Tuesday, December 25, 2012

நிஜங்களைத்தொலைக்கும் நிஜங்கள்...





 அலுவலகத்துக்கு போகும் அவசரத்தில் தனது ஈரத்தலையை பின்னலிட்டுக்கொண்டிருந்த அனிதாவிடம், 'ஏய் அனி இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க ஏதாவது ஸ்பெஷலா...'என்றாள் நண்பி ர‌ம்யா. "எனக்கென்னடி ஸ்பெஷல் அந்த வயசெல்லாம் தாண்டி வந்திட்டன் இனிமேல்தான் ஸ்பெஷல் வரப்போகுதா...என சலித்துக்கொண்ட அனிதாவின் மனதை ரம்யாவினால் புரிந்துகொள்ளமுடிந்தது.

'ஏய் நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே வயசு, என்னவோ நீமட்டும் கிழவியாகிட்டத போல பேசுற....ரொம்ப பீல்() பண்ணாத உனக்கென்று ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான் கொஞ்சம் பொறுமையா இருடி...என்றவளிடம், சரி போதும் போதும் எனக்கு நேரமாகுது...நான் போயிட்டு வாரன் என்று கிளம்பியவளின் வேதனை ரம்யாவின் ஊமைக்காயத்தையும் வலிக்கச்செய்தது.

அனிதாவும் ரம்யாவும் தமது தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் விடுதியில் அறிமுகமானவர்கள். ரம்யா அனிதாவின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வாள். சாதாரணதரக் குடும்பத்தில் பிறந்த அனிதா பெற்றாருக்கு இளையவளாய் பிறந்தவள். உயர்தரம் முடித்த கையோடு தலைநகரில் ஒரு தொழில் கிடைக்கவும் வந்து இணைந்துகொண்டாள்.குடும்பத்தில் அநேகமாக மூத்த பிள்ளைக்குத்தான் பொறுப்புக்கள் அதிகம். ஆனால் இவள் அப்படியல்ல, குடும்ப பாரத்தையும் தாண்டி தனது மூத்த சகோதரியின் பாரத்தையும் சுமக்கின்றாள்.இல்லத்தரசியான தாயார் சாதாரண குமாஸ்தாவாக பணிபுரியும் தந்தை, பாடசாலைக்கு செல்லும் தம்பி தங்கை, திருமணம் முடித்த கையோடு பிறந்த வீட்டுக்கு வந்திட்ட அக்கா என்ற உறுப்பினர்களை கொண்ட குடும்பம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முதல் அனிதாவின் அக்கா சுகுணா, தான் காதலித்தவனை பிடிவாதமாக மணம் முடித்தாள்.தன்னால் முடிந்தளவு செலவு செய்து மூத்த மகளின் திருமணத்தை குடும்ப கெளரவத்துக்கு பங்கம் ஏற்படாதவாறு நடத்திமுடித்தார் அனிதாவின் அப்பா.

சீரோடு புகுந்தவீட்டுக்குள் போன சுகுணா, தான் காதலித்தவனோடு சந்தோஷமாகவே குடும்பம் நடத்தினாள்.ஆனால் சுகுணாவின் கணவனோ குடும்ப பொறுப்புக்கள் இல்லாத ஊதாரியாக இருந்தான்.ஏனோதானோவென்று தொழிலுக்கு செல்வான் சிலநேரங்களில் நண்பர்களோடு இணைந்து ஊர்சுற்றுவதற்கும் கிளம்பிவிடுவான்.பெற்றோரின் உழைப்பில் சுகம் கண்டவனுக்கு இப்போது குடும்பம் என்று ஆனவுடன் அவனால் சமாளிக்க முடியாமல் பலப்பல பிரச்சனைகள் நாளும் வெடித்தது.சில நாட்களில் தனது அலட்சியத்தினால் தொழிலையும் இழந்து போனான்.

மாமா மாமியாரின் தொந்தரவும் நாளும் குடித்துவிட்டு சண்டையிடும் கணவனோடு குழந்தையை வைத்துக்கொண்டு அங்கலாய்க்கும் சுகுணா பிரச்சனைகளிலிருந்து விடுபட தாய் வீட்டுக்குள் அடைக்கலமானாள்.

வந்தவர்களை போவென சொல்லத்தெரியாத வீட்டார் பலமுறை சமரசம் பேசிப்பார்த்தார்கள் பலனில்லை. ஊரெல்லாம் வட்டிக்கு கடன் வாங்கி மனைவியின் நகைகளை அடகுவைத்து வாழும் கணவனோடு எந்த பெண்தான் சந்தோஷமாக வாழ்ந்துவிடுவாள்? சுமையோடு வந்தவள் இங்கே இறக்கிவைத்துவிட்டாள் அதைத்தான் இப்போது அனிதா சுமந்துகொண்டிருக்கிறாள்.அக்காவின் கடன்கள் அவளது மாதச்சம்பளம் விழுங்கிவிடும். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் அநுபவிக்காது தனது எதிர்காலத்தையும் சிந்திக்காது சிறுகச்சிறுக சேமித்து சீட்டுக்கட்டி பல கடன்களை கட்டி முடித்து நகைகளையும் மீட்டிருந்த்தாலும் அவளது மனமும் உடலும் இயந்திரமாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றது.

எத்த‌னை வேதனை இருந்தாலும் அதை வெளியே காட்டி கண்ணீர்விட்டு அநுதாபம் தேடமாட்டாள் ஏன் தனது நெருங்கிய நண்பி ரம்யாவிடம் கூட அடிக்கடி வேதனைப்பட்டுக்கொள்ளமாட்டாள்.
சினிமாவிலும் கற்பனையிலும் மாத்திரம் சில பெண்பாத்திரங்கள் இவ்வாறு அமைவதுண்டு ஆனால் நிஜத்தில் நூறுவிகிதம் சாத்தியமில்லை.அனிதா அதில் ஒருத்தி எப்போதும் கலகல‌ப்பாகவே இருப்பாள் அவளின் நிலமையை சிந்தித்துக்கொண்டிருந்த ரம்யாவுக்கு நேரம்போனதே தெரியவில்லை வேகமாக தன்னை தாயார் செய்துகொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டாள்.

ஓறரிவுள்ள புழுவுக்கும் கூட போராட்டமிருப்பது இயற்கை ஆறறிவுள்ள மனிதன் போராடுவது ஒன்றும் வியப்பில்லை என்றாலும் சாதாரண பெண்ணான அனிதாவின் போராட்டம் சிறியாதாக தோன்றவில்லை. சுயநலத்துக்காக எத்தனையோ மனித மனங்கள் பெற்றோர்களையே மதிக்காத இந்தக்காலத்தில் தன்னை நினைக்காமல் தன் குடும்பத்தையே சிந்தித்துக்கொண்டிருக்கும்  அவர்களை விசாரித்து தேவைகளை நிறைவேற்றும்  அவளது பொறுப்பை வியக்காமலிருக்க முடியவில்லை. அனிதாவைப்போல வாழ்க்கையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு இறைவனே வழி காட்டவேண்டுமென மனம் பிரார்த்தித்துக்கொள்கின்றது.

புன்னகைக்காக விரியும் இதழ்களைத்தாண்டி அவள் இதயத்தில் சில்லிடும்  வேதனையை நினைத்து என் உள்ளம்தான் நிஜமாக அழுதது ஆனாலும் கண்கள் ஈரமாக இருந்தது.


No comments: