Saturday, December 29, 2012

முளைத்து எழுந்திடுவேன்




போகும் திசையெங்கிலும்
பொல்லடியும் கல்லடியுமாய்
ஏகும் நிலையெங்கிலும்
ஏமாற்றமும் எரிகாயங்களுமாய்...

திரும்பிடுந் திக்கெங்கிலும்
திகிலூட்டும் சோதனைகளாக‌
வருத்திடும் கண்ணீராய்
வாழ்வெனக்கு கானலாக...

எடுத்துவைத்த அடிகளெல்லாம்
எழும்பிட முடியா அடிகளாக‌
தடுத்து நிறுத்திடும் வழிகளதும்
தலைமறைவுத் தாக்கமாக...

இலட்சியங்கள் ஒவ்வொன்றும்
இலட்சங்களற்றதால் உதிர்ந்தது
அலட்சியமா யெனைப்பார்த்து
அத்தனையுறவும் எதிர்த்தது...

தோற்றுப்போன சருகுசேர்த்து
தோன்றியெழுந்திட முயல்கின்றேன்
ஆற்றுப்படுத்தியென் நெஞ்சத்தை
ஆளச்செய்திட துடிக்கின்றேன்...

சூறாவளியாய் சுமைகள் சூழட்டும்
சூதுகள் எனைச்சுற்றி வீசட்டும்
ஆறாகப்பெருகிய ரணங்கள் ஆளட்டும் மனம்மட்டும்
ஆழப்புதைந்தேனும் முளைக்கட்டும்...



 (31.01.2013 அன்று இலங்கை வானொலி தென்றலின் 'கவிப்பெட்டகம்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)








No comments: