Thursday, January 3, 2013

தண்டவாளங்களாகவே இருப்போம்




அடிக்கடி தேநீரருந்துகின்றேன்
ஆகாரத்தை தவிர்த்து
மனம் நிறைந்துவிடுகின்றது
உன் நினைவுகளால்...

இப்போதெல்லாம்
கைக்குட்டை பாவிப்பதில்லை உன்
விரல்களின் ஞாபகங்கள்
ஈரமாகவே...

எனக்காய் ஒதுக்கும் அந்த‌
இருதிபிடிச்சோறு இன்னும் நீ
வைப்பதாய் நினைத்துக்கொள்கிறேன்
பசிக்கும்போதெல்லாம்...

என் ஆடைத்தெரிவுகள் கூட‌
உன்னிடமுள்ள நிறங்களில்
மட்டுமே...

இறந்துபோன என்
எதிர்காலத்தைவிட‌
நிஜமான நம் இறந்தகாலம்
எத்தனை அழகானவை...

உன்னை நான் திட்டிடும்
செல்லப் பெயர்கள் நினைவிருக்கின்றதா
அவலட்சணமாயிருப்பினும் அவை
எத்தனை அன்பானவை...

இப்படியே நீண்டுசெல்லும்
நம்முடைய நாட்கள் 
நிஜமாய் ஆழமானவைகள் -ஏனோ
ஆயுள்மட்டும் அற்பமானது...

நிழலாய் இருந்திடத்தான்
ஆசைப்பட்டேன்  -நீயோ
நிலவாக இருப்பதில்தான்
ஆனந்தங் கொள்கின்றாய்...

விட்டது பீடையென்றுதானே
விலகிப்போனாய்
தொட்டது காதலென்று
விளங்காமலா போனாய்...

பரவாயில்லை நாம்
தண்டவாளங்களாகவே இருப்போம்
நம் உறவுகளின் 
கனவுகளாவது பயணிக்கட்டும்!!


No comments: