Saturday, July 23, 2016

27 வது படைப்பாளியாக கவிதாயினி வெலிகம ரிம்ஸா முகம்மது


http://kalkudahnation.com/33659#!/tcmbck




பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இவ்வாரம் எதிர்வரும் 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 27 வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் இலங்கையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய காத்திரமான  பெண் படைப்பாளைகளில் ஒருவரான‌, படைப்பாளி கவிதாயினி வெலிகம ரிம்ஸா முகம்மது அவர்கள். கணக்காளராக தொழில் செய்யும் இவர், சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை மற்றுமன்றி விமர்சகராகவும் எழுத்துலகில் பரிணமித்துள்ளார். முக்கியமாக  பூங்காவனம் என்ற காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றும் இவர், இத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்டு பல சவால்களையும் சளைக்காமல் சந்தித்து, இந்த பெரிய பரப்பில் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்திருக்கும் இக்கவிதாயினியை பாராட்டாமல் இருக்க முடியாது. ஊடகம் எல்லோருக்கும் பொதுவானது. அதை தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் போது, அந்த ஊடகத்துக்கே மதிப்பில்லாமல் போகிறது. ஒரு ஊடகவியலாளன் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் நின்று நடுநிலைமையாகச் செயற்பட வேண்டும். ஆனால் தனிப்பட்ட பகையை மனதில் இருத்தி அநாகரிகமாக செயற்படுபவர்கள் ஊடகவியலாளராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள் எனக்குமுறும்  ரிம்ஸா முஹம்மதின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டுமென்ற பிரார்த்தைனையோடு, கவிதாயினி ரிம்ஸா முகம்மது அவர்களின் காத்திரமான பதில்களோடு நேர்காணலோடு இணைந்து கொள்வோம்.




01. உங்களைப் பற்றி?

நான் வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் எழுதி வருகின்றேன். சுமார் 12 வருடங்களுக்கு மேலாக இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகின்றேன். கவிதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, பாடல் போன்ற தளங்களில் என் பணி தொடர்கின்றது. எனது துறை கணக்கீடு என்ற போதிலும் வாசிப்பில் ஏற்பட்ட நேசிப்பால் இலக்கியம் மீதான ஆர்வம் அதிகரித்தது. இதுவரை 12 நூல்களை வெளியிட்டிருக்கின்றேன். அதில் மூன்று கணக்கீடு சார்ந்தது. ஏனையவை இலக்கியம் சார்ந்தது.


02. இலக்கிய பிரவேசம் எப்போது தொடங்கியது?

1998 காலப்பகுதியில் சக்தி, சூரியன் அலைவரிசைகளில் எனது கவிதைகள் ஒலிபரப்பாகின. ஆனாலும் 2004 ஆம் ஆண்டு தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதையடுத்தே இலக்கியத் துறையில் முனைப்புடன் செயற்படக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

2004 – 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகளை தயாரித்து நேரடியாக குரல் கொடுத்தும் வந்துள்ளேன்.


03. இப்படைப்புலகில் தனித்துவமாக சளைக்காமல் பயணிக்கும் தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன?

ஒரு கலைஞன், அல்லது கவிஞன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். ஓவ்வொரு கலைஞனும் மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதாபிமானத்தோடு செயற்பட வேண்டும். நாம் உலகத்தில் பல செல்வங்களைச் சேமித்தாலும் மனிதர்களின் அன்பை, மதிப்பை சேமிக்காவிட்டால் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்காது. எனவே நான் நேசிக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை என் எழுத்துக்களினூடாக பிரதிபலிக்கின்றபோது அது அவர்களுக்கு ஆறுதலாகவும் மற்றவர்களுக்கு பாடமாகவும் அமைந்து விடுகின்றது. 
நாம் எழுதும் படைப்புக்கள் நூலுருவாக்கம் பெற்றால்தான் அது காலத்தால் நிலைத்திருக்கும். ஆதனால் நான் எழுதும் படைப்புக்களை நூல்களாக வெளியிடுவதில் க‌ரிசனை காட்டி வருகின்றேன். அவ்வாறு நூல்களை வெளியீடு செய்யும் போது அதனை வாசிப்பவர்கள் என்னை தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் என்னை வாழ்த்துகின்றார்கள். 
அதையும் தாண்டி எனது நூல்களை வெளியீடு செய்யும் போதும், பூங்காவனம் சஞ்சிகையை உரிய நேரத்தில் வெளியிடும் போதும் ஏற்படுகின்ற பல சிக்கல்களையும் சவால்களையும் சமாளித்து அவற்றை சிரமமாக நினைக்காமல் பொறுத்துக்கொண்டு தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றேன்.

அதே போன்று எனது நூல் வெளியீடுகளின் போது என்னையும், என் எழுத்துக்களையும் நேசிக்கும் நல்ல உள்ளங்கள் சிரமம் பாராமல் வருகை தந்து எனக்கு உதவிக் கரம் நீட்டுகிறார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் என் புத்தக வெளியீட்டு நிகழ்வுளுக்கு வருகைதர முடியாதவர்கள் கூட பிரிதொரு தினத்தில் என் நூல்களை வாங்கி உதவி செய்கின்றார்கள். 

பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எனது படைப்புக்களுக்கு களம் தந்து என்னை ஊக்குவிக்கின்றார்கள்.
இவ்வாறான விடயங்கள்தான் எனது வெற்றிக்கான தூண்களாகும். 


04. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?

எனது படைப்புக்களில் பெரும்பாலானவை மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுகின்றன. போரின் அவலம், இயற்கை அனர்த்தம், மலையக மக்களின் பிரச்சினைகள், சீதனக் கொடுமை போன்ற இன்னோரன்ன விடயங்களை பேனாவினூடாக உலகத்துக்கு எத்தி வைக்கின்றேன்.

அதுபோல 2010 ஆம் ஆண்டிலிருந்து பூங்காவனம் என்ற காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன். அதில் சாதனைப் பெண்களின் புகைப்படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவர்களது நேர்காணலையும் பிரசுரித்து வருகின்றேன். ஆத்துடன், வளரிளம் படைப்பாளிகளுக்கு ஒரு களமாகவும் பூங்காவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றேன். பூங்காவனத்தின் மூலம் பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதில் ஆத்ம திருப்தி எனக்கு.


05. இலங்கையில் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

இன்று விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாக பெண்கள் இல்லை. அவர்களின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. முன்னைய காலத்தில் போலல்லாது பெண்கள் எல்லாத் துறைகளிலும் நிதானமாகவும், பொறுப்புடனும், தெளிவுடனும் தமக்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். கவிதை, நாவல், சிறுகதை போன்ற துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஆகவே இன்று பெண்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும்.


06. பெண்ணியம் பற்றி ஆண்கள்கூட அதிகமாக பேசுகின்றார்கள். சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் அந்தஸ்து, தனித்துவம் எப்படி இருக்கின்றது?

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளுக்காக மாத்திரமே உரியவர்கள் என்ற கருத்துக் கணிப்பு இருந்து வந்துள்ளது. இன்று கல்வி அறிவின் வளர்ச்சியினால் இந்நிலைமை மாற்றமடைந்து பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் கணிசமாக பெண்களுக்கு ஆண்களும் உதவுகின்றனர். தற்காலத்திலும் சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைககளுக்கு எதிராக பல ஆண்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர். பெண்களின் வளர்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். 

ஒரு தந்தையாக, சகோதரனாக, கணவனாக பல பரிணாமங்களில் ஆண்களின் உதவி கிடைக்கின்றமை பெண்கள் தமது திறமையை வெளிப்படுத்தி தனித்துவமாக செயற்படுவதற்கு இன்றியமையாத காரணமாக இருக்கின்றது எனலாம்.


07. நீங்கள் இத்துறையில் சந்தித்த சவால்கள் பற்றி கூறமுடியுமா?

ஆம். காய்த்த மரம் கல்லடி படும் என்பதற்கொப்ப எனது இலக்கியச் செயற்பாடுகளை நான் முன்னெடுத்துச் செல்லும்போது எனக்கும் பல இடர்கள் தோன்றின. உதாரணமாக ஒன்றைக் கூறுகின்றேன். குறித்த ஒரு கவிஞரும் நானும் ஆரம்ப காலத்தில் நட்பாக இருந்தோம். அவரின் வளர்ச்சியில் கணிசமான பங்கு என்னுடையாதாக இருந்தது. இலங்கை வானொலியில் முதன் முதலாக அவரது குரல் கவிதை நிகழ்ச்சியில் ஒலிப்பதற்கு காரணமாக இருந்தது நான்தான். பிறகு அவரது நேர்மையற்ற செயட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மனக்கசப்புக்களால் அந்த நபருக்கும் எனக்குமான இலக்கிய உறவு அறுந்தது. அதில் எனக்கு எவ்வித வருத்தமோ நஷ்டமோ இல்லை. 
இலக்கியவாதிகளை நேர்காணல் செய்யும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முகாமையாளர் என்னை நேர்காணலுக்காக அழைப்பதாக சொல்லியிருந்தார். ஆனால் எனக்கு உரிய திகதி அறிவிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அதில் பணிபுரியும் நான் முன்பு குறிப்பிட்ட நபர் என்னை அந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற விடாமல் தடுத்ததாக முகாமையாளர் சொல்லி பிறகு அறிந்தேன். இவ்வாறான புறக்கணிப்புக்கள் நேர்மையானவர்களுக்கு ஏற்படுவது சகஜம்தானே. 

ஊடகம் எல்லோருக்கும் பொதுவானது. அதை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தும் போது அந்த ஊடகத்துக்கே மதிப்பில்லாமல் போகிறது. ஒரு ஊடகவியலாளன் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று நடுநிலைமையாக செயற்பட வேண்டும். ஆனால் தனிப்பட்ட பகையை மனதில் இருத்தி (தானே நேர்மையற்ற விதத்தில் நடந்துவிட்டு) இவ்வாறு அநாகரிகமாக செயல்படுபவர்கள் ஊடகவியலாளராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். மனிதநேயம் உள்ளவர்களைக் காண்பது அரிதாகப் போய்விட்ட இந்தக் காலத்தில் இவ்வான நிகழ்வுகள் வியப்புக்குரியதல்ல. 

ஆனால் ஒருவரது வளர்ச்சியை இன்னொருவரால் தடுக்க முடியாது. ஏனெனில் இறைவன் நீதியானவன். அநீதி செய்தவர்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான். இவற்றையெல்லாம் தாண்டி இலக்கியத்துறையில் பரிணமிப்பதற்கு ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் என்னைச் சார்ந்தவர்களுமே காரணம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 


08. உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள், உங்கள் திறமைக்கு கிடைத்த விருதுகள் என நீங்கள் கருதுவது?

• 2007 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி ஷசாமஸ்ரீ கலாபதி|| என்ற பட்டத்தை தந்து கௌரவித்துள்ளது.

• 2008 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம்;;.

• 2011 இல் அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரம்.

• 2012 இல் கொழுந்து சஞ்சிகையினால் சர்வதேச மகளிர் தின விழாவில் இதழியல் துறையில் ஆற்றிவரும் பணிக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் தந்து ஷசாதனைக்குரிய மகளிர் விருது| பட்டத்தைத் தந்து கௌரவித்துள்ளது.

• 2013 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் முதலாம் இடம்.

• 2013 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தெஹிவலைப் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம்.

• தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் ஷஷவியர்வையின் ஓவியம்'' உழைக்கும் மக்கள் கலைவிழா 2013 தேசிய ரீதியில் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பாடல் இயற்றும் போட்டியில் ஷஷவெயில் நிறத்து தோல் கொண்டு' என்ற பாடலுக்காக மூன்றாம் இடம்.

• 2013 இன ஒற்றுமைக்கான அகில இலங்கை தேசிய கவிஞர்களின் சம்மேளனம் ஷஷகாவிய பிரதீப|| பட்டத்தைத் தந்து கௌரவித்துள்ளது.

• ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை வருடாந்தம் நடாத்தும் 2013 அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஷபணம் பந்தியிலே| என்ற சிறுகதைக்காக பரிசுச் சான்றிதழ்.

• 2014 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதை (எல்லாம் மாறிப் போச்சு), பாடல் ஆக்கப் போட்டிகளில் முதலாம் இடமும், சிறுகதை (பிஞ்சு மனம்), சிறுவர் கதை (எல்லோரும் மனிதர்கள்தான்) போட்டிகளில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளன.

• 2015 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த இலக்கிய விமர்சனப் போட்டியில் (வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு) முதலாம் இடம் கிடைத்துள்ளது.


09. இந்தப்பணியில் உங்கள் குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது?

எனது மாமாவான திக்குவல்லை ஹம்ஸா அவர்கள் என் இலக்கிய வளர்ச்சியின் மிக முக்கியமான முன்னோடி என்று கூறலாம். நான் தரம் எட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவரது சிறுகதைகள் வெளிவந்த பத்திரிகைகளைக் காட்டி இத்துறையில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது அவர்தான். என் நெஞ்சத்தில் இலக்கிய விதையை முதலில் தூவிய பேராதனை பல்கலைக் கழக பட்டதாரியான என் மாமா, தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


10. சக படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளிடமிருந்து நீங்கள் எவ்வகையான ஊக்குவிப்புக்களை பெற்றுக்கொள்கின்றீர்கள்? அவர்களுடனான உறவு குறித்து?

எனது படைப்புக்களை முதலில் பார்த்து விமர்சிப்பவர் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. அவரது ஊக்குவிப்பு என் படைப்புக்கள் சிறப்பாக வெளிவருவதற்கு காரணமாக அமைகின்றது. அதன் பின்னர் சிலவேளைகளில் அவை பத்திரிகைகளில் செம்மைபடுத்தப்பட்டு வெளிவரும்போது குறித்த அப் பத்திரிகையாசிரியர் என் படைப்புக்களை திருத்துவதினூடாக என்னை ஊக்கப்படுத்துகின்றார். இணைத்தளங்களின் ஆசிரியர்களும் எனது படைப்புக்களை பிரசுரிப்பதினூடாக என்னை வளப்படுத்தி பலப்படுத்துகின்றார்கள். இன்று பத்திரிகை போலவே இணையமும், இணைய சஞ்சிகைகளும் தற்கால மானிட வாழ்வில் அதிகமாக ஒன்றிணைந்துள்ளன. அவ்வாறான நவீன தொடர்பாடல்கள் மூலமாக பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமாகியிருக்கின்றார்கள். அவர்களது கருத்துக்கள், பதிவுகள் போன்றவையும் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளன.

திரு நீர்வை பொன்னையன், திரு சிறிசுமன கொடகே, திரு இரா உதயணன் போன்றவர்கள் என் இலக்கிய முயற்சிகளுக்கு கைகொடுத்தவர்கள். அதே போல இதுவரை நடைபெற்ற புத்தக வெளியீடுகளில் இடம்பெறாத ஒரு நிகழ்வு எனது புத்தக வெளியீட்டின் போது நிகழ்ந்தது. அதாவது திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் எனக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்து என்னை கௌரவப்படுத்தினார். இதுவும் என்னை உட்சாகப்படுத்திய என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.


11. இலக்கியத் துறையில் உங்களது நோக்கம் என்ன?

என் வாழ்வில் நான் கண்ட முதல் சோகம் எனது தாயார் இறையடி சேர்ந்ததுதான். அதிலிருந்துதான் எனது இதயத்தின் ஓசைகளை பாஷைகளாக நான் மொழிபெயர்த்தேன். கவி வடித்தேன். அவ்வாறு எழுதும்போது எனது நோக்கம் என் துயரத்தை காகிதத்துக்கும் சுமக்கக் கொடுப்பதுதான். ஆனால் காலவோட்டத்தினால் கவிதையின், இலக்கியத்தின் போக்கு என் மனதில் ஒரு ஆறுதலையும் தேறுதலையும் தந்ததுண்மை. அந்த மாறுதலினால் என் சிந்தனை இலக்கியத்தில் சிக்கிக் கொண்டது. இதன் பின்னர் நான் கடந்து வந்த காலத்தில் பல சம்பவங்கள் எனக்கு படிப்பினையாக அமைந்தன. 

சிலரது வாழ்க்கை எனக்கு பாடமாக அமைந்தது. அவற்றையெல்லாம் அவதானித்து அந்த பிரச்சினைகளில் மற்றவர்கள் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் பேனா என்ற ஆயுதத்தை ஏந்தினேன். சமூகத்துக்கு எதிராக செயற்படும் விடயங்களுக்காக அந்தப் பேனாவை வாளாக மாற்றினேன். எனது நோக்கம் ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் வாசிப்பவரின் இதயத்தைத் தொட வேண்டுமென்பதே தவிர சுட வேண்டும் என்பதல்ல.


12. பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

பொதுவாக பெண்கள் என்று நோக்குமிடத்து தமது கலாசாரத்தை சீரழித்துக் கொண்டு யாரும் எழுத முன்வரக் கூடாது. ஏனெனில் நமது வாழ்க்கை பூஞ்சோலையில் ரோஜாக்கள் கா(பூ)த்துக் கொண்டிருக்கும்போது நாம் நம் எழுத்துக்களினூடாக முட்களைத் தேடிக் கொள்ளக் கூடாது. வரம்பு அல்லது வரைமுறை என்பதெல்லாம் பெண்களை முடக்கிப் போடுபவை என்ற சிந்தனையிலிருந்து விடுபடுங்கள். உண்மையில் அந்த வரைமுறைகள் எமக்கு முன்னோர்கள் போட்டுவிட்ட முள்வேலி. முள்வேலியைப் பயிர்கள் கடந்தால் அவை காளைகளின் பசிக்கு இரையாக நேரிடும். எனவே எமக்கென்றொரு பாதையை நாம் போட்டுக்கொள்வதில் தவறில்லை. அதில் தனித்துவம் இருக்க வேண்டுமே தவிர ஒழுக்க வரைமுறைகளைத் தவறிவிடக் கூடாது.


13. மலையகத்தை பொறுத்தவரையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, வளர்ச்சி, அவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பற்றி கூறமுடியுமா?

மலையகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். அவர்களின் ஆத்திரமெல்லாம் இன்று முன்னேற்றங்களாக மாறி வருவது ஆரோக்கியமானது. தலைநகரில் வீட்டு வேலைகளுக்காக ஒது(டு)க்கப்ட்டவர்கள் இன்று பல உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். மலையக எழுத்தாளர்களின் வளர்ச்சிக்காக பல மலையக அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. அவை மலையக எழுத்தாளர்களுக்காக போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றன.


14. நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள்? 

கணக்கீட்டுத் துறையில் வங்கி கணக்கிணக்கக் கூற்று (2004), கணக்கீட்டுச் சுருக்கம் (2008), கணக்கீட்டின் தெளிவு (2009) ஆகிய 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை மாணவர்களுக்கு பயனளிக்கும் நூற்களாகும். அத்துடன் இலக்கியத் துறையில் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலொன்றை 2010 இல் வெளியிட்டிருக்கிறேன். 2012 ஆம் ஆண்டு ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் ஆடம்பரக் கூடு, என்ன கொடுப்போம்?, பாடல் கேட்ட குமார், இதுதான் சரியான வழி ஆகிய 04 சிறுவர் கதை நூல்களை வெளியிட்டுள்ளேன். கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை என்ற விமர்சனங்கள் அடங்கிய தொகுதியை 2013 இல் வெளியிட்டுள்ளேன். இதுதவிர 2014 இல் வண்ணாத்திப் பூச்சி என்ற சிறுவர் பாடல் நூலையும் 2015 இல் அறுவடைகள் விமர்சன நூலையும் வெளியிட்டுள்ளேன். எரிந்த சிறகுகள் என்ற இன்னொரு கவிதைத் தொகுதியையும் 2015 டிசம்பர் மாதம் அச்சிட்டிருக்கிறேன். அதற்கான வெளியீட்டு விழாவை இவ்வருடம் தான் வைக்க வேண்டும். எரிந்த சிறகுகள் எனது 12 ஆவது நூலாகும். 
இது தவிர பிஞ்சு மனம் என்ற சிறுகதைத் தொகுதியையும், பச்சைக்கிளி என்ற சிறுவர் பாடல் தொகுதியையும், பதிவுகள் என்ற விமர்சனத் தொகுதியையும் எதிர்காலத்தில் வெளியிட காத்திருக்கிறேன்.


15. 'நூல் வெளியீடு' என்ற விடயத்தில் ஓரு படைப்பாளி சந்திக்கும் சவால்கள்?

நூல்களை வெளியிடுவது என்பது ஒரு எழுத்தாளன் தன் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு ஒப்பானது. சுமார் 500 பிரதிகளை அச்சிடுவது என்றாலே ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் செலவு காத்திருக்கின்றது. அதையும் தாண்டி நூல் வெளியீட்டுக்காகவும், அழைப்பிதழ் இத்தியாதிகளுக்காகவும் ஒரு தொகை செலவு காத்திருக்கின்றது. காசு என்ற விடயத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் விழாவுக்கு வருகை தருவோர் பற்றிய எண்ணம் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றது. இதுவும் அல்லாமல் அழைப்பிதழ்கள் இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டு விழாவுக்கு பின்னர் கிடைக்கக் கூடிய துரதிஷ்டவசமான சூழ்நிலைகள் காணப்படுகின்றது. அத்துடன் அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்படுபவர்களின் பட்டம் பதவிகள் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட சிலர் விழாவுக்கே வருகை தரமாட்டார்கள். வேறு சிலர் அழைப்பிதழில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்று வருகை தர மாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் அழைப்பிதழில் இருந்தால் இன்னும் ஒரு வகையினர் நிகழ்வுக்கு வருகை தரமாட்டார்கள். இவ்வகையான சவால்களையெல்லாம் தாண்டி ஒரு நூல் வெளியீடு சிறப்பாக இடம்பெற்றால் அது அந்த எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாகும். 


16. தங்களது எதிர்கால திட்டம் மற்றும் வளரும் இளம் சமூகத்திற்கு கூற நினைக்கும் கருத்து?

ஒவ்வொரு படைப்பாளனும் தனது படைப்புக்களை நூலுருவாக்கம் செய்வதில் கவனம் எடுக்க வேண்டும். காலத்தின் பிடியில் கைதியாகி எழுத்தாளன் மறைந்தால் கூட அவனது எழுத்துக்கள் நிலைத்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் எனது படைப்புக்கள் சகலதையும் நூலுருவாக்கம் செய்வதுடன் பூங்காவனம் சஞ்சிகையையும் தொடர்ந்து வெளியிடுவது என் திட்டமாகும். 

வளரிளம் எழுத்தாளர்கள் பல்துறை சார்ந்த காத்திரமான புத்தகங்களை நிறையவே வாசிக்க வேண்டும். தங்களது எழுத்தாற்றலை ஊடகங்கள் வாயிலாக வெளியிட முயற்சிக்க வேண்டும். தனக்கென்று ஒரு காத்திரமான பாணியை உருவாக்கி அதில் நிலைத்திருக்க எத்தனிப்பதுடன் வன்மம், ஒழுக்கயீனம் என்பவற்றை புறக்கணித்து நல்ல முறையில் சமூகத்துக்கு பயன்படும் வகையில் தமது படைப்புக்கள் அமைய முனைப்புடன் செயற்பட வேண்டும்.

No comments: