Wednesday, December 26, 2012


காதலர் தின பரிசாய்...

இல்லறத்தில் இணைதலே
காதலின் வெற்றி யென்கின்றார் அதை
இல்லையென்றெ எதிர்க்கின்றேன்...

கண்களின் மோதலாலோ இல்லை
மோதல்களிலுண்டான காதலாகவோ
எமதான நேசம் வளர்ந்ததில்ல...

முகம் பார்க்காது
குணமு மறியாது
குறிக்கப்பட்ட நாளில்
மணவறையின் வெளிச்சத்தில்
மணவாளன் கைபற்றியபோது
மனதாலுணரப்பட்ட காதல்...

புரிந்துகொள்ளுதலை வாழ்வின்
வெற்றிக்குறியாய் இணைத்துக்கொண்டோம்
மனதறிந்து நடந்திடும் வித்தைகளும்
மறுக்காம லிதயத்தில் ஒட்டிக்கொண்டது
வேண்டுமென்றால் விட்டுக்கொடுக்கவும்
வேண்டாமென்றால் விட்டுவிலகவும்
கொண்ட நேசமே கொள்கை வகுத்துகொடுத்தது...

சின்ன சின்ன ஊடல்களுக்குள்ளே
சிதறடையச்செய்யும் சிக்கல்களையும்
சிலாகித்து சிரிப்புடன் முடித்துக்கொள்வோம்
எங்கள் பந்தியில் உணவுக்கோப்பைகள்
தனித்தனி நேரங்களில் வைக்கப்பட்டதில்லை
ஒளிவுகள் எதுவும் மறைவாய்
இருந்ததுமில்லை...

வருடங்கள் பலவற்றை விழுங்கிக்கொண்ட‌
எங்கள் மணவாழ்வில்
பிளவுகளே யில்லா பிணைப்பைத்தந்த‌
படைத்தவனுக்கு நன்றியாய்
இக்கவி சாற்றுகின்றேன் -உங்களுக்கு
காதலர்தின பரிசாய் கையளிக்கின்றேன்...

No comments: