Saturday, July 23, 2016

(23.10.2015 11வது படைப்பாளி குறும்பட நடிகரும் பாடகருமான ஜெறாட் நிரோஷன்.

http://kalkudahnation.com/26301#!/tcmbck





கல்குடா நேசனுக்காக நேர்காணல்:கவிதாயினி த.எலிசபெத் பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரின் இன்றைய (23.10.2015 திகதி வெள்ளிக்கிழமை) எமது “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் குறும்பட நடிகரும் பாடகருமான ஜெறாட் நிரோஷன். படைப்பாளிகளின் புரட்சியாக அண்மையில் திரையிடப்பட்ட ‘1023 வருடங்கள்’ குறுந்திரைப்படம் அனைவராலும் பேசப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான இலங்கையின் திரைப்படச்சூழலை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுக்கு இணையாக‌ தத்ரூப அமசங்கள் அத்த‌னையும் கொண்டு திரையிலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பரபரப்பான திரைப்படத்தின் கதாநாயகனை கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலினூடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கலைத்துறையில் துடிப்புள்ள இளைஞராக வலம் வரும் உங்களைப்பற்றி?


யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான் ஜெறாட் நிரோஷன். அம்மா அப்பா இரண்டு தம்பிமார் இரண்டு தங்கைமார் கொண்ட அழகிய கலகலப்பான எனது குடும்பத்தில் நானே மூத்தபிள்ளை. நான் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக யாழ். தூய மரியன்னை பேராலய பாடகர் குழாமில் பாடி வருகின்றேன். இரு இறுவெட்டுகளிலும் பாடியுள்ளேன். அதைவிட வானொலி ஒன்றுக்கும் நானும் நண்பன் தர்சனும் பாடியள்ளோம். இப்பயணத்தில் பல இடர்களைத் தாண்டித்தான் இன்று ஒரு பாடகராக சமூகத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன். எனது நடிப்பும் அப்படித்தான். அதைவிட நான் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கை நெறியினைக் கற்று வருகின்றேன். பட்டதாரி ஆக வேண்டும் என்பது அம்மாவின் கனவும் கூட. என்னுடைய கனவு எல்லாம் சிறந்த நடிகனாகவும் நல்ல பாடகனாகவும் வரவேண்டும் என்பதே.

உங்களுக்கு கலையுலகப் பிரவேசம் எவ்வாறு ஏற்பட்டது?


எந்தவொரு மனிதனுடைய வாழ்க்கையைப் பார்த்தாலும் அவனுடைய வாழ்க்கைக்கு முன் எப்படியும் பல கஸ்டங்களை எதிர்கொண்டே அவன் வளர்ந்திருப்பான். அது போலவே, என்னுடைய வாழ்க்கையில் அதைவிட கூடுதல் என்றே கூற வேண்டும். அவ்வளவு தூரம் நான் கஸ்டப்பட்டே இன்று ஒரு நடிகனும் பாடகனும் ஆகியுள்ளேன். சில நேரங்களில் என்னோடு கூட இருந்து நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட என்னை வீழ்த்தினார்கள். சிலர் என்னை விட்டும் விலகி விட்டனர். அதற்காக மனம் வருந்தவுமில்லை. அத்தோடு பொருளாதாரம் கூட என்ன எமனாக இருந்தது.  ஆனாலும், நான் மனம் சோர்ந்து போகவில்லை. அந்நேரம் எனக்குள் இருந்த ஆர்வம் விடாமுயற்சி, வெறி, இறை நம்பிக்கை எல்லாம் ஒன்று சேர்ந்து தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த 3, 4 வருடங்களுக்கள் 3 குறும்படங்கள், 2 முழு நீளத்திரைப்படங்கள், 2 விளம்பரங்கள் மற்றும் நேத்ரா தொலைக்காட்சியின் சித்திரம் நாடகத் தொடரிலும் நடித்துள்ளேன். மேலும் 2 இறுவெட்டுக்களிலும் பாடியுள்ளேன். சுவிஸ் இணையத்தளம் ஒன்றிற்காகவும் பாடலொன்றையும் பாடியுள்ளேன். இதளை விட Dan TV, Shakthi TV, TCNL TV, Vetti TV போன்ற தொலைக்காட்சிகளிலும் பாடியுள்ளேன். தற்போது 2 பாடல்கள் மற்றும் 2 குறும்படங்களில் நடிக்கவும் தொலைக்காட்சியொன்றுக்கு நடனம் வழங்குவதற்கும் என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் துறைகள் பற்றியும் அதில் சாதிக்கத்துடிக்கும் துறை பற்றியும் கூறுங்கள்? துறைகள் என்கின்ற போது பாடல் ஆடல் நடிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த மூன்றையுமே நான் அதிகமாக நேசிக்கின்றேன். இதில் பாடலும் நடிப்பும் சிறப்பானவை இந்த இரண்டும் என்னுடைய இரண்டு கண்களைப் போன்றவை. நான் சாதிக்கத் துடிப்பது நல்லதோர் பாடகனாகவும் நடிகனாகவும் வர வேண்டும் என்பதே. இவை தான் என்னுடைய ஆசை, விருப்பம், கனவு எல்லாமே. இத்தனை வருடங்களாக யாழ். மண்ணிலே யுத்தம் இடம்பெற்றதன் காரணத்தால் என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது யுத்தம் முடிவுறற்றதன் பின் 2010ஆம் ஆண்டுகளின் பின்பு தான் என்னுடைய நடிப்பும் ஆரம்பமானது. அது வரைக்கும் மேடை நாடகங்களிலேயே நடித்து வந்தேன். யாழ்ப்பாணத்திலே முதன்முதலாக செய்யப்பட்ட திருமண மடல் விளம்பரம் தான் என்னுடைய நடிப்பின் தன்மையை எனக்கும் வெளியுலகிற்கும் காட்டியது. இந்த விளம்பரம் யாழ். மண்ணிலே மிகப்பெரிய பாராட்டுக்களையும் வெகுமதிகளையும் பெற்றுக் கொடுத்து என் வாழ்வில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தொலைக்காட்சிகளில் நடிக்க வேண்டுமெ ன்ற எண்ணம் எனக்குள் அதிகம் அதிகமாய் எழத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரைப்பட, குறுந்திரைப்பட விளம்பர வாய்ப்புக்கள் தேடி வந்தன. இப்படித்தான் மெது மெதுவாக வளர்ச்சியடைந்தேன். இன்று என்னுடைய முழுக் கவனத்தையும் இந்தக் கலைத்திறன்களிலேயே செலவழித்தும் வருகின்றேன்.


உங்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மற்றும் உங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கூற முடியுமா?


பலர் என்னுடைய முயற்சிக்கு உறுதுனையாக இருந்திருக்கின்றனர். இருக்கின்றார்கள். அதில் சிறப்பான முதன்மையான இடம் என்னைப் பெற்றெடுத்த அன்பு தெய்வங்களையே சேரும். பெற்றோர்கள் இருவருமே நன்றாகப் பாடவும் ஆடவும் கூடியவர்கள். அவர்கள் வறுமையின் பிடியில் வளர்ந்ததால் தான் தங்களுக்கு மேடை அரங்கேற்றம் செய்வதற்கு சந்தர்ப்பமில்லாது போனதாகவும், ஆனால், அவர்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்ததாகவும் அடிக்கடி என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். நான் பாடுவதற்கு எனது அண்ணாவும் ஆசிரியருமான டீ.து.நிரேஷனும் ஒரு காரணம். அவர் மட்டும் இல்லையென்றால் எனக்கு பாடல் என்றால் என்னவென்று தெரிந்திருக்காது. அத்துடன் அதற்கான களமும் சரியாக அமைந்திருக்காது. அடுத்ததாக, 2008ஆம் ஆண்டு இசை இளவரசன் விருதை வென்றெடுத்த இசையமைப்பாளர் ஊ. சுதர்சன் அண்ணாவுக்கும்  நான் நன்றி கூற வேண்டும். “மன்னியும்” என்ற கிறீஸ்தவ பாடல் இறுவெட்டிலே தென்னிந்திய பாடகர்களுடன் (கிருஸ்ணராஜ், சத்தியபிரகாஸ், பூஜா) சேர்ந்து பாடுவதற்குரிய  சந்தர்ப்பத்தையும்  எனக்கு ஏற்படுத்தித் தந்தார். அத்தோடு, இந்த இறுவெட்டைத் தயாரித்த அருட்தந்தை ஜெயபாலன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். “இளப்பினும் சக்தியுண்டு” இறுவெட்டை தயாரித்து அதிலே 2 பாடல்களை பாடுவதற்கு பிரியன், பிரசாத் இருவருக்கும் சந்தர்ப்பம் அமைத்து தந்தார்கள். நடிப்பதற்கு நாடகக்கலை ஊடாக களமமைத்துத் தந்தார் யாழ். திருமறைக் கலாமன்றம் இயக்குநர் அருட்தந்தை நீ.சே.மரியசேவியர் அடிகளார். அதன் பிரதி இயக்குநர்களான ஜோன்சன் ராஜ்குமார், விஜயன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். யாழ். மாவட்டத்திலே முதன் முதலாக உருவான விளம்பரத்தில் முதன்முதலாக நடித்த போது, கொஞ்சம் பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது. பல தேர்வுகளின் மத்தியிலேயே நான் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இயக்கிய “பனைமரக்காடு” திரைப்படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பனாக நடிக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்தத்திரைப்பட விளம்பர வரிசையிலே நண்பன் சமித்தனின் அறிமுகம் எனக்கு எற்பட்டது. இதனைத் தொடர்தே “1023 வருடங்கள்” திரைப்படத்திலும் நடிக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. இந்தத் திரைப்படம் என்னுடைய வாழ்விலே ஒரு மைல்கல் என்றே கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து நெல்லி சோடா கம்பனியின் விளம்பரமொன்றிலும் நடித்திருக்கின்றேன். அடுத்ததாக நாடகம், நடிப்பு இதில் எனக்கு ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் அதனை தீர்த்து வைப்பவர் தர்மா அண்ணா. அவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எனக்கு ஏற்படும் தடங்கல்கள் கஸ்டங்களிலும் நான் தொலைபேசி எடுக்கும் நேரங்களில் அன்பான பேச்சினால் சரியான ஆலோசனைகளை வழங்கி வழி நடாத்தி வரும் உடன் பிறவாத சகோதரன் அண்ணா ஜானூஸ் மற்றும் என்னை தற்போது செவ்வி காணும் அன்பு அக்கா ராஜ் சுகாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பாடகராக, ஒரு நடனக் கலைஞராக வெளிப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றி கூறுங்கள்?


 2003ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை யாழ். தூய மரியன்னை பேராலயத்தில் பாடகராக இருக்கின்றேன். 2007ஆம் ஆண்டு ஒரு பாடல் போட்டியிலே எங்களுடைய பாடகர் குழாம் போட்டியிட்டு 1ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. அதிலே எல்லோருக்கும் விருது கிடைத்தது. அது தான் என்னுடைய வளர்ச்சியும் ஆரம்பமும். அதனைத் தொடர்ந்து, வடக்கில் அரசாங்கத்தினால் நடைபெற்ற “வடக்கின் நட்சத்திரம்” பாடல் போட்டியில் பங்குபற்றி இறுதி 5 சுற்று மட்டும் வந்தமை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இசைக்குழுக்களில் பாடும் வாய்ப்பும் அதிகரித்தது. முதலில் இணைந்த இசைக்குழு “ஜங்கரன்” இசைக்குழு. அங்கு என்னை அறிமுகப்படுத்தியவர் தருமராஜ் அண்ணா. அவர்களே அவருக்கும் அதன் இருக்குநர்களான இந்திரன் சஞ்சய் அவர்களுக்கும் எனது நன்றிகள். நான் தற்போது ஜங்கரன் இசைக்குழு, ஜேம்ஸ் இசைக்குழு, து.சுசுகுமார் இசைக்குழு, கண்ணன் இசைக்குழு, றெய்ன்போ இசைக்குழு, விடியல் இசைக்குழு (கத்தோலிக்க இசைக்குழு) போன்றவற்றில் பாடி வருகிறேன். அது மட்டுமல்லாது, ஆலய வழிபாடுகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் பாடி வருகின்றேன். நாடக்கலைஞராக என்றால், ஆரம்பம் திருமறைக்கலா மன்றமூடாகக் கிடைத்தது. பின் நண்பன் து.வாகீசனின் “மூன்று நட்சத்திரம் நடனக்குழு” ஊடாகவே பல மேடைகளில் மேலைத்தேய கீழைத்தேய நடனம் என்று தொடர்கின்றது. 2010ஆம் ஆண்டு (பனைமரக்காடு) படத்தின் ஓடியோ வெளியீடு வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதிலே 3 நடனங்களை மேடையேற்றினோம். அதில் நான் எனது சகோதரியுடன் தனியாக நடனமாடினேன். அது எனக்கு பலரின் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. என்னுடைய சகோதரியும் என்னைப் போலவே எந்தக் கலைகளையும் விட்டு வைக்கவில்லை. அவள் ஒரு சகலாகலா வல்லி. அதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு கத்தோலிக்க தொலைக்காட்சியான ரீ.சீ.என்.எல். தொலைக்காட்சிக்கு என்னை ஒரு நடனம் உடனடியாக தரும்படி கேட்டனர். நான் அதனை இரு நாட்களில் செய்து கொடுத்திருந்தேன். இதனை வெளிநாட்டில் பார்த்த பலர் எமது குழுவை வாழ்த்தினர். இன்னும் எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் வெளியிடங்களிலும் பழக்கியும் வருகின்றேன்.


இலங்கையில் நீங்கள் நடித்த குறும்படங்கள் மற்றும் உங்களது கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் பற்றியும் கூறுங்கள்?


கெட்டவன் (குறும்படம்), தேடல் ஆரம்பம் (குறும்படம்), என்னுள் என்ன மாற்றமோ (முழு நீளத்திரைப்படம்), 1023 வருடங்கள் (குறும்படம்), பனைமரக்காடு (முழு நீளத்திரைப்படம்), சித்திரம் – நேத்ரா ரி.வி (நெடுந்தொடர் நாடகம்) போன்றவற்றில் இதுவரை நடித்துள்ளேன். கெட்டவன் குறும்படத்திலே 5 கதாநாயகர்கள். அதிலே நான் பிரதான கதாநாயகனாக நடித்திருக்கின்றேன். அது இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தேடல் ஆரம்பம். இதிலே எனக்கும் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் கதாபாத்திரம். இந்தத் திரைப்படமும் இந்த வருடம் வெளிவரவிருக்கின்றது. என்னுள் என்ன மாற்றமோ முழு நீளத்திரைப்படத்தில் நாயகனின் நெருங்கிய நண்பனாக நடித்துள்ளேன். இதுவும் இந்த வருடம் வெளி வரும். பனைமரக்காடு முழு நீளத்திரைப்படம் தென்னிந்திய இயக்குநர் க.செவ்வேளின் தயாரிப்பில் நாயகனின் நெருங்கிய நண்பனாக நடித்துள்ளேன். இந்த திரைப்பட விளம்பரங்களின் வரிசையிலே தான் 1023 வருடங்கள் குறும்படத்துக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மைல்கல். இது தான் நான் கதாநாயகனாக அறிமுகமாகின்ற முதல் குறும்படம். தற்போது பாரிய வரவேற்பைப் பெற்று திரையரங்கில் ஓடியது.


இலங்கையில் திரைப்படத்திற்கான வாய்ப்புக்கள் எவ்வாறு கிடைத்தது?


இலங்கையைப் பொறுத்த வரையில் திரைப்பட வாய்ப்புகள் தென் பகுதியிலேயே மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. வட பகுதிகளில் அது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இப்படியிருக்கையில், 2009ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் AAA Movies International திரைப்பட நிறுவனம் நடிக்க ஆர்வமுள்ளவர்ளுள் தேவையென்று விளம்பரப்படுத்தி இருந்தது. சாதிக்க வேண்டுமென்ற எனது வெறி நண்பன் திலீபனூடாகவே என்னை அங்கு சேர்த்தது. 350க்கும் மேற்பட்டோருடனான நேர்முகத் தேர்வில் எனக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. முதன்முதலாக தொலைக்காட்சியில் என்னை வெளியுலகிற்கு அடையாளங்காட்டியது ANDRA Weeding Card விளம்பரம். தொடர்ந்து நெல்லி சோடா விளம்பரத்தில் நடித்தேன்.



 1023 வருடங்கள் குறும்படத்தின் சிறப்புகள் பற்றி கூறுங்கள்?



1023 வருடங்கள் திரைப்படத்திலே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் நான் தெரிவு செய்யப்பட்டேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு திரைப்படம். பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அதிகளவான பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது இக்குறும்படமே. இந்த திரைப்படத்திலே இடம்பெற்ற ஒரு காட்சியை எப்போதும் மறக்கவே முடியாது. இக்காட்சியினால் தான் படம் வெற்றி பெற்றது. அது ஒரு விபத்துக்காட்சி. வீதியால் சென்றவருடன் வேகமாகச்சென்ற வாகனம் மோதியதில் அவர் இறந்து விடுகிறார். காட்சி நகர்ந்த கொண்டிருக்கும் போது தூர இடத்தில் கமெரா இருப்பதனை யாரும் அவதானிக்கவில்லை. அப்போது வழியில் சென்ற பேரூந்தும் அவ்விடத்தில் நின்று விட்டது. பலர் ஏங்கி அழத்தொடங்கி விட்டனர். பெரும்பாலானோர் எமது வாகன ஓட்டுனரைப் பார்த்து கண்டபடி திட்டித் தீர்த்தனர். நாங்கள் படம் தான் எடுக்கிறோம் என்பதை அவர்கள் நம்பவில்லை. அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சி மிகப் பிரமாண்டமாக வந்துள்ளது. அரை மணி நேரமாவதற்குள் மன்னார் முழவதும் சூடு பிடித்து விட்டது. இந்த விபத்து பிறகு பொலிஸார் எங்களை கூட்டிச் சென்றனர். அன்றைய நாள் படப்பிடிப்பு அந்த விபத்துடனேயே முடிந்தது. அந்த நிமிடம் நாங்கள் எல்லோரும் படத்தின் வெற்றியை உணர்ந்தோம். படம் எடுக்கவில்லையே என்று குழம்பியிருந்தாலும் மறுபுறம் மகிழ்ச்சி தாண்டவமாடியது.



 இப்படத்துக்கான வரவேற்பும், ஆதரவும் எவ்வாறுள்ளது?


இப்படத் தயாரிப்பில் பல பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் எதிர்கொண்டோம். இருப்பினும், எங்களது விடா முயற்சியினால் இப்படம் மக்களிடையே பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பேஸ்புக் மற்றும் தொலைபேசி மூலமாக முகம் தெரிந்த, தெரியாத பல நண்பர்கள் உள்நாட்டிலிந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாழ்த்துக்கூறி ஆதரவளித்தினர். அத்துடன். 1023 வருடங்கள் திரைப்படம் மன்னார் அயன் திரையரங்கிலே வெளியிடப்பட்ட போது, நாங்கள் யாருமே எதிர்பார்க்காதளவிற்கு முதல் 3 காட்சிக்கும் அதிகளவான மக்கள் திரண்டு வந்தனர். பெரும்பாலானவர்கள் படம் சூப்ரா பண்ணியிருக்காங்க என்று என் காது குளிரும்படி சொல்லிக் கொண்டே போனார்கள். அந்த தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீதியால் செல்லும் போது எப்போ படம் ரிலீஸ் என்று கேட்டவங்க எல்லாம் படத்தைப் பார்த்து விட்டு மெய்ச்சிலிர்த்து நின்றதையும் கண்ணுற்றேன். இப்போது கூட நண்பர்கள் காணும் இடங்களில் வாழ்த்துகின்றனர்.



திறமைமிக்க நம்நாட்டு கலைஞர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்று எதை கருதுகிறீகள்?


இந்தியக் கலைஞர்களுக்கு நிகராக நம்மவர்களும் இலங்கையில் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குரிய சந்தர்ப்பங்களும் வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. இவர்கள் மனங்களில் இந்திய சினிமா தான் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்திய சினிமாக்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு, நம்மவர் படைப்புகளையும் பார்க்கும் மனப்பாங்கு எல்லோரிடத்திலுள் வர வேண்டும். எமது படைப்புக்கள் வெளிநாடுகளுக்கும் போக வேண்டும். அப்போது தான் திறமைமிக்க கலைஞர்கள் தடைகளின்றி வளர்ச்சி பெற முடியும்.


உங்களை அடையாளப்படுத்திய ஊடகங்கள் பற்றி குறிப்பிட முடியுமா?


என்னை அடையாளப்படுத்திய ஊடகங்களாக TCNL TV, துருவம் இணையத்தளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதை விட, சக்தி ரீ.வி, டான் ரீ.வி, வெற்றி ரீ.வி. ஆகியவற்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.


உங்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன?


எனது எதிர்காலத்திட்டம், கனவு எல்லாமே சிறந்த பாடகனாகவும் நடிகனாகவும் வர வேண்டும் என்பதே. அதற்காகவே என்னை அர்ப்பணித்தும் வாழ்கின்றேன். பாடலும் நடிப்பும் என்னுடைய இரு கண்களைப் போன்றதே. இனி வருங்காலங்களில் இரு இறுவெட்டுகளை என்னுடைய சொந்தத்தயாரிப்பிலே வெளியிடுவதற்கு எண்ணியுள்ளேன். அதிலே ஒன்று “அழைப்பின் குரல்” என்ற கிறிஸ்தவப்பாடல். மற்றது “நினைவே நீயடி” என்ற பாடல் தொகுப்பு. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


 உங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு கூற விரும்புவது என்ன?


முதலில் நாங்கள் எந்த கலைத்துறையில் இருந்தாலும் அத்துறையிலே சாதிக்க வேண்டுமென்ற எண்ணமும் விடா முயற்சியும் இருக்க வேண்டும். அடுத்தது, எம்மை அதற்கென அர்ப்பணிக்க வேண்டும். அப்போது தான் அந்தத்துறையிலே மிளிர முடியும். அத்தோடு, எமக்கு மற்றவர்கள் செய்த மிகச்சிறிய உதவிகளில் கூட நாங்கள் நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும். பலர் அதை மறந்தே விடுகின்றோம். இவற்றோடு சேர்த்து கடவுள் நம்பிக்கையும் கட்டாயம் வேண்டும். இறைவன் இல்லையென்றால் எதுவுமில்லை. இந்த விடயங்கள் எம்மிடம் காணப்படுமாயின், மனம் நோகாமல் ஏதெனுமொரு ஏணிப்படியிலே ஏறிச் செல்லலாம்.

No comments: