Friday, April 25, 2014

தாக்கங்களும் பூக்களாகும்!!

உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது


இயலாமைகளை சுட்டிக்காட்ட‌
இமையிதழ்களில் கதறுவதே
இவளின்  வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை


வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்


அன்பெனும் முகமூடிதரித்த‌
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது
'நம்பிக்கை'யென்று


பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய்‍ அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட‌
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்


இனியவள் வாசலுக்குள்
கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும்
காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி
தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில்
தாக்கமெல்லாம் பூக்களென்று!!

No comments: