Saturday, November 2, 2013

என்னுடைய ஒருவனாய்.....




திடீரென்று வரவேண்டும்
தென்றலாய் வரவேண்டும்
ஒவ்வாமையில் தொடங்கி
ஒத்துப்போதலே தொடரவேண்டும்

கண்களால் கவர்ந்து
கதைகள் பலபேசியே
காலங்கடத்தாது
காலத்தை பிரதிபலித்தே
கடமைகளை பிரதியெடுத்தே
காதலை வளர்க்கவேண்டும்

இயல்பாக பேசவேண்டும்
இதயத்தில் உண்மைவேண்டும்
வெளிப்படையாய் இருக்கவேண்டும்
வெறுமைகளை விரட்டவேண்டும்

போலிசாசனங்களை புதைக்கவேண்டும்
வேலித்தடைகளை உடைக்கவேண்டும்
கண்காணா தேசத்தில் கட்டிவைப்பினும்
கற்பகலா இதயமுணரும் காதல்வேண்டும்

கைபிடிப்பதும் கட்டியணைப்பதும்
காதல்வேதத்தின் அத்தியாயமென்ற‌
கறைபடித்த போக்கினை
களைந்திட்ட காளையாயிருந்திட வேண்டும்

எனக்கென்று எதேட்சையாய் வரவேண்டும்
ஏராளமான எதிர் பார்ப்புக்களில்லாது
ஏளனமான எதிர்ப்புக்களில்லாது
என்னுடைய ஒருவனாய் வந்திடவேண்டும்




No comments: