Monday, December 24, 2012


தேடிக்கொண்டே இருக்கின்றது!!




தேடலின் பயணத்தில்
வேகத்தின் பிரயாசங்களில்
வெற்றுப்பிம்பமாய்
விழுந்துதெறிக்கின்றது மனம்...

ஓடியோடி களைத்த கால்கள்
தேடித்தேடி கனத்த இதயங்கள்
இறுதியில் பற்றிக்கொண்டதாய்
எதுவுமே இல்லாமல்...

மலரை நுகரும் வண்டுகளாய்
மாறி மாறி பறந்துதிரிந்தும்
மனதுக்கு இதமாய் எதுவும்
இன்னுமே கிட்டவில்லை...

கோடிக் கோடியாய் 
கொட்டிக்கிடந்தும்
மாடி மாடியாய் 
ஏற்றங்கண்டும் இதுவரை
முழுமையாயதனை அடையவில்லை...

அறிவுக்களஞ்சியங்கள் 
அகிலத்தை ஆண்டாலும்
அகக்கலையகத்தை 
ஆண்டுகொள்ள அவையின்னுமே
கிட்டிச்சேரவில்லை...

நேற்றைய பொழுதுக்காய்
இன்றைய பொழுதுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்
நாளை பொழுதுகள்
அடைந்துகொள்ள முடியாமல் 
தேடிக்கொண்டே இருக்கின்றது
நிம்மதியெனும் ஜீவ ஊற்றினை... 

(பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகை டிசம்பர் 2012 மாத இதழில்  வெளிவந்தது)

No comments: