Tuesday, March 26, 2013

எனதன்பு மட்டும்




**நான் வேண்டுமானால்
ஏழையாக இருக்கலாம்
உனக்கான எனதன்பு மட்டும்
எப்போதும் வளர்ந்துகொண்டேயிருக்கின்றது
பணக்காரனைப்போல‌............












**ஒவ்வொரு முறையும்

கடந்துபோன காயங்களை
உன்னிதயம் மீட்கும்போது
நான் மரித்துப்போய்விடுகின்றேன்

Wednesday, March 20, 2013

புரிந்துகொண்ட மணங்களும் பிரிந்துசெல்லும் மனங்களும்





ஆயிரங்காலத்துப் பயிரென ஆரஅமரப்பேசி ஆய்ந்துமுடிவெடுத்து இணைத்துவைத்திடும் திருமண பந்தங்கள் இன்று வெகுசாதாரணமாக பிரிந்துகிடப்பதையும் வேறு உறவுகளுக்குள் போலியாக தம்மை இணைத்துக்கொள்வதனையும், இதன்மூலம் சமூகம் குலைந்து சின்னாபின்னமாக சிதறிப்போவதற்கான அத்திவாரத்தினை இட்டுக்கொண்டிருப்பதையும் அன்றாட சமூகவாழ்வியலில் நாம் காண்கின்றோம்.






ஆண் பெண் உறவுமுறையில் உருவாக்கப்படும் குடும்பம்,சமூகம், தேசம், உலகமென்ற பிணைப்பு இரண்டு இதயங்களின் இணைப்பிலேயே ஆரோக்கியமான சூழலொன்றை உருவாக்கிடக்கூடிய வல்லமை காணப்படுகின்றது எனலாம். இன்றைய மிதமிஞ்சிய தொழிநுட்ப வளர்ச்சியில் இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இந்த உறவுமுறைகளும் காணப்படுவதுதான் வியப்பு ஆனால் அதில் உண்மைத்தன்மை இல்லையென்பதனை மட்டும் உறுதியாக சொல்லிடமுடியும். இந்த சமூக கட்டமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலம் ஒரு சிறந்த கணவன் மனைவி உறவு முறைக்குள் காணப்படுவதனை அவதானிக்கலாம். ஆனால் இதற்கும் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, போன்ற விஷேட கொள்கைகள் இல்லாவிட்டால் இந்நிலமை சாத்தியப்பட வாய்ப்பில்லை.






அன்பில் ஆரம்பிக்கும் உறவுகள் சிறந்த ஆளுமையுடன் வளர்க்கப்படும் ஏனெனில் தியாகங்கள் சகிப்பு பொறுமை போன்ற குணாதிசயங்களை நாம் நமது உறவுக்குள் பேணப்பேணத்தான் அது ஆளுமைமிக்கதாக பலப்படும். குறிப்பாக காதல் திருமணங்களே மிக விரைவாக தனது நிலையின் எல்லைகளை தொட முனையும் ஒரு பந்தயமாக காணப்படுகின்றது. எதையும் ஆராயாமல் வெறும் இதய ஏவல்களுக்கு அடங்கிநடப்பதாக இருக்கின்றது. அநேக விவாகரத்து பிரச்சனைகள் காதல் தம்பதிகளிடமிருந்துதான் வருகின்றது என்ற வேதனையான செய்தியும் ஆய்வுகள் கூறுகின்றது. உண்மையில் இதற்கான காரணம் என்னவென்று ஆரய்ந்துபார்த்தால்


* ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமை

*தான்தான் பெரியவர் அல்லது தனது 'தனிப்பட்ட' பலத்தை துணையிடம் காட்டவும் நிரூபித்திடவும் முனைதல்

*விட்டுக்கொடுத்திடும் மனப்பாங்கு இல்லாமை

*ஒருவரின் குறைகளை மற்றவர் தாங்குதல் பொறுத்தல், சகித்தல் போன்ற பண்புகள் இல்லாமை

*அதிகமான எதிர்பார்ப்பு

*துணைக்கு கொடுக்கவேண்டிய தனிப்பட்ட முக்கியத்துவம் செலவழிக்கும் நேரம் போன்றவற்றில் அசமந்தம்

*தம்பதிகளின் தனிப்பட்ட பிரச்சனைகளை மூன்றாம் நபருடன் விரிவாக பகிர்ந்துகொள்ளுதல்

*தன் துணையிடம் தனக்குமட்டுமே முன்னுரிமை கிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு

*ஆணுக்கு இன்னொரு பெண்ணிடமோ பெண்ணுக்கு இன்னொரு ஆணிடமோ காணப்படும் நட்பு

என்று பட்டிடல் நீள்கின்றது. பொதுவாக இவ்விடயங்கள் பலகுடும்பங்களை சிதைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக செயற்படுகின்றது உண்மையில் குடும்ப உறவில் இவ்விடயங்கள் கவனிக்கப்படவேண்டியதும் மிக அவசியமாகிறது.




கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன்மீதோ அதீத அன்பும் அக்கறையும் கொள்ளும்போதுதான் சிறுசிறு பிரச்சனைகளும் கூடவே எழும் அதற்காக நிறைய சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அத்துடன் 'புரிந்துணர்வு' என்ற ஒரு விஷேட இயல்பு தம்பதிகளிடையே உருவாகும்போது மற்ற எல்லா சிக்கல்களும் சுக்குநூறாகி அவர்கள் உறவு பலப்படும் பாலமாக அமைகின்றது.  அதேவேளை சின்ன‌ சின்ன ஊடல்களுக்குள்ளும் அவர்களின் அன்பு இன்னுமின்னும் அதிகரிக்கும்.எனவே குடும்ப உறவை பேணிக்கொள்ளவும் தம்பதிகளின் அன்பை இன்னும் ஆழப்படுத்திக்கொள்ளவும் ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கிடவும் சில கடமைகளை செய்யவும் சில குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளவும் சில விடயங்களை விட்டுக்கொடுக்கவும் பல விடயங்களை சேர்த்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது.





இந்த விடயங்களில் நீங்களும் உங்கள் கவனத்தை செலுத்தினால் ஆரோக்கியமான குடும்ப உறவாக உங்கள் இல்லங்களிலும் குதூகலம் கொண்டாடும்.

*உங்கள் துணைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வை எப்போதும் உயிர்ப்பித்துக்கொண்டிருங்கள்

*நீங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்களில் உங்கள் துணையையும் இணைத்துக்கொள்ளுங்கள்/ இணையுங்கள்

*உங்கள் துணைக்காக ஒரு நாளில் அரைமணிநேரமேனும் ஒதுக்குங்கள்

*அதிகமான நண்பர்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் குறிப்பாக பெண் ஆணிடமோ ஆண் பெண்ணிடமோ வைத்திருக்கும் நட்பு இருவருக்கும் பொதுவானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கட்டும்.



*எவ்விடயமானாலும் இருவரும் ஒருவரிடமொருவர் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தினை கடைபிடியுங்கள்.

*ஒருநேர உணவையேனும் சேர்ந்து உண்ணுங்கள்

*ஒருவரையொருவர் பாராட்ட மறவாதீர்கள்


*மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் துணையின் பலவீனத்தையோ குறைகளையோ சுட்டிக்காட்டி கண்டிப்பாக பேசாதீர்கள்

*இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிதல்,அடிக்கடி I LOVE YOU சொல்லுதல்,தேவையான நேரங்களில் SORRY , THANKYOU சொல்லிக்கொள்ளுதல் சின்ன விடயங்களையும் பாராட்டுதல் போன்ற விடயங்களை செய்து பாருங்கள் அதில் கிடைக்கும் சந்தோஷங்கள் இன்னும் உங்கள் உறவினை மிகைப்படுத்தும் (இதுவே உளவியலாளர்களின் கருத்தும்கூட)


*உங்களுக்குள் ஏற்படும் கோபத்தினை ஒரே நாளுக்குள் முடிவிற்கு கொண்டுவந்துவிடுங்கள் வைராக்கியமாக மனதுக்குள் பூட்டிவைக்காதீர்கள்

*மிக முக்கியமாக சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் மூன்றாம் நபரின் உதவியையோ அவர்களை நடுவர்களாகவோ நாடாதீர்கள்

*தவறு செய்திருப்பின் மன்னிப்புக்கேட்க தயங்கவேண்டாம் இதில் 'ஈகோ' என்ற குணத்தை கொன்றுவிடுங்கள்

*கணவன் மனைவியின் மனைவி கணவனின் குடும்பத்தை மதிக்கவும் உதவி செய்வதற்கும் மறவாதீர்கள்

இவ்வாறான பண்புகளை கடைப்பிடித்துப்பாருங்கள் உங்களுக்குள் அடிக்கடிவரும் அவசர சண்டைகள் பிரச்சனைகளின் வாசம் வராமல் விலகியே ஓடிவிடும். இன்றைய குடும்ப உறவுகள் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையில் நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் செலவுசெய்யாமையினாலேயே அதிகமான பிரச்சனைகள் உருவாவதாக கூறப்படுகின்றது. எனவே சிலவரையறைகளை தாமாகவே உருவாக்கிக்கொள்ளவேண்டும் சின்ன சின்ன விட்டுக்கொடுப்புக்களுடன் ஆரம்பியுங்கள் அதுவே ஆழமான அன்பினையும் விசாலமான புரிந்துணர்வினையும் தந்து உங்களின் நேசபந்தத்தினை நீடிக்கச்செய்யும்.








இல்லற வாழ்வின் சிறப்புக்களிலேயே உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான அறிவான வளர்ச்சி குடும்ப அங்கத்தவர்களின் மகிழ்ச்சி வளமான சமுதாயம் என சிறப்பான ஒரு உலக சிருஷ்டிப்பிற்கு அடித்தளமிடுகின்றது. ஆக ஒரு கணவன் மனைவிக்கிடையிலான ஆரோக்கியமான உறவுமுறையே அனைத்திற்குமான ஆதாரமாக காணப்படுகின்றது. என்ன சகோதரர்களே நீங்களும் இவற்றைபற்றி சிந்திக்க ஆயத்தம்தானே?









Tuesday, March 19, 2013

******உயிருக்குள்******



உனதிமைகளுக்குள்
என் விழிகள்
எனதிதழ்களுக்குள்
உன் மொழிகள்...

என் வெட்கங்களை அன்றுதான்
நானே பார்த்தேன்
மூடிக்கிடந்த பனிமூட்டம்
முகிழ்ந்து கொட்டியதை
அப்போதுதான் உணர்ந்தேன்...

வெள்ளைத்தாளிலும் 
வானவில்லூறும் என்பதும்
தென்றல் கூட‌
சூறவளியாய்ச் சீறுமென்பதும்
அந்தநொடிதான் அறிந்தேன்...

வண்ண இதழ்களுக்குள்
வருடும் மணமும்
திருடும் அழகும் இருந்ததை
தென்றல் தீண்டி 
திறவுகொண்ட போதுதான்
மலரே அறிந்துகொண்டது...

காதலைத்தாண்டிய 
ஏதோவொன்று
அதுவே
காதலைத் தாண்டிச்செல்லவிடாத
ஜென்மபந்தமாய்...

உயிருக்குள் நிறைந்துகொண்ட‌
நேசம்
சுவாசமாய் உலவுகின்றது என்
மரணத்தை தவிர இதனை
விடுவிப்பதற்கு வழியேதும் இங்கில்லை!!

Friday, March 15, 2013

என்றும் இதுவாழுமே





உயிர்வரை நிறைந்துவிட்ட‌
உனதன்பை தவறவிட்டு
உலகில் நான் வாழ்வேனோ
உன்னைநான் மறவேனோ...

பத்தாம்பசலி பெண்ணெனை
பாசத்துடன் கைப்பிடித்த
பண்பாளனுன்னிடம் நான்
பாராமுகங் காட்டுவேனோ
பரிதவிக்கத்தான் விடுவேனோ...

ஆயிரந்தான் கோபத்திலும்
அடித்துநீ தள்ளினாலும்
ஆத்திரத்தில் விலகிடினும்
ஆழ்மனந்தான் வெறுக்குமோ
அன்பதுதான் குறைந்திடுமோ...

பிரிந்துநான் நின்றாலும்
பிரிந்துநீ வந்தவுடன்
பிரியங்கள் பொங்கிவரும்
பசுமைதான் குறைந்திடுமோ
பாழ்மனமாய் ஆகிடுமோ...

நரையுடல் நடுங்கிடினும்
கைத்தடி யெந்தோளென‌
நமதன்பு நிலைத்திடுமே
நலிந்திடாமலது வாழுமே...

அமல்ராஜ் துருவ நட்சத்திரத்துக்காக

http://www.thuruvam.com/2013/03/php_1458.html



எனது சிந்தனையை முட்டாள் தனமாக்கியது பாடல்: அமல்ராஜ்

Print Friendly and PDF

வேகமாக வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளில் ஒருவரும் காத்திரமான சிந்தனைப் புரட்சிகளோடு எழுத்துலகில் தடம்பதித்துக் கொண்டுவரும் ஓர் துடிப்புள்ள இளைஞருமான அமல்ராஜை துருவ நட்சத்திரத்துக்காக சந்தித்தோம்.


"காலத்திற்கு காலம் மொழி தன்மை புதுப்பித்துக்கொள்வது போல கவிதையிலும் தன்னை வளர்த்துக் கொள்கிறது மொழி. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது இலக்கியங்கள் நவீனத்துவத்தோடு போராடாவிடில் எப்படி இன்னுமொரு வருங்கால அவசர வாசக தலைமுறையை சமாளிக்க முடியும்?" என்று கூறும் இவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நாடகக் கலைஞராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள இவர் 'தாளம்' பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பன்முகத்திறமை கொண்ட இவரின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இவரது முழுமையான கருத்துக்களோடு இணைந்துகொள்வோம்.

கேள்வி: மிகவும் இளவயதில் கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். இதற்கான அடித்தளம் எவ்வாறு இடப்பட்டது?

பதில்: கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு. 2011ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் அடித்தளம் என்பது மிகவும் எளிமையான விடயம்தான். சிறு வயது முதல் எழுத்துத் துறையில் அதிலும் கவிதை எழுதுவதில் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்து வந்தது. படிப்பு, வீட்டாட்களின் எதிர்ப்பு போன்றவற்றிற்கு மத்தியிலும் கள்ளமாக கவிதை எழுதிய அந்த நாட்கள் என்னால் ஒரு கவிதைத் தொகுதியை என்றோ வெளியிட முடியும் என்கின்ற ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது. கவிதையை நான் பெற்றெடுக்கவில்லை. அதுதான் என்னுள் பிறந்தது.

அதனால் கவிதையின் மீதான மோகம் ஒரு இயல்பியலாக மாறிப்போனது. சிறுவயதில் அம்மா, கல்வி, கடவுள் என அமைத்துக் கொண்ட எனது கவிதையின் தலைப்புக்கள் நான் உயர்தரம் படிக்கும் போது அதிகம் காதலாயும் கொஞ்சம் போரியலாகவும் மாறிப்போனது.

பெண்களை விட காதல் கவிதைகளையே நான் அதிகம் காதலித்திருக்கிறேன். காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம் இலக்கிய உலகு என்கின்ற ஒரு பாரிய பக்கத்தை காட்டத்தொடங்கியது. உயர்தரத்திற்கு பின்னரான எனது கவிதை வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் ஆளுமை அடையத் தொடங்கியத்தை கொஞ்சம் உணர்ந்தேன். அதற்கு எனது 'காதல்' கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சமூகம், போர், அடக்குமுறை, மனித அவலம், இலட்சியம் சார்ந்து கவிதைகள் பிறக்க ஆரம்பித்ததை சொல்லலாம்.


அதன் பின்னர்தான், சில பெரிய மனிதர்களின் தூண்டலின் பேரிலும், எனக்கான ஒரு இருப்பை இலக்கிய உலகின் எங்காவது ஒரு மூலையில் நிறுத்தியாகவேண்டும் என்கின்ற ஒரு ஆசையிலும் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடலாம் என்கின்ற ஒரு முடிவிற்கு வந்தேன். படிப்பு, வேலை, இளமைத் துடிப்பு போன்ற காரணிகளோடு சண்டையிட்டு இறுதியில் என்னால் பிரசவம் கொடுக்கப்பட்டதே இந்த கிறுக்கல்கள் சித்திரமாகின்றன.

இன்னுமொரு விடயத்தையும் சொல்லியே ஆகவேண்டும். இளவயதில் கவிதை நூல்கள் வெளியிடுவது என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. கவிதைகள் சராசரி கவித்துவ தரத்தை பெற்றிருக்க வேண்டும். வாசகர்களை திருப்திப்படுத்துவதோடு மூத்த கவிஞர்களையும் கொஞ்சமேனும் திருப்திப்படுத்தியாக வேண்டும். இது இலக்கிய இருத்தலில் கட்டாயமாகிப்போன ஒன்று. கவிதையும் நாமும் ஓரளவேனும் இலக்கிய ஆளுமை

கொண்டவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் கவிதைத்தொகுதி மீதான விமர்சன தாக்குதல்களிற்கு மடிந்துபோக கூடும். இவ்வாறான பல சவால்கள் சக இளம் எழுத்தாளர்கள் போல எனக்கும் வந்துபோனதுதான் எனது இந்த முதலாவது தொகுப்பின் வெளியீட்டில்.

கேள்வி: கவிதைகள் மட்டுமன்றி சமூகப் பார்வையுள்ள உங்களது கட்டுரைகளும் பேசப்படுகின்றது. இதில் எவ்வகையான ஆக்கங்கள் வாசகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகின்றது. உங்களால் எவ்விதமான  மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது?

பதில்: கவிதையைப்போல கட்டுரைகளிலும் பத்தி எழுத்துக்களிலும் ஆளுமை இல்லாவிட்டாலும் ஓரளவு ஆர்வம் இருக்கிறது. அதிகமான எனது ஆக்கங்கள் எனது வலைப்பூவிலேயே இடம்பெறுகின்றன. சமூக, கலாசசார, இளைஞர் சார்பான கட்டுரைகள் ஓரளவு அதிக வாசகர்களையும் எனது எழுத்து மீதான எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறது. கட்டுரைகளில் சொல்ல வரும் விடயங்களை நான் விரும்பும் வழியிலேயே சொல்ல எத்தனிப்பவன் நான். அவ்வாறான நேரடியாக விடயங்களைப் பேசும் கட்டுரைகள் ஓரளவு தரமாக இருப்பதாக சில வாசகர்கள் சொல்கிறார்கள். கவிதையின் மேல் பிரியம் இல்லாத கட்டுரை, கதைகளில் ஆர்வம் உள்ள பல வாசகர்களையும் என்னால் சேகரிக்கமுடிகிறது எனது இந்த வகையறா படைப்புக்களின் மூலம்.

விசேஷமாக இளைஞர், காதல் சார்ந்த எனது சில கட்டுரைகளும் பலரை கவர்ந்திருக்கிறது. விசேடமாக இளைஞர்களை. வாசகர்களிலே இந்த இளைஞர் கூட்டத்தை காண்பது இப்போதெல்லாம் மிகவும் அரிது. வாசனைக்கும் இவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இவ்வாறான சூழலில் அவர்களை வாசிக்க தூண்டும் படைப்புக்களை நாம் படைப்பது மிகவும் கடினமானது, இந்த காலகட்டத்திற்கு தேவையானதும் கூட. எனது சில இளைஞர்சார் கட்டுரைகளை வாசித்து என்னோடு அவற்றை சிலாகித்துப் பேசும் பல இளைஞர்களை காணுகின்ற பொழுது எனது எழுத்து ஓரளவேனும் இவர்களை வாசிக்கத் தூண்டியிருக்கிறது என எண்ணத்தோணும். இது எனக்கும் இன்னும் இன்னும் இளைஞர் தொடர்பான பல சமூக கலாசார விடயங்களை எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்துகொண்டிருக்கிறது.

அதேபோல, எனது சில போரியல் சார்ந்த கட்டுரைகளும் பல மட்ட விமர்சனங்களை தோற்றுவித்ததை  என்னால் மறக்க முடியாது. பல தடவைகள் எனது வீட்டாட்களும் இவ்வாறான கட்டுரைகளை, கதைகளை எழுதுவதை நிறுத்துமாறு சொல்லியிருக்கிறார்கள் அரசியல் பீதியினால். அதிலே எனது வலைப்பூவில் எழுதிவரும் 'மலரவன் முதல் மணிகண்டன் வரை' என்கின்ற நெடுந்தொடர் குறிப்பிடத்தக்கது.


கேள்வி: இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள இக்காலத்தில் நூல்களின் வருகை, வாசிப்புகளில் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது?

பதில்: உண்மையைச் சொல்வதேயானால் அபாயம் நிற்சயமாக இருக்கிறது. புத்தகங்களை சஞ்சிகைகளை தேடிச்சென்று வாங்கி அதை வாசித்து முடிக்கும் காலம் மறைந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லுவேன். அதிகம் பேசத்தேவையில்லை. நான் கூட பல நூல்களை, வலைப்பூக்களை, இணைய சஞ்சிகைகளை எனது கணணியிலும், தொலைபேசியிலும் வாசிப்பதையே அதிகம் விரும்புகிறேன். இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை. வாசகர்களை தேடிச்சென்றுதான் எங்கள் படைப்புக்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. எனது கவிதை நூலைக்கூட மின்னூலாக மாற்ற மாட்டீர்களா என கேட்கிறார்கள் வெளிநாடுகளில் இருக்கும் பல நண்பர்கள். இனிவரும் காலங்கள் நூல்வெளிட்டிற்கு பதிலாக மின்னூல் வெளியீடு கலாச்சாரத்தையே கொண்டுவரப் போகிறது. அதற்கும் நம்மை தயார் செய்துகொள்ளவே வேண்டியிருக்கிறது.

இதை நான் ஒரு எதிர்மறையான தாக்கமாக சொல்லமாட்டேன். இது எனது தனிப்பட்ட கருத்து. வாசகனை எப்படி என்னுடைய படைப்புச்போய் சேரப்போகிறது என்பதை வரையறுத்த பின்னரே இனிவரும் காலங்களிலான இலக்கிய வெளியீடுகள் அமையப்போகிறது. விக்கிப்பீடியாவை தனது அறையினுள் விரல் நுனிகளில் வைத்திருக்கும் ஒருவனை இனியும் வாசிகசாலைக்கு எம்மால் அழைத்துப்போக முடியாது. எமது படைப்பு அவனை சென்றடைய வேண்டுமெனில் அவனது விரல் நுனியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய தந்திரத்தை நாம் கற்றுக்கொள்ளவே வேண்டும். இருந்தும் நூல்களை கையில் எடுத்து வாசிக்கும் அந்த சந்தர்ப்பம் எனது காலத்திலும் எனக்கு கிடைத்ததை எண்ணி சந்தோசப்படுகிறேன். எமது பிள்ளைகளிற்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என என்னால் சொல்ல முடியாது.

கேள்வி: சமூக தொண்டார்வ (ICRC) நிறுவனத்தில் பணிபுரியும் உங்களுக்கு சமூகத்தில் பல்வேறுபட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. அவர்களது பிரச்சினைகளில் குறித்து நீங்கள் ஆதங்கப்பட்டதுண்டா?

பதில்: நீங்கள் சொல்வதுபோல எனது தொழிலில் பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு முதல் தெற்கு வரை பல வகையான மனிதர்களை படிக்கும் சந்தர்ப்பத்தை பெறுகிறேன். ஒவ்வொரு மனிதர்களினதும் சிக்கல் நிறைந்த வாழ்க்கைகளை என்னால் படிக்க முடிகிறது. இந்த அனுபவங்கள் சிக்கின் பர்கர்ருக்காக சண்டைபோடும் ஒரு சிறுவனையும், ஒரு பிடி சோற்றிற்காய் காத்திருக்கும் ஒரு சிறுவனையும் என்னால் சரிவர கண்டுகொள்ள முடிகிறது.


அதிலும் என்னை அதிகம் பாதிக்கும் ஒரு விடயம் வடக்கில் யுத்தத்தினால் தங்கள் கணவனை இழந்த பல பெண்களின் வாழ்க்கை போராட்டம். பொருளாதார, கலாசார, உடலியல், மனவியல் நலிவுத்தன்மைகளோடு போராடும் அவர்களை சந்திக்கும் பொழுது நான் அதிகம் மனமுடைந்து போனதுண்டு. இவர்களுக்கான இந்த புதைகுழிகளை யார் வெட்டினார்கள், இவர்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட விதம் யார் செய்த சாபம் என்பனவற்றை எல்லாம் அடிக்கடி நான் எண்ணி எனக்குள்ளே வருந்தியதுண்டு. இவர்கள் வாழ்க்கை மாறவேண்டும். வாழ்வியல் தரம் உயரவேண்டும் என்பதே எனது எப்போதுமான வேண்டுதல்.

கேள்வி: இலக்கியத்தினூடாக எவ்வகையான சமூக எழுச்சிகளை முன்னெடுக்க முடியுமென நினைக்கின்றீர்கள்?

பதில்: எனது தகுதிக்கு மீறிய கேள்வி ஒன்றை கேட்கிறீர்கள். எவ்வளவோ செய்யலாம். இலக்கியம் என்பதை தவிர்த்து எழுத்தினால் எவ்வகையான சமூக எழுச்சிகளை முன்னெடுக்க முடியும் எனக் கேட்டால் என்னிடம் போதுமான பதில்கள் இருக்கின்றன. இலக்கியம் சமூக எழுச்சிகளை இற்றைக்கு பல காலங்களுக்கு முன்னதாகவே முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது. புதுமைப் பெண் என்கின்ற ஒரு புதுமையான சமூக எழுச்சியும் ஒரு சீமார்ந்த இலக்கியம் கொடுத்த எழுச்சிதானே? இவை அந்தக்காலத்திலேயே சாத்தியம் என்றால் ஏன் இப்பொழுது முடியாது என்கிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் இதற்கு முதல் எழுத்தாளர்களின் சமூக அக்கறை நிறைந்த படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்கின்ற சிந்தனை ஓட்டம் வரவேண்டியது மிக முக்கியமான ஒன்று. எழுத்துகளின் சக்தியை உலகம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது.

எழுத்து போராட்டங்களின் முடிவுகள் வரலாற்றில் எழுச்சிகளாகவே இறுதியில் முடிந்திருக்கிறது. 
ஆக, இலக்கியத்தை அதிகமானோர் தங்களின் இலக்கிய இருப்பிற்காகவும், இலக்கிய சாணக்கியத்தை காட்டி பெயர் பெறுவதிலும் காட்டும் முனைப்பை சமூக அக்கறையோடு வெளிக்காட்டினால் உங்கள் இந்த சமூக எழுச்சி விரைவில் சாத்தியமாகும். சமூக இலக்கியங்கள் வரலாறுகளில் அனேகமாக முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது.

உதாரணமாக பாரதியின் சமூக இலக்கிய படைப்புக்களை மிகவும் இலகுவாக சொல்லிவிட முடியும். அவை எழுச்சிகளை நிகழ்த்தின. இப்பொழுதெல்லாம் நான் முதல் சொன்னது போல சமூக அக்கறையோடு புனையப்படும் இலக்கியங்கள் மிகவும் குறைந்துகொண்டே செல்கின்றன. இவற்றை இளையவர்கள் மீண்டும் தங்கள் கைகளில் எடுத்துகொள்தல் மிக அவசியமான ஒன்றாகி விட்டது.

கேள்வி: இன்றைய நவீனபோக்கு, புதிய சிந்தனை மாற்றம் என்ற வளர்ச்சிக்கேற்ப இலக்கியத்திலும் மாற்றங்கள் அவசியமா? அல்லது அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நினைக்கின்றீர்களா?

பதில்: நான் அடிக்கடி எனது நண்பர்களுடன் பேசிக்கொள்ளும் விடயம் இது. டார்வினின் அந்த கூர்ப்புக் கொள்கை உயிரியளிற்கு மட்டுமல்ல இலக்கியம் உட்பட சகல விடயங்களிற்கும் பொருந்தும். 'தக்கன பிழைக்கும் தகாதவை அழியும்' காலத்தோடு ஒன்றிப்போகாத எந்த விடயமும் காலப்போக்கில் அழிந்தே போகும் என்பது இந்த உண்மை. இதற்கு இலக்கியமும் எழுத்துக்களும் விதிவிலக்குகள் அல்ல என்றே
சொல்லுவேன்.

காரணம் வாசகனின்  எதிர்பார்ப்புக்கள் மாறிக்கொண்டிருக்கிறது என்றால் இலக்கியம், படைப்புக்கள் மாறாமல் இருப்பது சாத்தியமா? படைப்புக்களின் இலட்சியம் வாசகன் தானே. அந்த வகையில் நவீனப் போக்குகளும், புதிய சிந்தனை மாற்றங்களும் நிச்சயமாக இலக்கியத்தை இந்தக்காலத்திலும் இனிவரும் காலங்களிலும் தூக்கி நிறுத்தும். இல்லையேல், அடுத்த சந்ததி இலக்கியத்தின் இருப்புக்களை வரலாறுகளில் மட்டுமே படிக்க முடியும்.

இப்பொழுதெல்லாம், வாசகன் எழுத்துக்களில் ஒரு நவீனத்துவத்தையும், மாற்றத்தையும், புதிய போக்கையுமே விரும்புகின்றான். இதற்கேற்றாற்போல் படைப்புக்கள் படைக்கப்படும் பொழுது அந்த படைப்புக்கள் வெற்றி பெறுகின்றன. காலத்திற்கு காலம் மொழி தன்மை புதுப்பித்துக்கொள்வது போல கவிதையிலும் தன்னை வளர்த்துக் கொள்கிறது மொழி. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தும்

கவிதைகள் அல்லது இலக்கியங்கள் நவீனத்துவத்தோடு போராடாவிடில் எப்படி இன்னுமொரு வருங்கால அவசர வாசக தலைமுறையை சமாளிக்க முடியும்? வரலாற்றை பாருங்கள். கல்வி, அறிவு, விவேகம் போன்றன மக்களின் உடமைப்பொருளாகிய  போதுதானே உரை நடை இலக்கியமும், உரை நடை சார்ந்த புதுக்கவிதையும் இவ்வுலகத்தில் பிறந்தது. மரபுக் கவிதைகளை விட இக்கால இளைஞர்கள் இந்த புதுக் கவிதைகளைத்தானே அதிகம் விரும்புகின்றனர். இது நவீனத்துவத்தின் மாற்றம் இல்லையா? நூற்பா செய்யுள், விருத்தம், பண், கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்கின்ற இந்த இலக்கிய மாற்றம் நவீனத்துவத்தால் உருவாகியதுதானே.

இப்பொழுதெல்லாம் பல ஈழத்து, இந்திய இளம் படைப்பாளிகளின் கவிதைகள் இந்த நவீன சிந்தனை ஓட்டத்திலேயே நிகழ்கின்றன. அரைத்த  மாவை மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளும் எம்முடன் இல்லாமல் இல்லை. இலக்கியத்திற்கு பாரமேற்றுபவர்களாக இவர்கள்
இருப்பார்களே தவிர வரும் புத்திலக்கியத்தின் தளத்தில் நிலைத்து நிற்றல் என்பது இவர்களிற்கு எட்டாக்கனியாகவே போய்விடும்.

கேள்வி: எழுத்துத்துறையில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: கற்றுக்கொண்ட பாடங்கள். உங்களுக்கு மிகவும் சுவாரசியமான கேள்வி இது. எனக்கு சிக்கலானதும் கூட. இலக்கியத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. அனைத்தையும் இவ்விடத்தில் பகிரங்கமாக சொல்லுவிட முடியாது. சிலவற்றை பேசலாம். எனக்கு இந்த எழுத்து துறையில் இருக்கும் அனுபவம் மிகவும் சொற்பமே. எழுத்துலகில் இன்னும் என்னை முதலாம்  ஆண்டு மாணவனாகவே என்னை கருதுகிறேன். முதலாம் வகுப்பில் அப்படி என்னங்க கற்றுக்கொண்ட பாடங்கள்.

இருந்தும், இலக்கியவாதிகள் அனைவரும் நல்ல 'மனிதர்கள்' என்கின்ற எனது முந்தைய சிந்தனை, நான் இலக்கியத்துறைக்குள் வந்து பார்த்ததும் சுக்குநூறாய் போனது. பல நல்ல மனிதர்கள் இலக்கியவாதிகளாய் இருக்கிறார்கள். அவர்களை எனக்குத்தெரியும். அவர்களுடனான எனது உறவும் தூய்மையானது. அதற்காய் இலக்கியவாதிகள் எல்லாரும் நல்ல 'மனிதர்கள்' என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது முதலாவதான எனது கற்றுக்கொண்ட பாடங்கள். அதேபோல இளைய தலைமுறை படைப்பாளிகளுக்கும் மூத்த படைப்பாளிகளிற்குமான இலக்கியத்தூரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. மூத்த எழுத்தாளர்கள் மேல் பழியாக நான் என்றுமே இதை சுமத்தப்போவதில்லை. இதை இளம் தலைமுறையினரே சீர்செய்ய வேண்டும். வேறு வழியில்லை என்பது நான் கற்றுக்கொண்டது. அதேபோல, இப்பொழுதெல்லாம் எண்ணிக்கையில் அதிகமான கவிதை நூல்கள் வெளியாகின்றன.

தரத்தில் வைக்கும் கவனத்தை விடவும் புத்தகங்களின் எண்ணிக்கையில் வைக்கும் கவனம் இப்பொழுது இளம் தலைமுறையினரிடத்தில் அதிகரித்தே தெரிகிறது. தரமான கவிதைகளை, படைப்புக்களை மட்டும் தேடிப்போய் பிரசவிக்கும் ஒரு தலைமுறையாக நான் வாழும் தலைமுறை இருக்க வேண்டும் என்பதும் எனது அவாக்களில் ஒன்று.. இப்படி பல அவாக்கள், அனுபவ பாடங்கள் இந்த சிறிய கால எழுத்து அனுபவத்தில் எனக்கு கிடைத்தவை.

கேள்வி: ஆங்கில மொழியில் பரீட்சயமுள்ள உங்களுக்கு, அதில் ஏதாவது செய்யவேண்டுமென்ற  திட்டங்கள் ஏதும் இருக்கின்றதா?

பதில்: எழுத்துக்காய் நான் செலவழிக்கும் நேரம் மிகவும் சொற்பம். நான் எனது வாழ்வில் அதிகம் போராடும் விடயங்களில், இந்த இலக்கியத்திற்காய், எழுதுவதற்காய் நேரத்தை ஒதுக்குதல் என்பதும் ஒன்று. அதற்கு எனது வேலைப்பளு, சோம்பேறித்தனம், அதிக பிரயாணம் போன்றவற்றை காரணங்களாக சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இருந்தும், கிடைக்கும் நேரங்களை, அதுவும் அதிகமாக நான் பயணம் செய்யும் வேளைகளில் கிடைக்கும் நேரங்களை மூட்டை கட்டி இந்த வாசிப்பு, எழுத்து என்பனவற்றிற்கு தாரைவார்ப்பதே இப்பொழுது எனக்கு சாத்தியம். அதையே செய்துகொண்டிருக்கிறேன். இதற்குள் மொழிபெயர்ப்புத்துறையில் ஆசைகொள்ள எனக்கு அதிகம் பயமாய் இருக்கிறது.

மொழி தெரிந்தவர்கள் எல்லோரும் மொழிபெயர்ப்பு துறையில் சாதிக்க முடியாது என்கின்ற சித்தார்ந்தமும் எனக்கு தெரியும். மொழிபெயர்ப்பு துறைக்கு சரியான வாசிப்பு ஆளுமையும், மொழிப்புலமையும், நீண்ட அனுபவமும் கட்டாயம் என்பதும் நான் அறிந்தவையே. இவை அனைத்தும் எனக்கு என்று கைகூடுகிறதோ அன்றுதான் நான் இந்த மொழிபெயர்ப்பு துறைக்குள் செல்லலாம் என்பதை மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடியும்.

கேள்வி: கவிஞரான உங்களுக்கு பாடலாசிரியர் என்ற இன்னுமொரு பக்கமும் இருக்கிறது. அதுபற்றியும்,  தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாடலெழுதிய அனுபவம் பற்றியும் கூறுங்கள்?

அது ஒரு அருமையான அனுபவம். கவிதை எழுதுவதை விட ஒரு பாடல் எழுதுவது எனக்கு அன்று அதிகமாக பிடித்திருந்தது. அந்த முதல் பாடல், இரண்டு இரவுகளை குடித்திருந்தது. பாடல் எவ்வளவு சுலபம் என்கின்ற மூடத்தனமான எனது சிந்தனையை முட்டாள் தனமாக்கியது அந்த முதல் பாடல். நான்கு தடவைகள் எழுதியும் இசையமைப்பாளரை என்னால் திருப்திப்படுத்த முடியாமல் போனது என்னை இன்னும் இன்னும் ஒரு நல்ல பாடலாசிரியராக வருவதற்கு உதவியதோ என்னவோ தெரியவில்லை அன்று.

அந்த முதல் சந்தர்ப்பத்தை கொடுத்தவர்கள் இலங்கையின் மிகப் பிரபல இசையமைப்பாளரும், 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதையும் பெற்றுக்கொண்டவருமான பிரநீவும் அந்த திரைப்பட இயக்குனர் சமிந்தனும். இறுதியில் அந்தப்பாடல் சிறப்பாக பேசப்பட்டது அதை கேட்டவர்களால். ஆனால் அந்த பாடல் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு பின்னர் பல பாடல்களை எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது வரிகளை இசையில் ஒருவரது குரலோடு கேட்கும் பொழுது கிடைக்கும்  சந்தோசம் வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒன்று. அதேபோல, லண்டன் தமிழ் வானொலிக்கும் ஒரு பாடல் எழுத கிடைத்த சந்தர்ப்பம் என்னை இன்னும் சந்தோசம் கொள்ள வைத்தது.

கவிதைகளை மட்டும் எழுதும் எனக்கு இந்த பாடலாக்கம் ஒரு புதிய இரசனையைக் கொடுத்தது. புதிய திருப்தியைக் கொடுத்தது. இன்னும் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன்.

(ராஜ் சுகா)

Wednesday, March 13, 2013

பாழ்ப‌ட்ட பார்வைகளிங்கே...



கொடூரங்களுக்கு
கொம்புமுளைத்து
கொலைத்தாகத் தோடலையும்
கெடுதியான காலமிது...

நன்மைகளாங் காங்கே ஒடிந்து
அன்பினை கொன்றொழித்துவிட்ட
துன்பவியற் கலியுகமிது...

வண்கண் கொண்டேயன்றி
வனிதையரை நோக்கிட‌
நற்பார்வை இங்கில்லையெவர்க்கும்...

ஓட்டுக்குள் நத்தையாய் பார்த்திரு
தீண்ட வருவோர் பாதங்கள்
புண்ணாகிடட்டும்!

பாலகனென்ன பாட்டியென்ன‌
பறந்துதிரியும் கழுகுப்பார்வைகள்
வெறிகொண்ட பசியராய்
ருசித்திட அலைகின்றது...

பாசமும் பண்பையும்
தூசென மதித்து
பாவச்செயலோ டழையும்
பாழ்ப‌ட்ட பார்வைகளிங்கே...

பாவையர்தம் பாதுகாப்பை
பார்வையாலும் பறைசாற்றுவீர்!!

Tuesday, March 12, 2013

kuttikkavithai

01. தோற்றுப்போனது 
நிஜம்தான் 
ஆனாலும்
ஒரு நிம்மதி
தோற்றது
உன்னிடமென்பதால்!!


02.இந்தப் பிரிவுதான்
உணர்த்திச்சென்றது 
நமதுறவில் வேரோடிப்போன‌
ஆழந்தனை...


03.உனக்கும் எனக்குமான‌
இடைவெளி நீள்கின்றது
கானலுக்கும் 
தாகத்துக்குமான தூரமாய்!!


04.உன்னிடமென்றால் 
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போவேன்
ஜெயிப்பது நாமென்பதால்

Sunday, March 10, 2013

****தோளாய் நின்ற தோழியும் தோற்றுப்போன அவள் காதலும்****




வலிகள் கண்ட இதயத்துக்கு
வழியாய்ச் சொல்ல என்
வார்த்தைகள் வலிமையற்றுப்போனது

காதல்!

வெறும் வார்த்தையல்ல 
இது எவரையும்
வெற்றிடமாக்கிப்போட்டிடும்
வெறிபிடித்த குணமாய்த்தெரிகின்றது

ஒரே ஒரு விட்டுக்கொடுப்பு
ஒரு நிமிட நிதானம் இந்த‌
கண்ணீர்ப்பாதையை மாற்றியிருக்கும்
யார் என்ற பிடிவாதங்கள்
அமைதியாக்கப்பட்டிருந்தால்
ஆர்ப்பரிக்கும் இவ்விதயக் குமுறல்
அடக்கிவைக்கப்பட்டிருக்கும்

ஆறுதல் சொல்லிட என்னிடம்
ஆழமான வார்த்தைகள் எதுவுமில்லை
அழுகை மட்டும் அவளுக்காய்
அமைதி மட்டும் அவனுக்காய்

நீயா நானா என்ற‌
நீதிமன்ற சட்டங்க ளுங்கள்
நேசத்தில் நிர்மூலமாக்கப்பட்டிருந்தால்
சமாதியாக்கப்பட்ட இக்காதல்
சாதனைச் சாம்ரஜ்யம் நடத்தியிருக்கும்

எத்தனை கனவுகளுக்குள்
எத்தனை ஆசைகளுக்குள்
எத்தனை எதிர்பார்ப்புக்களுக்குள்
எத்தனை எதிர்ப்புக்களுக்குள்
எந்திரமாய் எழுந்துநின்ற காதல்
இத்தனை சடுதியில்
இறந்துபோகுமென்று நான்கூட‌
நினைத்திடவில்லை...

புரிந்துகொள்ளமுடியாத உங்கள்
புரிதல்களில் 
தனித்துவிடப்பட்ட காதல்குழந்தை
அநாதையாய் கதறுகின்றது
அந்நியமாய் நின்றுபார்க்கும் எனக்கு
அழுகைமட்டும் கரம்நீட்டுகின்றது


உங்களிருவரின் 
சுய‌கெளரவங்கள் வென்றதது
உள்ளங்களின்
சுயம்வரங்களை கொன்றது

தீவிரமான கோபங்கள்
தீர்த்ததாய் எதுவுமில்லை உங்கள்
உறவினைத்தவிர‌
அவ‌னை வென்றதாய் அவள்
துறவறம்
அவளை வென்றதாய் அவன்
தனிமரம்


காதல்!

வெறும் வார்த்தையல்ல 
       வெறிபிடித்த குணமாய்த்தெரிகின்றது...











குட்டிக் கவிதைகள்,


01.வந்தாரை வாழவைப்பது
வளம் கொழிக்குந் திருநாடு
நொந்தோரை தேற்றியணைப்பது
குணங் கொண்டிடும் நம்வீடு!!

02.அடுத்தவரின் வேருண்டு வாழ்வாருமுண்டு
அன்பினில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மற்றாரில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மறைவினில் வேருண்டு வாழ்வாருமுண்டு...

03.நடையுடை பாவனை மட்டுமல்ல‌
பேசும் வார்த்தையிலும்
நாகரிகம் நளினமடையட்டும்
கேட்கும் செவிகளுக்கு
தேனாக இல்லாவிட்டாலும்
தேவையான தாகவேனு மிருந்திடட்டும்!!

04.உற‌வுக‌ளை
வ‌ர‌வுக்குள் சேருங்க‌ள்
ப‌கைத‌னை
த‌ர‌வினின்று மீறுங்க‌ள்!!

05.மகா ல‌க்ஷ்மிக‌ளே
ம‌ரும‌க‌ளாக‌ வேண்டுமென்றால்
கோயில் குருக்க‌ளின் கைக‌ளே
உண்டிய‌லை துடைக்க‌லாம்!!

06.நல்லெண்ண‌முய‌ர‌ அன்புய‌ரும்
அன்புய‌ர‌ உற‌வுக‌ளுய‌ரும்
உற‌வுய‌ர‌ ச‌ம‌த்துவ‌முய‌ரும்
ச‌ம‌த்துவ‌முய‌ர‌ ச‌மாதான‌முய‌ரும்
ச‌மாதான‌முய‌ர‌ ம‌னித‌முய‌ரும்
ம‌னித‌முய‌ர‌ ம‌ண்ணிலே
ந‌ன்மைக‌ளே யுய‌ரும்
தீமைக‌ளெ லாமுதிரும்!!

07.இருதிவரை என்
இதயமிப்ப டியேயிருந்து
இறந்துவிடும்
இறவாத உன் நினைவுகளுடன்!!

08.காதல் காதல் காதல்
காதலில்லையேல் சாதலல்ல‌
சாதித்தல் சாதித்தலே
பாதித்தலில் பயனுமுண்டென்பதை
பரிசோதித்தலே...

09.என்னுடையதாக இருந்தும்
 என்னைபற்றி இல்லாமல்
உன்னையே நினைக்கு தெனுள்ளம் இது
ந‌ம்பிக்கை துரோக‌மா
காதலி ன‌கோர‌மா...

ஏழ்மையை எங்கேயவன் படைத்தான்




கடவுள்மனி தனைதான் படைத்தான்
மனிதன் மற்றதெலாம் படைத்துக்கொண்டான்
படைத்தலி லென்னபிழை கண்டாய்மா மனிதா
பிழைகளில் பின்னிக்கொண்டவன் நீதானே...


கனிகளை உண்ணக்கற்றுக் கொடுத்தான்
பிணிகளை நீயேன் உருவாக்கிக்கொண்டாய்
மனதை மணக்க மதமாய் ஒளியானான்
மதத்தையே மடமையென உரைத்தாயே...


ஏழேநாளில் உலகை படைத்தான்
ஏழ்மையை எங்கேயவன் படைதான்
தாழ்வே யில்லா ஓர்வாழ்வை
தரவே சித்தம் வாஞ்சித்தான்...


தாழ்மையை த‌வ‌றாய் ப‌ய‌ன்ப‌டுத்தினோம்
ஏழ்மையுரு வாக‌வ‌ழிக‌ளை ய‌மைத்தோம்
வாழ்வை இன்னு முய‌ர்த்திட‌
வ‌றிய‌வ‌ர் வ‌யிற்றிலும் கைவைத்தோம்...


அடுத்த‌வ‌ன் க‌ன‌வையும் இச்சித்தோம்
ஆசைக‌ளி னெல்லைக்கே ஓடினோம்
த‌டுத்திட‌வும் கெடுத்திட‌வும் துணிந்தோம்
த‌ந்த‌வ‌னையே யின்றுப‌ழிக் கின்றோம்...



கல்முனை சிறாஜ்டீன் அவர்களின் குரலில் எனது கவிதை

http://www.youtube.com/watch?v=4Z-vbTB0MSc

கல்முனை சிறாஜ்டீன் அவர்களின் குரலில் எனது கவிதை

http://www.youtube.com/watch?v=4Z-vbTB0MSc



Published on Aug 11, 2012


எனது கவிதை அறிவிப்பாளர் சுஹைல் அவர்களின் குரலில்..

http://www.youtube.com/watch?v=NesMzVeIwXY

Friday, March 8, 2013

துருவ இணைய இதழில் இணைகின்றார் லறீனா அப்துல் ஹக்.


http://www.thuruvam.com/2013/03/php_8.html


நம்நாட்டில் "அனைவருக்கும் பல்கலைக்கழக உயர்கல்வி" என்ற தொனிப்பொருள் குறித்த பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்ற வேண்டுகோளுடன் துருவ நட்சத்திரத்துக்காக இணைகின்றார் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிறந்த பெண் எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக். பெயர் சொல்லக்கூடிய அளவில் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் பல்துறை சார்ந்த அவர் காத்திரமான பதில்களோடு துருவம் வாசகர்களுடன் மனந்திறக்கின்றார். 

கேள்வி: பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நீங்கள், உங்களுடைய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?


பதில்: எனது முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. திருமணமாகிவிட்டது. ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். கணவர் முஹம்மத் பிர்தௌஸ். தற்போது  ஹந்தெஸ்ஸ எனுமிடத்தில்  வசிக்கின்றேன். உயர்தரம் (கலைப்பிரிவு) வரை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். 2002 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. தமிழ் சிறப்புப் பட்டதாரியானதோடு, 2004 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், 2007 வரை மொழிபெயர்ப்புக் கற்கைநெறித் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். தற்போது முதுமாணிப்பட்ட (MPhil) ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்துள்ளேன்.


கேள்வி: கலைத்துறையில் உங்களது ஆர்வம் குறித்து கூறுங்களேன்?


எல்லோரைப் போலவும் எனக்கும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. எனது பின்வரும் வெளியீடுகளை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

1. எருமை மாடும் துளசிச்செடியும் (சிறுகதைத் தொகுதி) – 2003 
2. வீசுக புயலே (கவிதைத் தொகுதி) – 2003
3. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003
4. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004
5. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004
6. மௌனத்தின் ஓசைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி 2008
7. வார்த்தைகளின் வலி தெரியாமல்... - சமூகவியல் கட்டுரைகள் 2012
8. "பொருள் வெளி" ஆய்வுக் கட்டுரைத் தொகுதி 2012

இவை தவிர, 'நம் அயலவர்கள்' எனும் சிறுகதைத் தொகுதிக்காக 5 சிங்களச் சிறுகதைகளைத் தமிழிலும், 'அசல் வெசி அப்பி' எனும் சிங்களச் சிறுகதைத் தொகுதிக்காக ரஞ்சகுமாரின் 'கோளறு பதிகம்' சிறுகதையை (தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்களமொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் உரைகள், கட்டுரைகளை மொழிமாற்றம் செய்துள்ளேன்.

தற்போது 'சிங்கள மொழியில் தமிழ்மொழியின் செல்வாக்கு' எனும் எனது மொழிபெயர்ப்பு நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 'தென்றலிலே' எனும் பெயரில் என்னுடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது. அந்த இசைத்தட்டில் இடம்பெறவுள்ள, நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய இரண்டு பாடல்கள் http://nilapenn.com தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், http://nilapenn.com எனும் எனது இணையத்தளத்தை நிர்வகிக்கின்றேன். 

கேள்வி: கலைத்துறை சார்ந்த உங்களது ஈடுபாடு பற்றி...? 

* பேராதனைப் பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு ஆய்வுக் கருத்தரங்குகளில் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன்.  

 * 2011இல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு)

* 2012இல் சர்வதேச இலக்கிய மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கவிதை மொழிபெயர்ப்பும் கோட்பாட்டியல் பிரச்சினைகளும்: சில அனுபவக் குறிப்புக்கள்)

 * 2012 இல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக் கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் "பெண்" பற்றிய விம்பம்)

கேள்வி: சமூகத்தின் அறிவுப்பாதைக்கு வித்திடவேண்டிய பல்கலைக்கழகச் சூழல் பல்வேறு அக, புறக்காரணிகளால் அடிக்கடி தளம்பல் நிலையினை சந்திக்கின்றது. இது பல்கலைக்கழக கல்விமுறையின் மீதான நம்பிக்கையின்மையினையும் ஆர்வமின்மையினையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றது. இதுகுறித்து உங்களது பதில் என்ன?

பதில்: இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒரு நிலைமைதான். ஆனால், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் ஏனைய எல்லாத்துறைகளைப் போலவே கல்வித் துறையிலும் பெரும் பாதிப்பைச் செலுத்திவருவது தவிர்க்க முடியாததாகும். 

இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் நாட்டின் அரசியல் குழப்பநிலையால் பல்கலைக்கழகங்கள் சில வருடங்கள் இயங்காமல் இருந்த காரணத்தால், பிற்காலத்தில் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. நாமும் அப்படிக் காத்திருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள்தான். 

எனினும், இப்போதெல்லாம், உயர்தரப் பரீட்சை எழுதியபின் அவ்வளவு நீண்டகாலக் காத்திருப்பு இன்றியே மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடியதாய் இருப்பதும், பல்கலைக்கழகங்களினதும், துறைசார் கற்கைகளினதும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சாதகமான அம்சங்களே.

உண்மையில், பல்கலைக்கழகக் கல்வி என்றதும், நாம் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. இதுகுறித்து நாம் அலட்டிக்கொள்வதில்லை அதாவது, நமது நாட்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மொத்த மாணவர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. இந்நிலைமை மாறவேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின் கல்வி முறைமை மாற்றப்படவேண்டும்.


இதுதொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக் கரிசனை எடுக்க வேண்டும். இவ்விடத்தில், சிலி நாட்டின் இளம் புரட்சி வீராங்கனை கமிலா வொலேஜோவின் பணி நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து அந்நாட்டு அரசுக்கே பெரும் சவாலாய்த் திகழ்ந்தவர், அவர். நம்முடைய நாட்டில் "அனைவர்க்கும் பல்கலைக்கழக உயர்கல்வி" என்ற தொனிப்பொருள் குறித்த பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கேள்வி: மொழிபெயர்ப்பு எழுத்தாக்கம் 'கத்தியின் மீது நடப்பது போன்ற செயல்' என்று கூறப்படுகின்றது. இதைப் பற்றியும், உங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள்?

பதில்: உண்மைதான். எந்த ஒரு மொழிபெயர்ப்பும் 100% அதன் மூலப்படைப்புக்குச் சமமானதாக இருப்பதில்லை. என்றபோதிலும், அதிகபட்ச ஒத்த தன்மையைக் கொண்டுவர முயற்சிப்பதே ஒரு மொழிபெயர்ப்பாளர் செய்யக்கூடிய பணியாகும். எனினும், இதில் மிகப்பெரும் சவால்களை ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ள நேர்கின்றது. இதுதொடர்பில் தமிழிலே விரிவான ஒரு நூல் எழுதும் உத்தேசம் எனக்குண்டு.

கேள்வி: 'மொழிபெயர்ப்பு' என்பது பல மொழி இலக்கியச் சுவைகளை அவரவர் மொழிகளில் பெற்றுக்கொள்ளும் அரிய அவசியமான விடயமாக இருக்கின்றது அந்தச் சிறப்புத் தகைமையை பெற்ற உங்களுக்கு மொழிபெயர்ப்பில் எவ்வாறு  ஈடுபாடு ஏற்பட்டது? எவ்வாறான விடயங்களை மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்துக்கு வழங்குகின்றீர்கள்?

பதில்: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில்தான் நான் இத்துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். அங்கு நிலவிய பல்லின- பன்மொழிச் சமூகச் சூழலும் இதற்கு ஒரு காரணம் எனலாம். அவ்வப்போது சிங்கள, ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, கலாநிதி துரை. மனோகரனின் பார்வைக்கு அனுப்புவதுண்டு. சங்கப் பலகை என்னும் தமிழ்த் துறையின் அறிவித்தல் பலகையில்  அவை உடனுக்குடன் வெளியிடப்படும். அதுவே பின்னர் இடையறாத பயிற்சி மூலம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. 

மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராய்ப் பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ்-ஆங்கில-சிங்களத் துறைகள் மூன்றும் ஒன்றிணைந்து ஒழுங்குசெய்த ஐந்து வாரகால மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற  மகத்தான வரப்பிரசாதமாய்க் கருதுகின்றேன்.

இதன் பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புக் கற்கைகளுக்கான டிப்ளோமா, பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பாடநெறிகளுக்கான விரிவுரையாளராகப் பணியாற்றியமை மூலம் நான் இத்துறையில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன்படியே என்னுடைய முதுமாணிப்பட்ட ஆய்வேட்டுக்கான தலைப்பையும் மொழிபெயர்ப்புத் துறை சார்ந்ததாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 

கேள்வி: பெண்ணியச் சிந்தனையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? இச்சிந்தனையில் பலருக்கு உடன்பாடின்மையினை அவதானிக்க முடிகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: பெண்ணியம், பெண்ணியவாதம் என்பன குறித்து சமூகத்தில் ஒருவகைத் தட்டையான புரிதல் பரவலாகி இருப்பது வருந்தத்தக்கதே! உண்மையில், பெண்ணியவாதம் என்பது சோஷலிசப் பெண்ணிலைவாதம், மார்க்ஸியப் பெண்ணிலைவாதம், தீவிரப் பெண்ணிலைவாதம் முதலான பல்வேறு வகைப்பட்டதாகும். என்னைப் பொறுத்த வரையில், ஆணும் பெண்ணும் இணைந்த சமூக அமைப்பில், இருதரப்பாருக்கும் சிறப்பியல்புகள், தனித்தன்மைகள் உள்ளன. அவை பரஸ்பரம் புரிந்துகொள்ளப்படவும் மதிக்கப்படவும் வேண்டும். வீட்டுப் பணியிலும் சரி, சமூகப் பணியிலும் சரி, ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்போடும் பணியாற்ற முன்வர வேண்டும். இதில் ஈகோ பார்க்க எதுவும் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்ற பாரதியின் வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை.


மேலும், விளம்பரம், கலை, இலக்கியம் (சினிமா/ பாடல் உட்பட) என்பவற்றில், பெண் ஒரு பாலியல் பண்டமாக, வெற்று உடலாகப் பார்க்கப்படும் மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, பெண்ணின் உடல் ஒரு வர்த்தகப் பண்டமாக்கப்படுவதையும், அழகிப்போட்டி, ஃபெஷன் ஷோ என்ற பெயரில் அவளது உடல் ஒரு "பாலியல் பண்டமாக" ஆக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமானால், 'தன்னுடைய உடல் அழகால் ஆண்கள் கவரப்படுவதே தனக்குப் பெருமை தருவது' என்று எண்ணி அழகு சாதனங்களின் பின்னால் அலைந்து திரியும் அடிமை மனப்பான்மையைப் பெண்கள் வெற்றிகொள்ள வேண்டும். ஆம்! இது முதலில் தனக்குள் நிகழ்த்தப்பட வேண்டிய போராட்டம். அதன் பிறகே, பெண்ணின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் முனைப்புப்பெற முடியும் என்று நான் நம்புகின்றேன். 

கேள்வி: ஆண் படைப்பாளிகளும் பெண்ணின் மனவுணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஆக்கங்களை படைக்கின்றனர் இது அவர்களின் நேரான சிந்தனையுடன் அதாவது புரிதலுடன் கூடியதாக வெளிப்படுகின்றதா? பெண்ணை பற்றி ஒரு பெண் சொல்வதற்கும் ஆண் சொல்வதற்கும் எவ்வாறான ஒற்றுமை வேற்றுமைகளை உணரமுடிகின்றது?

பதில்: பொதுவாக, ஒரு படைப்பாளி எனும்போது, உணர்வுகளைப் புரியும் ஆற்றல் இயல்பானதே என்பது முக்கியமானது. அவனோ அவளோ இன்னொரு நிலையில் தன்னை வைத்து உணரும் திறன் தான் ஒரு படைப்பாளியின் மிகப் பெரிய பலம். எனவேதான், ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உணர்தல் சாத்தியமாகின்றது. நம்முடைய மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனை எடுத்துக் கொண்டால், பெண்களின் பிரச்சினைகளை அவரளவுக்கு யாரும் பேசவில்லை என்ற அளவுக்கு அதில் மிகப் பெரும் பங்காற்றியுள்ளார்.

எனினும், இதில் குறிப்பிடத்தக்க நுண்ணிய வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் இடங்களில் அவர்களுக்கு ஒரு பெண்ணாகவே இருந்து தீர்வுகளை முன்வைப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது.  

அதேவேளை, ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவனை செய்து, தனது உணர்வுநிலையை வெளிப்படுத்துவதையும், ஒரு பெண் நேரடியாக தன் உணர்வை வெளிப்படுத்துவதையும் சமூகம் எதிர்கொள்ளும் விதமும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். மாணிக்க வாசகர்- ஆண்டாள் இருவரதும் கடவுள் மீதான காதல் உணர்வின் வெளிப்பாடுகாளுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமும், வெளிப்படையாகக் காதல் தாபத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதும் ஆண்களையும் பெண்களையும் சமூகம் பார்க்கும் விதத்தில் உள்ள வேறுபாடுகளும் இதற்கு மிகச் சிறந்த சான்றாகும்.

எனவே, இது தொடர்பில், வெளிப்படுத்தப்படும் உணர்வுநிலை, அது கட்டமைக்கப்படும் சூழல்  சார்ந்த புறக்காரணிகள் ஆகியனவும் சேர்ந்தே இந்த ஒற்றுமை வேற்றுமைகளைத் தீர்மானிக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். 

கேள்வி: காத்திரமான கருத்துக்களோடு வெளிப்படும் உங்களுடைய எழுத்துக்களை எவ்வாறு சமூகத்திடம் கொண்டுசேர்க்கின்றீர்கள்? அதில் விஷேடமாக எதனை வலியுறுத்திக்கூற விளைகின்றீர்கள்?

பதில்: பொதுவாக என்னுடைய எழுத்துக்களை சமூக அவலங்களை வெளிக்கொணரவும், குறிப்பாகப் பெண்ணின் துயரங்களை அடையாளப்படுத்தவும், சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவுமாகப் பல வகையிலும் நான் பயன்படுத்த முனைகின்றேன். எழுத்து என்பது இறைவனின் கொடை. அதனைச் சமூக மேம்பாட்டுக்காக, மானிட நலனுக்காகப் பயன்படுத்துவது அந்தக் கொடைக்கான நன்றிக்கடன் என்றே கருதுகின்றேன்.

எனவே, அதன் பொருட்டு பாரம்பரியமான ஊடகங்களோடு, இணையம் முதலான மின்னூடகங்களையும் பயன்படுத்துவதன் மூலமும், அக்கருத்துக்களை தமிழ்-சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எடுத்துச் சொல்வதன் மூலம் மிகப் பரவலாகக் கொண்டு செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை.

கேள்வி: பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது, வளர்ந்துவருகின்ற பெண் படைப்பாளிகளின் போக்கினில் எவ்வாறான தன்மையினை அவதானிக்கின்றீர்கள்?

பதில்: இன்றைய பெண் படைப்பாளிகளின் எழுத்துப் பங்களிப்புக்கள் முன்னர் எப்பொழுதையும் விட மிகவும் காத்திரமாக முனைப்புப் பெற்றுள்ளமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இலங்கைப் பெண் படைப்பாளிகள் பலரும் தமது வெளிவீடுகளை நூல் வடிவில் கொண்டுவந்துள்ளார்கள். பட்டியல் சற்று நீளமானது என்பதால் பெயர்களைச் சுட்டுவதைத் தவிர்த்துக்கொள்கின்றேன். அவற்றுள் பெண்கள் தமக்கான பொருள் வெளியைத் தாமே வரையறுத்துக் கொண்டவர்களாகவும், தமக்கான மொழியை மிகவும் சுதந்திரமாகக் கையாள்பவர்களாகவும் உள்ளமை மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. இது குறித்து, கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேசத் தமிழ்  எழுத்தாளர் மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையிலும் நான் விரிவாகப் பேசியுள்ளேன். 

கேள்வி: இசைமீது ஆர்வம் கொண்ட நீங்கள் எதிர்காலத்தில் பாடல் இயற்றி, இசையில் பாடுகின்ற திட்டங்கள் ஏதும் கொண்டுள்ளீர்களா?

பதில்: ஆம். என்னிடம் 10 பாடல்கள் கைவசம் உள்ளன. நானே எழுதி மெட்டமைத்துள்ளதோடு, அவற்றுக்கான இசை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் திட்டமிட்டு வைத்துள்ளேன். அவற்றுள் இரண்டை நீங்கள் என்னுடைய இணையத்தளத்தில் கேட்டு மகிழலாம். இன்ஷா அல்லாஹ், வெகு விரைவில் என் பாடல்கள் அடங்கிய அல்பம் ஒன்றை வெளியிட உத்தேசித்துள்ளேன். 

கேள்வி: தமிழிலிருந்து ஏனைய மொழிகளுக்கு கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்களா? அதற்கான திட்டங்கள் ஆர்வம் எப்படி காணப்படுகின்றது?

பதில்: இன்னும் இல்லை. இனி அப்படியான முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வம் உண்டு. 

கேள்வி: பல்வேறு சிக்கல்களோடும் பிரச்சனைகளோடும் அல்லல்படும் பெண் சமூதாயத்துக்கு இந்த மகளிர் தினம் கொண்டாடும் நாளில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்: வாழ்க்கை என்பது எப்போதும் ஒரு போராட்டம்தான். வீட்டிலும்சரி வெளியிலும் சரி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, சவால்களைக் கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்துவிடக் கூடாது. நம்மைநாமே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முதற்படியாக நமது கல்வித் தகைமையை வளர்த்துக் கொள்வதோடு, நம்முள் உள்ளார்ந்திருக்கும் ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.   

மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், பெண்கள் தம்முடைய சுயகௌரவம் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாய் மாற வேண்டும். தாம் வெறுமனே ஒரு பாலியல் பண்டமாக, அலங்காரப் பதுமையாக, வெற்று உடலாகப் பார்க்கப் படுவதை பெருமைக்குரியதாகக் கருதும் அறியாமையில் இருந்து பெண்கள் மீள வேண்டும். குறிப்பாக, இணைய பாவனை இருந்தும்கூட எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பு என்பவற்றையே தேடிச் செல்லும் கிணற்றுத் தவளைகளாக இருக்காமல், அந்நிலையை மாற்றி, நாட்டு நடப்பு, உலக நடப்பு என்பன குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். சமூக அக்கறை, மானிட நலன் என்பனவற்றை நாடும் வகையில் அறிவையும் மனதையும் விசாலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அவ்வாறே, ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலுமே தங்கியுள்ளன என்ற தன்னம்பிக்கையும் நிமிர்வும் தன்மானமுள்ள ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகும். பாரதி இதனையே, "நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும்"  என்று குறிப்பிட்டுள்ளான். அத்தகைய புதுமைப் பெண்களே உருவாகவும் உருவாக்கப்படவும் வேண்டும். 

கேள்வி: உங்களுடைய கலை இலக்கிய திறமைகளுக்கு கிடைத்த வெற்றிகளையும் விருதுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: சிறுகதைக்கான பரிசுகள், விருதுகள்

* வீரகேசரி பவளவிழா சிறுகதைப் போட்டி (2005) 3ஆம் பரிசு
* சிறுகதை: வேரில் வைத்த தீ
* அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின சிறுகதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 2 ஆம் பரிசு
* சிறுகதை: எருமை மாடும் துளசிச் செடியும்
* அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி நடாத்தப்பட்ட சர்வதேச சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (2010)
சிறுகதை: எனக்கான 'வெளி'

கவிதை

* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள்: 1 ஆம் பரிசு (2000)
* அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின கவிதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 2ஆம் பரிசு

பாடல்

* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 1ஆம் பரிசு (2000)
* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 3ஆம் பரிசு (1993,1995)
* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1992)

சிறுவர் இலக்கியம்

* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2ஆம் பரிசு (2003)
* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1994)

நாடகம்

* பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நாடகப் போட்டி : நினைவில் நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது (1998)
* நாடகம்: "இதுவரை இவர்கள்..."

கட்டுரை

* கட்டுரை: "நமக்கென்றொரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்" என்ற தலைப்பில் "பாலைவனத்தூது" 
* வலைதளம் நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.

பாடல் இயற்றுதல் (வரிகள், மெட்டு, இசையமைப்பு)

* பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க வருடாந்தப் போட்டிகள்: 3ஆம் பரிசு (1999)

* வவுனியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 2003 ஆம் ஆண்டு ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச மகளிர் தினவிழாவில், 'பல்துறை ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண்'ணுக்கான விருது கிடைக்கப்பெற்றது.

இவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற துருவம் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.