Tuesday, December 25, 2012



தலையநீட்டி மிரட்டவருது...



அடகுவச்ச தாலிக்கொடி
அமைதியாக படுத்துறங்க‌
தடவிகொடுத்த வறுமையது
தலையநீட்டி மிரட்டவருது...

சீதனமா எங்க அம்மா
செப்புகுடம் தந்திருந்தா
சாதனமா அதையுங்கொடுத்து
சாராயத்தை ஊத்திக்கிட்டான்...

பள்ளிக்கூடம் போனபிள்ளை
பாதியிலே போகவில்லை
கள்ளிச்செடி போல அவன்
கல்வியையும் பார்க்கவில்லை...

பாடப்புத்தகம் வாங்கும் செலவு
பாரமாக எனை அழுத்த‌
தேடும் பணம் கொஞ்சமும்
தேவைக்கே போதவில்லை...

கூலிவேலை செய்தாதான்
கொஞ்ச காசும் கிடைக்கிறது
காலியான எங்க வயிறு
கண்ணீரால நிறைகின்றது...

தேங்காய் உடைச்சு வந்தேன்
தெய்வங்களெதுவும் பார்க்கவில்லை
தேர்தல்காலம் வந்து போனது
தேவைகளெதுவும் தீரவில்லை...!!

No comments: