Thursday, January 17, 2013

பஞ்சருகே தீவினையாய்!!




வாய்மொழி வீரர்தாமவர்
வழக்கங்களில் இனிமையில்லை
பொய்மையின் வித்தகரா யவர்
பொறித்ததெதிலும் சத்தியமில்லை...

சொல்லடி கல்லடிகளென்று
சொந்தவிடயமெல்லாம் தெருவினில்
வல்லவர் நல்லவரென்று
வார்த்தையில் மட்டும் சுத்தராய்...

பண்பில்லாக் கயவரெல்லாம்
பார்போற்றும் பதவியிலாம்
அன்பேயில்லா அக்கிரமத்தாரெல்லாம்
அழகான மேடையிலாம்...

ஊருக்கெல்லாம் உபதேசமாய்
உருக்கும் மொழியிறைப்பார்
பெயருக்காக சபைநடுவினில்
பொய்யாயவர் புன்னகைப்பார்...

நெஞ்சிலே வஞ்சனையும்
நேர்மையிலா எண்ணங்களும்
பஞ்சருகே தீவினையாய்
பச்சையாக வதைமறைப்பார்..

எத்தனைதான் புகழ்சேர்ந்திடினும்
ஏராளந்தான் பூத்துமலர்ந்திடினும்
தப்பான வழிப்பயணங்கள்
தரணியிலென்றும் நிலைத்திடுவதில்லை...!!!

No comments: