Wednesday, December 26, 2012


உழைப்புக் கத‌(தை)!!!


நாலு வெத வெதக்கையில‌
நாத்து நட்டு மகிழயில‌
ஏழு ஏழ்கடலு
எழும்பி கை தட்டுதையா...

ஏர்பிடிச்சி உழுதோமுங்க‌
ஊர்செழிக்க உழைச்சோமுங்க‌
நார்நாரா போகுமட்டும்
நாட்டுக்காக விளைஞ்சோமுங்க...

கூட(டை)சொம தலையிலங்க‌
கூடக் கூட அழுத்துதுங்க‌
வாட காத்து மழையிலயு
ஓடியாடி வளையிறோமுங்க...

வேதனந்தா கூடலீங்க
வேர்வ மணம் மாறலீங்க‌
ஆதவனா உங்க வாக்கு
வந்து வந்து போகுதுங்க...

அலைமேல வலை போட்டோம்
உலைவைக்க பட காணோம்
தலைமேல பயவோட்டம்
தத்தளிப்பேயெம் திண்டாட்டம்...

சொன்னதெல்லாம் கூலிக்கத(தை)
சொத்தில்லாத உழைப்புக்கத‌
பொன்னாக மண்ணையாக்க
பொறந்த எங்க சோகக்கத...

No comments: