரு எதிர்ப்புக்களையும்  முறியடித்து நமக்கு சாதகமாக அமைந்தது கொள்வது தான் மிக முக்கியமான அம்சமாகும்

08. குடும்பத்தில் தங்களுக்கிருக்கும்  ஆதரவு பற்றி?

கண்டிப்பாக இதில் நான் சந்தோஷம் அடைகின்றேன்.வீட்டில் எல்லோரும் எனக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருக்கின்றார்கள்


09.இத்துறையில் நீங்கள் சாதிக்க விரும்புவது?

அமையும் வாய்ப்புக்களை குறையின்றி முடிப்பதே ..


10.உங்கள் முன்னோடி யார்? உங்களை வழிநடத்துபவர்கள் ஊக்கப்படுத்துபவர்கள் பற்றி?

புகைப்பட துறையிலிருக்கும் எனது தோழி நசீமா அவர்கள் தான்



11.புகைப்படக் கலைஞர் எனும்போது நேரகாலம் சூழல் பாராது இயங்க வேண்டும் அவ்வகையான உங்கள் அநுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?


ஆம் சில சமயங்களில் நாள் முழுதும்
நிகழ்வு இருக்கும் .. சில நிகழ்வுகளில்
பெண்களே இல்லாமல் இருக்கும்.
உதாரணமாக இலங்கையில் பாண‌துரை
பிரதேசத்தில் நடந்த போதைப்பொருள்
எதிர்த்து நடைபவனியில் கலந்துகொண்டேன் அதில் பெண்ணாக நானும் .பொதை பொருள் தடுப்பு அதிகாரி ரிப்கா சாலி அவர்களும் மட்டுமே ..


12. எவ்வகையான புகைப்படங்கள் எடுப்பதில்  ஆர்வம்காட்டி வருகின்றீர்கள்?

இயற்கை.மற்றும் சமூக நடைமுறைகள்


13. இத்துறையில் இளம் வயதினரின் ஈடுபாடு, புதியவர்களின்  வருகை எவ்வாறு காணப்படுகின்றது?

தற்போது இளம்பெண்கள் ஆண்களை விட அதிகமாக ஈடுபாடு என்பதை சில நிகழ்வில் பார்த்து வருகிறேன்


14.புகைப்படத்துறையின்  மூலம் தங்களுக்கு  பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் காணப்படுகின்றதா?

வருமானம் தேவைதான் இருப்பினும்    தன்னார்வம் மட்டுமே.


15. இன்றுகளில் புகைப்படத்துறை என்பதின்  வளர்ச்சியினை முகநூலில் அதிகமாக காணமுடிகின்றது. எல்லோராலும் இக்கலைத்துறையில் ஈடுபட  முடியுமா? அல்லது இதற்கு எவ்வகையான நுட்பமுறைகள் தேவைப்படுகின்றது?


விருப்பம் உள்ளவர்களுக்கு எதுவும் சாத்தியமே

16.உங்களுக்கான வாய்ப்புக்கள் சந்தர்ப்பங்கள் எவ்வாறு  அமைகின்றது?


சிரமம் தான் என்னுடய ஆர்வதினாலும் நண்பர்களின் உதவியினாலும் வாய்ப்புகள் கிடைக்கிறது.



17. கல்குடாநேசன் இணைய  வாசகர்களோடு இணைந்துகொண்டது பற்றி?


மிக்கமகிழ்ச்சி என்னையும் ஒரு  கலைஞராக‌ தேர்வு செய்து உங்களில் ஒருவராக   ஏற்றுக்கொண்டமைக்கு.
மற்றும் என்னுடைய துறையில் கிடைக்கும் தமிழ் செய்திகள் புகைப்படத்துடன்  பகிர்வேன்  கல்குடா  நேசன் இணைய  வாசகர்களுக்கு.


18. நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஆலோசனைகள் அல்லது எதிர்பார்ப்புக்கள்? 

ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை  வாழ்வில் இன்னும் சாதனைகள் செய்யவேண்டும் எனபதே எனது ஆசை.