ஐந் திரு மாதங்களா யென்மணி வயிற்றில்
நிந்தனை யோடே சுமந்தே னென் கருவை -இந்
நாள் மட்டுமதை என்குழந்தை யென்றுணரவில்லை
நான் பெற்றுக் கொள்ளவுமதை விரும்பிடவில்லை...
என் னைபுதைத்து முளைத்தெழுந்த குழந்தாய்
நின் சோகக் கருவாய் ஏனிங்கு மலர்ந்தாய் -விண்
மழை போலொரு கண்ணீர்க்கதை எனக்குண்டு
மனம் விட்டுசொல்லிடவே மனமொன் றிங்கில்லை...
ஊர்வாய் களையிழுத்து மூடிடவே எனதுறவுகள்
பேர் காப்பாற்றிக் கொள்ள மண்ணிலே -வேர்
விட்டு போனதம் கெளரவம் காத்திடவேயென்
விடலை பருவமதை வீணாக்கிய விரோதக்கருவிது...
மணவாளனது பேருமறியா முகமறியா பேதையாய்
கனவினில் ஜொலித்த யென் கற்பனைகள் -என
தாசையின் தாட்பரியங்களை யழித்து புகுத்திய
தாழாமையில் உருவான தாய்மை யின்பமல்ல...
மெய்தொட்டே யெழுதுகிறேன் மனதில் காயமே
தாய்மையில் வயிற்றை நானும்தடவி -சேய்
யென நினைந்து மசக்கையில் மகிழ்ந்ததுமில
கல்லைச் சுமப்பதாய் கல்லாய்த்தான் விழித்திருந்தேன்...
பத்துமாதத் தின்பலனாய் தாய்மையின் வலியெனை
சித்தங் கலங்கச் செய்கையிலே சிசுவுனை -பத்
திரமாயுலகங்காணச் செயவென பகைமையும் மறந்தேன்
தாய்மையின் மகத்துவமிதோ தரணியில் நற்பேறிதோ...
பூரித்திட்ட நெஞ்சமது பூமுகமுனை கண்டதும்
வாரியணைத் திட்டெ னைமறந்தே கொஞ்சியதும் -பாரி
போலெனது மனமும் பாலூட்டி துஞ்சியதும்
போர்க்கப்பலென் குணமே மூழ்கிற்றே உனதழுகையில்...
No comments:
Post a Comment