Wednesday, April 17, 2013
சுடுகாட்டுச் சாம்பலில் கலந்துவிடுங்கள்!
ஆயிரக்கணக்கில்
ஆழமாய் சேமித்த கனவுகள்
ஆழப்புதையுண்டு போனாலும்
ஆராத ரணந்தான் மனதுக்கு...
அண்டிவந்த சொந்தங்களில்
அன்பே இல்லாமல்
துண்டித்துக்கொண்டு போனதில்
தீராத காயந்தான் இதயத்துக்கு ஆனாலும்
எத்தனை உதடுகள்
போலியாய் விரிந்தன
எத்தனை புன்னகைகள்
வெறுமையாய் தெறித்தன
எத்தனை வார்த்தைகள்
அப்பட்டமாய் முகமூடி காட்டின
என்பதெல்லாம் பற்றி
தேர்ந்திட ஓர் களங்கிடைத்ததில்
வெற்றிதா னெனக்கு...
வியாபாரமாய்ப் போன
மனித உறவுகளுக்குள்
உண்மைக்கு வேலையில்லை
அன்புக்கு பெறுமதியில்லை
காதலுக்கு மதிப்பேயில்லை...
தகுதிக்கு ஏற்ப
ம(ண)னங்களை தேடிடும்
மாய உலகில்
நேசத்தை சுடுகாட்டுச் சாம்பலில்
கலந்துவிடுங்கள்
நேர்மைக்கு கொள்ளிவைத்து
கல்லறை நெற்றியில் பூசிவிடுங்கள்
இனியொரு ஜனனம் எழும்போது
தோல்வியை அறியாது
தோன்றட்டும்
வேதனையை உணராமல்
வெளிப்படட்டும்
ஏமாற்றங்களை அடையாமல்
எழும்பட்டும்...
உண்மைகளுக்கு
இத்தனை வலியென்றால்
போலிகள் மட்டும் உயிர்த்து
வாழ்ந்து மடியட்டும்
எவருக்கும் காயமுமில்லை
எதிலும் இரத்தக்கறைகளுமில்லை...!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment