Friday, July 19, 2013

உன்னைப் போலல்ல உன் நினைவுகள்





அழுகையின் துளிகள்
அவசரமாய் விழுந்து தெறிக்கின்றது...

வருடங்களை விழுங்கிக்கொண்ட -அந்த‌
வைரமான நாட்களின் ஓசைகள்
வந்து வந்துபோவதில்
வசந்தமெல்லாம் எங்கோ போய்
ஒளிந்துகொள்கின்றது...

அந்த அருகாமைகள்
அன்பேயுருவான அந்நியோன்யங்கள்
காமமில்லாத முத்தம்
காதல்மட்டுமேயான ஸ்பரிசம்
பிரியும் தருணங்களில்
வெடித்து உதிர்க்குமந்த பிரியங்கள்
எதுவும்,
என்னைவிட்டு நீங்குவதாக இல்லை...

உன் நினைவுகள்
உன்னைப்போல இல்லை
அவையொவ்வொன்றும்
உண்மையானவைகள்
ஆழமானவைகள்
ஆசையாசையாய் முளைத்தவைகள்

அதனால்தான் உன்னைப்போலல்லாமல்
என்னைவிட்டு நீங்க‌
இத்தனை சிரமப்படுகின்றன.....

No comments: