வலிகள் கண்ட இதயத்துக்கு
வழியாய்ச் சொல்ல என்
வார்த்தைகள் வலிமையற்றுப்போனது
காதல்!
வெறும் வார்த்தையல்ல
இது எவரையும்
வெற்றிடமாக்கிப்போட்டிடும்
வெறிபிடித்த குணமாய்த்தெரிகின்றது
ஒரே ஒரு விட்டுக்கொடுப்பு
ஒரு நிமிட நிதானம் இந்த
கண்ணீர்ப்பாதையை மாற்றியிருக்கும்
யார் என்ற பிடிவாதங்கள்
அமைதியாக்கப்பட்டிருந்தால்
ஆர்ப்பரிக்கும் இவ்விதயக் குமுறல்
அடக்கிவைக்கப்பட்டிருக்கும்
ஆறுதல் சொல்லிட என்னிடம்
ஆழமான வார்த்தைகள் எதுவுமில்லை
அழுகை மட்டும் அவளுக்காய்
அமைதி மட்டும் அவனுக்காய்
நீயா நானா என்ற
நீதிமன்ற சட்டங்க ளுங்கள்
நேசத்தில் நிர்மூலமாக்கப்பட்டிருந்தால்
சமாதியாக்கப்பட்ட இக்காதல்
சாதனைச் சாம்ரஜ்யம் நடத்தியிருக்கும்
எத்தனை கனவுகளுக்குள்
எத்தனை ஆசைகளுக்குள்
எத்தனை எதிர்பார்ப்புக்களுக்குள்
எத்தனை எதிர்ப்புக்களுக்குள்
எந்திரமாய் எழுந்துநின்ற காதல்
இத்தனை சடுதியில்
இறந்துபோகுமென்று நான்கூட
நினைத்திடவில்லை...
புரிந்துகொள்ளமுடியாத உங்கள்
புரிதல்களில்
தனித்துவிடப்பட்ட காதல்குழந்தை
அநாதையாய் கதறுகின்றது
அந்நியமாய் நின்றுபார்க்கும் எனக்கு
அழுகைமட்டும் கரம்நீட்டுகின்றது
உங்களிருவரின்
சுயகெளரவங்கள் வென்றதது
உள்ளங்களின்
சுயம்வரங்களை கொன்றது
தீவிரமான கோபங்கள்
தீர்த்ததாய் எதுவுமில்லை உங்கள்
உறவினைத்தவிர
அவனை வென்றதாய் அவள்
துறவறம்
அவளை வென்றதாய் அவன்
தனிமரம்
வெறும் வார்த்தையல்ல
வெறிபிடித்த குணமாய்த்தெரிகின்றது...
No comments:
Post a Comment