Wednesday, October 30, 2013

சொல்லியழும்!!

தனிமைத்தீயினை
தாராளமாய்க் கொளுத்திவிட்டு
தள்ளிநின்று பார்க்கின்றாய்

ஈவிரக்கங்களை குடித்துவிட்ட -உன்
இதயத்திடம் கேட்டுப்பார்
இறந்துகொண்டிருக்குமென்
இறவாக்காதலை சொல்லியழும்!!



Monday, October 28, 2013

பாவத்தீயை பற்றவைத்துவிட்டீர்!!

அல்லல்கள் எமக்கொன்றும்
ஆச்சரியங்களில்லை
அழுகைகள் இங்கொன்றும்
அதிசயங்களில்லை

சொத்துக்களை இழந்ததாலா
சோர்ந்துபோனேமென்றீர் இல்லை
சொந்தங்களை பறித்ததாலல்லவோ
சோபையிழந்துபோனோம்

அன்னையை தந்தையை
அண்ணனை தம்பியை தொலைத்து
அநாதைகளானோம் மகுடமாய்
அகதிகளாயுமானோம்

கணவனை மனைவியை
கண்ணான எம்சொந்தங்களை
கண்ணீருக்குள் தொலைத்திட்டு
கதி(ளை)யிழந்துபோனோம்

கண்ணிவெடிகளுக்கு எம்
கால்களை கொடுத்தோம்
மண்ணைத்தின்றிடும் குண்டுகளுக்கு
கண்களையும் கொடுத்தோம்
அங்கங்கள் ஒவ்வொன்றையும் கொடுத்துவிட்டு
எஞ்சிய உயிரோடு இதோ
ஏதிலிக்கூட்டங்களாய் 
ஏதுமறியாமல் நிற்கின்றோம்

பூமிக்குள் எங்கள்
புன்னகையை புதைத்துவிட்டு
உதடுகளை பொருத்தச்சொல்வதில்
நியாயமென்ன?

அப்பாவிகளெமது 
அமைதியை குடித்துவிட்டு
ஆரவாரப்பூக்களை அள்ளித்தெளிப்பதில்
அர்த்தமென்ன‌?

கருவாட்டுக்குள் மொய்க்கும் ஈக்களாய்
உருமாறிப்போன எம்முலகுக்கு
ஒளிதேடியே களைத்துப்போனோம்
வருவோர் போவோரின் வார்த்தைகளுக்குள்

முடிந்துவைத்துள்ள மூச்சுக்காற்றின்
முடிச்சுக்களை அவிழ்த்துவிடுங்கள்
நாங்கள் சூறாவளியாகியுமை
மூழ்கடித்திடமாட்டோம் எங்கேனும்
முயல்கள் சிறுத்தையை
விழுங்கிவிட்டதாய் இதுவரை
கதைகளேதும் வெளியாகவில்லை

பாவத்தீயை பற்றவைத்துவிட்டீர் இனி
சாபக்காயங்கள் ஆறிவிடப்போவதில்லை!!


மறந்தேவிடுகின்றேன்.

காயங்களை கடத்திவிட்டு
கனவுகளிடமிருந்து மீண்டுவிட்டு
கண்ணீரிலிருந்து எழுந்துவிட்டு
கவலைகளிடமிருந்து விடைபெற்றுவிட்டிந்த‌
கலவரங்களினின்று
காணாமல் போய்விடவே
கண்விழிக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும்
கணக்கிடுகின்றேன்

கதறியழும் குழந்தை அன்னையை
கண்டதும் அடங்கிவிடுவதைப்போல‌
உன் நினைவுகள் மறித்திடும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும் இதனை
மறந்தேவிடுகின்றேன்....

**********.......................... **********.......................... ***********...................... *********......

அவனேயிருக்கின்றான்

தழுவிடும் தென்றலும்
தாளாத வெப்பமும்
தரைதொடும் அலைகளும்
தகித்திடும் நிலவும்

பிறந்திடும் நொடிகளும்
புகுந்திடும் நிமிடங்களும்
மறந்திடா நினைவுகளாய்
மனதை வாட்டுகின்றது

இயற்கைக்கு அப்பால் -ஒரு
இடமிருந்தால் சொல்லுங்கள்
நினைவுகளைவிட்டு
நீங்கிவிடவேண்டும்
எல்லாவற்றிலும் அவனேயிருக்கின்றான்!!



Saturday, October 26, 2013

உறங்கவேயில்லை...


இறுகிப்போன இதயம்
இன்னுமே இயல்பாகவில்லை
இரவுகளை விரட்டும் விழிகளும்
இனிமைகளை குடிக்கும் நினைவுகளும்
இதுவரையில் உறங்கவேயில்லை



முடியவில்லை...

இப்போதுகூட நீ
விரும்புவதைப்போல என்னால்
ஆகமுடியவில்லை
ஒரு பட்டதாரியாக
ஒரு பணக்காரியாக‌
ஒரு அழகியாக‌
ஒரு அரசாங்கதொழிலாளியாக‌
ஆகவே முடியவில்லை

நீ விரும்புவதைப்போல‌
என்னால் முடியவில்லை
உன்னை விரும்புமந்த விருப்பத்தை
என்னால் விரும்பாமல் இருக்கவும்
முடியவில்லை...



எதுவுமே இன்னும் மாறவில்லை




எதுவுமே இன்னும் மாறவில்லை
எதிராக எதுவும் நிகழவில்லை
அப்போதிருந்த இதயம்
அன்றிருந்த அன்பு என்று
எதுவுமே மாற்றப்படவில்லை

அதே கனவுகள்
அதே நினைவுகள்
அதே உணர்வுகளென்று
எதிலுமே மாற்றங்களில்லை

நொடிக்கு நொடி நினைப்பது
அடிக்கடி நினைவுக்குள் புதைவதும்
பிடிக்காததுபோல் நடிப்பதும் -பின்
மடிமீதுன் கனவுகளை தாலாட்டுவதுமாய்
இன்னும் எதுவும் மாறவில்லை

பெயரிலுள்ள ஓரெழுத்தை கண்டாலே
உயிருக்குள் மகிழ்வதும்
உன் முதலெழுத்துமென் முதலெழுத்தும்
ஒன்றாக இருந்தாலே பொங்கியெழுவதும்
இப்போதுகளில்கூட ஓயவில்லை


எல்லா பாதைகளும் நம்
பயணத்தையும்
எல்லா விடயங்களிலும் -நம்
நினைவுகளுமே
நிர‌ம்பி வழிகின்றது இனியுமிதில்
மாற்றங்கள் நிகழப்போவதில்லை

என்று தொடங்கியதோ
அன்றிலிருந்து
கண்ணீரும் காயங்களும்
வலியும் பிரிவும்
வந்து வந்துபோனாலும்
நிரந்தரமாக நீங்கிச்செல்வதை
நினைத்த‌துகூட இல்லை
இன்னும் நேசிக்கின்றேன்
இன்னுமின்னு மதிகமாகவே நேசிக்கின்றேன்

விழித்துக்கொண்டிருக்கின்றேன் -இன்றும்
விழித்துக்கொண்டேயிருக்கின்றேன்
புரியவைக்கும் புத்தியில்லாமல் -காதலை
தெளியவைக்கும் அறிவில்லாமல்..






Friday, October 25, 2013

கல்யாணத்தைக்கூட‌

காதல் தவிர‌
எதையுமே
எதிர்பார்க்கவில்லையென்று
என்னிடம் சொல்லியிருந்தாய் நம்
கல்யாணத்தைக்கூட‌
எதிர்பார்க்கவில்லையென்று
இன்றுதான் உணர்ந்துகொண்டேன்
அநாயசமாய் நீ
பிரிந்துசெல்கின்ற இந்த‌
பொல்லாத கணங்களில்..





Monday, October 21, 2013

எழப்போவதில்லை






இரவாய்ப் போன வானத்தில்
சூரியன் தேடுகின்றாய்

இயங்காத ஊன இதயத்தில்
உணர்வுகளை எதிர்பார்க்கின்றாய்

கல்லறை பிணத்திற்கு
காதல் கடிதம் நீட்டுகின்றாய்

கானல் நீருக்குள்
வண்ண மீன்கள் பிடிக்கின்றாய்

அமாவாசை நிலவில்
வெளிச்சத்தை விரும்புகின்றாய்

அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய -உன்
ஆக்கங்கள் எழப்போவதில்லை

நீ,

தொலைத்ததை தேடவில்லை
தொல்லையென்றெண்ணியதை நாடுகின்றாய்

வசந்தத்தில் மட்டுமே வயப்பது உன்
வாலிப விருப்பத்தின் திருப்பங்கள்

தூர்ந்துபோன தீபத்தில்
ஒளி பிரகாசிக்கப்போவதில்லை
மீண்டும் தீபமேற்றாதே.....

Friday, October 18, 2013



எல்லாரும் கேட்கின்றார்கள்
என் புன்னகையெங்கே என்று
என்னவென்று சொல்வேன்
என் புன்னகையையும் உன்னையும்
என்னிலிருந்து பிரிக்கமுடியாதென்றும் -நீ
என்னைவிட்டு பிரிந்து சென்றாயென்றும்

Monday, October 7, 2013

மகிழ்ச்சியை கண்ட மணித்துளிகளில்...





நாகரிக வேகத்துக்கேற்ப நளினமான வீடுகள்
நகரத்து வாசமில்லாத நல்லவர்களின் புன்னகைகள்
தூய்மையான காற்று தூபமிடும் மரங்கள்
துணைக்கு இணையாய் துள்ளியோடும் பிராணிகள்..

மனிதத்தை போற்றிடும் மனதுள்ள மனிதர்கள்
மற்றவரின் துன்பத்தை ஏற்றிடும் மாநுடர்கள்
புனிதத்தை காட்டிடும் போலியில்லா வார்த்தைகள்
புகலிடந்தான் இவர்களிடம் புதிதான அன்புகள்


வாடைக்காற்றுக்குள் வட்டமிடும் வண்ணாத்தி
பாட்டுக்குரலோடு பரவசமாய் பட்டுப்பூச்சி
தேனுண்ட களிப்பினிலே தெம்மாங்கு கீதம்
இசைக்குதங்கே மலருக்குள் இதமாகவண்டு...


மழலை மாறாத மாணிக்கப்பிஞ்சுகள்
மகிழ்வுகுறையாத மணிக்கணக்கான பேச்சுகள்
மனம் நிறைந்த அப்பொழுதுகள் மீண்டிடுமாவென்று
மதிநிறைந்த கேள்வியோடு விடைபெற்றேனன்று....





எப்படி???

உன்னை பிடிக்கும் -எப்படி
உண்மையினை சொல்வேன்
என்னை வெறுக்காதே -எப்படி
உன‌துரிமையில் தலையிடுவேன்???

I LIKE THIS SONG

කියන්න බෑ  අපේ ආදර කතාව කදුථුත් එක්ක සිනාසි සොයන්න බෑ තව ඔයා වගෙ කෙනෙක් ආදරේ කරන්න පෙර සේ

மழலைப் புன்னகை

எதையோ இழந்துவிட்டதைப்போல‌
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல‌
இதயம் துடிக்க 
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!






என்னவனை பிரிந்த....

புன்னைகையை தொலைத்து
பலகால மாகிவிட்டது
என்னவனை பிரிந்த
கணப்பொழுதுகள் தொடங்கி...



முதிர்க்கன்னியென்று...


காதல் பதில் சொல்லவில்லை
காலம் பதில் சொல்லியது
முதிர்க்கன்னியென்று...





நீதந்த அடியொன்றும்...

வ(ழி)லிகளே எனக்கான‌
வாழ்வாகிவிட்டபின்
நீதந்த அடியொன்றும்
எனக்கு வலிப்பதில்லை!!



Friday, October 4, 2013

கனவில்வந்து

கனவில்வந்து காதல்செய்பவளே
கண்ணெதிரே தோன்றினாலென்ன‌
தினமுமென்னை வதைப்பவளே
நிம்மதியை தந்தாலென்ன..




Thursday, October 3, 2013

இசைபோதையின் கைகளில் உயிராபத்துக்கள்

இசைக்குள் ஒன்றிப்போகாத இதயங்கள் இங்கில்லை இசைக்கு மயங்காத செவிகளுமில்லை எனலாம். சினிமாப்பாடலை விரும்பாத இதயங்கள்கூட வேறு இசைக்குள் தொலைந்துவிடுவதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் இச்சினிமா சார்ந்த அதுவும் துள்ளிசைப்பாடல்களால் வாகனப்பிரயாணங்களில் விபத்துக்கள் ஏற்பட அநேக சந்தர்ப்பங்கள் ஏதுவாக அமைகின்றது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

சில காலமாக மனதுக்குள் உழன்றுகொண்டிருந்த விடயமிது. குறிப்பாக தனியார்பேரூந்துகள், முச்சக்கரவண்டிகளில் அதிகமான ஒலியுடன் இயக்கிவிடப்படும் துள்ளிசைப்பாடல்களினால் இவ்வாறான அசம்பாவிதம் நடைபெற வழிவகுக்கின்றது. இந்த இசையில் தம்மை மறந்து லயித்துவிடுவது சாதாரணமான இயல்பான ஒரு விடயமே இது இவ்வாறு இருக்க,

முச்சக்கரவண்டி தனியார் பேரூந்துகளை எடுத்துக்கொண்டால், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, பயணிப்பவர்களுக்கு இடைஞ்சலாக அல்லது அசெளகரியமாக இருக்கின்றதா என்ற எந்தவிதமான அக்கறையுமின்றி அதிக ஒலியுடன் இயக்கிவிடப்படும் பாடல்களால் ஓட்டுநர் ஏதோ தான் ஒரு கதாநாயகன் என்ற நிலைப்பாட்டோடு மிக வேகமாக வாகனத்தை செலுத்துவார். முன்னால் பின்னால் வரும் வாகனங்களின் சமிக்ஞை ஒலி கேட்பதும் குறைவு அத்துடன் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற கதாநாயகத்தனத்தோடு பல உயிர்களை பணயம் வைத்து வாகனத்தை ஓட்டுவது பயணிகளுக்கு மரணபீதியை கிளப்பிக்கொண்டிருக்கும். வாகன ஓட்டுநர்கள் இளைஞர்களாக இருப்பின் இதுபற்றி சொல்லவே தேவையில்லை இளம்பெண்கள் வண்டியில் ஏறிவிட்டால் அவர்களை பக்கக்கண்ணாடிகளில் பார்ப்பதும் பாடலுக்கு ஏற்ப தமது அசைவுகளை வாகன ஓட்டலில் காட்டப்படுவதும் எரிச்சலை மட்டுமல்ல மரணபயத்தையே அதிகமாக உணர்த்திக்கொண்டிருக்கும்.

வாகன பிரயாணங்களில் அதிக ஒலியிடனான பாடல்கள் எத்தனையோ பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகவே காணப்படுகின்றது குறிப்பாக வயோதிபர்கள், நோயாளிகள், இன்னும் இதுபோன்ற இசைகளை விரும்பாதவர்கள் என பட்டியல் நீள்கின்றது. முக்கியமாக இறங்கவேண்டிய இடங்களில் இறங்குவதற்கு முடியாமல் (பாடலில் அதிக சத்தம் காரணமாக)பயணிக்கும் நடத்துநருக்குமிடையில் வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.

ஆக வாகனப்பிரயாணங்களின்போது மதுபாவனை போலவே அதிக இரைச்சலுடனான துள்ளிசைப்பாடல்களும் உயிருக்கும் எமது உடமைகளுக்கும் உத்தரவாதமில்லா ஒரு அபாயமாகவே காணப்படுகின்றது. முச்சக்கரவண்டி, பேரூந்துகள் மட்டுமன்றி எல்லா வாகனங்களிலும் இதுபோன்ற அசாதாரண இயல்புகளை மாற்றுவது அல்லது தடைசெய்வது சாலச்சிறந்தது என தோன்றுகின்றது.









உன் நினைவுச்சாயங்கள்

இதயவெளியில் நிரம்பியிருக்கும்
வெறுமைகளில்
உன் நினைவுச்சாயங்கள் மட்டுமே
பூசப்பட்டுள்ளது
காய்ந்துகிடப்பினும்
மாய்ந்துபோகா அந்த‌
மனக்காயங்கள் -நான்
மாண்டுபோகும்வரை
மரணிப்பதில்லை!!



லண்டன் தமிழ் வானொலியில்

31.07.2011 அன்று இல‌ங்கை நேர‌ப்ப‌டி ந‌ண்ப‌க‌ல் 12 ம‌ணிக்கும் ம‌றுஒலிப‌ர‌ப்பு மாலை 5.30 ம‌ணிக்கும் லண்டன் தமிழ் வானொலியில் 'கீதாஞ்சலி' நிக‌ழ்ச்சியில் எனது நேர்காணல் ஒலிப‌ர‌ப்பாகிய‌து.



க‌விதாயினி திருமதி மணிமேகலை கைலைவாசன்...


"வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே...
இனம் ,மதம்,மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த  விரும்புகிறேன்" என்ற மனிதத்துடன் கூடிய சிந்தனைகளோடு மித்திரன் வாயிலாக இணைந்துகொள்கின்றார், இலங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி மணிமேகலை கைலைவாசன் அவர்கள். இலக்கியவாதியாக அறியப்பட்ட இவர் சிறந்த சமூக சிந்தனைகளையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக நம்மத்தியில் பெறுமை பெறுகின்றார். அண்மையில் இலங்கைக்கு வந்த அவரை அணுகியபோது பகிர்ந்துகொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக‌.....





01.தங்களின் இலங்கைக்கான திடீர் விஜயம் குறித்து?


அன்னை மண்ணுக்கு வணக்கம் அன்புத் தமிழுக்கு வணக்கம்
என்னை நேர்காணல் செய்யும் தங்களுக்கும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். என்னுடைய   கவிதைத்தொகுப்புக்களான  தாயுமானவன்,சிந்தனைத் தொகுப்பு, இந்த நாள் இனிய நாள்   வெளியீடு சம்பந்தமாகவும் சில இலக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கும் நோக்கமாகவும் சில சமூக நோக்கங்களுக்காகவும் எனது பிரயாணம் அமைந்தது.


02. வெளிநாட்டு வாழ்க்கை அநுபவங்கள் பற்றி?

காலை மாலை வேலை  என்று இயந்திரம் போல இயங்குகின்ற வாழ்க்கை.
சுகபோகம் என்று சொல்வதற்கில்லை குளிர் நாடு என்பதனால் அதற்கான பாதுகாப்புகளுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை. போர்ச் சூழலில் இருந்து எம்மைப் பாதுகாத்த நாடு என்றபடியால் எனது தாழ்மையான வணக்கங்களும் நன்றியும் கனடாவுக்கு நான் எப்போதும் வழங்குவேன்.இங்கு எனது கணவர் மகாராஜா ,3 பிள்ளைகள்  ,அம்மாவுடன் வசித்து வருகிறேன் இங்கே ஒரு தபால் திணைக்களத்தில்  [clerk ]  லிகிதராக இருக்கிறேன்.முதியோர் பராமரிப்பிலும் பட்டம் எடுத்துள்ளேன்.



03.நீங்கள் வாழ்ந்த காலத்து இலங்கைக்கும் தற்போதுள்ள இலங்கைக்குமிடையில் எவ்வாறான‌ மாற்றங்களை அவதானித்தீர்கள்?

போர்ச்சூழலில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
போக்குவரத்துகள் ,தொலைத்தொடர்புகள் ,கடிதப்போக்குவரத்துக்கள் ,கல்வி வசதிகள் சீரற்று இருந்தன. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
பாரிய மாற்றங்களைக் காண்கிறேன் போக்குவரத்துகள் இலகுவாக உள்ளன. வீதிப் பரிசோதனைகள் தளர்த்தப்பட்டுள்ளன பாடசாலைகளில் கல்விக்கான தரம் சிறப்பாக இருக்கிறது பாராட்டப்படக்கூடிய விடயம்
இலக்கிய வெளியீடுகளும் சிறப்பாக உள்ளன.



04.இலக்கியப்பிரவேசம் அதன் ஆர்வம் என்பன பற்றி கூறமுடியுமா?

சிறுவயதில் இருந்தே  கலைகளில் ஆர்வம் இருந்தது.என்னுடைய பேரன் v .மார்க்கண்டு கலைமாமணிப் பட்டம் பெற்ற நாடக நடிகர்
v.v.வைரமுத்துவின் நெருங்கிய நண்பர்.என்னை 8 வயதிலேயே எழுத வைத்தவர் என் சிறிய தந்தையார் v .m .குகராஜா எழுத்தாளர்.
நான் பாடசாலை விழாக்களில் எழுதியிருக்கிறேன் கதைகள்,கட்டுரைகள் எழுதிப் பரிசுகள் பெற்றிருக்கிறேன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.தற்போது முகப்புத்தகத்தில் நிறையவே எழுதுகிறேன் நல்ல சிந்தனைகளையும் எழுதுகிறேன் தமிழ் மொழிமீது தீராக் காதல் எனக்கு எப்போதும் உண்டு அதன் இலக்கியப் பணிக்காக நான் என்னையே அர்ப்பணிப்பேன்.



05. ஈழத்து இலக்கியங்களின் மீதான ஆர்வம் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மத்தியில் எவ்வாறு காணப்படுகின்றது?

தமிழன் எங்கு சென்றாலும் தன் கலாச்சாரம் ,பண்பாடு, மொழி என்பவற்றையும் காவியே செல்வான்.அதேபோல இலக்கிய ஆர்வமும் அவனுடனே நிறைந்திருக்கும்.கனடாவிலும் ஏராளமான கல்விக்கூடங்கள் உள்ளன கலைநிகழ்ச்சிகள்,பரீட்சைகள் ,பரிசுகள், விருதுகள் என்று ஏராளம். பல வானொலிகள் தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் இங்கே இயங்குகின்றன சேவை செய்கின்றன தமிழ் மாநாடுகளும் இங்கே இடம்பெற்றன. தமிழைத் தெளிவாகப் பேசுகின்ற குழந்தைகள் கனடாவில் அதிகம் என்பேன் நான்.ஆசிரியர்களின் பங்களிப்பும் புலம்பெயர் நாடுகளில் பாராட்டத் தக்கது.



06. கனடாவில் தங்களுடைய இலக்கிய பங்களிப்புக்கள், செயற்பாடுகள் குறித்து?

வீட்டிலேயே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் இருந்து ,வானொலி நிகழ்சிகளில் ,தொலைக்காட்சி நிகழ்சிகளில் கலந்து கொள்வது வரை சொல்லலாம்.பல நூல் வெளியீடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.இன்று உலகம் முழுவதும் என்னைத் தெரிகிறது என்றால் அது முகப்புத்தகம் ஊடாகத் தான்.அதிகமான இலக்கியப் பங்களிப்பு முகப்புத்தகமூலம் தான் செய்கிறேன்.தொடர்ந்தும் எழுதுகிறேன்.



07.இலக்கியம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய ஆர்வங்கள் திட்டங்கள் பற்றி?

இயற்கையை அதிகம் ரசிப்பேன்.இசையை  நிறையவே கேட்பேன்.
சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது.தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் மீது அன்பு காட்டவும் எனக்கு கொள்ளை ஆசை.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களையும்பராமரிக்க  'தாயுமானவன் கருணை இல்லம்' என்ற பெயரில் அமைத்திட எண்ணியுள்ளேன். பொருளாதாரம் சரியான முறையில் அமைந்தால் நிச்சயம் என் எண்ணங்கள் நிறைவேறும்.எனது முதல் புத்தக வெளியீட்டில் வரும் நன்கொடைகள் அனைத்தையும் இவர்களுக்காகச் செலவிட எண்ணியுள்ளேன் இறைவன் ஆசியுடன் .



08.உங்களது ஊரிலும் இலக்கிய நண்பர்கள் மற்றும் ஏனையவர்களிடம் உங்களுடைய‌ வருகையின்போதான‌ வரவேற்பு பற்றிய அநுபவத்தினையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

இம்முறை நான் ஊர் வந்த போது என் முகப்புத்தகஅன்பு நெஞ்சங்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.சிலரது கலைப்படைப்புகளை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது.எனது தயாரிப்பில் தோட்டி எனும் குறும் படம் முகிலனின் படைப்பாக வெளிவந்தது.இலங்கையிலும் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.தட்டிக்கொடுத்தால் தமிழ்க் கலைகளும் வளர்ச்சிபெறும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. தொலைக்காட்சியில் இருந்து வானொலி, பத்திரிகை வரை எனக்கு நல்ல வரவேற்பைத் தந்தன.


09. பெண்களுக்கெதிரான வன்முறைகள், மேலைத்தேய நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்துவருகின்ற நாடுகளிலும் அதிகளவாக காணப்படுகின்றது அதற்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?

புரிதல் என்ற சொல் மறக்கப்பட்டமையே காரணம்.பெண் என்பவளும் ஓர் உயர்திணை உயிரினம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகள், கொள்கைகள் இருப்பதை மறுக்கிறார்கள்.
பெண்களும் தம் தன்னம்பிக்கையை  இழந்து போவது அதிகமாக உள்ளது.வரும் தடைகளை உடைத்தெறியும் வல்லமை வேண்டும்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியம் வேண்டும்.மேலை நாடுகளை விட வளர்முக நாடுகளில் தான் பெண்களுக்கான வன்முறைகள் அதிகமாக உள்ளன.பெண்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.



10.பெண்ணியம் என்பதில் எவ்வாறான விடயங்கள் வளர்க்கப்பட அல்லது தீவிரப்படுத்தப்படவேண்டும் என நினைக்கிறீகள்?

ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் சளைத்தவள் அல்ல சகல திறமைகளும் உள்ளவள் சமையல் அறையில் இருந்து சட்டசபை வரை ஆள்கிறாள் பயம் என்பது தேவையற்றது அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பை விடுத்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்.சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையும் ,நல்ல சிந்தனைகளும் பெண்களையும் ,பெண்ணியத்தையும் உயர் நிலையில் வைக்கும் என்பது என் கருத்து.




11.வெளிநாட்டில் வசிக்கும் நீங்கள், தற்போது இலங்கையுடன் எவ்வாறான தொடர்புகளை  கொண்டுள்ளீர்கள்? இவ்விஜயத்தின் பின்னர் எதிர்காலத்தில் எவ்வகையிலான தொடர்புகளை பேண வேண்டுமென நினைக்கிறீர்கள்?

இலங்கையில் எனது சகோதர சகோதரிகள்  உள்ளனர் ஏராளமான நட்புள்ளங்கள் உள்ளனர் கலை இலக்கிய ஆர்வம் உள்ளவர்களும் உள்ளனர் முகப்புத்தக  உறவுகளும்  ஊடகங்களும்  எனக்கு நல்ல உதவியும் பங்களிப்பும் தருகிறார்கள்.சில சமூக சேவைகளும் செய்ய எண்ணியுள்ளேன். இறைவன் ஆசி கொண்டு.சில நூல் வெளியீடுகளை யாழ்மண்ணில் தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.


12.இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?


வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே...
இனம் ,மதம்,மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த  விரும்புகிறேன் அனாதைகள் என்ற சொல்லும் வேண்டாம் அகதி என்ற நிலைமையும் வேண்டாம் ஆன்மீகத்துடன் அன்பும் கலந்து வாழவும்
தமிழின் பெருமையும் புகழும் வளரவும் வாழ்த்துக்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேர்காணல் நிகழ்த்திய  மித்திரன் பத்திரிகைக்கும் எனது வாழ்த்துக்கள்.


Tuesday, October 1, 2013

மறந்துவிடும் நிமிடம்

உன்னை மறந்துவிடும் நிமிடம் -அதுவே
நான் மரணிக்கும் தருணம்



நிறுத்திக்கொள்

பாவத்துக்கு
பட்டாடை கட்டிவிட்டு
பரிதாபங்களை
பத்திரப்படுத்திக்கொள்கின்றாய்
பிரதிபலன்களை இந்த‌
பரிதாபங்கள் தருவதில்லை
பலாபலன்களை இந்த‌
நீலிக்கண்ணீர்கள் தருவதில்லை
தீர்ப்பைமட்டும் நெஞ்சில்
தினந்தோறும் நிறுத்திக்கொள்
நாளைய வழக்கில் உனக்கு
தூக்குத்தண்டனையும் கிடைக்கப்பெறலாம்