Thursday, January 17, 2013

'ஒற்றையடிப்பாதை' கவிதை நூலுக்கான எனது பார்வை










     இயற்கையோடும் எளிமையோடும் புதிய பரிணாமம் எடுத்துள்ள 'ஒற்றையடிப்பாதை' கவிதை தொகுப்பு சித்திரக்கைவண்ணம் என்று அழைக்கக்கூடிய வகையில் நம் கைகளில் மிளிர்கின்றது.தர்கா நகரைச்சேர்ந்த கவிஞர் பஸ்லி ஹமீட் அவர்களின் கன்னித்தொகுப்பாக கவிநயம் காட்டியுள்ள இத்தொகுப்பானது நம் எதிர்பார்ப்பினை முற்றும் உடைத்து புதிய மிரட்சியுடன் வாசகனை சந்தித்திருப்பது உண்மையில் கவிஞரை பாராட்டச்செய்வதோடு வாசகர் மத்தியில் கவிதை நேசிப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
  வழமையாக புதுக்கவிதை மரபுக்கவிதை ஹைக்கூக்கவிதை என்ற வரையறையிலேயே நாம் கவிதைநூல்களை வாசித்து வந்திருக்கின்றோம்.படங்களுக்கு கவிதையெழுதும் முறைமையினை பத்திரிகையில் வாசித்திருக்கக்கூடும் ஆனால் அதே பாணியில் இயற்கையோடும் நம் வாழ்வியலோடும் பின்னிய படங்களை தெரிவுசெய்து அதற்கு தன் உணர்வுகளை கவியாக தீட்டி நூலாக தந்திருப்பது கவிஞரின் புதிய முயற்சி புதுமையான முயற்சி பாரட்டுக்கள்.
  இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்று வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது.அந்த வகையில் முகநூலில் எழுதுவரும் கவிஞர் பஸ்லி ஹமீட் இதுவரை இணையத்தள வாசகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்திருந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் வாழ்த்துக்களுமே இந்நூல் பிரசவமாவதற்கு வித்தாக அமைந்தது எனக்கொள்ளலாம்.'ஒற்றையடிப்பாதைக்குள்ளே நம் பயணத்தை தொடங்கினால், வண்ணப்பூக்களாய் வகைவகையான படங்கள் மணம்வீசி நிற்கின்றது.அவ்வண்ணப்படங்களுக்கு அவரின் எண்ணக்கவிதைகள் வார்ப்புக்களாய் வரலாறு படைக்கின்றது.
                "பட்டம் வானில் பறக்கின்றது
                 படைத்தவன் கையில்தான்
                 நூல் இருக்கின்றது"
                                                               பறக்கும் பட்டத்தின் படத்துக்குக்கான இக்கவிதை,வாழ்வியலை படம்பிடித்து காட்டுகின்றது. மிக எளிய சொல்லாடலில் எல்லா கவிதைகளும் இருப்பதே சிறப்பம்சமாக காணப்படுகின்றது.
                  "வானில் இருள் சூழ்ந்துவிட்டால்
                   மதியை யாரும் நேசிக்கின்றார்கள்
                   வாழ்வில் இடர் சூழ்ந்துவிட்டால்
                    விதியை ஏனோ தூசிக்கின்றார்கள்
                                                                              என்ற வரிகளில் நம்மை நாமே ஒரு நொடி உணரமுடிகின்றது. மதியை விதிக்கு ஒப்பிட்டு நம் அறியாமை இருளை சுட்டிக்காட்ட விரும்புகின்றார் கவிஞர்.வரிகளை கொண்டே அதற்கான படங்களும் நம் மனக்கண்முன்னே திரையிடுகின்றது.
                  "மலையே
                   நெஞ்சுக்குள் நெருப்பை
                   வைத்துக்கொண்டு
                   உன்னால் எப்படி நிம்மதியாக‌
                   உறங்க முடிந்தது..? என்றும்
                   "இடைவிடாது புகைத்து
                    இறுதியில்
                    இரத்த வாந்தி எடுத்தது" 
                                                         என்றும் எரிமலையின் படத்துக்கு வரிகளமைத்து சிந்திக்க வைத்திருப்பது ஆழமான படிப்பினையை போதிக்கின்றது. இவ்வாறு இயற்கையோடு மிக நெருக்கமான ஈர்ப்பிலே அநேகமான என்று சொல்வதை விட அனைத்து கவிதைகளும் படைக்கப்பட்டிருப்பது கவிஞரின் இயற்கை மீதான பாதிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. விரல்விட்டு கூறக்கூடிய விடயங்களே இயற்கைக்கு அப்பாற்பட்டு கவிதைகளாய் அழகுசெய்கின்றது.
                "உச்சியினை தொட்டிடவே
                  உலகமும் நாடுது
                  உச்சியிலே உள்ளநதி
                  பள்ளமதை தேடுது" 
                                               என்ற கவிஞரின் நதி பற்றியதான வாழ்வியற் கலையை, உயர்ந்த சிறந்த எண்ணங்களை கொண்ட மனிதர்களுக்கு ஒப்பிடலாம். எவ்வளவுதான் உயர்ந்த இடத்தில் இருந்தாலு எளிமையையும் தாழ்மையையும் விரும்புபவர்கள் மிகச்சிலரே. நன்றாக காய்த்திருக்கும் கிளையானது எப்போதும் கீழ்நோக்கியே வளைந்திருக்கும் அதுபோலத்தான் சிறந்த பண்பும் குணங்களும் எளிமையுமுள்ளவர்களின் வாழ்வும் இவ்வாறே தாழ்மையான நிலமையினை கொண்டிருக்கும் என்பதனை இப்படத்துடன் கூடிய கவிதையின் படிப்பினையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
                         "வானமே நீ
                          நீலத்திரையை நீக்கியபோதுதான்
                          தெரிகின்றது உனக்குள்ளும்
                          ஆயிரம் ஓட்டைகள்"
                                                 எத்தனை அழகிய வரிகள். 'ஒரு மனிதனின் அந்தரங்கம் தெரியாதவரைதான் அவன் எல்லாருக்கும் நல்லவனாக தெரிவான்' என்று கவிஞர் கிண்ணியா அமீர் அலி தன்னுடைய புத்தகவெளியீட்டு விழாவில் கூறியது நினைவுக்கு வருகின்றது.உண்மைதான் ஒருவனுடைய சுயரூபம் தெரியாதவரைதான் அவன் நல்லவனென்ற போர்வைக்குள் நடமாட முடிகின்றது இந்தச்செய்தியை இருளோடு ஒப்பிட்டு இதயம் தொடும் வரிகளை தந்திருப்பது ரசிக்கவைக்கின்றது.
                        "ஓடங்களே
                         ஓய்வெடுக்கவேண்டாம் எம்
                         குமரியர்கள் கரைசேர‌
                          காத்திருக்கின்றார்கள்"
                                                                 நான்கே வரிகளில் ஏழைக் குடும்பங்களின் ஏழ்மையினை எத்தனை அருமையாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழைகளின் நிலமையினையும் சீதனப்பிரச்சனையுட்பட எத்தனையோ பிரச்சனைகளினால் இன்னுமே திருமணமாகாத பெண்களின் நிலமையினையும் இப்படி நான்கே வரிகளில் கூறமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றது இக்கவிதை.
  காதலுக்கும் கண்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது அதேபோல காதலுக்கும் கவிதைக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது. இந்த தொடர்பினை தொடாத கவிஞ‌ர்களே இல்லை காதலில்லாத கவிதையும் கவிதையுமில்ல என்றே கூறவேண்டும். மொழி மீதும் இயற்கை மீதும் சமூகத்தின் மீதும் கொண்டுள்ள பற்றும், காதலும், ரசனையுமே ஒருவனை கவிஞனாக்குகின்றது. அப்படிப்பட்ட காதலை தரும் கண்கள் பற்றி நம் கவிஞர் தரும் வரிகள்,
                         " ஊரையே மேய்கின்றது
                           உன்னை மட்டும்
                           அசைபோடுகின்றது
                           என் கண்கள்"       என்றும்
                          "அவனை காதலில்
                          விழவைத்தேன்
                          என்னை காலமும்
                           அழ வைத்தான்"
                                                       என்றும் காதலின் வலியை கண்களினூடாக வெளிப்படுத்துகின்றார்.
இவ்வாறு சின்னச்சின்ன கவிதைகளினூடாக வண்ணப்படங்களை கோர்த்து பென்னம்பெரிய கலை வாழ்வினை காட்சிப்படுத்திக்காட்டியுள்ள இக்கவிதை நூலானது சிறுவர்களை குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதை சிறு அநுபவத்தினூடாக அவதானித்தேன்.எதையும் இலகுபடுத்தி நோக்கக்கூடிய காலத்துக்குள் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம் அதுபோல மாணவர்களை பொருத்தவரையில் புதுமையான சுவாரஸ்யமான விடயங்களிலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள். வாசித்தலுக்கு மிக இலகுவான இத்தொகுப்பை சில பள்ளிமாணவர்கள் விரும்பி வாசித்ததை அவதானிக்கமுடிந்தது. இந்த நிகழ்வானது கவிஞரின் புதுமை முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியினை எடுத்துக்காட்டுகின்றது. சகல தரப்பினரிடையேயும் ஈர்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்தியிருக்கும் ஒரு நல்ல வித்தியாசமான தொகுப்பை தந்த கவிஞரை உளமார பாராட்டுவதோடு இதுபோன்று சிறந்த புதிய முயற்சிகளில் அவருடைய படைப்பை காண வாசகர்களாகிய நாங்களும் ஆவலாக இருக்கின்றோம் என்பதனையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.



நூல்: ஒற்றையடிப்பாதை
ஆசிரியர்: கவிஞர் பஸ்லி ஹமீட்
முகவரி:48,லோடஸ் வீதி, தர்காநகர்.
இணைய முகவரி:fazlyhameed@gmail.com
விலை:200/=

இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலுக்கான விமர்சனம்




உள்ளம் உடைந்து உணர்வுகள் பெருக்கெடுக்கும்போது அணையிட்டு அடக்கமுடியாத பிரவாகமாய் பெருக்கெடுக்கும் தமிழின்பத்தை கவிதையாகக் கொள்ளலாம். அந்த உன்னத உண‌ர்வினை வார்த்தைக்கற்களால் வரிகளாக்கி வாசகர்களுக்கு விருந்தளித்துள்ளார் தியத்தலாவையை சேர்ந்த கவிதாயினி  எச்.எஃப்.ரிஸ்னா. கவிதை சிறுகதை நூல்விமர்சனம் என இலக்கியத்தில் தடம்பதித்துக்கொண்டிருக்கும் இவரது, 'இன்னும் உன் குரல் கேடிகின்றது' கவிதை  நூலானது புரவலர் புத்தகப்பூங்கவின் 30வது வெளியீடாக வெளிவந்துள்ளது.
   வசனக்கவிதை, புதுக்கவிதையாக பூத்துநிற்கும் கவிதைகளில் ஆங்காங்கே சந்தம் சந்தோஷம் நாதம் மீட்டியுள்ளது.இலகுவான மொழிநடையில் இயல்பான விடயங்களை தொட்டிருக்கும் கவிஞர் காதல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அநேக கவிதைகளில் புலப்படுகின்றது. அத்தோடு சகலரும் வாசித்து விளங்கக்கூடிய நடையில் உணர்வினை வெளிப்படுத்தியிருக்கும் விதம் நூலுக்கு வலிமை சேர்த்திருக்கின்றது.
     "நேர்மையாய் உன்
    வாழ்வைவாழு பிறர்
    கவலையை காது கொடுத்து கேளு
    திக்கற்று வாழ்வோரை
    தீமைகள் சூழ்கையிலேஅயராது
    அவருக்காய் மாளு
    தரணியிலே நீவாழ்வது மேலு"     
                          என 'நீ வாழ்வது மேல்' என்ற தலைப்பில் மிக அருமையான அறிவுரைகளை கூறி நம் அகங்களை தொடமுனைந்த கவிஞரின் சொல்லாட்சி வாழ்த்தச்செய்கின்றது.வாசிக்கும் போதே எம்மை உணர்ந்துகொள்ள‌வும் நாம் கடந்துவந்த அல்லது கடந்துகொண்டிருக்கும் நிலமைகளை மிக இலகு நடையில் சொல்லியிருப்பது சொல்லில் செதுக்கியிருப்பது ஆச்சரியம். அத்தோடு கவிஞரின் கற்பனைத்திறன் பல கவிதைகளில் பிரமிக்கச்செய்கின்றது.
     "உன் 
     அன்பெனும் ஆலையிலே
     நித்தமும் சாறுபிழியப்படும்
    கரும்பல்லவா நான்
    அப்படியே காதலுடன்என்னை
   ருசி பார்த்து மகிழும்
  எறும்பல்லவா நீ"     
                 என 'இதயத்தின் முகவரி' எனும் கவிதை போல பல கவிதைகளில் காதலும் கற்பனையும் ததும்பும் குவைமிக்க வரிகள் சுவைக்கவைக்கின்றன.
           "உள் மனசில் நீ
           உறைந்து கிடந்த போதேல்லாம்
          இளகி பிரிவாய் என்று
          சத்தியமாய் நினைக்கவும்
           முடிந்ததா என்னால்" 
                                   'புதைகுழி நோக்கி புறப்படுகின்றேன்' என்ற கவிதை மணவறைக்கு அழைத்துசெல்லப்படும் மணப்பெண்ணின் உள்ளக்குமுறலை சொல்லியிருக்கின்றது. 'மனங்கவர் மணவாளன்' எனும் கவிதை முதிர்கன்னி களின் முகத்திரையிட்ட குமுறல்களுக்கு ஆற்றுப்படுத்தலாகவும் 'ஒரு வீணை அழுகின்றது' எனும் கவிதை மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஓர் கணவன் தன் காதல் மனைவியின் எதிர்கால விளக்கை கொளுத்தி வைக்கும் வரிகளாய் சிறப்பு புரிகின்றது.இவ்வாறு பெண்மையின் பல பக்கங்களை இலகுவாக சென்றடைந்துள்ளார் கவிஞர்.
       " எரிமலையில்
       பூத்துப்போன மலர்களுக்கு
      வேர்களின்வேதனை
      புரிவதேயில்லை" 
                             'கறையான் பக்கங்கள்'எனும் தலைப்பில் மிக ஆழமாக சிந்தனைக்கருவை சிதறவிட்டிருக்கின்றார். கவிதைக்கு பலம் சேர்க்கும் விடயங்களில் இவ்வாறான படிமக்குறிகள் முக்கிய இடம்வகிக்கின்றது. அதனை இதுபோன்ற வரிகள் பல இடங்களில் தடம் பதித்திருக்கின்றது.
   மலையக வாழ்வியலைப்பற்றியும் 'மலையக மாதுவின் மனக்குமுறல்' என்ற தலைப்பில் ஆதங்கப்பட்டிருக்கும் ஆசிரியர், ஒவ்வொரு தலைப்பிலும் மனித மனங்களில் உருண்டோடிக்கொண்டிருக்கும் உணர்வுகளை லாவகமாக பிடித்து விளக்கியுள்ளார். மனதை உருக்கும் வார்த்தை பிரயோகங்களால் சில நிதர்சனங்களை ஆணியடித்தாற்போல பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளார்.
  . 
  இவ்வாறு இளமை கவியால் ஆட்கொண்டிருக்கும் 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலானது 68 தலைப்புக்களை பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், 56 கவிதைகளே நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் குறையாக தெரியாவிட்டாலும் கவித்தேடலுக்கு ஓர் ஏமாற்றமாக இருந்தது என்பதே நிஜம்.கவிஞர் எச்.எஃப்.ரிஸ்னா, இளவயதில் சந்திக்கும் அல்லது அவ்வயதில் கடந்து வருகின்ற உணர்வலைகளுக்கு ஒளியூட்டியிருக்கின்றார் என்றே கூறவேண்டும் ஏனெனில், அவ்விளவயதின் மன உளைச்சல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் என்ற அத்தனை பக்கங்களையும் விபரமாக வெளிப்படுத்தியுள்ள விதம் இளையவர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு மூத்தவர்களின் கடந்த கால நிஜங்களை நிழற்படமாக காட்டியுள்ளதால் சகல தரப்பினரையும் கவரும் என்பதில் எவ்வித ஐயங்களுமில்லை என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.
  'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை தொகுதியானது வாசகர்கள் மனதிலும் குரலாய் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பிடம் பெறுகின்றது. நூலினை பிரசவித்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பகர்ந்துகொள்வதோடு அவரிடமிருந்து இன்னும் பல இலக்கிய படைப்புக்களை எதிர்ப்பார்க்கின்றோம்.
நூல்: 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூல்
ஆசிரியர்:எச்.எஃப்.ரிஸ்னா
தொடர்புகளுக்கு:riznahalal@gmail.com
 விலை:180/=





















(நன்றி தினகரன் மற்றும் தினக்குரல்)


இப்போதும் உனக்காய்.....





பூவாய் இருந்த உனக்குள்
பூகம்பத்தின் வேகம்
எங்கிருந்தது?

கோபம் அறியேன் 
கொடுமைகள் புரியேன் என்ற‌
வார்த்தைகளெல்லாம்
உயிரற்ற உடலங்களா
இத்தனை சீக்கிரத்தில்
பிணவாடை வீசுகின்றது?

அந்த புன்னகைக்குள்
முட்கம்பிகளை எதிர்பார்க்கவில்லை
அழகான அப்பரிவுகளில்
ஆயுதங்கள் ஒளிந்திருக்குமென‌
அறியவேயில்லை
கபடமறியா அப்பார்வைக்குள்
கருநாகம் ஒளிந்திருக்குமென‌
கனவிலேனும் தட்டுப்படவில்லை...

எனக்காய் உதிர்த்த‌
அத்தனை நிமிடஙகளும்
மணக்கும் மல்லிகையாய் சேமித்துவைத்தேன்
எப்படி மனம் வந்தது
தீயிட்டுக்கொளுத்தி
திருநீறு பூசிக்கொள்ள???

இப்போதும் இதயம் உனக்னை
குழந்தையாய்த்தான் பார்க்கின்றது
மீண்டும் வந்துவிடமாட்டாயா வென்று

இவையெல்லாம் மனதுக்குள்
ஆழமாய் பதிந்திடும் வேர்களல்ல‌
ஆத்திரத்தில் முளைத்த நார்கள்மட்டுமே...

இதயம் இப்போதும் உனக்காய்
தாயின் ஏக்கத்தோடு...

யாழ் இலக்கிய குவியம் முகநூலில் நடத்திய 'இணைய கவியரங்கம்' பகுதியில் இடம்பெற்ற கவிதை (15.01.13)


யாருக்கெடுத்துரைப்போம்?

இணையக் கவியரங்கில் கவிதை தர
------------------- ராஜ் சுகா(த.எலிசபெத்)

ஈன நிலை கண்டு துள்ளும் . காதல் கவியென்றால் கொஞ்சும் கவதை நெஞ்செல்லாம் அறியும் இவள் கவிதை மென்மேலும் உயரும்.

பிற்போக்கு தனமான மதவாத கொள்கைகளும்
நீதிநெறி பிழைக்கின்ற அரசுகளும்
பாவிகளை கொல்கின்ற வகை சொன்னீர்
மனமுருக்கம் கவிதை இது ------- 

யாருக்கெடுத்துரைப்போம்???


மாநுடத்துள் மனிதம் மாண்டுபோ ன‌தோ
மாநிலத்தில் தூய்மை ஓய்ந்துபோ னதோ
நீதியிடத்தில் புனிதம் நலிந்து போ னதோ
நன்மைகளோ டியொழிந்து கொண்டதோ...
வறுமையி னவலம் வயதையும் மறைத்தது
வயிற்றை நிரப்பிட விமான மேறியது
அருமைகள் பலவிழந்து அபலையாய் குலைந்தது
அமுதூட்டியதே யமனாய் வந்தது...
சட்டத்தின் கரங்கள் சாட்டையா யடித்தது
சாஸ்திரங் காட்டியே சமத்துவங்கள் மரித்தது
திட்டங்கள் ஒவ்வொன்றும் திமிறி வெடித்தது
தீமைக்கு அஞ்சாது தீர்ப்பளித்தது...
குற்றஞ்செய் தவரெத்தனையோ கொழுத்திருக்க‌
குழந்தை நெஞ்சத்தை குதறி யெடுத்தீர்
பெற்றமனமும் பெருங்கல்லாய்ப் போக‌
பெரும்பாவமல்லவோ புரிந்தீர்...
ஆயிரமாயிரம் அபலைகள் ஆரியவதிபோ லங்கே
ஆணிகளும் அநியாயங்களுமேற்றி அல்லலோடு வந்திறங்க‌
அவருக்கெலாம் நீதியின்கண் இருட்டில் குனிந்ததோ
அறியாமைக்குத்தான் சட்டம் நிமிர்ந்திடுமோ...
ஆய்ந்து தீர்த்திடா அத்தனை நீதிகளும்
ஆறாத ரணமாய் சரித்திரஞ் சொல்லுகின்றது
மாய்ந்தவர் இயேசுவும் மண்ணுக்குள்பல் லாயிரமுயிர்களும்
மாறாத சாட்சிகளாய் ஓலமிடுகின்றது...!!

Wednesday, January 16, 2013

கவிதாயினி சுஹைதா மசூர் அவர்களின் இல்லத்தில்

VAJEERA, SUHAIDHA, FAYIZA ALI, HIDAYA & SUGA

02,03,04 ஜுன் மாதம் 2012 கொழும்பில் நடைபெற்ற உலக தமிழ் இலக்கிய மாநாட்டில்

01.


02.



03.

கவிஞர் கிண்ணிய அமீர் அலியின் 'மனையாளும் மறுபதிப்பும்' கவிதை நூல் வெளியீட்டின்போது...

கூட்டத்தில்...



கூட்டத்தில்


புரவலர் ஹாசிம் உமர் அவர்களிடன் நூலினை பெற்றுக்கொள்ளும்போது


Shamila, Hidaya Rizvi, & Suhaidha mazoor


22nd of January 2012

22nd of January 2012

கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்களின் இல்லத்தில்....


16.01.2013


Mrs. Najmul hussain, Kalaimahal Hidaya Risvi with me

ஸர்மிளா ஸெய்யித் அவர்களில் 'சிறகு முளைத்த பெண்' கவிதை நூல் வெளியீட்டின்போது....



முதல் சந்திப்பு....


16.01.2012 அன்று மாலை 3 மணியளவில் கொழும்பு ஆமர் வீதியிலுள்ள குளிர்பானக்கடையொன்றில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, கவிஞர் அமல்ராஜ் ஆகியோருடன் எனது முதல் சந்திப்பு....  







கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்....













Sunday, January 13, 2013

மித்திரன் வாரமலரில் 19.12.2012 அன்று பிரசுரமானது


புதிதாய் பிறந்தவள்












ஆடிப்பாடி மகிழுவோம்




பூமியில் பாவங்கள் பெருக்கிற்று
புனிதங்கள் அதனோடு ஒழிந்திற்று
பாதாளம் விரைவாய் எழுவதற்குள்
பாலகன் இயேசுவே அவதரித்தார்

அகிலத்தை ஜனிப்பித்தவர்
தொழுவத்தில் ஜனனித்தார்
எளிமையின் புனிதத்தை
எல்லோருக்கும் சமர்ப்பித்தார்

மாநுடத்தாயில் கருவில்
மகத்துவதேவன் வந்துதித்தார்
தன்னுயிரை ஈந்திட தரணியில்
தாழ்மையின் தனயனாய் வெளிப்பட்டார்

வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
உலகுக்கு அன்பான குருவானார்
அழிவின் பாதையை உணர்த்திட‌
அவரே கருவில் உருவானார்...


ஆடிப்பாடி மகிழுவோம்
ஆனந்தத்திருநாளை கொண்டாடுவோம்
ஆண்டவர் இயேசுவின் அன்பதின்
ஆற்றலை நாமும் பெற்றிடுவோம்


நல்ல தீர்மானங்கள் கொண்டிடுவோம்
நாளும் அதனுடன் வளர்ந்திடுவோம்
உலக இன்பங்கள் வெறுத்திடுவோம்
உன்னத நிலையதில் நடந்திடுவோம்!!


(19.12.2012 அன்று பிரசுரமானது)








Saturday, January 12, 2013


01.என்னை யொரு வரும்
புரிந்துகொள்ளாததால்தான்
மற்றவர்களை யென்னால்
புரிந்துகொள்ளமுடிந்தது
உண்மைதான்
தோல்விகளெல்லாம் மரணமல்ல‌
வெற்றிக்கான விதைகள்!!


02.தப்பு செய்தாலும் உன்னை
திட்டுவதற்கு என்னைதவிர
எவரையும் அனுமதிக்கமுடிவதில்லை
தண்டிக்கவும்
அண்டிக்கொள்ளவும் 
எனக்குமட்டும்தான் உரிமையென்று
சுயநலமாகவே இருக்கின்றேன் நீ
இல்லையென்று தெரிந்தபின்பும்

Tuesday, January 8, 2013

நம்பிக்கையுண்டு


என்னை
பிரிந்துபோனாய் என்று
வருந்தவில்லை
புரியாமல் போய்விட்டாயே
என்பதில்தான் வேதனை
எப்படியும் நலமாயிருக்கு முன்
எதிர்காலம் எனக்கு
என் பிரார்த்தனையில் நம்பிக்கையுண்டு

உன்னைப்போல‌


நீருக்குள் விழுந்த குழந்தையாய் உன்
நினைவுகளுக்குள் நான்
மீளமுடியாதவளாய்...

எந்த நொடிகளை 
கரைத்துவிட நினைக்கின்றேனோ
அந்த நினைப்புக்களே என்
நிம்மதிகளை கொலைசெய்துகொண்டிருக்கின்றது

தூரத்தில் தொலைந்திடவே எத்தனிக்கின்றேன்
துரத்திக்கொண்டே வருகின்றது
நம் கடந்தகால பசுமைகள்

உன்னை மறாந்துவிட்டால்
என் ஜீவன்
சுவாசம் சுமக்குமா என்பதின்
ஐயம் இன்னும் தீரவில்லை...

நேசம் இத்தனை நிந்தையென்றறிந்திருந்தால்
நானும் கா த(ழி)லித்திருந்திருப்பேன்
நேசமில்லாமல் 
ன்னைப்போல‌....!!!!!  


Saturday, January 5, 2013


நின்றால் நடந்தால்
நினைவெல்லாம் நீதான்
இருந்தால் எழுந்தால்
இதயத்தில் சுகந்தான்
வந்தாய் நிறைந்தாய்
வழியெல்லாம் நிழலாய்
இணைந்தாய் கலந்தாய்
வாழ்வினில் துணையாய்!!

பேனா சிந்திய கண்ணீர்
தானாய் கவிதையானது
நானாய் சிந்திய கண்ணீர்
வீணாய் உதிர்ந்துபோனது

நானும்
சோதிடக்காரனைபோல
நேரத்தை கணித்துக்கொண்டிருக்கின்றேன்
நீ வரும்
நாட்களை எண்ணியெண்ணி

சிலநட்கள் மட்டுமே
தாங்கிய காம்பு
தாங்காத வலியோடு பார்த்தது
தன்னைவிட்டு உதிரும் மலரை
விட்டுவிடவும் முடியாமல்
ஒட்டிக்கொள்ளவும் முடியாமல்

எல்லாரும் சொன்னர்கள்
என்வாழ்க்கை இதுவென்று
எல்லாமவன் சொன்னது
ம(ண)ண்வாழ்க்கை மாயையென்று

முகத்திரை கிழியுமட்டும்
எல்லாரும் அழகானவர்கள்


அன்பும் பொறுமையும்
அகிலத்தை வெல்லும்
ஆயுதங்கள்

இணையாத 
இருகோட்டுகளை
இணைப்பது காதல்
இதயம் தவிர எதையும்
இணங்காணாதது காதல்

நல்லதையே
விதையுக்கள்
அறுப்பது உங்கள்
பிள்ளைகளாகக்கூட இருக்கலாம்!!

தோல்விகள் அழிவுக்கல்ல‌

      உண்மை 
      ஊமையாயிருந்தாலும்
      உயிரோடு வாழும்
      பொய்மை
      போரிட்டு எழுந்தாலும்
      பொசுக்கென்று மாளும்!!



விழுகின்ற நீரால்தான்
வெளிச்சத்தை தரமுடிந்தது
குனிகின்ற கிளையால்தான்
கனிகளை தாங்கமுடிகின்றது
புதைகின்ற வேரால்தான்
புரட்சிகளை காணவியல்கின்றது
விழுகின்ற அடியால்தான் உன்னால்
வாழ்க்கையை அறியமுடியும்
எழுகின்ற துணிவினால்தான்
மனிதனாய் மிளிரமுடிகின்றது


     ஒவ்வொருமுறையும்

     மறந்தேபோகின்றேன்
     உன் நினைவுகளை
     மறந்துபோவதற்கு!



கடுஞ்சொற்களெனை காயப்படுத்தவில்லை
சுடும் பார்வையதும் கலங்கச்செய்திடவில்லை எங்கேனும்
நெஞ்சிலெட்டியுதைக்கும் குழந்தையை
நஞ்சூட்டிக்கொன்றிடுந் தாயுண்டோ??



     உதடு துடிக்கும்
     உண்மைக்காய் வாதாட‌
     உள்ளம் துடிக்கும்
     உறவினை காப்பாற்ற‌....



கடந்து வந்தவைகள்
பரீட்சையாக இருக்கட்டும்
கடக்க இருப்பவை
பெறுபேறாக மலரட்டும்!!


    தோல்விகள் அழிவுக்கல்ல‌
    அநுபவத்திற்கு
    வெற்றிகள் ஓய்வுக்கல்ல‌
    ஊக்கத்திற்கு!!


காயங்களே மருந்தாகும்
தோற்றுப்பார் காதலில்
சாயங்களே வானவில்லாகும்
வென்றுபார்!!










Thursday, January 3, 2013

தண்டவாளங்களாகவே இருப்போம்




அடிக்கடி தேநீரருந்துகின்றேன்
ஆகாரத்தை தவிர்த்து
மனம் நிறைந்துவிடுகின்றது
உன் நினைவுகளால்...

இப்போதெல்லாம்
கைக்குட்டை பாவிப்பதில்லை உன்
விரல்களின் ஞாபகங்கள்
ஈரமாகவே...

எனக்காய் ஒதுக்கும் அந்த‌
இருதிபிடிச்சோறு இன்னும் நீ
வைப்பதாய் நினைத்துக்கொள்கிறேன்
பசிக்கும்போதெல்லாம்...

என் ஆடைத்தெரிவுகள் கூட‌
உன்னிடமுள்ள நிறங்களில்
மட்டுமே...

இறந்துபோன என்
எதிர்காலத்தைவிட‌
நிஜமான நம் இறந்தகாலம்
எத்தனை அழகானவை...

உன்னை நான் திட்டிடும்
செல்லப் பெயர்கள் நினைவிருக்கின்றதா
அவலட்சணமாயிருப்பினும் அவை
எத்தனை அன்பானவை...

இப்படியே நீண்டுசெல்லும்
நம்முடைய நாட்கள் 
நிஜமாய் ஆழமானவைகள் -ஏனோ
ஆயுள்மட்டும் அற்பமானது...

நிழலாய் இருந்திடத்தான்
ஆசைப்பட்டேன்  -நீயோ
நிலவாக இருப்பதில்தான்
ஆனந்தங் கொள்கின்றாய்...

விட்டது பீடையென்றுதானே
விலகிப்போனாய்
தொட்டது காதலென்று
விளங்காமலா போனாய்...

பரவாயில்லை நாம்
தண்டவாளங்களாகவே இருப்போம்
நம் உறவுகளின் 
கனவுகளாவது பயணிக்கட்டும்!!


"அக்குரோணி"க்கு (06.04.2011)


விமர்சிக்குமளவுக்கு-இச்
சிறியவளின் சிந்தையில்
சிறப்புக்கள் ஒன்றுமில்லை
தோன்றியதை சொல்கின்றேன்
பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளுங்கள்

"அக்குரோணி"க்கு

ஆழமான கருத்து கூறி
ஆரம்பித்த-இக் கவித்தொகுப்பின்
ஒவ்வொரு கவியும் படைபலத்துடன்
ஊடுருவியது மனதில்
ஒவ்வொன்றாய் எடுத்தியம்ப-காலநேரம்
ஒவ்வாமையில் முரண்படுகிறது...
'நானும் மரங்களும்'
கவிஞர் வைரமுத்துவின் கவியை
நினைவிற்கிழுக்கிறது
'சிறுபான்மை குடியானவனின் சிறுமடல்'
'சாதீ-தீ-தீ'
'யாதுமாகி நின்றாய்'
'என் செல்லமே'
'ஜனநாயக அடிமைகள்'
'நானும் மரங்களும்' என
ஒவ்வொன்றையும் உற்று வாசித்ததில்
உணர்வுக்குள் பட்டென்று அமர்ந்து கொண்டது!
தமிழும் காதலும் சமூகமும்
தாராளமாய் தொனிக்க-உங்கள்
எழுத்தின் முதிர்ச்சியில்
மனிதம் மிளிர்கிறது!
வளமான உங்கள் கவிப்பயணத்துக்கு
களமாக மனித்தை கொண்டு
பலமாக சமூகத்தை நோக்கி-கவியை
திடமாக தொனிக்கச்செய்ய
இன்னும் முயற்சியில் வெற்றி பெற
வாசகர்கள் சார்பில் -என்
பிரார்த்தனையுடன் கூடிய
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
கவித்தோழரே!!!

Tuesday, January 1, 2013

  • தப்பு செய்திடவும்
         தப்புத்துக்கொள்ளவும்
        ஆயிரம் வழிகள் அகிலத்தில்
        அகலத்திறந்து கிடப்பினும் துளியேனும்
        இறையச்சம் மனதிலுறைந்தால்
        மனிதம் தளைத்துக்கொள்ளுமாம் மாநுட‌
        அன்பு நிலைத்துநிற்குமாம்

  • உள்ளார்ந்த நேசம்
         நொடிக்கொருதடவை இல்லையென்றாலும்
        அடிக்கொருதடவை நினைக்கத்தோன்றும்


  • துரோகத்தை தாங்கும் திடமும்
          துரோகியை மன்னிக்கும் மனமுன்
          உன்னிடமென்றால்
          உன்னை மிஞ்சிய மனிதமுமில்லை உன்
          குணத்தை விஞ்சிய புனிதமுமில்லை!!

  • அந்த இதயச்சுவரில்
          இந்த நினைவோவியத்தின்
          ஒற்றை கோடுகூட‌
          வரையப்பட்டிருக்கவில்லை
          வெறுமையாயுணரப்பட்ட ஓவியம்
          வெண்மையினால் தன்னைத்தானே
          தீட்டிக்கொண்டிருக்கின்றது!!


  • நிழல்கூட இருளில்
உனைவிட்டு நீங்கும்
அணையா நிலவாயென்
அன்புனை தாங்கும்!!


  • மனம்விட்டு எழுதுகின்றேன்
மனம்விட்டுப்போனதால் எழுதுகின்றேன் -எனையுன்
மனம்விட்டுவிட்டுப் போனதால் எழுதுகின்றேன்!!

  • வழியில் 
ஆயிரம்பேரை சந்திக்கலாம்
ஆனால் நம்பயணமோ
ஒரே பாதையில் மட்டுமே
இருந்திடல் வேண்டும்!!


  • காமநோய்க்கு
காதலை மருந்தாக்காதீர்கள்
காதல் புனிதமானது
நேரங்கடத்துவதற்காய்
நேசத்தை விலைபேசாதீர் சிலநேரங்களிலது
ஒருகுடும்பத்தின் வரலாற்றையே
வேறோடழித்துவிடலாம்
நேசம் நிஜமானது!!



  • என் எதிரிகளைவிட‌
துரோகிகளை நேசிக்கின்றேன்
என்னையவர்கள்
புதைத்துவிட்டு போனதால்தான் இன்று
முளைத்துக்கொண்டிருக்கின்றேன்


  • கீழே கிடப்பதெல்லாம்
குப்பைகளுமல்ல‌
மேலே உயர்வதெல்லாம்
கோபுரங்களுமல்ல‌

ஊடறு இதழில்


   





தமிழ் மிர‌ர் இதழில்


http://tamil.dailymirror.lk/2012-04-05-07-09-13/39780-2012-04-23-09-14-38.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்


http://www.tamilauthors.com/03/358.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்


http://www.tamilauthors.com/03/362.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்


http://www.tamilauthors.com/03/370.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்


http://www.tamilauthors.com/03/393.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்

http://www.tamilauthors.com/03/406.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்

http://www.tamilauthors.com/03/413.html

தமிழ் ஓதர்ஸ் இதழில்


http://www.tamilauthors.com/03/480.html

வார்ப்பு இதழில்


http://www.vaarppu.com/view/2570/

வார்ப்பு இதழில்


http://www.vaarppu.com/view/2432/

தமிழ் ஓதர்ஸ் இதழில்

http://www.tamilauthors.com/03/340.html

ஊடகம் இணைய இதழில் வெளியான கவிதை

http://odagam.com/2011/03/pularum-vidiyalum/