றாக்கை
நூல் : மீண்டு வந்த நாட்கள்
ஆசிரியர்: வதிரி.சி.ரவீந்திரன்
வெளியீடு : எஸ்.கொடகே சகோதரர்கள்
விலை: 250/=
சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்கள், பாடசாலை பருவத்திலிருந்தே கவிதைமீது ஆர்வம் கொண்டிருந்தார். அதன் விளைவாக 1971ம் ஆண்டு 'ஈழநாடு' பத்திரிகையிலும் அதேயாண்டில் 'பூம்பொழில்' இலக்கிய சஞ்சிகையில் பிரசரமான "எங்கள் எதிர்காலம்" என்ற கவிதையூடாக இலக்கிய உலகிற்குள் பிரவேசித்தார்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இவரது பங்களிப்பு இருந்தாலும் இந்த "மீண்டு வந்த நாட்கள்" தொகுப்பே முதற் தொகுதியாக வெளிவந்துள்ளது.கவிஞரின் வெளிநாட்டுப்பயணம், அரசத்துறையில் தொழில் போன்ற காரணங்களினால் காலம் தாழ்ந்தமையானது வேதனைக்குறிய விடயமே.
"மீண்டு வந்த நாட்கள்" கவிதை தொகுப்பானது, புதுக்கவிதை கவிதைத்துளிகள், மெல்லிசைப்பாடலகள் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.கடந்த காலத்தினை அப்படியே பதியம் போட்ட கருக்களை தாங்கிவந்துள்ள கவிதைகள் மிக எளிய நடையோட்டத்தில் வாசகனை மகிழ்வித்துள்ளது.சிரமங்களின்றி வாசிக்கக்கூடிய இக்கவிதைகள் சமூகத்தின் எல்லா தளங்களையும் எல்லா தரப்பினரையும் தொட்டுக்காட்டியுள்ள விதம் சிறப்பம்சமாக காணப்படுகின்றது.
அன்றாட வாழ்வினில் அவதிறுயும் நிலமைகளை வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர், தனது "புதிய கதை பிறக்கிறது" என்ற கவிதையில்,
" அடிமை குடிமைகள் என்ற நினைப்போ?
நாமும் மனிதர்கள் தாம்
பழைய நயினார் காலம்
பாறி விழுந்த்திட்டுது
எங்கள் உழைப்பை இன்னும் உறிஞ்சவா
எண்ணுகிறீர்?
வையும் பணத்தை விரும்பினால்
தூக்கும் முட்டியை கையில்
நயினார் பார்க்கிறார்
புதுமையாக அவனை"
என்று ஒரு அடிமைத்தன எதிர்ப்பு பற்றியும் விடுதலை பற்றியும் ஆவேசமாக பேசியிருக்கும் இக்கவிதை போல "புதியன புகுதல்" கவிதையும் பழையன கழிந்து புதிய வரலாற்றை உருவாக்கிடுமோர் உத்வேகத்தூண்டல்களாய் அமைந்திருப்பது பாராட்டச்செய்கின்றது. அதுமட்டுமன்றி நமது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடநம்பிக்கைகள், சாதிப்பிரச்சனை, சுரண்டும் வர்க்கத்தின் இயல்புகள், போலி கெளரவம் போன்ற குறைபாடுகளை 'பாதை' 'உள்ளக்குமுறல்' 'எழுத்து' 'அடிமைக்கரங்கள்' 'நினைவை மீட்டிப்பார்', பாம்பு சாகவில்லை' என்ற தலைப்பின் கீழ் திரைவிலக்கி காண்பித்துள்ளார் கவிஞர்.
நமது சமூகத்தில் தொடர்ந்து வந்த பிரச்சனைகளையும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவலங்களையும் வெளிப்படுத்தியுள்ள இத்தொகுப்பானது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.தனது மன ஆதங்கங்களை வரிகளாக்கியிருக்கும் கவிஞரின் சமூகத்தின் மீதான பார்வையை மிக இலகுவாக்கி இலக்கிய உலகிற்கு தந்துள்ளார்.
"மீண்டு வந்த நாட்கள்" உண்மையில் இவரது கவிதைகள் மீள வந்த நாட்களாகவும் வாசகர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய மீட்சியாகவும் நல்ல கவிதைகளை வாசித்த திருப்தியையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆரோக்கியமான கவிதைகளை படைத்த கவிஞருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இலக்கிய உலகு வளர்த்த இவரது கவிதைகள் உங்கள் கருத்துக்களையும் கவரும் என்பது திண்ணம். எனவே தொகுப்பினை வாசித்து உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்திடுங்கள்.
1 comment:
சுகா,
உங்கள் விமர்சனப் பார்வை வித்தியாசமாகவே உள்ளது.விமர்சித்தவர்கள் சொல்லாத
கவிதைகளை எடுத்து விமர்சித்துள்ளீர்கள்.இவற்றை நீங்கள் பத்திரிகைகட்கும்
எழுதலாம்.நீங்கள் பத்திரிகைகட்கு எழுதவேண்டும்.
வாழ்த்துகள்.
அன்புடன்
வதிரி.சி.ரவீந்திரன்.
Post a Comment