Friday, October 24, 2014

தோள்கொடுத்த வீழ்ச்சியில்தான்... (02.11.2014 தினக்குரலில்)

அன்றொருநாள் நிலாவை
அழகென்றே மகிழ்ந்தேன்
என்னவென்று அறியேன்
எல்லாவற்றிலும் குறைதான்...

கோலமயிலும் கொண்டைச்சேவலும்
கோவில்மாடும் ரசனையென்றுதான்
காலமெல்லாம் நினைத்திருத்தேன்
காலமனைத்தையும் மாற்றியதேனோ...

பூக்கும் பூவும்
புன்னகைக்கும் முயலும்
தாக்கிடும் என்பதனை
தாமதித்தே அறிந்துகொண்டேன்...

சிறகுவிரித்து பறந்தாலும்
மனதுவிரிக்கா கிளிபோல‌
சிறையிருந்த நாளெல்லாம்
சிந்தையிலே நிறைந்ததுவே...

காலம் கவலையினையீன எனை
கல்வியொன்றே கரைசேர்க்க‌
மாய்ந்த காலமெல்லாம்
மனதைவிட்டு அகன்றதுவே...

நிகழ்காலமென்னில் நிஜங்களை
நிறைத்துவிட்டுச் செல்ல‌
இகழ்கால நினைவெல்லாம்
இல்லாமல்தான் போனது....

தோல்வியெல்லாம் படிகளென்று
தோன்றியது இன்றுதானே
தோள்கொடுத்த வீழ்ச்சியில்தான்
தோன்றினேன் நான் சுடராக‌

No comments: