Thursday, January 17, 2013

31st of October 2012



வருடமொன்று கழிந்துபோகின்றது!

வாழ்க்கை ரசத்தில் கொஞ்சம்
கரைந்து போகின்றது!

முதுமையின் சாயம் பூசப்படுகின்றது!

இளமையின் மாயம் உறிஞ்சப்படுகின்றது!

மரணவாசலுக்கான வழியில் 
ஓரடி முன்னே நகரப்படுகின்றது!

மகிழ்ந்துகொள்ள முடியவில்லை!

மனதார வாழ்த்தினை ஏற்றமுடியவில்லை!

இது விழாவல்ல‌
வாழ்வின் விபரீதம்!

குழந்தை மணம் கழுவப்பட்டு 
குழப்பத்திற்கான ஆரம்பம்!

இனிப்பை பங்கிட்டு 
இன்பம் பகரேன்!

இளமையின் விபத்தை
இயற்றி மகிழ்வேன்!

கடந்துபோன காலந்தனில்
கால்பதிக்கா இடமெல்லாம்
தரிசாய் காய்ந்து கிடக்கின்றது!

இது பூரிப்பின் நிமிடங்களல்ல
ஆயுளின் பகுதியொன்று
இறந்த காலம்!

உணர்த்தப்படுகின்றேன்
உருவேற்றப்படுகின்றேன்!

ஓடுகின்றேன் எனைவிட்டு
ஓடிய நிமிடங்களை கொய்திட...
அந்தோ பரிதாபம் கடந்தவை
தூரத்து நிலவாய் தொலைந்துபோகின்றது
எனை மறுத்துப்போன‌
அவனைப்போல...!!!

No comments: