Friday, March 15, 2013

என்றும் இதுவாழுமே





உயிர்வரை நிறைந்துவிட்ட‌
உனதன்பை தவறவிட்டு
உலகில் நான் வாழ்வேனோ
உன்னைநான் மறவேனோ...

பத்தாம்பசலி பெண்ணெனை
பாசத்துடன் கைப்பிடித்த
பண்பாளனுன்னிடம் நான்
பாராமுகங் காட்டுவேனோ
பரிதவிக்கத்தான் விடுவேனோ...

ஆயிரந்தான் கோபத்திலும்
அடித்துநீ தள்ளினாலும்
ஆத்திரத்தில் விலகிடினும்
ஆழ்மனந்தான் வெறுக்குமோ
அன்பதுதான் குறைந்திடுமோ...

பிரிந்துநான் நின்றாலும்
பிரிந்துநீ வந்தவுடன்
பிரியங்கள் பொங்கிவரும்
பசுமைதான் குறைந்திடுமோ
பாழ்மனமாய் ஆகிடுமோ...

நரையுடல் நடுங்கிடினும்
கைத்தடி யெந்தோளென‌
நமதன்பு நிலைத்திடுமே
நலிந்திடாமலது வாழுமே...

No comments: