Monday, September 14, 2015

அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள்

   நீண்டநாட்களுக்குப்பிறகு முகநூலில் சிறந்த‌ சிறுகதைகளினை வாசிக்கக்கிடைத்தது. கவிதைகளைவிட கதைகளையே அதிகம் படிக்கும் எனக்கு இந்த கதைகள் வெகுவாகப்பிடித்தது. ஊடகவியலாளரான விக்கி விக்னேஸ் அவர்கள் எழுதிய கதைகளே அவை.
மூன்று அங்கமாக வந்த "எலிசபெத்" கதை பிடிக்க‌ ஓரு சிறு காரணம் சிறுகதையின் தலைப்பு, பெரிய காரணம் சுவாரஸ்யம் குறையாத அந்த கதை.
வாசகரின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவைத்து, முடிவினை வித்தியாசப்படுத்துவதில்தான் எழுத்தாளன் வெற்றியடைகின்றான் அந்தவகையில் விக்கி அவர்களின் படைப்பு மிகப்பிரமாதம். ஆவிகள் பற்றி அசத்தலான காதல் கதைகள் "எலிசபெத்" மற்றது "ட்ரீஷோ எனப்படும் த்ரீவீலர்" இரண்டு கதைகளும் பேய் ஆவியை மையப்படுத்தி வாசகனை பயப்படுத்தாமல் வியக்கவைத்திருக்கின்றார்.
அழகான தமிழ்ச்சொற்களை கையாண்டும், அதிகமாக கதையினை இழுத்துக்கொண்டுப்போய் வாசகனை எரிச்சலூட்டாமலும் படைப்பினை பக்குவமாக கையாண்டிருக்கின்றார்.
நல்ல கருவினை தெரிவுசெய்து சிறப்பான சிறுகதைகளினை வாசிக்கும் சந்தர்ப்பத்தினை தந்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சகோதரர் விக்கி விக்னேஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இன்னும் நலமானதை
பகிர்ந்துகொளவேண்டுமெனவும் கூறிக்கொள்கின்றேன்.

"எலிசபெத்" கதையிலிருந்து.........

"வரவேற்பரையின் மேல் சுவரில் எலிசபத்தின் பெரிய குடும்ப புகைப்படம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது…
அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மெழுதுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.
எனக்கு அருகில் நின்றிருந்த எலிசபத்தின் அண்ணன் சொன்னார்,
“நடுவில உட்காந்திருக்கது எலிசபத், இடதுபக்கம் அம்மா, வலதுபக்கம் அப்பா, பின்னால நிற்கிறது……. நான்…”
https://vikeywignesh.wordpress.com/…/%E0%AE%8E%E0%AE%B2%E0…/


நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.

டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா 2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம் வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர் சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.

தற்காலத்தை கடந்து எதிர்காலத்தின் ஓர் தினத்தில் வாழ்ந்துவிட்ட உணர்வு, புதுமையான கற்பனைத்துவம் கலந்த இக்கதை நிஜமானதாக இருக்குமோ என எண்ணுமளவிற்கு கதைப்புனைவு நம்மை அதிசய உலகிற்கு அழைத்துச்செல்கின்றது.

கொஞ்சம் நீளமானதாகவே இருப்பினும் சலிப்புத்தன்மையில்லாது விறுவி(ரு)றுப்பாக நகர்ந்துசெல்கின்றது எழுத்தாளர் தன்னையொரு விஞ்ஞானியாக வெளிப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.வார்த்தையமைக்குக்கள், விடய‌க்கோர்வைகள் மேலைநாட்டு சம்பவமொன்றை நேரடியாக பார்க்கும் நெகிழ்ச்சியை தருகின்றது.

இப்படி அதிரடியாய் தொடரும் கதை, முடிவடையும் இடத்தில்தான் படைப்பாளருக்கு பெரிய சபாஷ் போடத்தோன்றுகின்றது. பொதுவாகவே சிறுகதை, நாவல்களில் 'முடிவு' என்பது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் போட்டியாய் அமையும் இடமென்று கூறலாம். சில நேரங்களில் வாசகன் எதிர்பார்த்த முடிவினையே தந்து எழுத்தாளர் தோற்றுப்போகின்றார், பலநேரங்களில் எழுத்தாளனின் எதிர்பாரா முடிவிலே வாசகன் மகிழ்வோடு தோற்றுப்போகின்றான் இடண்டுமே ஆரோக்கியமான நிகழ்வுதான். அதனையே விக்னேஸ் அவர்களும் அழுத்தாமான கதையின் முடிவைத்தந்து வாசகர்கள்மத்தியில் வெற்றி பெறுகின்றார். கதையின் கனமும் இந்த முடிவிலேதான் வலுபெறுகின்றது.

அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் தொழினுட்ப புனைவாக வியக்கச்செய்கின்றது சுஜாதா போல ஒரு சிறந்த படைப்பாளி ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் கால்பதித்திருக்கின்றார் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுகளுமில்லை.

வாசிக்கத்தொடங்கிய விழிகள் வாசிப்பைமுடித்தும் கதைக்குளேயே நிலைத்திருந்ததை மறுப்பதற்கில்லை அத்தனை தரம் வாய்ந்த படைப்பாக காணப்படுகின்றது. இதற்குமேலும் என் ரசனையினை வெளிப்படுத்த திறமையில்லையெனக்கு. நான் வாசித்த இம்மூன்று கதைகளுமே மூன்று நாவல்களுக்கு சமம் அப‌ரீதமான கற்பனை வளம், மொழியாள்கை, அணுகுமுறை, விறுவிறுப்பான கதை நகர்வு எல்லாமே இப்படைப்பை முழுமையடையச்செய்துள்ளது.

ஊடகவியலாளரான‌ விக்கி விக்னேஸ் அவர்களை நல்ல சகோதரனாக, தோழனாக அறிந்த நான் ஓர் வாசகியாக அவரை வாழ்த்துவதிலேயே பெறுமையடைகின்றேன். மிக விரைவில் அவரது சிறுகதை நூலினை வாசிக்கக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி
ராஜ்சுகா.


No comments: