Wednesday, March 16, 2016

தொலைதல் பற்றி....




அடிக்கடி தொலைந்து போவதிலும்
காணாமல் போவதிலும்
அலாதிப் பிரியமெனக்கு....

செக்குமாட்டைப்போல‌
சுற்றிக்கொண்டே இருப்பதில்
உடன்பாடில்லை....

கால்கள் இல்லாவிட்டாலும்
எழுந்து ஓட முயற்சிப்பேன்
சிறகுகளை இழந்துவிட்டபோதும்
வான மட்டும் செல்ல நினைக்கின்றேன்....

சுவாசம் வரை அழுத்தும்
சுமைகளத்தனையையும் தொலைத்து
சுகங்களுக்குள் காணாமல்போக‌
சுறுசுறுப்பாய் விழைகின்றேன்....

தோல்விகளுக்குள் காணாமல்போகும்
புன்னகைகளை தேடித்தேடி அதற்குள்
தொலைந்துவிடப் பார்க்கின்றேன்...

கண்ணீர்,
தேடிவந்து ஒட்டிக்கொளும்
ஆனந்தமோ நாம்
தேடிப்போய் பெற்றுக்கொள்ளவேண்டியது...

தேடுதல் சுகமானது
தொலைதல் அதனைவிட சுவாரஸ்யமானது
காணாமல் போதலோ,
காலச்சாவியினை
கரத்தில் ஏந்திக்கொண்ட ஆரவாரம்
இன்னுமின்னும் மூழ்கிப்போனாலோ
விடைகளற்றுப்போக விருந்த‌
வாழ்க்கைச் சரித்திரத்தின்
அத்தனை புதிர்களையும்
அவிழ்த்துவிடும் வல்லமை
அதற்கேதான் உண்டு....

பாதத்தை மறந்து
பசியினை துறந்து
காற்றாய் அலையாய்
கால்களில்லா நதியாய்
காலச்சக்கரத்தில் சுழன்றுவரு கையில்
காணாமல் போதலே,
காண்பதற்கரிய வெற்றிச்சாலையில்
ந(க)டந்து செல்ல உதவும்
கடவுள் மந்திரம் என்கின்றேன்....

No comments: