Friday, August 5, 2016

பரிதாபமாய் விம்மியழுகின்றேன்

வீங்கிய விழிகளுடனேயே
விடிந்ததெந்தன் இரவுகள்
விடையில்லா வினாவாய்
பாதையில்லா பயணமாய்
பரிதாபமாய் விம்மியழுகின்றேன்...

வெறித்தனமாய் எவரோ
என்இதயத்தை பிய்த்தெடுத்து
தீயிட்டதாய் உணர்கின்றேன்
ஸ்தம்பித்துப்போன சுவாசம்
உணர்வற்றுப்போன நடவடிக்கைகள்
ஊனமாகிக்கொண்டிருக்கும் என்
அத்தனை இயல்புகளும் ஐயகோ
அநியாயமாய் வலுவிழந்துகொண்டிருக்கிறது
வரப்போகுமந்த நொடிதனை
சந்திக்க முடியாதவளாய்
பயப்பிசாசு என் கழுத்தை
இறுக்கிக்கொண்டிருக்கின்றது..


ஊன்றிப்போன இந்த
வேரையறுத்துஉலகில்
வாழ்வதெங்ஙனம்...

கட்டிவைத்த கனவுக்கோட்டைகள்
அத்தியாய மத்தியாயமாய் வளர்ந்திருக்கின்றது
ஒற்றை நொடியில் அத்தனையும்
தகர்த்தெரிந்து விட்டு புன்னகைப்பதெங்ஙனம்..
இரக்கமேயில்லாமல் -என்
இளைய கவிகளை கசக்கியெறி(ரி)யும்
இந்த இதயமில்லாதவர்களை
என்னவென்பேன்..

எழுத்தில்லா விதியாய்
காம்பில்லா மலராய்
கடலில்லா கரையாய்
கண்ணில்லா இமையாய்
கலங்கி நிற்கின்றேன்...

கருக்கட்டிய என் கனவுகளை
நானே அழித்துக்கொண்டிருக்கின்றேன்
கதறக் கதற....
இந்த இரவும் விடிந்தது
வீங்கிய விழிகளுடன்...

No comments: