Tuesday, October 27, 2015

இதையும் கடந்து போ.



வழிகள் முழுவதும்
வலிகள் கொட்டிக்கிடக்கலாம்
ஒளியே இல்லாப்பாதையில் நீ
விழி திறந்துகொண்டே பயணிக்கலாம்

    அதையும் கடந்துபோ.....


நம்பிப்பிடித்த கைகள்
நரம்பறுத்துச் செல்லலாம்
வெம்பிநின் றழுதாலும் திரும்பாத‌
வெறுமுறவுகள் நீங்கிச்செல்லலாம்

   இதையும் கடந்துபோ......

புன்னகைசாலையில் போன பயணம்
புண்களை தூவிவிட்டு
எண்ணிக்கையில்லா இரும்புக்கம்பிக்குள்
மண்டியிடச்செய்திருக்கலாம்

    அதையும் கடந்து போ...

எதிர்பார்ப்புக்கள் எல்லைவரைசென்று
புதிர்களை மட்டும் ஏந்திக்கொண்டு நீ
பிதிர்க்கடனாளியாய் வேதனையோடு
அதிர்ந்துபோய் திரும்பி வந்திருக்கலாம்

    இதையும் கடந்துபோ...

லட்சியக்குதிரையிலேறி வேகமான நீ
லட்சக் குறைவினால் நொண்டியாகி
எட்டி நடக்கும் பலமிழந்து படுக்கையில்
முட்டிமோதியெழும் கண்ணீரினை துடைத்துக்கொண்டிருக்கலாம்
 
     அதையும் கடந்துபோ....


கடப்பதற்காகத்தான் கால்கள்
நடப்பதற்காகத்தா னுன் கண்கள்
திடமாய் பிடித்துக்கொள்ளத்தானே காலங்கள்
மடமடவென்று மேல்நோக்கி பறந்து

      இதையும் கடந்துபோ

இருளேயென்று முடங்கிப்போய்விடாதே
இதயமேனோ மென்மையென்று புலம்பாதே
அருளான தைரியத்தை அணிந்துகொண்டு நீ
விரும்பிய பாதையில் நடந்து

      அத்தனையும் கடந்துபோ....

வஞ்சங்களையும் தோல்விகளையும்
நெஞ்சத்துள் சுமந்து திரியாதே
கொஞ்சமாய் விழித்துகொண்டாலும்
துஞ்சலாம் தன்னம்பிக் கையினின் பங்களை


   இதையும் கடந்துபோ....

எதுவும் கடந்து போய்விடும்
நிரந்தரமாய் எதற்கும் ஆயுளுமில்லை
இதுவா வாழ்வென்று வெம்பிடாதே
இதையும் கடந்து போய்க்கொண்டேயிரு.... 

No comments: