Thursday, August 4, 2011

என் சொர்க்கங்கள் சொற்பமாகின

.
அழுதழுது போகும்
ஆரம்ப வகுப்புக்கு
அடுத்த வீட்டு விமலா அக்கா
விரல் பிடித்து கூட்டிச்சென்ற
பயணங்களின்றும்
பசுமையாகவே....

செருப்பில்லாமல்
நடைபழக்கிய-அந்த
செம்மண் பாதை...
சாமி வைத்து விளையாடிய
கற்கள் நிறைந்த ஆற்றங்கரை
பூஜைக்கு பூப்பறித்த
காட்டுச்செடிகள்....

நான் டீச்சராகி அடிவாங்கிய-அந்த
பாவப்பட்ட வேலிச்செடிகள்-இப்போ
நான் பெரியவளாகியதைப் போலவே
மாற்றங்கள் கண்டிருந்தது...

விதியின் வேகத்தில்
விபத்துக்கள் அடைந்திருந்தது-என்
வியத்தகு கிராமம்
விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட
தேயிலை விரிப்பு-பசுமையின்
புதுமையினை ருசித்துக்கொண்டது!

மண் பாதைகள்  மறுரூபமடைந்து
'தார்' சேலையை தமதாக்கியிருந்தது
சிக்கனமாய் கட்டியிருந்த
சின்னச்சின்ன வீடுகள்
சிங்கார மாளிகையாயிருந்தது
சின்னதாய் வருத்தம்தான்
எளிமையும் இயற்கையும்
வாடியிருந்ததால்...

நாங்கள் கூட்டாஞ்சோறாக்கி
கூடிவிளையாடிய-அந்த
மண்திட்டை
நீண்ட தேடலின் பின்
அடையாளங்கண்டேனது
பொது மலசலகூடமாய்...

வேறுபடுகள் ஒவ்வொன்றிலும்
வேதனை தெறிக்கிறது-என்
பள்ளிக்கால பசுமை
பறிபோயிருந்தது...
சிங்கார பருவத்தின்
சில்மிஷங்கள்  சிதைந்திருந்தது...

சிறு வயது சினேகிதராரும்
சிக்கவில்லை-மாங்கல்யம் பெற்று
மாமியார் வீட்டிலாம்...
வறுமைச் சொரூபங்களின்
வடிவம்-வடுக்களாய்
விலகியிருந்தது...

நிமிர்ந்து நின்ற தோட்டத்தின்
தோரணை கண்டு
வியந்த விழிகளுக்கு
பழமையின் பசுமை
பாழாகியது வேதனைதான்...!!!


(இக்கவிதை 29.09.2009 அன்று"மித்திரன் வாரமலர்" சஞ்சிகையிலும், 04.04.2011 அன்று 'வசந்தம்' தொலைக்காட்சியின் "தூவானம்" நிகழ்ச்சியில் "காணாமல் போன கவிதைகள்" எனும் தலைப்பில் ஒளிபரப்பானது)

No comments: