Wednesday, April 17, 2013

அன்பு' என்றால்


வெறும் இதயங்களாலும்
பெறுமதியான நேசத்தாலும்
இணைந்துகொண்ட காதல்
தரம்பார்த்து பிரித்துவைக்கப்பட்டது

படிப்போ பதவியோ
பணமோ அந்தஸ்தோ
தரமோ தராதரமோ பாராது
தானாய் -எமக்குள் தேனாய்
ஊறிய காதலைத்தான்
தகுதிகாண் தேர்வு நடத்தி
தள்ளிவைத்தனர்

காதல்,
கையாலாகாத்தனமா இதற்கு
தன்மானமில்லையா
ஊடறுத்த கேள்விகளால்
உடைந்துபோகின்றேன்

எதிர்த்துகொண்டு எமதுறவை
எழுப்பிவைத்திட துணிந்தாலும்
குடும்பத்தின் பாசக்கயிற்றால்
தூக்குக்கைதியாகின்றோம்

எம்மை உணர்ந்துகொள்ளாத‌
அவர்களுக்காய்
உயிருக்குள் ஊறிப்போன‌
எமதுறவை
இரத்தஞ்சொட்டச் சொட்ட அறுத்து
காணிக்கையாக்கப் போகின்றோம்

'அன்பு' என்றால்
என்னவென்று விளங்காதவர்களாய்??



No comments: