Friday, January 22, 2016

“கல்குடா நேசனின் 24வது இலக்கிய நேர்காணலில்” (22.01.2016) கவிஞர் யோ.புரட்சி

“கல்குடா நேசனின் 24வது இலக்கிய நேர்காணலில்” இணைந்துள்ளார் கவிஞர், எழுத்தாளர், வெளியீட்டாளர் யோ.புரட்சி அவர்கள்
***********************************    ********************************       ************************************************







http://kalkudahnation.com/?p=31568

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 22.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 24வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் இலங்கை வள்ளுவர் புரத்தைச்சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் செல்லமுத்து வெளியீட்டு ஸ்தாபகருமான யோ.புரட்சி அவர்கள். கடலிலும் காட்டிலும் கல்வேலிக்குள்ளும் தனது நூல்களை வெளியிட்டு வித்தியாசமான அநுபவங்களை வாசகர்களுக்குத் தந்த கவிஞர் யோ.புரட்சி அவர்கள் “சமூகத்தில் வெளிவரும் குற்றச்செயல்களில் படைப்பாளர்களும் தானே அடக்கம். எனது பார்வையில் தற்போதைய காலத்தில் மிகக்குறைந்தளவான சமூவியல் மாற்றங்களினையே படைப்புக்கள் செய்கின்றன” என்று தனது கருத்தினை ஆதங்கமாகவும் ஆலோசனையாகவும் தொடர்கின்றார் யோ.புரட்சி அவர்கள். 


ஏன் இப்படிக்கூறுகின்றார் என்ற பதில் இதோ அவரது நேர்காணலில்…..


 ராஜ் சுகா:  கல்குடா நேசன் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. தங்களைப்பற்றிய அறிமுகம்? 

கவிஞர் யோ.புரட்சி: ஈழத்தின் முக்கிய தீவு முல்லைத்தீவு. அங்கே வள்ளுவர்புரம் எனும் திறம்மிகு ஊர் எனதூர். அம்மா செல்லமுத்து. அப்பா யோகநாதன். படைப்புலகோடு என்னையும் இணைத்துப் பயணிக்கும் சிறு பறவையாய் நான். பாரதி மகா வித்தியாலயம் கவி தந்த அன்னை. இரு சோதரிகளும், சோதரரும். வாழ்வின் நெருக்கடிமிக்க சூழலொன்றினால் பதினாறு வயதிலேயே நான் குடும்பத்தினரை விட்டுப்பிரிந்தேன். 


ராஜ் சுகா இலக்கியத்தில் காலடி வைத்த அநுபவம்? 


கவிஞர் யோ.புரட்சி: பதினாறு வயதிலே காதலுக்குப் பதிலாக கவிதையே வந்தது. அதுவே, காதலியுமானது. கல்விச்சாலையில் எழுதிய கதை நினைவில் நின்றாலும், கானகத்திலே எழுதிய முதற்கவியே இலக்கியத்தின் முதற்படி.. அதுவே முதல் அடி.


 ராஜ் சுகா எவ்விலக்கியத்தில் அதிக ஈடுபாடுள்ளது? 


கவிஞர் யோ.புரட்சி: ஒரு தாய் எல்லாப் பிள்ளைகளையும் சமமாய் நேசிப்பது போல, எல்லா வகை இலக்கியங்களையும் செய்கிறேன் நேசிப்பு. ஆனாலும், கடைசிப் பிள்ளையின் மீது அதிகம் செல்லம் பொழியும் சில தாய்மாரைப் போலவே, கவிதைக்கு அதிகம் செல்லம் கொடுக்கின்றேன். அதையே அதிகமாய் அணைக்கின்றேன். அவை அல்லாதவற்றையும் நித்தம் நினைக்கிறேன். 


ராஜ் சுகா உங்களது ஏனைய செயற்பாடுகள் குறித்து? 


கவிஞர் யோ.புரட்சி: என்னை உயர்த்துவதோடு இன்னொருவரையும் உயர்த்திவிட இதயம் விரும்புவதே பெரிய செயல்தான். என்னால் இயன்றதை சேர்த்தும்இ இதயமுள்ளோருடன் கை கோர்த்தும் சமூகப் பணிகளினை தயையுன் செய்கிறோம். இது மட்டுமே இதயத்தின் நிறைவு. அதில்தான் அன்பின் கரைவு. 


ராஜ் சுகா “செல்லமுத்து வெளியீட்டகம்” அதன் வளர்ச்சி, செயற்பாடுகள் குறித்து? 



கவிஞர் யோ.புரட்சி: படைப்பினை வெளியிட துணையற்ற சொந்தங்களுக்கு தோள் கொடுப்பதே செல்லமுத்து வெளியீட்டகம். ஆனாலும், அதையும் அமைதியாகவே நகர்த்துகிறோம். இது விதை போடப்பட்டு முளைத்து விட்டது. இப்போது இலைகள் மட்டுமே. கிளைகள் தோன்றவில்லை. ஆனாலும், அந்த இலைகள் பலருக்கு மருந்தாகின்றது மகிழ்ச்சியே. இயன்றதை ஏற்ற‌ வழிகளூடாகச் செய்து கொடுக்கின்றோம். எம்மிடம் ஒப்படைக்கப்படும் நூல்களையும், பிற படைப்புக்களையும் நேர்த்தியாக முடித்துக் கொடுத்து, வெளியீட்டு நிகழ்வுகளையும் அதிக சிரத்தையும் நிறைவாக்கி கொடுக்கிறோம். இன்னும் மமுன்னேறுவோம். முன்னேறுவோம். 


ராஜ் சுகா படைப்பாளிகள் உலகம் அமைப்பின் இலங்கை செயற்பாட்டாளராய் செயற்படுகின்றீர்கள் அதனுடைய வேலைத்திட்டங்களையும் இலங்கை படைப்பாளிகள் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் எதிர்கால நோக்கங்களையும் விவரிக்க முடியுமா? 


கவிஞர் யோ.புரட்சி: ‘படைப்பாளிகள் உலகம்’ என்பது ஒரு சுமை தாங்கி. ஈழத்தவர் படைப்புக்களை தாங்கும் ஓர் தூண். எவ்வித வர்த்தக நோக்கமுமின்றி, எம்மவர் படைப்புக்களை உலகமெலாம் கொண்டு சென்று எல்லோருக்கும் இறக்கி வைக்கும் விமானமே ‘படைப்பாளிகள் உலகம்’. ஆரம்பித்த சில நாட்களிலேயே அழகாய் நடையிடும் குழந்தையாய் ‘படைப்பாளிகள் உலகம்’. அதிகமானோர்க்கு தோள் கொடுக்கின்றது. இங்குள்ள படைப்புக்களை புலம்பெயர் தேசத்திற்கும், புலம்பெயர் தேசங்களிலுள்ள படைப்புக்களை ஈழத்திற்கும் சேர்ப்பித்து படைப்பாளிகளை ஊக்குவித்த‌தோடு, பலரின் படைப்புக்களை வெளியீடாக்கி ஒளி கொடுத்திருக்கின்றது. திரு ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் இதன் நிறுவுனராக தன் பணியை நேர்த்தியாய் பூர்த்தி செய்கிறார். சங்கீதா இலங்கையின் செயலாளர். ஈழத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பணிகளை விரிவாக்கி, படைப்புக்களை பொழிவாக்கி எல்லோரையும் இணைத்து, இதயத்துடன் அணைத்துப் பயணிக்கிறோம்.


 ராஜ் சுகா சிறுகதைஇ கவிதை இரண்டில் எதனை நீங்கள் உங்களை ஒரு நல்ல படைப்பாளியாக காண்கின்றீர்கள் அல்லது காண விழைகின்றீர்கள்? 

கவிஞர் யோ.புரட்சி: இரு சாலைகளிலும் சமமாய் நடையிடுவதாய் உணர்கிறேன். கவி, கதை இரண்டும் குறித்து எந்தனுக்கு வந்த கருத்துக்கள் இதைச் செப்பிற்று. நாமே நம்மைப் பற்றி நினைக்க ஏதுண்டு. வானவில்லின் அழகை வானவில் சொல்லுமா? வர்ணிப்பவன் தானே சொல்ல வேண்டும்.


 ராஜ் சுகா உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த விருதுகள்? 


கவிஞர் யோ.புரட்சி மேடையில் கிடைத்தவை சில. மன மேடையில் நிலைத்தவை பல. ‘உங்கள் கவிதைகளும், கதைகளும் மெனிக்பாம் முகாமில் எங்களுக்கு ஆறுதலாய் இருந்தன’ என்று மக்களும், ‘உங்கள் கவிதைகள் நாங்கள் எல்லாரும் வாசிச்சம்’ என்று ஐந்து வயது மழலைகளும் சொன்னவை பெரிய விருதுகள். எங்கோ ஒரு மூலையில் பிறந்த எந்தன் பாடலொன்றினை உலக் சாதனைப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியதை மறக்க முடியாது. 






ராஜ் சுகா விமர்சனங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம்? தங்களுக்கு வந்த விமர்சனங்கள் எப்படிப்பட்டவை? 


கவிஞர் யோ.புரட்சி: விமர்சனம் என்பது யுத்த களத்தில் ஏவப்படும் அம்பு. சுத்த வீரன் அதை நேரே நின்று எய்கிறான். கோழை மறைந்திருந்து எய்கிறான். இரண்டு அம்புகளும் என்னைத் தாக்கின. ஆனாலும், உயிர் போகுமளவிற்கு தாக்கவில்லை. தாயாக ஆசைப்பட்டால் பிரசவ வேதனையைத் தாங்கவும் தயாராய் இருக்க வேண்டும். படைப்பாளனாக ஆசைப்பட்டால் விமர்சனத்தை தாங்க தயாராய் இருக்க வேண்டும். மாங்காயை வீழ்த்தும் கல் மலையை விழுத்தாது. தைரியமற்ற படைப்பாளன் கல் பட்டதும் விழும் மாங்காய் போல விழுகிறான். நெஞ்சுரம் கொண்ட படைப்பாளன் மலை போல அசையாமலிருக்கிறான். எவருமே எப்படியும், எத்தனையும் முகநூல் உருவாக்கலாம் எனும் அனுமதியிருப்பதால் முகநூல் பழிவாங்கல்களை தமிழ்ச்சமூகம் கையிலெடுத்திருக்கிறது. இப்படியானவையும் எம்மைத்த தாக்கிய போது, கேடு செய்வோரை மன்னிக்கவும், அவர்களுக்காக  வேண்டுதல் செய்யவும் இயேசு கிறிஸ்து மொழிந்த வார்த்தைகள் எம்மைப் பலப்படுத்தி அமைதியாக்கின. படைப்புக்கள் தொடர்பாக வந்த நேரான, மறையான் விமர்சனப்பூக்களை எமது மன மாலையில் கோர்த்துக்கொள்வேன்.


 ராஜ் சுகா: நூல் வெளியீடுகளில் ஏன் புதுமையை விரும்பிச் செய்கிறீர்கள்?


 கவிஞர் யோ.புரட்சி: நாம் பயணிக்கும் பாதை சரியாக இருப்பது மட்டுமல்ல. தனித்துவமானதாகவும் இருப்பது நல்லது தானே. எல்லாவற்றிலும் புதுமை புகுத்தப்படும் போது வெளியீட்டில் மாத்திரம் விலக்கு எதற்கு? காடு, கடல், புல்வெளி, பூங்கா, மரச்சோலை, கல்வேலி, குள‌க்கரை, குடிமனை என்றெல்லாம் நாம் வெளியீடுகளை நடாத்திய போது வந்தோர்க்கும், கேள்விப்பட்டோர்க்கு நிறைவு கிடைத்தமை எமக்கும் நிறைவே. 


ராஜ் சுகா “புரட்சி” இப்புனைப்பெயர் வருவதற்கான விஷேட காரணம் என்ன? 


கவிஞர் யோ.புரட்சி காலம் என் மீது கோலம் போட்டது. அந்தக் கோலத்தின் பெயரே ‘புரட்சி’ என்றானது. வாழ்க்கையில் மாற்றம் தந்த பெயர்.  வாழ்க்கையை மாற்றிய பெயர். என்னை ஏற்றிய பெயர். எல்லோருக்கும் போலவே எனக்கும் பிடித்த பெயர். இந்தப்பெயருள் ஏதோவோர் சக்தி, ஒரு வித யுக்தி, இலக்கிய முக்தி இருப்பதாய் நினைக்கிறேன். அதனால் அப்பெயரை ஆசையோடு அணைக்கிறேன். 


ராஜ் சுகா இன்றுகளில் கவிஞர்களின் வளர்ச்சி கணிசமாகவுள்ளது. இது இலக்கியத்தில் எவ்வாறான மாற்றத்தைத் தருகின்றது என நினைக்கின்றீர்கள்? 


கவிஞர் யோ.புரட்சி உயர்தல் என்பது வளர்ச்சி ஆகிடுமோ. உயரம் குறைந்த சில தென்னைகள் காய்த்துக் குலுங்குவது போல, உயரம் கூடிய தென்னைகள் காய்ப்பதில்லை. கவிஞர்களின் எண்ணிக்கை வள‌ர்ச்சி கண்டிருப்பது நிறைவே. ஆனாலும், கவிதைத் தரம் குறித்த கேள்விகள் எழுந்திருப்பது ஒரு குறைவே. ஒரு காலத்திலே கவிஞனும், எழுத்தாளனும் கதாநாயகர்களுக்கு ஒப்பாக மக்களால் பார்க்கப்பட்டனர். அந்த நிலை இப்போதுள்ளதா? என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு வீட்டில் பலமான இரும்புப் பெட்டியுண்டு. ஆனால், அதற்குள்ளே எதுவுமே இல்லை என்றால் அந்தப்பெட்டி எதற்கு? நூல்களும் ஒரு பலமான பெட்டியே. அதற்குள் ஏதாவது இருக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறர்கள். அப்படியிருந்தால் அதை அவர்கள் சுமப்பார்கள். இல்லாவிட்டால், ஒதுக்குவார்கள். வாசனை இல்லா வாசனைத் திரவியங்களினை யாரும் விரும்பமாட்டார்களே. 





ராஜ் சுகா யுத்தத்துக்குப் பின்னரான நம் மக்களின் மனநிலை பற்றி? 


கவிஞர் யோ.புரட்சி : வர்த்தகப் பொருட்களின் வருகை வாடிய உள்ளங்கள் சிலரை மாற்றி விட்டதோ எனும் பார்வை இருந்தாலும், இடிந்து போன இதயங்களுக்கு ஏதுமே கிடைக்காத மாதிரி தான். தலைமயிர் சிதைக்கப்பட்டால் மீண்டும் வளரும். தலையே சிதைக்கப்பட்டால் வளருமோ. இந்த இரு சாராரும் இப்போதும் எம்மண்ணிலிருப்பதை மறுக்க முடியாது.


 ராஜ் சுகா மூத்த, இளைய படைப்பாளிகளுக்கு மத்தியிலிருக்கும் தொடர்பு பற்றி? 


கவிஞர் யோ.புரட்சி கைபேசியின் வருகை நிலையான தொலைபேசிகளுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடவில்லை. ஆனாலும், கைபேசிகளே அதிகம் பாவிக்கப்படுகின்றது. மூத்த படைப்பாளர்கள் நிலையான தொலைபேசி போலவே வலுவானவர்கள். அவர்கள் ஆலமரம் போன்றவர்கள். ஆனாலும், நிழல் கொடுக்கா ஆலமரங்கள் நின்றென்ன இலாபம் என்பதால், இவ்விதமான சிலரை நோக்கி இள‌ம் படைப்பாளர்கள் செல்வது குறைவு. நாம் அறிந்த வரையில் ஈழத்தின் அதிகமான மூத்த படைப்பாளர்கள் இளையவர்களோடு இனிய தொடர்பில் உள்ளன‌ர். அவர்கள் ஊக்குவிக்கின்றனர். நானே அதற்கு நல்லதோர் உதாரணம். மூத்த படைப்பாளர்கள் எமக்கு உரமிட்டு ஊக்குவிப்பதை உண்மையாய் காண்கிறேன். 


ராஜ் சுகா இலக்கியத்தால் எவ்வகையான சமூக மாற்றத்தினைச் செய்ய முடியுமென நினைக்கின்றீர்கள்? 

கவிஞர் யோ.புரட்சி நித்தம் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தோன்றியும், நோயினை இல்லாமலாக்க முடியவில்லையே. படைப்பினால் ஏற்படுத்தப்படும் சமூக மாற்றமும் இவ்விதமானதே. ஒரு புறம் மாற்றங்களை ஏற்படுத்த படைப்புக்கள் உருவாகினாலும் அந்தப் படைப்பு உரியவர்க்குப் போகா நிலையே காணப்படுகிறது. விபச்சாரி ஒருத்தி தன் தொழிலை விட்டு, தன் மனோநிலையை மாற்றி நல்வழிக்குத் திரும்பும் வகையில் ஒருவர் தரமான படைப்பொன்றை உருவாக்குகிறார். அதை விபச்சாரி படிக்க வேண்டுமே. உரியோர்க்கு படைப்புக்கள் சேராமல் சமூக மாற்றம் எப்படி? இன்னுமொன்று சமூகத்தில் வெளி வரும் குற்றச்செயல்களில் படைப்பாளர்களும் தானே அடக்கம். எனது பார்வையில் தற்போதைய காலத்தில் மிகக் குறைந்தளவான சமூவியல் மாற்றங்களினையே படைப்புக்கள் செய்கின்றன. அதை மாற்றுமளவிற்கு நாம் முன்னேற வேண்டும்.


 ராஜ் சுகா இதுவரை எழுதிய நூல்கள், எழுதவிருக்கும் நூல்கள் எதிர்கால இலக்கு? 


கவிஞர் யோ.புரட்சி: போருக்கு முன் படைத்தவை பொசுங்கிப் போயின. போருக்குப் பின்னர், ‘இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்'(மரச்சோலையில் வெளியிட்ட கவிதை நூல்) ‘எதிர் வீட்டு நாயும் என் ஏழை நாயும்'(கடலில் வெளியிட்ட கவிதை நூல்) ‘ஆஷா நாயும் அவளும்’ (காட்டிலே வெளியிட்ட சிறுகதை நூல்) ஒவ்வொரு வருடமும் ஒரு நூல் வெளியிட விருப்பு. ‘வள்ளுவர்புரம் முதல் முல்ளிவாய்க்கால் வரை’ வரலாற்றுக்கதை. செல்லமுத்து’ கிராமிய நாவல் என்பன வெளிவரவுள்ள‌ன


. ராஜ் சுகா பொதுவாக எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள நினைப்பது? 


கவிஞர் யோ.புரட்சி இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள் ‘உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுகு நன்மை செய்யுங்கள். உங்களை அவமானப்படுத்துகிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யுங்கள்.




No comments: