Friday, January 8, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (11.12.2015- மதி சுதா (சுதாகரன்)






பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. 

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது


. இதன் தொடரில் இன்று 11.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 18வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையின் “வளர்ந்து வரும் நடிகரும், சிறந்த விளையாட்டு வீரரும், துடிப்பான இளைஞரும் அண்மையில் பிரபலமடைந்த‌ “மிச்சகாசு” குறுந்திரைப்பட இயக்குநருமான மதி சுதா (சுதாகரன்) அவர்கள். சிதறியிருக்கும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் குழுமம் கூட எம்மிடம் இல்லாமையால் கட்டுப்பாடற்ற தான்தோன்றித்தனமாக ஒவ்வொருவரும் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் அதனால் ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் பொதுச் சிக்கலைக் கூட அவன் தனியே நின்று தான் எதிர் கொள்கிறான் என்ற ஆதங்கங்களோடும் பல எதிர்ப்பார்ப்புக்களோடும் தன் திறமைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் இளம் நடிகரான மதிசுதா அவர்கள்.


  
 01. தங்களைப்பற்றிய அறிமுகத்தினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்? 


மதி சுதா: கல்குடா நேசன் இணையத்தளத்தாருக்கும் என்னைச் செவ்வி காணும் சகோதரிக்கும் விமர்சனங்களாலும் பாராட்டுக்களாலும் என்னை வளர்த்து விடும் என் அன்பு உறவுகளுக்கும் முதலில் வணக்கம்… என்னைப்பற்றி பெரிய அறிமுகம் கொடுக்குமளவுக்கு இன்னும் சாதனைப் பக்கங்களை நான் நிரப்பவில்லை. பிறந்தது யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டி. வளர்ந்தது வன்னிப் பெரு நிலப்பரப்பில். 2009 க்கு பிறகே மீண்டும் யாழ் பிரவேசம். இதுவரை 7 பாடசாலைகளில் 8 தரம் கல்வி கற்றிருக்கிறேன். உயர் தரம் முடித்து விட்டு, இங்கிலாந்தின் தனியார் மருத்துவக்கல்லூரியொன்றில் கல்வி கற்று விட்டு இறுதிப்போரில் கல்வி குழம்பிப்போக பின்னர் யாழ் மீண்ட பின் சில போராட்டங்கள். அதே கல்வியைத் தொடர வசதியிருக்கவில்லை. அதன் பின்னான கணக்கியல் தொடர்பான கல்வியைத் தொடர்ந்து இப்போது இந்தியக்கொம்பனியொன்றில் கணக்கியல் மற்றும் சந்தை ஆய்வு வேலை செய்கிறேன். எமக்கான அடையாள சினிமா என்பது என் இலட்சியங்களில் ஒன்று என்று அதைக் கண்டடைகிறேனோ அன்று நான் திசை மாறிப்போகலாம். 

 02. இந்த சினிமாத்துறையில் காலடிவைத்த அநுபவம்? 


மதி சுதா: படிக்கும் காலத்திலிருந்து எழுத்துத்துறையில் தான் ஆர்வமிருந்தது வன்னியால் மீண்ட பின்னர் கூட www.mathisutha.com என்ற பெயரில் சொந்தமாக ஒரு வலைத்தளம் வைத்து எனக்கு மனதில் பட்டதை எழுதிக்கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்து சினிமா பார்ப்பதில் ஆர்வமிருந்தாலும், வன்னி வாழ் காலப்பகுதி தணிக்கை போன்ற காரணங்களால் சினிமாவுக்கும் எமக்கும் பெரிய இடைவெளி ஒன்றையே கொடுத்திருந்தது. ஆனால், தாராளமாக கதைகள் வைத்திருந்தேன். அந்த ஆர்வக் கோளாரில் எந்தவித சினிமா அறிவுமில்லாமல் சகோதரன் மதுரனுடன் எடுத்த ”ரொக்கட் ராஜா” என்ற படம் தான் இங்கு வரை என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எங்களுடைய தாய் வழி தந்தை வழியில் இரண்டு சிறிய தாய் முறையானோர் சங்கீத‌ ஆசிரியையாகவும் ஒரு சித்தப்பா மற்றும் இரண்டு மாமாக்கள் வில்லுப்பாட்டில் பிரபலமாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு படிக்கும் காலத்தில் நடித்த அனுபவம் கூட மிக மிக அரிது. சில வேளை பரம்பரை இயல்பாகத் தொற்றிக் கொண்டிக்கலாம் என நினைப்பதுண்டு. 



03. உங்கள் நடிப்பில் வெளியானவைகள்? 

மதி சுதா: தழும்பு, மிச்சக்காசு, துலைக்கோ போறியள், கொண்டோடி, ரொக்கட் ராஜா, தாத்தா, கருவறைத் தோழன், பாதுகை, குறுவட்டு, போலி, விட்டில்கள், நிழல் பொம்மை, pursuit, யாசகம் நடித்த பாடல் உயிர்ச்சூறை நடித்து வரும் முழு நீளப்படங்கள் ”மனசுக்குள் ஒரு மழைத்துளி” – இயக்கம் வினோதன் ”யாழ்தேவி” – இயக்கம் லோககாந்தன் தொடர் நாடக நடிப்பு ”காதற்கனவு” – வசந்தம் தொலைக்காட்சி 



 04. திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் குறுந்திரைப்படங்களுக்கான ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது? 


மதி சுதா: இங்கு திரைப்படம், குறுந்திரைப்படம் என எதற்கு ஆதரவு என்று ஒப்பிட முடியாது. எம் படைப்புக்களுக்கு எந்தளவு ஆதரவு என்று தான் ஒப்பிட முடியும். காரணம் திரைப்படம் என்று ஒரு சிலதே வந்திருக்கின்றன (நிகழ்காலத்தில்) இப்போது இரண்டுக்கும் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், இந்தியப்படைப்புக்கள் தான் எமக்கு மிகச் சவாலாக இருக்கிறது. தரம் என்பதற்கப்பால் எம் படைப்பை எம்மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு தியெட்டர் கூட எடுக்க முடியாத நிலையே இருக்கிறது. 5 பேர் பார்ப்பதற்காக ஒரு தென்னிந்தியப்படத்தை ஓடத் தயாராக இருக்கும் தியெட்டர்கள் (அதை தீர்மானிப்பது இந்தியாவிலிருந்து விநியோக உரிமை பெற்றவர்கள் தான்) 50 பேர் பார்க்கத் தயாராக நிற்கும் எம் படங்களை திரையிடத் தயாராக இல்லை. 







 05. இலங்கை ரசிகர்களிடம் நம் படைப்புக்களின் மீதான ஆர்வம் எவ்வாறு காணப்படுகின்றது? 


மதி சுதா: ஆதரவு தாராளமாகவே இருக்கிறது. ஆனால், அதைக் கொண்டு சேர்ப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது. உதாரணத்திற்கு நான் மேலே சொன்ன பதில் மட்டுமல்லாமல் இங்கிருக்கும் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதிகமான மக்கள் பார்வைக்கு நல்ல தயாரிப்பாளருடனும் விளம்பரத்துடனும் செய்யப்பட்ட சில சாதாரண படங்களே போய்ச் சேர்ந்ததால் மக்கள் அதை வைத்தே ஈழ சினிமாவின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற மாயை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்ட நிலையில், மக்களை அதிலிருந்து சினிமாவுக்குள் இழுப்பது பெரிய சவாலான நிலையே. கடந்த வருடத்தை விட இந்த வருடங்கள் ஊடகங்களில் நல்ல ஆதரவு கிடைத்திருந்தாலும், கடந்த வருடம் படைப்புகள் செய்த பலர் இவ்வருடம் படைப்புக்கள் செய்யவே இல்லை என்றே கூறலாம். 



 06. என்னென்ன வழிகளில் உங்கள் படைப்புக்களை இலங்கை ரசிகர்களிடம் கொண்டு செல்கின்றீர்கள்? 

மதி சுதா: இந்த விடயத்தில் என் மேல் பெரிய குறையே இருக்கிறது. இதுவரை செய்த 11 குறும்படங்களில் ஒன்றைக்கூட வெளியீட்டு விழாவோ திரையிடலோ செய்யவில்லை. அதற்கு செலவழிக்கும் பணத்திற்கு என்னால் இன்னொரு படம் எடுக்க முடியும் என்ற மனநிலையே என்னுள் இருக்கிறது. எனக்கு கிடைத்தவை முழுக்க இணைய வழிப் பார்வையாளர்களே, அத்துடன், உள்நாட்டுப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் கிடைத்த ஒளிபரப்பு மூலம் மட்டுமே சென்றடைந்திருக்கிறது. 


 07. முழு நீளத்திரைப்படத்திற்கும் குறுந்திரைப்படத்திற்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் என்ன? சொல்ல வருகின்ற விடயத்தை இந்த குறுந்திரைப்படம் முழுமையாக சொல்லி விடுகின்றதா? 


மதி சுதா: இது என் தனிப்பட்ட பதிலாகும். என்னைப் பொறுத்தவரை இரண்டும் காட்சி ஊடகமாக இருந்தாலும், இரண்டுமே வெவ்வேறு. ஒன்றுக்கொன்று இப்படியான ஒப்பிடல்களுக்காக சம்பந்தமே இல்லாத ஒன்று என்று தான் சொல்வேன். இரண்டிலுமே சொல்ல வந்த விடயத்தை நாம் பார்ப்பவனுக்கு கொண்டு செல்லத் தவறுவோமாக இருந்தால், அது தோல்வியடைந்த படைப்பு தான். குறும்படங்கள் என்பது எனக்கு என்னை அளவிட நல்லதொரு பரிட்சார்த்த களமாகவே இருந்தது. அதில் சிலவற்றுக்கு எனக்கு பணம் கூடத் தேவைப்படவில்லை. எனக்கு பட்டதை என் திரை மொழியில் என் சுதந்திரத்தோடு செய்திருக்கிறேன். 


 08. உங்கள் படைப்புக்களுக்கு வெளிநாடுகளில் கிடைத்த ஆதரவுகள் பற்றி? 

மதி சுதா: உள்நாட்டை விட வெளிநாட்டில் தான் எனக்கு பெரிய ஆதரவு கிடைத்தது என்பேன். என் குறும்படங்களில் நான் பாவிக்கும் மொழி நடைக்காகத் தான் விரும்பி பாராட்டுவார்கள். அது தொடர்பாக அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஐயா ஒரு தடவை நேரடியாகப் பாராட்டியிருந்தார். பிரான்சில் இடம்பெற்ற போட்டியொன்றுக்கு நடுவராக வந்திருந்த தென்னிந்திய இயக்குனர் மிஸ்கின் அவர்கள் ”பாரதிராஜா சேர் படம் பார்த்தது போலிருக்கிறது” என்று எனது கருவறைத்தோழன் குறும்படத்தைப் பாராட்டியதுடன், சிறந்த நடிகர், துணை நடிகை மற்றும் கலை இயக்குனர் விருதைத் தெரிவு செய்திருந்தார். மிச்சக்காசு என்ற குறும்படத்தைப் பார்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன் ராம் பாராட்டியதுடன், தனது அடுத்த படத்தில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பமொன்றையும் கொடுத்திருந்தார். அதே போல, வேல்ஸ் விருது விழாவுக்கு நடுவராக வந்திருந்த பாலுமகேந்திரா ஐயாவின் முக்கிய சீடர்களில் ஒருவரான இயக்குனர் எத்தன் சுரேஸ் அவர்கள் ”நாங்கள் பாலுமகேந்திரா சேரில் ரசித்த திரை நுணுக்கங்கள் சிலதை தாத்தா என்ற இந்தப்படைப்பில் பார்க்கிறேன்” என்று பகிரங்கமாகவே மேடையில் உரைத்தார். எனக்கு கிடைத்த விருதுகளை விட இவற்றைப் பெரிய அங்கீகாரமாகவே பார்க்கிறேன். 


09. நீங்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள்? 

மதி சுதா: இந்த வருட ஆரம்பத்தில் நோர்வே அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஆவணப்படம் தொடர்பான கற்கைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன். மற்றையபடி நான் வேலை செய்யும் நிறுவனம் இந்தியாவிலிருப்பதால் வருடத்தில் இரு தடவையேனும் சென்று வருவதுண்டு. 




 10. உங்களிடம் காணப்படும் வேறு திறமைகள்? 


மதி சுதா: எனக்குள் இருக்கும் வெறித்தனத்தைத் தான் திறமையாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. சினிமா என்பது இப்போது தொற்றிக் கொண்டவையே. ஆனால், இதை விட நான் சாதித்தது விளையாட்டில் தான். பாடசாலைக்காலத்திலும் கழக மட்டத்திலும் தடகள வீரராகவே இருந்தேன். 17 வயதுப்பிரிவிற்கான மாகாணங்களுக்கிடையிலான 400 மீட்டர் தடை தாண்டலில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறேன். அதற்கப்பால் கிரிக்கெட்டில் பாடசாலை மற்றும் கழக அணிகளுக்கு தலைவராகவும் கால்பந்தில் கோல் காப்பாளராகவும், கரப்பந்தாட்ட அணியிலும் இருந்திருக்கிறேன். 


 11. பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள், வரிசையாய் கிடைத்த விருதுகள் பற்றிய சந்தோஷங்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்? 


மதி சுதா Final Drop (ministry award – 2015) தழும்பு best actor award to mathisutha @ Canadian film festival, nominated to Norway film festival, nominated to jaffna international film festival) மிச்சக் காசு best screenplay award, 2 time best child artist award துலைக்கோ போறியள் best director @ vels award தொடரி 3rd place award @ adcharam foundation film festival தாத்தா (வெளியாகவில்லை) (best film and best director @vels award best music director award @ vels award special jury award @ London nominated to Canadian film festival கருவறைத் தோழன் (வெளியாகவில்லை) best actor @France festival best supportive actress @France festival best art director @France festival குறுவட்டு (இக்குறும்படம் இயக்குனர் லோகாந்தனுடன் சேர்ந்து இயக்கிய அமெரிக்கா 48 hours சர்வதேச போட்டியொன்றில் best film and best screenplay விருது பெற்றது) போலி best actor award @ therovenor film talkies best actor award @ adcharam foundation festival பாடல் “சுவர் தேடும் சித்திரம்” special jury award @France festival, best singer award @vels award best director award @sudar award ஆவணப்படம் ”கரகம்” nominate @ Norway international film festival 


12. நம்நாட்டு வளரும் கலைஞர்களுக்கு கிடைக்காத, இல்லாத குறையாக எதனைக் கருதுகின்றீர்கள்? 


மதி சுதா: குறையென்று முதலாவதாக குறிப்பிட வேண்டியது சரியான முதலீடு இல்லை என்பது தான். அது மட்டுமல்லாமல் சரியான முதலீடு சரியான ஆட்களைப் போய்ச் சேரவில்லை என்பதும் ஒரு காரணமாக அமைகிறது. இதற்கப்பால் சிதறியிருக்கும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் குழுமம் கூட எம்மிடம் இல்லாமையால், கட்டுப்பாடற்ற தான்தோன்றித்தனமாக ஒவ்வொருவரும் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதனால் ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் பொதுச் சிக்கலைக் கூட அவன் தனியே நின்று தான் எதிர் கொள்கிறான். 





 13. உங்களை கவர்ந்த நடிகர் அல்லது நடிப்பு பற்றி? 


மதி சுதா: உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் என என்னைக் கவர்ந்த பலர் இருக்கிறார்கள். அதிலும் அதிகமாக கவர்ந்தவர்கள் இனி இவன் திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற தர்சன் அண்ணா, எல்லோராலும் அறியப்பட்ட with you with out you ல் முக்கிய பாத்திரத்தில் நடித்ததுடன், 15 க்கு மேற்பட்ட சிங்கள மொழித் திரைப்படங்களில் நடித்திருந்த மகேஸ்வரி அம்மா இருவருடனும் நடிப்பது என்பது மன்னிக்கவும் நடிக்கவே தேவையில்லை, எந்தக் காட்சியில் தோன்றுகிறோமே அந்தக்காட்சிக்குரிய பாத்திரங்களாகவே மாறி விடுவேன். அப்படி தத்ரூபமாக உள்வாங்க வைக்கும் நடிப்பு இருவருடையதுமாகும். தர்சன் அண்ணாவுடன் ஒரு நாடகத்திலும் மகேஸ்வரி அம்மாவுடன் ஒரு குறும்படத்தில் மகனாகவும் நடித்திருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்திருக்கிறேன்.


 14. உங்களுக்கு கிடைக்கும் இலங்கை ஊடகங்களின் ஆதரவு பற்றி?

 மதி சுதா: போன வருடத்தை விட இந்த வருடம் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. சில ஊடகங்கள் தமக்கு நெருக்கமானவரையும் அறிமுகமானவர்களையும் மாத்திரம் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும், ஒரு படைப்பாளிக்கு படைப்புத்தான் அடையாளம் என்பதால் அப்படைப்பு சேர வேண்டிய தரப்புக்கு ஏதோ ஒரு வகையில் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஊடகங்கள் எமக்கு ஆதரவு தந்தாலும் அது போதியளவு அமைய‌வில்லையோ என்றும் சில வேளை தோன்றினாலும், இப்போதைக்கு இது கிடைத்திருப்பதே பெரிய வரப்பிரசாதம் போலவே உள்ளது. இனி வருங்காலத்திலும் தென்னிந்திய மாயைக்குள் இருக்கும் மக்களை எம் பக்கம் திருப்ப ஊடங்களால் தான் முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 


 15. எதிர்காலத்தில் சாதிக்க நினைப்பது? 

மதி சுதா: வழமையாக நான் சொல்வது தான் என் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட தொழில் என்பதற்கப்பால் எங்களுக்கு என்றொரு அடையாள சினிமாவுக்கான போராட்டமே இவ்வளவும், அதை நான் அடைவேனா அல்லது என் காலத்தில் கிடைக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அப்படிக் கிடைக்கும் போது என் பெயரும் பேசப்படும் என்பது மட்டும் தெரியும். 

 16. நீங்கள் மனந்திறக்க விரும்பும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாமே? 


மதி சுதா நான் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் தான் என்னுடன் வைத்திருப்பதாகவும், வேறு புதியவர்களை உள்வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என் மேலிருக்கிறது. உண்மையில் மதுரன் (கமரா, எடிட்டிங்), சன்சிகன் (எடிட்டிங், சவுண்ட், மியூசிக், கமரா) லோககாந்தன் (கமரா, எடிட்டிங்), ஜனகன் (துணை இயக்கம், திரைக்கதை ஆலோசனை, நடிப்பு), துவாரகன் (துணை இயக்கம், திரைக்கதை ஆலோசனை), மதுசா (துணை இயக்கம், திரைக்கதை ஆலோசனை, மேக்கப், நடிப்புப்பயிற்சி) போன்றவர்கள் என்னோடு இருப்பவர்கள். என்னுடைய தொழிலாளிகள் இல்லை அது என் குடும்பம். என் அனைத்துப் படங்களிலும் இவர்கள் பங்கிருக்கும். என்னிடம் ஆரம்பத்திலிருந்து எதையும் எதிர்பார்க்காமல் பயணித்தவர்களை எனக்கு உதவ இன்று பலர் இருக்கிறார்கள் என்பதற்காக எப்படி விட்டு விட்டுப் பயணிக்க முடியும். சில மாற்றங்களுக்காகவே இவர்களின் அனுமதியுடன் வெளியில் வேலைக்கு கொடுப்பதுண்டு. இது மட்டுமே காரணமாகும். ஏனென்றால், எனக்குத் தேவையானவை இவர்களிடமிருந்து கிடைக்கிறது. 


 17. உங்கள் ரசிகர்களிடமும் வாசகர்களிடமும் சொல்ல விரும்புவது? 

மதி சுதா: சொல்ல வேண்டியது எல்லாம் மேலே சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இதுவரை வெளியே பகிராத ஒரு தகவலை முதன் முதலாக தங்களுடன் பகிர்கிறேன். என்னுடைய கனவுப்படமான முழு நீளத்திரைப்படம் ”உம்மாண்டி” ஆனது படப்பிடிப்புக்கள் யாவும் முடியும் தறுவாயை எட்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் எவருமே கிடைக்காத நிலையில், வங்கியில் பெற்ற ஒரு இலட்சம் ரூபாய் லோனுடனும் கதிர் செல்வக்குமார், மீராபாரதி அண்ணாக்களின் உதவியுடனும் தான் படப்பிடிப்பைச் செய்து முடிக்கிறேன். தை மாத இறுதிக்குள் இவற்றை வைத்துக் கொண்டு செய்த முன்னோட்டமொன்றை வெளியிடுகிறேன். இன்று முன்னோட்டத்தை வைத்து படத்தின் கதை, தரம் கணிப்பிடுமளவுக்கு எம் பார்வையாளர்கள் மதிநுட்பமானவர்களாகி விட்டார்கள். அந்த முன்னொட்டத்திற்குரிய படம் பார்க்க விரும்புவோர் படத்துக்கான நுழைவுச்சீட்டை (சாதாரண திரையரங்க கட்டணம் தான்) முற்கூட்டியே வாங்கினால் அதன் மிகுதி வேலைகளுக்குரிய பணம் கிடைத்து விடும். இது எந்தளவுக்கு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால், என் கதையில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. இத்தனை விருது பெற்ற ஒருவருக்கு ஏன் நம்பி யாரும் பணம் போடவில்லை என நீங்கள் நினைக்கலாம். காரணம் எங்கள் வழமையான சினிமாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட படமாகும். அவர்கள் எதிர்பார்த்த காதல் காட்சிகளையோ பாடலையோ என்னால் வைக்க முடியவில்லை. என் கனவுப்படம். நான் ஆசைப்பட்டது போல வர வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம் தான் வேறேதுமில்லை. என் வளவளவென்ற அலட்டல்கள் மற்றும் சுயபுராணங்களை பொறுமையோடு கேட்ட செவ்வியாளருக்கும் பொறுமையாய்ப்படித்த என் அன்பு உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதி சுதா. 





கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் ( 06.11.2015 அறிவிப்பாளர், ஒளி ஒலி பரப்பாளர் கவிதாயினி நாகபூசணி கருப்பையா )





பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.

இதன் தொடரின் இன்று 06.11.2015 திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 13 வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையின் பிரபல மூத்த அறிவிப்பாளர், ஒளி ஒலி பரப்பாளர் கவிதாயினி நாகபூசணி கருப்பையா அவர்கள். வசந்தம் தொலைக்காட்சியின் தூவனம் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான கவிதாயினி நாகபூசணி அவர்களை கல்குடா நேசன் இணைய தளதத்தின் இலக்கிய நேர்காணலூடாகச் சந்திப்பதில் பெருமையடைகிறோம்.

அவரின் அனுபவம், திறமை, கலைக்கான அவரது அர்ப்பணிப்பு போன்வற்றை இந்நேர்காணலூடாக நீங்களும் அறிந்து கொள்ளலாம்.







01. இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான தாங்கள் எமது வாசகர்களுடன் தங்களைப்பற்றிய விபரங்களுடன் அறிமுகமாகிக்கொள்ளலாமா?

கவிதாயினி நாகபூசணி கருப்பையா www.nagapooshanikaruppiah.blogspot.com எனது வலைத்தளம் உங்களுக்கு என்னைப்பற்றிச் சொல்லும் என நினைக்கிறேன்.






02.தற்போது நீங்கள் தொகுத்து வழங்கும் “தூவானம்” நிகழ்ச்சி பற்றியும் அதன் நோக்கம், பெற்றுக்கொண்ட வெற்றி பாராட்டுதல்கள் பற்றி?


கவிதாயினி நாகபூசணி: அது கதம்பக்கலை இலக்கிய நிகழ்ச்சி, இலங்கையின் சகலதுறை சார்ந்த கலைஞர்களுக்கும் களம் தரும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பட்டறை என்னும் அம்சம் அநேகரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தயாரிப்பு, தொகுப்பு, அறிவிப்பு என வருடந்தோறும் விருதினைப்பெற்று நம்மனைவரின் உள்ளத்திலும் பூ மழை பொழிகிறது.


03.உங்களது ஆரம்ப கால ஊடகத்துறை அநுபவங்க‌ளுக்கும் தற்போதைய அநுபவங்களுக்குமிடையிலான வித்தியாசம் எப்படி?


கவிதாயினி நாகபூசணி: புதிய புதிய அனுபவங்கள் புதுப்புது தேடல்களாக…எல்லாமே கற்றுக்கொடுத்தன. கொடுக்கின்றன .கால ஓட்டம் கொஞ்சம் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும்.


04. வானொலி அறிவிப்பு, தொலைக்காட்சி அறிவிப்பு இரண்டில் உங்களுக்கு மிகப்பிடித்தது எது? ஏன்?  

கவிதாயினி நாகபூசணி: வானொலி தான். ஏனென்றால், எந்த ஒப்பனையும் தேவையில்லை என்பதால்.  

05: நேரடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகையில் சந்தித்த, சமாளித்த சுவாரஸ்யமான விடயங்களிருப்பின் எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்?


 கவிதாயினி நாகபூசணி: வித்தியாசமான துறையைச்சார்ந்த நேயர்களிடம் உரையாடி தகவல்களைப்பெற்றுக்கொள்வது எத்தனை சுவாரஷ்யமோ அது போன்று தான் குறும்புக்கார நேயர்களின் கேள்விகளும். பல வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருக்கும் போது, வானலையில் வந்த குறும்புக்கார நேயர் ஒருவர் அக்கா நீங்கள் கூறும் இந்த உற்பத்திப்பொருள் கொழும்பில் எந்தக்கடையிலும் இல்லையே என்றார். இல்லை கிடைக்கும் என்றேன். அவர் விடுவதாக இல்லை . நேரமும் போய்க்கொண்டிருக்கிறது . நீங்கள் விசாரித்த கடையில் முடிந்து விட்டதாம். பக்கத்து கடைக்குப்போகாமல் விட்டது உங்கள் தவறு என்று சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

06. இன்றைய அறிவிப்புத்துறையில் இளையவர்களின் திறமை பற்றி உங்கள் பார்வையில்?  


கவிதாயினி நாகபூசணி: பாராட்டுக்குரியது.  

07.ஆரம்ப காலங்களிலிருந்த அறிவிப்பாளர்களிடம் இலக்கணப் பேச்சுத்தமிழ் காணப்பட்டது. இன்றுகளில் அவை மருவி சில ஊடகங்களில் மிகக்கொச்சையாக பிரதேச வழக்கு, ஆங்கிலக்கலவை, சினிமாத்தனம் எனப் பேசப்ப‌டுகின்றதே. இதன் ஆரோக்கியத்தன்மை பற்றி கூறுங்கள்?


கவிதாயினி நாகபூசணி: காலத்தின் தேவையாக இருப்பினும், தமிழின் செம்மையைப் பேண வேண்டியது காலத்தின் கட்டாயம்.



 08. அறிவிப்புத்துறையில் காலடி வைத்த, வைக்க இருக்கின்ற இளையவர்களுக்கு உங்கள் ஆலோசனைகள்?  


கவிதாயினி நாகபூசணி: எப்போதும் உங்களைப்புதுப்பித்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு உயர்ந்தாலும் அவ்வளவு பணிவு பேணுங்கள். காய்த்த மரம் தான் கல்லடி படும் அடிகளையும் படிக்கல்லாக்கிக் கொள்ளுங்கள்.


09. சம காலத்தில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எவ்வாறானவை?  


கவிதாயினி நாகபூசணி: பொதுவாக எப்படிச்சொல்வது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. பிரச்சினையில்லாத இடம் எங்காவது இருக்கிறதா?  


10. சமூக வலைத்தளங்கள் மலிந்து விட்ட இந்த யுகத்தில் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு இருக்கின்ற வரவேற்பு எவ்வாறு காணப்படுகின்றது?


கவிதாயினி நாகபூசணி: சொல்லப்போனால் சமூக வலைத்தளங்களால் தான் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அவை தானே எங்களை உலகளவில் கொண்டு சேர்க்கின்றன.  




11.உங்களது நிகழ்ச்சிகளுக்கும் ஏனைய ஊடக நிகழ்ச்சிகளுக்குமிடையில் காணப்படும் போட்டித்தன்மை பற்றி கூற முடியுமா? அல்லது நீங்கள் போட்டியாக சவாலாக நினைக்கும் அறிவிப்பாளர்?  


கவிதாயினி நாகபூசணி: வேறுபட்ட ரசனைகளினால் நிகழ்ச்சிகள் எல்லாமே ஏதோ ஒருவகையில் தமக்கென ஓரிடத்தைகொண்டுள்ளன. இல்லை. நான் யாரையும் போட்டியாகவோ சவாலாகவோ கருதவில்லை.


12. நீங்கள் சிறந்த, மூத்த, முன்மாதிரியான ஊடகவியலாளர் மட்டுமல்ல. மிக நல்ல கவிஞரும் கூட. அந்த இலக்கியத்துறை அனுவங்களையும் பகிந்து கொள்ள முடியுமா?  


கவிதாயினி நாகபூசணி: எனக்கு சிறு வயது முதலே வாசிப்பில் ஆர்வம் அதிகம். உறுதுணையாக இருந்தவர் என் தந்தை . பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்க அது கூட காரணமாயிருந்திருக்கலாம். தமிழின் சுவை இன்னும் அதன் பால் என்னை ஈர்த்திருக்கலாம்.

13. எமது கல்குடா நேசன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது?  


கவிதாயினி நாகபூசணி: உங்கள் அன்பும் ரசனையும் தான் கால வெள்ளத்தில் நாம் காணாமல் போகாமல் காக்கிறது. உங்கள் சுவையறிந்து நிகழ்ச்சிகளைப் படைக்க நாம் தயாராயிருக்கிறோம்.





http://kalkudahnation.com/





கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (18.12.2015) கவிஞர் மன்னார் பெனில்

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.





இதன் தொடரில் இன்று 18.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 19வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார். இலங்கையின் இளம் படைப்பாளியான கவிஞர் மன்னார் பெனில் அவர்கள். “ஒரு படைப்பானிளன் படைப்பு வெளிவந்து விட்டால், அதற்கு ஆரோக்கியமான விடயம் நல்ல அறிமுகம். அந்த அறிமுகம் அவன் சார்ந்த சமூகத்துக்குள்ளே நின்று விடுகின்றது. அதனை பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் கொண்டு சேர்க்க முன்வருபவர்கள் அரிதிலும் அரிது. அதனால், அவனது வளர்ச்சி முடங்கிப்போய் விடுகின்றது. ஊக்குவிப்பு இல்லையென்றே கூறுவேன்” என  ஆதங்கப்படும் இவர், இன்னும் பல விடயங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றார். அவருடன் நாமும் இணைந்து கொள்வோம்.





01. தங்களைப் பற்றி கல்குடாநேசன் வாசகர்களுக்காக

* மாதோட்டம் மண்ணிலே கருவென்ற விதையாகி பிறந்திட்ட நான் மன்னார் மண்ணிலே முளையரும்பி பயிராக வாழ்கின்றேன். 2002ம் ஆண்டு நடந்த விபத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நெஞ்சுப்பகுதிக்கு கீழ் உணர்வில்லாமல் எழுந்து நடமாட முடியாமல் சக்க‌ர நாற்காலியின் உதவியுடன் வாழ்கின்றேன். இந்நிலையில், வாழ்வதென்பது எவ்வளவு துயரம் என்பதனை எழுத்துலே எழுதிட முடியாது. காரணம் அது உணர்வோடு சம்பந்தப்பட்டது. உணர்வ‌ற்ற என் தேகத்துக்குள்ளிருக்கும் இதயத்திலும் காதல் மலர்ந்ததின் காரணமாக 2013ம் ஆணடு திருமணம் முடித்து, இன்று இல்லாளுடன் வாழ்கின்றேன். “இல்லை எனக்கில்லை இல்வாழ்க்கை எனக்கில்லை என் இல்லாள் லீனு என்னுடன் இல்லையெனில்”

02. நீங்கள் காலடிவைத்துள்ள துறைபற்றி? 

* 2002இ ஆண்டு உணர்வுகளின் வெளிப்பாடாய் கண்ணீரோடு பிரசவமான வார்த்தைகளைச் செதுக்கி கவிதைத்துறைக்குள்ளே காலடி வைத்துள்ளேன். “விழிகளை வ‌லியத்தேடி வலிகளுடன் வாழ்ந்தாலும் வாலிபன் நான் வ‌லிகளுடன் வாழ்ந்தாலும் வருந்தாமல் வாழ்கின்றேன் வலியே என் வாழ்வானதினால்…”

03. இவ்விலக்கியத்துறைக்குள் வர ஏதுவாயிருந்தது? 


* ஏக்கம், கவலை, கண்ணீர், வலி, எதிர்ப்பார்ப்பு இவைகள் “சிறகுடைந்த இளஞ்சிட்டு” என்ற புனைப்பெயருடன் என்னை இவ்விலக்கியத் துறைக்குள்ளே அழைத்துவந்தது. இப்போது மன்னார் பெனிலாக.

04. உங்கள் படைப்புக்களில் எவ்வகையான  விடயங்களை உள்ளடக்க விரும்பிகின்றீர்கள்?

 *உயிருள்ள உணர்வின் வெளிப்பாடுகளை. அது என் சார்ந்ததாகவும் இருக்கலாம் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கலாம்.


 05. நவீனம், மரபு, புதுக்கவிதை, பின் நவீனத்துவம் போன்றவ‌ற்றில் உங்களுக்கு லாவகமானது? 

*புதுக்கவிதைகளையே அதிகம் எழுதுகின்றேன்.


06. இலங்கை படைப்புக்களுக்கு இருக்கும் வாசகர்களின் ஆர்வம்?


 *ஆர்வம் அதிகமாக இல்லை. காரணம் இந்தியப் படைப்புக்களையும் படைப்பாளிகளையுமே வாசகர்கள் நாடுகின்றனர்.


07. பின் நவீனத்துவம் என்ற வரையறையில் வெளிப்படையாகவும் பச்சையாகவும் பல விடயங்கள் கவிதைகளில் பேசப்படுகின்றது. இது பற்றி தங்களது அபிப்பிராயம்? 


*வ‌ரையறை என்ற ஒன்று எல்லா விடயங்களுக்கும் உண்டு. அத்துமீறி நுழைந்து விட்டு அதற்கு ஒரு தலைப்பு வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல வாசகனிடத்தில் அது நிலைத்து நிற்காது.

08. இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். முதலாம் நூல் வெளியீட்டுக்கும் இரண்டாம் நூல் வெளியீட்டுக்குமிடையில் நீங்கள் பெற்றுக்கொண்ட அநுபங்கள்? 


*அநுபவம் என்று சொன்னால் ஏராளம் உண்டு. அதனை வாழ்வின் பாடங்களாக எடுத்துக்கொள்கின்றேன். ‘வலியின் விம்பங்களில்’ எனது வலியையும் ‘ஈர நிலத்தை எதிர்பார்த்து’ கவிதைத்தொகுப்பில் எம் ஈழ மக்கள் பட்ட சொல்லொண்ணா துயரங்களையும் வெளிப்படுத்தியுள்ளேன்.

09. சமூக வலைத்தளங்களினூடாக ஏராளமான படைப்பாளிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள். இலக்கிய வளர்ச்சியில் இதன் ஆரோக்கியத்தன்மை எவ்வாறு காணப்படுகின்றது?


 *இலக்கியம் என்று சொன்னால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த இலக்கியத்துக்குள் இணையத்தினூடான பிரவேசம் என்பது காலத்தின் தேவை. ஆகவே, அதுவும் நன்றே இது என் கருத்து.

10. உங்களைக்கவர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் இலக்கியம் பற்றி?


 *பலர் இருந்தாலும் நன்கு அறிந்தார்களென்று சொல்லுவ‌தனால் பொன் விளையும் புண்ணிய பூமியாகிய மன்னாரில் பலரும் அறிந்தவரும் இலக்கியப்பயணத்தில் பல களம் கண்டாருமான குழந்தை மாஸ்டர் என்று அழைக்கப்படும் செபமாலை மாஸ்டரும் வவுனியாவிலிருக்கும் மூத்த படைப்பாளியுமான தமிழ்மணி அகளங்கன் அவர்களும் நான் அறிந்த இலக்கியவாதிகள் எனக்குறிப்பிடலாம்.


11. உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் பற்றி? 


*விருதுக்கு நான் இன்னும் தகுதிபெறவில்லை. இலக்கியப் பயணத்தில் இப்போது நான் சிறியவன். பாராட்டுக்கள் பல்வேறு தரப்பட்டவர்களால் கிடைத்திருக்கின்றது. என் எழுத்துக்கள் பலருக்கு நற்பாதை காட்டியுள்ளதை பலரின் வாயிலாக அறிந்துள்ளேன். அதையே வெற்றியாகக் கருதுகின்றேன்.


 12. ஒரு நல்ல “கவிதை” எவ்வாறு பட்டை தீட்டப்பட வேண்டுமென நினைக்கின்றீர்கள்? 


*ஒரு நல்ல கவிதையை எதற்காகப் பட்டை தீட்ட வேண்டும்.


13.ஏன் இலங்கை படைப்பாளிகளுக்கு அதிகமான நூலுருவாக்கம் செய்ய முடியாமலிருக்கின்றது என நினைக்கின்றீர்கள்? 


*ஆம். ஒரு படைப்பாளனின் படைப்பு வெளிவந்து விட்டால், அதற்கு ஆரோக்கியமான விடயம் நல்ல அறிமுகம். அந்த அறிமுகம் அவன் சார்ந்த சமூகத்துக்குள்ளே நின்று விடுகின்றது. அதனை பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் கொண்டு சேர்க்க முன்வருபவர்கள் அரிதிலும் அரிது. அதனால், அவனது வளர்ச்சி முடங்கிப்போய் விடுகின்றது. ஊக்குவிப்பு இல்லையென்றே கூறுவேன்.


 14. கவியரங்கம், இலக்கிய அமர்வுகள், மூத்த இளைய படைப்பளிகளுக்கிடையிலான சந்திப்புக்கள் என்பன எவ்வாறான வளர்ச்சி நிலையில் காணப்படுகின்றது?


மந்த கதியில் இருப்பதாகவே உணர்கின்றேன். மூத்த படைப்பாளிகளின்  வ‌ழிகாட்டல் இளைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம்.


 15. நீங்கள் சந்தித்த, சிந்தித்த உங்கள் படைப்புக்கள் மீதான விமர்சனங்கள் பற்றி?


விமர்சனம் என்பது ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் விருதாக எண்ணுகின்றேன். அந்த வகையில், அநேக விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த விமர்சனத்தின் வெளிப்பாடாக எனது இரண்டாவது படைப்பாக வெளிவந்த “ஈர நிலத்தை எதிர்பார்த்து” என்ற தொகுப்பில் காணலாம்.


16. தங்களது வேறு திறமைகள்?



நாடகங்கள் பழக்குவது, நடிப்பது, நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பது போன்றவ‌ற்றில் ஈடுபாடு அதிகம்.


 17. இணைய வாசகர்களோடும் இளைய படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்ள நினைப்பது?


படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் அதிகம். அந்தப் பண்புகளை பின்பற்றி நடக்க வேண்டும். பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை கலையினால் பேணிக்காக்க வேண்டும். தனித்து நிற்பதை தவிர்த்து ஒரு அழகான குழுமமாகச் செயற்பட வேண்டும். அப்போது தான் பல அநுபவங்களை நாம் பெற முடியும். வாசக உறவுகளே! உங்களது விமர்சனங்கள் ஒரு படைப்பாளனின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக அமையட்டும்.


நன்றி-கவிதாயினி த.ராஜ்சுகா -

பொன்மட்டுமென்றால்...

அன்பென்றாய்
அடிமையானேன் -பின்னாளில்
பொன்மட்டுமென்றால்
பேதைநான் என்ன செய்வேன்??

"ஈர நிலத்தை எதிர்பார்த்து" கவிதை நூலுக்கான விமர்சனம்







அர்த்தமுள்ள ஆவணப்படுத்தப்பட வேண்டிய நூல்கள் அண்மைக்காலமாக இளையவர்களிடமிருந்து பிரசவமாவது பெருமைக்குரிய விடயம். அந்தவகையில் மன்னார் மாவட்டத்திலிருந்து ஓர் இளைய படைப்பாளி இப்பட்டியலில் இணைகின்றார். ஏலவே "வலியின் விம்பங்கள்" எனும் கவிதை நூலுடன் களம்கண்டவர்தான் இவ்வளர்ந்துவரும் கவிஞரான பெனில் அவர்கள்.


கவிஞர் பி.பெனில் அவர்களின்  "ஈர நிலத்தை எதிர்பார்த்து" இரண்டாவது கவிதை நூலின் அட்டைப்படமே ஆயிரம் உணர்வலைகளை அள்ளித்தெளிக்கின்றது. ஏக்கம் எதிர்பார்ப்பு வேதனை என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த கச்சிதமான கண்ணைக்கவரும் அட்டைப்படம் படத்துடன் பின்னட்டைக்குறிப்புக்களை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் கவிஞர் மேமம் கவி அவர்களும் தந்துள்ளார்கள். முன்னுரையை அருட்திரு. தமிழ்நேசன் அடிகளாரும் சில தலைப்பின் கீழ் குறை நிறைகளை சிறப்பாக சுட்டிக்காட்டியும் அணிந்துரையை கலாநிதி தமிழ்மணி அகளங்கள் அவர்களும் வெளியீட்டுரையை வெளியீட்டாளரான மன்னார் தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழ்ச்சுடர் மகா தர்மகுமார குருக்கள் அவர்களும் ஆசியுரியினை சித்த வைத்தியர் சே.செல்வமகேந்திரன் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.


கவிஞர் பி.பெனில் அவர்கள் "உணர்வுகளின் வெளிப்பாடாய் குறியீடுகளின் மூலம் இந்த நிலத்தில் என் எண்ண விதைகளை விதைத்துள்ளேன் என்றோ ஒரு நாள் எங்கள் நிலமும் ஈரமாகும் என்ற ந‌ம்பிக்கையுடன்..." என்ற எதிர்பார்ப்பை தனதுரையை ஆழமாகப் பதிந்து போருக்கு பின்னரான வலிகளை வரிகளாக்கியுள்ளார்.  நூலினை தாய்க்கும் தாரத்துக்குமாய் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலக்கியம் காலத்தின் கண்ணாடியாக மட்டுமல்ல ஒரு தனிமனிதனுடைய‌ சமூகத்தின்  மீதான அக்கறை, ஈடுபாடு அவதானிப்பு சேவை மனிதாபிமானம் என‌ அவனுடைய தனிப்பட்ட குணங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.இந்த கருத்தினை அப்படியே "ஈர நிலத்தை எதிர்பார்த்து" கவிதை நூலில் காணமுடியும்.


இக்கவிதை நூலானது போருடன் சம்பந்தப்பட்ட மக்கள் உணர்வலைகளோடு பேசுவதாக வெளிப்பாட்டு ரீதியாக அமைந்துள்ளமையே சிறப்பம்சமாகும். 46 தலைப்புக்களில் வேதனை எதிர்பார்ப்பு வலி கோபம் வெறுப்பு என உணர்வுகளை கொட்டிக்கொட்டி வார்க்கப்பட்டுள்ளது.


"நீதி 
உறைந்துபோவதில்லை
பொங்கியெழுந்தால்
அநீதி நிலை
நிற்கப்போவதுமில்லை.." 

                                                           என 'மணி  முடியின் கெடுபிடி' என்ற தலைப்பில் முதலாவது கவிதை ஆரம்பமாகி யுத்த காலத்தையும் ராணுவத்தின் அத்துமீறல்களையும் உருவ‌கித்து நினைவுபடுத்துகின்றது. 

என்னதான் எம்மை நாமே ஆறுதல்படுத்திக்கொண்டாலும் அநுபவித்த வலிகள் வேதனைகள் கண்ணீர்கள் அத்தனையும் இலகுவில் மறந்துவிடக்கூடியதல்ல. இன்றும் அதன் வடுக்கள் நெருஞ்சிமுள்ளாய் குத்திக்கொண்டுதானுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஏதோ ஓர் வேண்டுதலோடு எதிர்பார்ப்பினூடே காலம் கழிகின்றது, அதனை "உயிரடங்குமுன்" கவிதையில்


"எம் தேகம்
ஊர்வனவற்றுக்கு
உணவாகக்கூடும்
அதற்குமுன்
வந்துவிடுமா வெற்றிப்புறா"
                                                                   என்று கவிஞரின் எதிர்பார்ப்பை சமூகத்தின் சார்பாக முன்வைத்துள்ளார்.

வேதனை முற்றிவிட்ட நிலையில் இறுதியாக சரணடைவது இறைவனிடமே அப்படி முழங்காற்படியிட்ட கவிதைதான்  "வாராயோ வல்லோனே" குற்றம் புரிபவர்களை தண்டிக்க முடியாத நிலையில் அந்த இயலாமையில் இறைவனை வேண்டுவது இயல்பே. கயவர்களை அழித்து காக்க வேண்டும் வாராய் என்று வேண்டுதல் தொடர்கின்றது.



கவிஞர் பெனில் அவர்கள் தனது கவிதைகளில் உவமை உருவகம் படிமம் குறியீடு என்பவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்ன்'மணிமுடியின் கெடுபிடி, உயிரடங்குமுன், தேன்வதை திருடிய வஞ்சகன், விடுதலை விதைகள் என பல தலைப்புக்களை சுட்டிக்காட்டலாம்.

இக்கவிதை நூலினை எதிர்கால சந்ததியருக்கு ஆவணமாக எடுத்துக்காட்ட தமிழர்களின் வாழ்வியலை, பிர்
பிர‌ச்சனைகளை படம்போட்டுக்காட்ட என ;ஈர நிலத்தை எதிர்பார்த்து' நூலினை சிபாரிசு செய்யலாம் ஒவ்வொரு கவிதைகளிலும் ஓர் வேதனைக்குரிய விடயத்தினை அழுத்தமாக சொல்லிவைப்பதில்தான் கவிஞரின் முனைப்பு காணப்படுகின்றது.



போராட்டத்தை சந்திக்காமல் மனித வாழ்க்கை நியமிக்கப்படவில்லை அதனை உதாரணம் கொண்டு நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் அதனை உணர்ந்தவர்களே. அதனால்தான் காலத்துக்கு காலம் சமூகத்தை உயிர்ப்பிக்க உணர்வளிக்க கருத்தியளாலர்கள் கவிஞர்கள் போன்றோர் கடவுள்களாக முளைக்கின்றார்கள் அவர்களில் ஒருவராக கவிஞர் பெனில் அவர்களை அடையாளமிட்டுக்காட்டலாம். அதற்கு எடுத்துக்காட்டாய்,

தடுத்திட ஆயிரம்
கரங்கள் வரட்டும்
தமிழரின் கரங்களின்
தனித்துவத்தை
இத்தரணி அறியட்டும்....

                                                                   என்ற கவிதை வரிகளை முன்வைக்கலாம்.

சோர்ந்துபோன உள்ளங்களை தட்டியெழுப்பிட வைக்கும், நொடிந்துவிடாமல் தாங்கிப்பிடிக்கும் கரமாக உணர்வினை ஊட்டியுள்ளார்.

எம்மிடமிருந்து
நிலையாய் எதையும்
தட்டிப்பறித்திட‌
முடியாது

      எத்தனை போசனைமிக்க வரிகள் இவை விழுந்துபோனாலும் அழிந்துபோவதில்லை என உலகுக்கு பறைசாற்றும் பக்குவ அறிவித்தல். இப்படி அநேக வரிகளில் கவிஞர் சமூகத்தை தேற்றியுள்ளார்.



யுத்தம் தந்த வலி, அநீதி, வஞ்சகம், மிருகத்தனங்கள், ஆற்றாமைகள், எச்சரிப்பு,ஊக்கம்,தைரியம் என எண்ண அலைகளை தாராளமாக தவழவிட்டிருக்கின்றார் கவிஞர். அத்தோடு அதன் பின்னர் ஏற்பட்டிருக்கின்றதான கலாச்சார சீர்கேடுகளை தொட்டுக்காட்டவும் தவற‌வில்லை கவிஞர் பெனில் அவர்களின் 'அழியுமுன் அறிந்துகொள்' என்ற கவிதை அதனை எத்திவைக்கிறது.

பொதுவாக தாலாட்டு என்பது குழந்தைகளை உறங்கவைக்கவே பாடப்படும். ஆனால் கவிஞரோ இத்தாலாட்டை விழித்தெழுவதற்காக பாடியுள்ளார் இதுவே இக்கவிதைக்கு பாரிய வலுவை சேர்த்திருக்கின்றது எனலாம்.

இப்படி உணர்ச்சிக்கவிதைகளை படைத்த பெனில் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்னும் கவிஞரின் ஆளுமை வெளிப்படவேண்டுமெனில் தனது வாசிப்பனுபவத்தையும் ஆழ்ந்த எழுத்துப்பழக்கத்தையும் அதிகப்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து கவிதைகளில் குறியீடுகள் படிமங்கள் உவமைகளை வாசிப்பதனால் சற்று சலிப்புத்தன்மையும் ஏற்படுகின்றது இதனை தவிர்த்திருக்கலாம்
அத்துடன் புதுக்கவிதையில் வசனநடையினை விடுத்து வாசகர்கள், கவித்துவத்தை  அனுபவிக்க இடமளிக்கவேண்டும் இவற்றில் கவிஞர் கவனம் செலுத்துவாராயின் எதிர்காலத்தில் தனக்கென ஒரு தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் இளையவர்கள் பெறும்பாலும் காதலை கையிலெடுத்துக்கொள்வதால் இவருக்கென்று ஓரிடத்தினை வழங்கலாம்.




கவிஞர் பெனில் அவர்களின் "ஈர நிலத்தை எதிர்பார்த்து" என்ற இரண்டாவது கவிதை நூல் வாசகர்கள் மனதில் ஓர் அதிர்வை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை. விமர்சனங்களையும் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு சோர்ந்துவிடாமல் தன்னை வளப்படுத்திக்கொள்ளவேண்டும் இன்னும் சமூகத்தை அவர் பிரதிபலிக்கவேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பை முன்வைத்து பெனில் அவர்களின் சகல முயற்சிகளும் எண்ணங்களும் ஈடேறவேண்டும் என்ற பிரார்தனைகளுடன் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி.

நூலின் பெயர்: 'ஈர நிலத்தை எதிர்பார்த்து'
நூல் வகை :      கவிதை நூல்
ஆசிரியர்:           மன்னார் பெனில்
வெளியீடு :        மன்னார் தமிழ்ச்சங்கம்
விலை :              250/=
தொடர்புகளுக்கு:  mannarpenil83@gmail.com






   
                                                     





கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (08.01.2016) ஓவியரும் கவிஞருமான ராஜன் ராஜ்

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 08.01. 2016ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 22வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையின் வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான ஓவியரும் கவிஞருமான ராஜன் ராஜ் அவர்கள். கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரான இவர் “ஓவித்தின் வரலாறு அதன் வளர்ச்சி ஓவியத்தின் பகுப்புக்கள் கொள்கைகளை அறிய அதையே படநெறியாக மேற்கொண்டு வருவது சிறந்த வழியாகும். அத்தோடு, ஓவியத்துறைக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்திருப்பதும் வேலைவாய்ப்பை இலகுவாகப் பெறக்கூடியதாக இருப்பதும் காரணமாக அமைந்தன” என தனது ஓவியத்துறையின் ஈடுபாட்டுக்கான காரணத்தைக் கூறுவதோடு, ஓர் ஆர்வமிக்க கலைஞராக தன்னை வெளிப்படுத்தத்துடிக்கும் இவ்விளையவரின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரின் நேர்காணலிலும் இணைந்து கொள்வோம்.







த.ராஜ் சுகா: உங்களைப்பற்றி எமது வாசகர்களுக்காக? 

ராஜன் ராஜ்: மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் 1990.8.3 திகதி சின்னத்துரை சந்திரகலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். குடும்பத்தில் நான், அம்மா, அப்பா, அக்கா, தம்பி மொத்தம் ஏழு பேர். இன்று வரை குடும்பத்தின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். தரம் 1 தொடக்கம் தரம் 9 வரை கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலத்தில் படித்தேன். பின்பு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலத்தில் உயர் தரம் வரை படித்து சித்தி பெற்றேன்.

 த.ராஜ் சுகா: தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? 


ராஜன் ராஜ்: தற்போது நுண்கலைப்பிரிவில் இளமானிப் பட்டப்படிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இறுதியாண்டில் கட்புலனும் தொழிநுட்பக்கலையும் என்னும் பாடநெறியைப் படித்து வருகிறேன். த.ராஜ் சுகா: படிப்பு தவிர்ந்து நீங்கள் ஈடுபடும் ஏனைய துறைகள்? ராஜன் ராஜ்: ஓவியத்துறையிலும் கவிதையிலும் அதிக ஈடுபாடிருக்கிறது. தவிர, புகைப்படத்துறையில் விருப்பமுண்டு. படிப்பை முடித்ததும் புகைப்படத்துறையில் ஈடுபடும் எண்ணமுள்ளது. 

த.ராஜ் சுகா: ஓவியத்தில் எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது? 


ராஜன் ராஜ்: சிறு வயதிலிருந்தே ஈடுபாடிருந்தது. இதற்குப் பின்னணியாக குடும்பத்தில் அம்மா, அக்கா வரையும் சித்திரங்கள் அமைந்தன. பின்னர் ஓவியத்திலிருந்த விருப்பின் காரணமாக தொடர்ந்து வரையத் தொடங்கினேன்.


 த.ராஜ் சுகா: ஏன் ஓவியத்தை ஒரு பாடமாக உயர் வகுப்பில் தொடர வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது? 


ராஜன் ராஜ்: பல காரணங்களுண்டு. முதலாவதாக ஓவியனாக வேண்டும் என்னும் சிறு வயது ஆசை நிறைவேற்ற வேண்டுமாயின், ஓவியத்துறை எடுக்க வேண்டும் நிலையில் எடுத்தேன். தவிர, ஓவியத்தின் வரலாறு அதன் வளர்ச்சி ஓவியத்தின் பகுப்புக்கள் கொள்கைகளை அறிய அதையே படநெறியாக எடுப்பது சிறந்த வழியாகும். அத்தோடு ஓவியத்துறைக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்திருப்பதும் வேலைவாய்ப்பை இலகுவாகப் பெறக்கூடியதாக இருப்பதும் காரணமாக அமைந்தன. தவிர, சுய தொழிலில் ஈடுபடலாம் என்பதனாலும் இத்துறையைத் தெரிவு செய்தேன். 


த.ராஜ் சுகா: ஓவியத்திற்கான வரவேற்பு, வாய்ப்புக்கள் இலங்கையை பொறுத்த வரையில் எவ்வாறு காணப்படுகின்றது? 


ராஜன் ராஜ்: ஓவியத்திற்கான வரவேற்பு இலங்கையில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. விரும்பிப் பார்ப்பாருண்டு விலை கொடுத்து வாங்குவாரில்லை என்றே சொல்ல வேண்டும். தெற்கில் சிங்கள மக்களிடம் நல்ல வரவேற்பிருக்கிறது. வடக்கு கிழக்கில் ஓவியம் தொடர்பான புரிதலும் குறைவாகயுள்ளது. நவீன ஓவியங்களை ஏற்கும் மக்கள் இலங்கையில் மிகக்குறைவினரே. கட்டணம் வாங்கி ஓவியம் கற்பிக்கும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிரெண்டு உள்ளன. பல்கலைக்கழங்களில் ஓவியம் கற்க வாய்ப்புக்கள் உண்டு. அதுவும் மூன்று பல்கலைகழகங்களிலே ஓவியக்கண்காட்சிகளை நாடத்தக் கூடிய பிரத்தியேக ஓவியக்கூடங்களும் மிகக் குறைவாகவேயுள்ளது.

 த.ராஜ் சுகா: தொழில் ரீதியாக இதனை முன்னெடுக்க முடியுமென நினைக்கின்றீர்களா? 


ராஜன் ராஜ்: இன்றைய காலத்தில் பிரதான தொழிலாகச் செய்ய முடியாது. ரசிக்கும் மக்கள் ஓவியத்தை பொருந்தொகை கொடுத்து வாங்குவதென்பது கேள்விக்குறியே. ஆனால், நகரங்களில் வரவேற்பும் வாங்கு மக்களும் உண்டு.


 த.ராஜ் சுகா: ஓவியத்தில் உங்களது முன்னோடியாக வழிகாட்டியாக நீங்கள் கருதுவது? 


ராஜன் ராஜ்: பல ஓவியர்கள் இருப்பின், தனியான ஈர்ப்பு பிற்பட்ட மனப்பதிவாத ஓவியரான வின்சென்ட் வான்கோ மீது தான். அவரது வேகமான லாவகரமான தூரிகை வீச்சு எனக்குப் பிடிக்கும். அவர் மீது மரியாதையும் கொண்டுள்ளேன். வழிகாட்டி என்று பெரிதாக ஒருவருமில்லை. கற்றுத்தரும் விரிவுரையாளர் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். தவறுகளைத் திருத்தவும் உதவுவார்கள். ஆலோசனைகளையும் பகிர்வார்கள். 


த.ராஜ் சுகா: வரைவதற்காக எந்தெந்த விடயங்களை உள்வாங்கிக்கொள்கின்றீர்கள்?


 ராஜன் ராஜ்: வகுப்பில் வரைவதை தவிர, நான் எனக்காக வரையும் ஓவியங்கள் அநேகமானவை. நிலத்தோற்றக் காட்சிகளாக அமைகின்றன. அதில் சமூகத்தின் இருப்பிடங்களையும், காலநிலைகளையும் தற்கலாத்தில் எவ்வாறுள்ளது என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.


 த.ராஜ் சுகா: ஓவியத்தினால் ஒரு விடயத்தினை அப்படியே சொல்ல முடியுமென்று நினைக்கின்றீர்களா? எவ்வாறு? 


ராஜன் ராஜ்: ஆம். அப்படியே காட்சிப்படுத்த முடியும். இயற்பண்புக் கொண்டதாகவும், தெளிவாகவும், தெளிவின்றியும், யாதார்த்தமாகவும், விடயத்தை உடைத்தும், சிதைத்தும், நேரடியாக புரியாமலும், மனப்பதிவாகவும், குறியீடுகளாகவும் காட்சிப்படுத்த இயலும். அந்த வகையில், ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது.





 த.ராஜ் சுகா: உங்களுக்கு கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டென்று சொன்னீர்கள். எவ்வகையான கவிதைகளை எழுதுகின்றீர்கள்? 



ராஜன் ராஜ்: சிறு வயதிலிருந்தே கவிதைகளை எழுதி வருகிறேன். தற்போது ஹைக்கூ கவிதை, புதுக்கவிதைகளையே அதிகம் விரும்பி எழுதுகிறேன். அத்துடன், நவீன கவிதைகளும் எழுதுகிறேன்.


 த.ராஜ் சுகா: ஓவியம், கவிதை என்ற உங்களது படைப்புக்களை ஆவணப்படுத்தும் எண்ணம் பற்றி? 


ராஜன் ராஜ்: படிப்பை முடித்து விட்டு ஓவியக்கண்காட்சியை நடாத்தும் எண்ணமுள்ளது. அத்துடன், ஓவியங்களையும், கவிதையையும் நூல் வடிவமாக வெளியிட எண்ணியுள்ளேன். 


த.ராஜ் சுகா: உங்களது ஓவியங்கள், கவிதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள், பாராட்டுக்கள் பற்றி? 


ராஜன் ராஜ்: எனது ஓவியங்கள், கவிதைகளை பலர் பாராட்டியிருக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் பாராட்டுகின்றனர். அத்துடன், பல ஓவியப்போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற்று பரிசில்கள் பெற்றிருக்கிறேன். அதே நேரம், சில நண்பர்கள் கிண்டல் செய்யவும் செய்கின்றனர். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  


த.ராஜ் சுகா: எதிர்காலத்திட்டம்? 


ராஜன் ராஜ்: இரண்டாவது பட்டப்படிப்பைத் தொடர வேண்டுமென்பது இப்போது வரைக்கும் உள்ளது.


 த.ராஜ் சுகா: ஓவியம் என்பது எல்லோராலும் வரைந்து விட முடியாத வரம். அது உங்களுக்கு மிக லாவகமாக அமைந்துள்ளது. இவ்வரிய வாய்ப்பினை ஏனையவர்களுக்கு எவ்வாறு வழங்கிட நினைக்கின்றீர்கள்? 


ராஜன் ராஜ்: ஓவியத்தில் ஆர்வமிக்கவர்களை ஊக்குவிக்கவும், அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் சாத்தியப்படுத்தலாம். கற்க விருப்பமில்லாது இருப்பரிடம் ஓவியத்தை திணிக்க முடியாது. 


த.ராஜ் சுகா: நீங்கள் இணைய வாசகர்களுக்கும் பொதுவாக எல்லாருக்கும் கூற விரும்பும் உங்கள் மனவெளிப்பாட்டை பகிர்ந்து கொள்ளலாமே? 


ராஜன் ராஜ்: ஆண்டவன் படைப்பில் எல்லோரிடமும் திறமையுள்ளது. அதை நீங்களே தேடிக்கண்டுபிடியுங்கள். அதில் உச்சமடைய முயற்சியுங்கள். சமூக வலைத்தளங்கள் இணையங்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றது. இவற்றைத் தவறாகப் பயன்படுத்தாது, உங்கள் திறமையை முன்னேற்ற பாருங்கள். உங்கள் அனைவரின்  வெற்றிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 



ஓவியர் ராஜன் ராஜ் அவர்களின் ஓவியங்களில் சில….கல்குடா நேசன் வாசகர்களுக்காக‌…
















http://kalkudahnation.com/

Thursday, January 7, 2016

கோடி பெறுபவனிடன்...

பகிர்ந்து வாழ்தலில் இருக்கும்
பரவசமும்

கொடுத்து மகிழ்தலில் இருக்கும்
குதூகலமும்

உதவிக் களித்த‌லில் இருக்கும்
உற்சாகமும்

கோடி பெறுபவனிடன் இருப்பதில்லை
வாடியிருப்பவைய வன் மதிப்பதுமில்லை!!

Wednesday, January 6, 2016

நான் கடவுளல்ல‌

வரம் கொடுக்கவும்
சாபம் இடவும்
நான் கடவுளல்ல‌
துரோகியையும் நண்பனையும்
சந்திக்கவேண்டியவனே!!

Tuesday, January 5, 2016

மகத்துவப்பண்பு


மன்னிப்பது மனிதப்பண்பென்றால்
மன்னிப்பைப்பெறுவதோ மகத்துவப்பண்பு..!!









வேண்டுமெனக்கு...

துரோகங்கள் வேண்டுமெனக்கு
துளிர்த்து ஓங்கி வளர்ந்திட..


தோல்விகள் வேண்டுமெனக்கு
தோன்றி ஜொலித்து நிலைத்திட..


அவமானங்கள் வேண்டுமெனக்கு
அடுத்தடுத்த வெற்றிகளை தந்திட...


ஏமாற்றங்கள் வேண்டுமெனக்கு
ஏற்றம் பலநான் கண்டிட...


வஞ்சத்தி னனுபவம் வேண்டுமெனக்கு
வாழ்வை நானும் ரசித்திட...


கண்ணீர்நிதம் வேண்டுமெனக்கு
கவலைதுறக்கும் வழி யறிந்திட...


வேதனைகள் வேண்டுமெனக்கு
வேரிழந்த மரமாய் வீழ்ந்திடாதிட...


அதிகதிகமாய்  வேண்டுமெனக்கு எல்லாவற்றிலும்
அறிந்து தெளிந்து நான் மீண்டிட...






Monday, January 4, 2016

செல்லாதே


விரும்பா இதயம் பின் செல்லாதே
விதையாய் கண்ணீர் பெற்றுவராதே
அரும்பாய் நெஞ்சில் அன்பை வளர்க்காதே
அருமை தெரியாதார் வழி நடவாதே.....





Sunday, January 3, 2016

நீயாக இருக்கட்டும்

கதவுகள் மூடப்படுகையில்
முடங்கிவிடாதே...

யன்னல்கள் தாழிடப்படுகையில்
தடுமாறிவிடாதே....

விதியமைத்து சதிசெய்வது
காலமாக இருப்பினும்
மதிசமைத்து வழியமைப்பது
நீயாக இருக்கட்டும்!!



ஊடறு இணையத்தில் கவிதை (02.01.2016)

http://www.oodaru.com/?p=9455


இறவா என் தேடுதல்மட்டும்
*************************************************\


எனக்கான கதவுகள் மூடப்பட்டும்
எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை…

முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும்
முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது..

கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும்
இரவுகள் இன்னும் அப்படியேதான்….

பாதங்களில் வேகத்தை கூட்டினும்
பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது…

வெறித்தனமான எண்ண அலைகள்
வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது….

பார்வைக்கணைகளால் அராஜகம் எரித்தும்
பக்கத்திலேயே பாதகங்கள் நடந்தேறிவிடுகின்றது…

இன்னுமின்னும் இம்சைகள் சூழ்ந்திடினும்
இறவா என் தேடுதல்மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது….


இறவா என் தேடுதல்மட்டும்


இறஇறவா என் தேடுதல்மட்டும்வா என் தேடுதல்மட்டும்

Saturday, January 2, 2016

தொலைந்து போதல் பற்றி......

அடிக்கடி தொலைந்து போவதிலும்
காணாமல் போவதிலும்
அலாதிப் பிரியமெனக்கு....

செக்கு மாட்டைப்போல
சுற்றிக்கொண்டே இருப்பதில்
உடன்பாடில்லை....

கால்கள் இல்லாவிட்டாலும்
எழுந்து ஓட முயற்சிப்பேன்
சிறகுகளை இழந்துவிடினும்
வானமட்டும் பறக்கநினைக்கிறேன்....


சுவாசம் வரை நெருக்கும்
சுமைகளத்தனையும் தொலைத்து
சுகங்களுக்குள் காணாமல்போக‌
விழைகின்றேன்...

தோல்விகளுக்குள் காணாமல் போகும்
புன்னகைகளை தேடித்தேடி
அதற்குள் தொலைந்துவிடப் பார்க்கின்றேன்

கண்ணீர் நம்மை தேடிவந்து
ஒட்டிக்கொள்ளும்
ஆனந்தமோ நான் தேடிப்போய்
பெற்றுக்கொள்ளவேண்டியது..

தேடுதல் சுகமானது
தொலைதல் அதைவிட சுவாரஸ்யமானது
காணாமல் போதலோ
காலச்சாவியினை
கரத்தில் பெற்றுக்கொண்ட ஆரவாரம்

இன்னுமின்னும் அதற்குள்
மூழ்கிப்போனால்
விடைகளற்றுப் போகவிருந்த‌
வாழ்க்கை சரித்திரத்தின்
அத்தனை புதிர்களையும்
அவிழ்த்துவிடும் வல்லமை
அங்கேதான் உள்ளது....

பாதத்தை மறந்து
பசியினை துறந்து
காற்றாய் அலையாய்
கால்களில்லா நதியாய்
காலச்சக்கரத்தில் சுழன்றுவருகையில்

காணாமல் போதலே
காண்பதற்கரிய வெற்றிச்சாலையினை
கடந்து செல்ல உதவும்
கடவுள் மந்திரம் என்கின்றேன்....

அதிஸ்டசாலிதான் நான்!!


சரியாகத்தான் சொன்னேன் அதை
சந்தேகமென்றாய்
வரிசையாக சொல்லிவைத்தேன்
வசை பாடினாய்....

அதிஸ்டசாலிதான் நான்
யாருக்கு கிடைக்கும்
இப்படியொரு பாக்கியம்...


கூடவே இருந்தவன்
குழிபறித்தது கூட தெரியாமல்
கும்மாளம் போட்டதும்...


கைப்பிடிப்பானென காத்திருந்து
கைகழுவியதுகூட அறியாமல்
காதலித்துக்கொண்டிருந்ததும்...


காலம் கடந்தேனும்
காற்றாய் வருவானென்று
காத்திருந்து
கல்யாணக்கோலத்தில் அவனை
கண்டதிர்ந்ததும்....

யாருக்குத்தான் கிடைக்கும்
இப்படியொரு பாக்கியம்
அதிஸ்டசாலிதான் நான்!!



எழுதிட உண்டு எண்ணங்கள்



அர்த்தமேயில்லாமல்
அன்புகொள்ளும் உறவுகள் பின்
காரணமேயில்லாமல்
கழற்றிவிடும் நிலமைகள்

வழியவந்து பழகும்
வழமையான நட்புக்கள் அது
பிரியமில்லாமல்
பிரிந்துபோகும் விந்தைகள்

இன்னுமின்னும் ஏராளம்
எழுதிட உண்டு எண்ணங்கள்
முன்னும் பின்னும் முரண்பட்ட‌
முடிந்திடா நினைவுகள்!!




சரிசெய்துகொள்கின்றேன்



கொஞ்சம் வழிவிடுங்கள்
என் விதியை சரிசெய்துகொள்கின்றேன்
பின் உங்கள் முட்டுக்கட்டைகளை போடுங்கள்!!

Friday, January 1, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் ( பாடலாசிரியரான சதீஸ்காந்த் 01.01.2016)

http://kalkudahnation.com/#!/tcmbck



பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள். படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 01.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 21வது இலக்கிய நேர்காணலில் புதிய ஆங்கில வருடத்தின் முதலாவது படைப்பாளியாக  இணைந்து கொள்கிறார்” இலங்கை கிழக்கு மாகாணத்தின் மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பைச்சேர்ந்த வளர்ந்து வரும் பாடலாசிரியரான சதீஸ்காந்த் அவர்கள். 

இலங்கை படைப்புக்களுக்கு சிறந்த களம் கிடைக்கவில்லை. போதிய வரவேற்பு வாய்க்கவில்லையென ஒரு பக்கம் நாம் புலம்பிக்கொண்டிருக்கையில், அப்படியல்ல, நாமும் எமது படைப்புக்களும் மக்களால் பார்க்கப்படுகின்றோம். இரசிக்கப்படுகின்றோம் என்று தலை நிமிர்த்திச் சொல்கின்றார் ஸதீஸ்காந்த அவர்கள். சிறந்த ஆர்வமிருக்கிறது. பலர் எமது பாடல்களை ஊடகங்களில் விரும்பிக்கேட்கின்றார்கள். சினிமாவுக்கு தரும் அதே ஆதரவை எமக்கும் இப்போது மக்கள் தருகின்றார்கள். என்று கூறும் அவரின் முழுமையான நேர்காணலுடன் இணைந்து கொள்வோம். 









ராஜ் சுகா: புதிய வருடத்தில் முதலாவது படைப்பாளியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். உங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன், வாசகர்களோடு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். 


சதீஸ்காந்த்: அனைவருக்கும் எனது இனிய புது வருட நல் வாழ்த்துக்கள். எனது பெயர் “ஸதீஸ்காந்” என் சொந்த இடம் மட்டக்களப்பு. அப்பா தம்பி ரெட்ணம். அம்மா மஞ்சுளா. தங்கை வரதாரணி. நான் விவசாயத் திணைக்களத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றி வருகின்றேன். 

ராஜ் சுகா: நீங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் இலக்கியத்துறை பற்றி? 

சதீஸ்காந்த்: இலங்கை இசைத்துறையில் 09 வருடங்களாக ஒரு பாடலாசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். பாடல்கள், நிலையக்குறியிசை, குறும்படங்கள், திரைப்படங்கள் எனப்பல பிரிவில் பாடல் வரிகளை எழுதி வருகின்றேன். 


ராஜ் சுகா: உங்களுக்கு முதன் முதல் அமைந்த பாடல் எழுதும் வாய்ப்புப்பற்றி எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 சதீஸ்காந்த்: 2007ம் ஆண்டு ஷமீலின் இசையில் “வானவில் தேவதை” என்ற பாடலை முதன் முதலில் எழுதினேன். பாடலைப் பிரதீப் பாடியிருந்தார். 


ராஜ் சுகா: இசைக்கேற்ப பாடல் எழுதுவீர்களா? அல்லது உங்கள் வரிகளை இசையமைக்கக்கூடியவாறு எழுதுவீர்களா?  

சதீஸ்காந்த்: இரண்டு சந்தர்பங்களும் உண்டு. அதிகமாக இசைக்கே பாடல் வரிகளை எழுதுகின்றேன். 


ராஜ் சுகா நீங்கள் கடினமாக உணர்ந்து பாடல் எழுதிய சந்தர்ப்பம் ஏதேனும் உண்டா? 


சதீஸ்காந்த்: ஆம். “மழை விழி” பாடல். என் திறமையை நிரூபிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு அது. அழகான மெட்டு. எனவே, ஒவ்வொரு வரியையும் திருத்தம் செய்து அழகாக்கி எழுதினேன். என் உழைப்புக்குச் சிறந்த அங்கீகாரம் அப்பாடல் மூலம் கிடைத்தது

 ராஜ் சுகா: எல்லா கவிஞனாலும் பாடலாசிரியராக வெளிப்பட முடியுமா? 

சதீஸ்காந்த் முடியும். கவிதை வரிகளை எளிமைப்படுத்தி மெட்டின் சந்தத்திற்கேற்ப எழுதி நிறையப்பயிற்சி செய்தால் எல்லோராலும் நிச்சயம் முடியும். 


ராஜ் சுகா கவிதைக்கும் பாடலுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி? 


சதீஸ்காந்த் கவிதை என்பது நாம் உணர்ந்த, அனுபவித்த உணர்வுகளை வரி வடிவில் உயிர்ப்பித்து வெளிப்படுத்ததும். பாடல் வரிகளும் அப்படித்தான். வேற்றுமை என்று பார்த்தல், பாடல் வரிகள்  சந்தம் விலகாமல் மெட்டுடன் முழுவதுமாகப் பொருந்த வேண்டும். ஆனால், கவிதைகளில் அவ்வாறில்லை. எமக்குத் தேவையான கவிதை வடிவத்தை நாமே தெரிவு செய்யலாம். 


ராஜ் சுகா இத்துறையில் நீங்களாகவே முயற்சியெடுத்து சிரத்தையெடுத்து பெற்றுக்கொண்ட வெற்றி அநுபவங்கள்? 

சதீஸ்காந்த் “என் உயிரை” வீடியோ பாடலுக்காக 2015ல் சர்வதேச நோர்வே திரைப்பட விழாவில் கிடைத்த தமிழர் உயரிய விருது. இப்பாடலை நானே எழுதி இயக்கி துஷ்யந்தனோடு தயாரித்தும் இருந்தேன். ஒரு அறிமுக இயக்குனராக மிகவும் கஷ்டப்பட்டு பல தடைகள் தாண்டித்தான் அப்படைப்பை வெளியிட்டேன். 

ராஜ் சுகா உங்கள் நண்பர்கள், உங்களுக்கு எதிர்மறையானவர்கள் பற்றி? 

சதீஸ்காந்த் என் பாடசாலை நண்பர்கள். இசைத்துறை நண்பர்கள் என்றும் என் படைப்புகளுக்கு ஆதரவு தருகின்றார்கள். எதிர்மறையானவர்கள் என் தவறை எனக்கு சுட்டிக்காட்டி என்னை மென்மேலும் வளர உதவுகின்றார்கள்.

 ராஜ் சுகா இலங்கை பாடல்களை இரசிப்பதில் எம்மக்களிடம் காணப்படும் ஆர்வம் எவ்வாறு காணப்படுகின்றது? 

சதீஸ்காந்த் சிறந்த ஆர்வமிருக்கிறது. பலர் எமது பாடல்களை ஊடகங்களில் விரும்பிக்கேட்கின்றார்கள். சினிமாவுக்கு தரும் அதே ஆதரவை எமக்கும் இப்போது மக்கள் தருகின்றார்கள்.








 ராஜ் சுகா: எந்தெந்த வகையில் உங்கள் படைப்புக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றீர்கள்? சதீஸ்காந்த் வானொலி, தொலைக்காட்சி, இணையம், இறுவெட்டுக்கள், மேடை நிகழ்ச்சி, திரையரங்கம் மூலம். 


ராஜ் சுகா: உங்களுக்கு இந்திய சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்புக்கள் அமைந்துள்ளனவா? 


சதீஸ்காந்த்: ஆம். “வெள்ளைக் காக்கா மஞ்சள் குருவி” என்ற தென்னிந்திய திரைப்படத்தில் “அடடடடா ” என்ற பாடலை சாயி தர்ஷன் இசையில் எழுதியுள்ளேன். 


ராஜ் சுகா: நீங்கள் பெற்றுக்கொண்ட விருதுகளில் நீங்கள் பூரித்துப்போன ஒரு விருது அநுபவம் பற்றியும் பெற்றுக்கொண்ட விருதுகள் பற்றியும் கூருங்கள்? 


சதீஸ்காந்த்: 2011 இல் அலறி மாளிகையில் ஜனாதிபதி கரங்களால் “பூக்கின்றாய் பூவாய்” என்ற பாடலுக்காக அரச தேசிய இசை விருதினைப் பெற்றுக்குகொண்டது.


 ராஜ் சுகா: இதுவரை எத்தனை பாடல்களை எழுதியுள்ளீர்கள்? அவற்றில் உங்களை அடையாளப்படுத்திய பாடல் எது? 


சதீஸ்காந்த்: கிட்டத்தட்ட 70 பாடல்களை எழுதி உள்ளேன். தினேஷ் கனகரெட்ணம்  மற்றும் திவ்யாவுடன் சேர்ந்து உருவாக்கிய “உயிர்ப்பூ” என்ற பாடல். 


ராஜ் சுகா: உங்களை கவர்ந்த அல்லது அவரைப்பார்த்து அதிசயப்பட்ட ஓர் தென்னிந்திய, இலங்கை பாடலாசிரியர் பற்றி?


 சதீஸ்காந்த்: தென்னிந்தியா – நா.முத்துக்குமார், இலங்கை – அஸ்மின் ராஜ் சுகா உங்களது அடுத்த திட்டம்? சதீஸ்காந்த் உலகின் பிரபல இசைக்கலைஞர்களையும் நம் நாட்டில் இசைக்கலைஞர்களையும் ஒன்றிணைத்து பாடல்களை உருவாக்கும் திட்டமுள்ளது.

 ராஜ் சுகா: இப்புதிய வருடத்தின் முதல் படைப்பாளியாக எமது இணையத்துடன் இணைந்து கொண்டுள்ள நீங்கள் எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது? 



சதீஸ்காந்த்:  இந்த புதிய வருடம் அனைவருக்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் வழங்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, எடுக்கின்ற அனைத்து நல்ல முயற்சிகளும் அனைவருக்கும் வாய்க்க வேண்டுமென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு, தொடர்ந்தும் என் படைப்புகளுக்கு ஆதரவு தாருங்கள். கல்குடாநேசன் இணையத்திற்கு என் வாழ்த்துக்கள். தொட‌ர்ந்தும் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகின்றேன்.







Thursday, December 31, 2015

இனிய புதுவருடம் 2016

இதயவெளியில்
இறுகிப்போனை
இயலாமைகளெல்லாம்
தூரத்தே எரிவோம்....

காலை வாரிவிட்ட‌
கவலைகள்
கண்டுகொள்ளாமல் விட்ட
கனவுகள் என எதையும்
கருத்தில் சுமக்காதிருப்போம்...

புதிய சிந்தனை
புதுப்புது எண்ணங்கள்

நல்ல திட்டங்கள்
நலிந்திடாத முயற்சிகள்

திடமான வேகங்கள்
திக்திடாத வெற்றிகளென‌

வரிசையாய் வந்துநிற்க‌
வசந்தங்கள் கூடிநிற்க‌

மனதினை இளமையாக்குவோம்
மனிதமுடன் வளத்தை நாடுவோம்!!