அதே போல பாடசாலையில் நடக்கும் பாடல் போட்டிகள், மத்ரஸாவில் நடக்கும் மீலாத் தின பாடல் போட்டிகளுக்கு எனது தாயார் ஹிந்திப் பாடல்கள், பழைய தமிழ் பாடல்கள் ஆகியவற்றின் மெட்டுக்கு வேறு பாடல்களை எழுதித் தருவார். அவற்றைப் பாடி பல தடவைகள் மாகாண மட்டங்களிலும் முதலிடம் பெற்றிருக்கின்றேன். நான் பாடும்போது சபையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் ஒரு அமைதி நிலவும். அதை எனது ஆசிரியர்கள் மிகப் பெருமையாகக்கூறி என் தாயாரிடம் என்னைப் பற்றி பாராட்டுவார்கள்.
இவ்வாறு இருந்த என் திறமைகளை நானே மறந்திருந்திருந்தேன். பாடலுக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமலிருந்த சந்தர்ப்பத்தில்தான் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தனியார் அமைப்புக்கள் ஆகியன ஆண்டு தோறும் திறந்த மட்ட பாடல் போட்டிகளை நடத்துவார்கள். அதுகுறித்து பத்திரிகைகளில் பிரசுரமான பாடல் போட்டிக்கான தகவல்களை சகோதரி ரிம்ஸா முஹம்மத் எனக்கு சொல்லித் தருவார். அவர் சொல்லித் தராவிட்டால் அப்போட்டிகளுக்கு நான் எழுதி, அவற்றை அனுப்பி வைத்து, முதல் பரிசும், பாராட்டும் பெற்றிருக்க முடியாது. இந்தப் புத்தகத்தைக்கூட வெளியிட்டிருக்க முடியாது.
08. இவ்விலக்கிய பெரும் பரப்பில் சளைக்காமல் இயங்கும் படைப்பாளியான தங்களின் வெற்றியின் ரகசியம்?
சளைக்காமல் இயங்குவதற்குக் காரணம் சகோதரி ரிம்ஸா முஹம்மத் தான் என்பதை ஆணித்தரமாகக் கூற விரும்புகின்றேன். காரணம் நான் ஊரிலேயே இருந்துகொண்டு எப்போதும் போல் எழுதியிருந்தால் எனது கவிதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவருவதோடு நின்று போயிருக்கும். அதைவிடுத்து இலக்கியத்தின் ஏனைய பக்கங்களில் முத்துக்குளிக்க முடியாது போயிருக்கும்.
எனது வெற்றிக்கு என் குடும்பத்தவர்கள் எப்படி ஏணியாக இருக்கிறார்களோ அதே போல எனது ஒவ்வொரு முயற்சிக்கும், வெற்றிக்கும் முழுமுதற் காரணியாக இருப்பவர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு பரிசுக்கும், கை தட்டலுக்கும் சொந்தக்காரி அவர்தான். அவரால்தான் நான் சளைக்காமல் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
நூறு போலி நண்பர்கள் இருப்பதைவிட ஒரு உண்மையான நண்பர் இருப்பது வரமாகும். அந்த வரம் சகோதரி ரிம்ஸா முஹம்மத் மூலம் எனக்கு வாய்த்திருக்கிறது. இறைவனுக்கே எல்லாப் புகழும்.
09. போட்டிகள் நிறைந்த இச்சாலையில் நீங்கள் சந்தித்த விமர்சனங்கள், வீழ்த்துதல்கள், தட்டிக்கொடுப்புக்கள் பற்றி சொல்லுங்கள்?
இலக்கியத் துறை என்பது இலக்கிய பூதங்கள் நடமாடும் ஒரு பெருவெளியாகும். அதில் சில புன்னகையோடு தலையாட்டும். சில பூக்களை பரிசளிக்கும். ஆனால் உள் மனதுக்குள் பூதத்துக்குரிய எல்லா அம்சங்களும் இருக்கும்.
எமது படைப்புக்களில் குறைகளை மட்டும் காண்பது சிலருக்கு தொற்றிக்கொள்ளும் நோய் போலாகும். எமது செயற்பாடுகளுக்கு எப்போதும் எதிர்மறையான கருத்துக்களைக் கூறி எம்மை, எம் முயற்சியை முடக்கவும் பலர் இருக்கின்றார்கள். அதுபோல நாம் சொல்லாத ஒன்றை இன்னொருவரிடம் நாம் சொன்னதாகச் சொல்லும் பச்சோந்திகள் இருக்கின்றார்கள். நெஞ்சில் குத்த வீரமில்லாமல் முதுகில் குத்துபவர்கள் இருக்கின்றார்கள்.
நாம் தெரிவுக்காக அனுப்பும் புத்தகங்களை காரணமில்லாமல் வெட்டி வீழ்த்தியவர்களும் ஆதாரத்தோடு அம்பலமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. புத்தகம் கிடைக்கவில்லை என்ற காரணம் எமக்கு கூறப்பட்டது. ஆனால் எதேச்சையாக எனக்கு இன்னொரு கோப்பு காட்டப்பட்டபோது அதில் குறித்த நபர் எமது படைப்புக்களை நிராகரித்திருப்பது புரிந்தது. சுய இலாபங்களுக்காகவும், இவை மேற்கொள்ளப்படுகின்றன. சில துவேசத்துக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர பல அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவை எமது நூல்களை தரம் கண்டு கொள்வனவு செய்து ஊக்குவித்திருப்பதும் மறுக்க முடியாது.
சில இடங்களில் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டு இறுதிச் சுற்றிலும் தெரிவான பிறகு இதற்கு முதல் பரிசெடுத்தவர்கள் கண்டுகொள்ளப்பட மாட்டார்கள் என்று சொல்லப்பட்ட தருணங்களும் உண்டு. 'முதல் பரிசை ஏற்கனவே பெற்றவர்கள் மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது' என்ற நிபந்தனை விதிக்கப்படாமல் இறுதியில் இவ்வாறு சொல்வதெல்லாம் வரலாற்றில் பதியப்பட வேண்டிய துரோகங்களாகும்.
இவர்களிடமிருந்தெல்லாம் ஒதுங்கி, விலகி ஒரு கத்தியில் நடப்பது போன்றுதான் இலக்கியத்தில் நிலைத்து நிற்க முடிகின்றது.
அதே சந்தர்ப்பத்தில் எமது அனைத்து முயற்சிகளுக்கும் கைகொடுத்தும், உதவி செய்து வரும் பல நல்ல உள்ளங்களும் எம்மோடு இருக்கின்றார்கள். அவர்களது வழிகாட்டலிலும், ஆலோசனையிலும் எமது முயற்சிகளை நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம். ஒரு சிலரால் எமது முயற்சிகளை ஜீரணித்து ஏப்பமிட முடியாமல் போனாலம் கூட பலர் எம்மை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
10. பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனைகளாக நீங்கள் காண்பதும் அதற்காக நீங்கள் தரும் ஆலோசனைகளும்?
திருமணத்துக்குப் பின் பெண்கள் எழுதுவதில்லை என்பதுதான் காலங் காலமாக சொல்லப்பட்டு வந்த பிரச்சினை. அது அவரவர்களின் வேலைப்பளுவுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்படுவது. அதைவிடுத்து இலக்கிய முயற்சிகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போதே பல இடர்களை சந்திக்க வேண்டி வருகின்றது. உதாரணமாக சில ஆண் எழுத்தாளர்கள் இரட்டை அர்த்தங்களில் பேசும் பழக்கம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட அருவருப்புக்களில் இருந்து விலகியிருக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக அவர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது என்ற சந்தர்ப்பத்தில் பொய்யைக் கூறிவிட்டு அவர்களிடமிருந்து கழற வேண்டியுள்ளது.
அதுபோல ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்கு கிடைக்கும் பாராட்டு பெண்களில் எழுத்துக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை. என்னதான் ஆணாதிக்கம் அழிந்தது என்று சொல்லப்பட்டாலும் பெண்களுக்குரிய அங்கீகாரத்தை முற்றுமுழுதாக ஒருசில ஆண்களால் வழங்க முடியாதிருக்கின்றது.
அதுபோல புத்தக வெளியீடுகளை செய்யும்போது ஆண்களைப் போல பெண்களுக்கு அந்தச் சுமையை தாங்கிக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றது. சிலநேரம் அது நகைகளை அடகுக் கடையில் வைக்கத் தூண்டுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு குறிப்பிட்டவர்கள் நடந்துகொள்ளும் முறையிலேயே தங்கியிருக்கின்றது.
11. கலையுலகில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கான வரவேற்பு எவ்வாறு காணப்படுகின்றது?
பெண்களை மனதார வரவேற்றம் பலர் இருக்கின்றார்கள். பெண்களை மதித்து, அவர்களின் எழுத்தை மதித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் ஆண்கள் நிறையவே நம் மத்தியில் உள்ளனர். ஒரு சில கறுப்பு ஆடுகள்தான் பெண்களை இன்னும் அடிமையாகவே பார்க்கும் மனப்பாங்கில் இருக்கின்றன.
உலகலாவிய ரீதியில் நோக்கினாலும் எல்லா மட்டங்களிலும் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றது என்று கூற வேண்டும். சம உரிமை, பெண் உரிமை என்பவற்றுக்கான அர்த்தத்தை பெண்கள் வென்றிருக்கின்றார்கள் என்பது கண்கூடு. இதற்கு முன்னைய தலைமுறை சார் பெண்கள் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்ட்டவர்களாக அதாவது தமக்குள்ளிருக்கும் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. பெண் நடந்தால் பூமிக்கு வலிக்கக் கூடாது. பெண் பேசினால் வெளியில் கேட்கக் கூடாது போன்ற அடக்குமுறைகளுக்குள் அகப்பட்டிருந்தார்கள். இன்று பெண் விளையாட்டுத் துறையில் சாதித்திருக்கின்றாள். பட்டி மன்றங்களில் தூள் கிளப்புகின்றாள். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றாள்... எனவே அவை காலமாற்றத்தால் ஏற்பட்டவை மாத்திரமல்ல, பலரது மன மாற்றத்தாலும் ஏற்பட்ட வெற்றியாகும்.
12. 'பெண்ணியம்' தங்களின் பார்வையில்?
பெண்ணியம் என்றால் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பது பொருளாகும். சுதந்திரம் இல்லை.. விடுதலை இல்லை என்றெல்லாம் போராட்டம் நடத்தி குறிப்பிட்டளவு வியத்தகு வெற்றி கிடைத்த பின்பு பெண்ணியம் என்ற போர்வையில் சாத்தான் ஆடும் ஆட்டத்தை அரங்கேற்றக் கூடாது.
திறமைகளை வெளிப்படுத்துவது முயற்சியாக கருதப்படும். ஆனால் உடலை வெளிப்படுத்துவது கவர்ச்சியாகத்தான் நோக்கப்படும். இரவில் நடமாடுவதற்கு பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவள் வன்முறைக்குட்படுத்தப்பட ஆண்களுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டதைப் போலாகும். பெண் என்பவள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும், சிறந்த ஒழுக்கங்களைப் பேணுபவளாகவும் இருக்க வேண்டும். அதற்காக மூளையை மறைக்க வேண்டும் என்று அர்த்தமாகிவிடாது. திறமைகளை வெளிக்காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் ஏனைய பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதுதான் பெண்ணியம்.
13. உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றி?
பரிசுகள்
• 2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், புத்தகப் பரிசும்
• 2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்
• 2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்
• 2012 ஆம் ஆண்டில் யாஃதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டும் பத்திரமும், பணப்பரிசும், பதக்கமும்
• 2014 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் வெள்ளிப் பதக்கம்
• 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் முதலாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் தங்கப் பதக்கமும்
விருதுகள்
• சிறந்த பாடலாசிரியர்
• சிறந்த சிறுகதை எழுத்தாளர்
• காவிய பிரதீப
• எழுசுடர்
14. பல நூல்களை வெளியிட்டுள்ள நீங்கள் நூல் வெளியீட்டின் மூலமாக எத்தகைய அனுபவத்தினை பெற்றுள்ளீர்கள்?
நூல் வெளியீடுகள் ஒரு எழுத்தாளனின் வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. நூலை அச்சிட்டு, விழாவுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு, அழைப்பிதழ் அடித்து, மண்டபத்துக்கு முற்பணம் செலுத்தி, எழுத்தாளர்கள் பார்வையாளர்களாக வந்து, மண்டபம் நிறைந்து, இதயம் படபடக்கும் அந்த ஆனந்த அவஸ்தையான நிமிடம்தான்... ஒரு எழுத்தாளனின் மகிழ்ச்சிக்குரிய தருணம்! அவனது எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். நூல் வெளியீடுகளின் போது பண ரீதியான இடையூறுகள் ஏற்படலாம். அல்லது நண்பர்கள் வருகை தராமை மனக் கவலையை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்த்துப் பார்த்தால் நூல் வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் புதிதாக நூல் வெளியிடும் அனுபவத்தையே தந்திருகின்றன.
15. நீங்கள் வியக்கும் இலங்கை படைப்பாளிகள்?
பொதுவாக பாகுபாடின்றி அனைவரது எழுத்துக்களையும் நான் ஆர்வமாக வாசிப்பேன். சிலரது கற்பனைகள் அபாரமானவை. இலகுவில் சிந்தையில் சிக்காதவற்றையெல்லாம் வார்த்தைகளில் சிறைபிடித்திருப்பார்கள். அவற்றை வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கும். இளந்தலைமுறை எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் என்ற பேதமின்றி அனைவரது எழுத்துக்களும் என் இதயத்தை ஆக்கிரமிப்பதுண்டு. அதில் சில குறைகளைக் காணும்போது உரியவருடன் தொடர்பிருந்தால் அது பற்றி அவரிடமே கருத்துரைப்பேன். நிறைகளை இரசனைக் குறிப்புக்களாக எழுதிவிடுவேன்.
16. திறமையானவர்களுக்கு சரியான களம் கிடைக்கப்படுகின்றதா?
திறமையான இளம் படைப்பாளிகளுக்கான களம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது. இளையவர்கள் முதன்முதலாக எழுதும் படைப்புக்கள் தரத்தில் சற்று குறைவாக இருக்கும். ஆனால் அதில் வீச்சு இருக்கும். அதைப் பார்த்து அவர்களை வளர்த்து விடுவதை விட, அவர்களுக்கு குழிவெட்டி அதில் தள்ளிவிடும் வாய்ப்புக்கள் மிக அதிகம். குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கவிதைகளை மாத்திரமே பிரசுரிக்கின்றன. ஒருசில பத்திரிகைகளே புதியவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன.
17. முகநூல் போட்டிகள், விருதுகள் பற்றிய தங்களின் கருத்துக்கள்?
முகநூல் போட்டிகளும் விருதுகளும் இளம் படைப்பாளிகளுக்கு நல்லதொரு தளமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கூறியதைப் போன்று களமில்லாமல் தவிப்பவர்கள் தமது எழுத்துக்களைப் பதிவேற்றி ஏனையவர்களின் கருத்துக்களை முகநூல் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். முகநூலில் நன்றாக எழுதுகின்றவர்கள் பலருக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாக இருக்கின்றது. வாசிப்பு அருகி தொழில் நுட்பம் பெருகி வரும் இக்காலத்தில் இலக்கியத்தை இணையம் மூலமாக வளர்க்கும் இச்செயற்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் முகநூலில் மட்டும் தாங்களது முயற்சிகளை முடக்கிக்கொள்ளாமல் சகல ஊடகங்களையும் அவர்கள் பயன்படுத்தினாலே வெற்றிபெறமுடியும் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.
18. இலக்கிய நட்புக்கள், உறவுகள் பற்றி?
நட்பில் இன்று குடும்ப நட்பு, இலக்கிய நட்பு, முகநூல் நட்பு என்று பல வகையறாக்கள் காணப்படுகின்றன. குடும்ப நட்புக்கள் இதயத்துக்கு ஒத்தடமாக இருக்கின்றன. இலக்கிய நட்புக்கள் எம் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. முகநூல் நட்புக்கள் எம்மைப் பற்றி அறிந்திராவிட்டாலும் முகம்காணாமல் நேசிக்கக் கற்றுத் தருகின்றன. இதில் மிக முக்கியமானது என்னவென்றால் எல்லா நட்புக்களிலும் சில விஷ முட்களும் இருக்கின்றன. அவற்றை நாம்தான் சரியாகப் புரிந்து கையாள வேண்டும். முள் என்று தெரிந்தவுடன் ஒன்று ஒதுங்கி விடவேண்டும். அல்லது ஒதுக்கி விடவேண்டும்.
19. எதிர்காலத்தில் நீங்கள் வெளியிட இருக்கும் நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
01. மழையில் நனையும் மனசு (கவிதை)
02. என்னை வாசிக்கும் புல்லாங்குழல் (கவிதை)
03. மான்குட்டி (சிறுவர் பாடல்)
20. எம் வாசர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?
கல்குடா நேசன் என்ற வலைத்தளத்தில் என் நேர்காணலை இடம்பெறச் செய்த கவிதாயினி ராஜ்சுகா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இந்த அதிதிப் பக்கத்தை செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது. அதற்காக சந்தர்ப்பமளித்துத் தரும் கல்குடா நேசன் வலைத்தளத்துக்கு என் நன்றிகள். மின்னிதழ்கள், வலைத்தளங்கள் மூலம் இன்று பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. எனவே வாசிப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும் வாசிப்பின் மூலம் எம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.