Monday, September 30, 2013

அம்மா எங்கள் அம்மா

அம்மா எங்கள் அம்மா
அன்பான அம்மா
ஆசையோடு அணைத்து
அள்ளிக்கொள்ளும் அம்மா

காலை மாலை உணவை
கண்டிப்பாக தருவாள்
சோலைபோல என்னை
அலங்கரித்துச் செல்வாள்

பள்ளி செல்லும் என்னை
பத்திரமாக அனுப்பி
வாசல் வந்து நின்று
வரவேற்கும் அம்மா

எந்தன் கண்ணில் தூசு
கண்டாலே துடிப்பாள்
சொந்தம் எந்தன் சொந்தமென்று
சொல்லி நிதம் மகிழ்வாள்

கெட்டப்பழக்கம் என்னில்
கண்டாலே அதட்டி
நல்ல பண்பை ஊட்டி
நல்வழிப்படுத்தும் அம்மா

அம்மா சொல்லைக் கேட்பேன்
அறிவை நாளும் வளர்ப்பேன்
உயர்ந்த நிலைக்கு செல்வேன்
உயிராய் அவளை காப்பேன்




No comments: