Friday, September 27, 2013

இனியெதுவும் வேண்டாம்

வந்துவந்து போகின்றாய்
வஞ்சியிவள் அறியாமல்
நொந்தழிந்து போய்விடுகின்றேன்
நேசமில்லா அந்நிமிடங்களையெண்ணி

காதலில் தொடங்கியது
கானலாய் முடிந்தது
மோதலில் முடிந்தது
மீண்டுமாய் தொட‌ருமா???

இடைவெளிகள் நமக்குள்
இம்மியளவும் இல்லையென்றே
இதயத்தை தேற்றியவேளை
இன்னொரு உறவுக்குள்
இணைந்துபோன உன்னை
இதயத்தால் வாழ்த்துவதன்றி
வழிவேறு அறியாமல்
வாய்விழுங்கிய வார்த்தைகளை
கண்ணீரால் சரிசெய்துகொள்கின்றேன்...

புல்லரித்துப்போகும் நம்
புன்னகைசுமந்த நாட்களின்று
செல்லரித்துப்போன கவிதையானது
செல்லாக்காசானது நேசம்மட்டுமல்ல‌
உண்மைகளுந்தான்

இன்னொரு ஜென்மம் வேண்டாம்
இனியொரு பிறவியும் வேண்டாம்
பெண்ணாய் பிறக்கும் அவலம் வேண்டாம்
பொருளில்லா வாழ்வெனக்கு வேண்டாம்
பகட்டான நேசங்கள் வேண்டாம்
பாதியில் முடியும் உறவுகளும் வேண்டாம்
பெறுமை தேடும் வேஷங்கள் வேண்டாம்
பொறுப்பில்லாத பாசங்களும் வேண்டாம்
போலியான உலகிலே
பெறுமதியென்று எதுவும் வேண்டாம்
இனியெதுவும் வேண்டாம்
இன்னொரு ஜென்மமும் வேண்டாம்





No comments: