Wednesday, December 2, 2015

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்






திரும்பிப்பார்க்கு மொருநாள் நான்
வெறுமையாய் நின்றிருப்பேன்
உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌
வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்.....

நான் செலவழித்த நிமிடங்கள்
நடையாய் நடந்த இலட்சியங்கள்
ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம்
ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்...


வாலிபத்தளைப்பின் வெற்றிகள்
வாரிசேர்த்த சொந்தங்கள்
தேடிவைத்த நேசங்களெல்லாம்
தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்....

முதியோர் இல்லமோ
முகமறியா ஓர் நிறுவனமோ என்னை
முன்னின்று நடத்தலாம் இல்லை
கைத்த‌டியெனை தாங்கலாம்...

பாகம் பிரித்துக்கொண்ட பாசங்கள்
பாராமுகம் காட்டி ஓடலாம்
பாசமூட்டி வளர்த்த அவர்கள் எனை
பாதியில்கூட நிற்கவைக்கலாம்...

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்
அனைத்தையும் சந்திப்பதற்கு
அடுத்தடுத்து செயற்படுகின்றேன்
அந்த நாளை சுமப்பதற்கு.....!!!

No comments: