Tuesday, March 19, 2013

******உயிருக்குள்******



உனதிமைகளுக்குள்
என் விழிகள்
எனதிதழ்களுக்குள்
உன் மொழிகள்...

என் வெட்கங்களை அன்றுதான்
நானே பார்த்தேன்
மூடிக்கிடந்த பனிமூட்டம்
முகிழ்ந்து கொட்டியதை
அப்போதுதான் உணர்ந்தேன்...

வெள்ளைத்தாளிலும் 
வானவில்லூறும் என்பதும்
தென்றல் கூட‌
சூறவளியாய்ச் சீறுமென்பதும்
அந்தநொடிதான் அறிந்தேன்...

வண்ண இதழ்களுக்குள்
வருடும் மணமும்
திருடும் அழகும் இருந்ததை
தென்றல் தீண்டி 
திறவுகொண்ட போதுதான்
மலரே அறிந்துகொண்டது...

காதலைத்தாண்டிய 
ஏதோவொன்று
அதுவே
காதலைத் தாண்டிச்செல்லவிடாத
ஜென்மபந்தமாய்...

உயிருக்குள் நிறைந்துகொண்ட‌
நேசம்
சுவாசமாய் உலவுகின்றது என்
மரணத்தை தவிர இதனை
விடுவிப்பதற்கு வழியேதும் இங்கில்லை!!

No comments: