Monday, December 24, 2012


தேடிக்கொண்டே இருக்கின்றது!!




தேடலின் பயணத்தில்
வேகத்தின் பிரயாசங்களில்
வெற்றுப்பிம்பமாய்
விழுந்துதெறிக்கின்றது மனம்...

ஓடியோடி களைத்த கால்கள்
தேடித்தேடி கனத்த இதயங்கள்
இறுதியில் பற்றிக்கொண்டதாய்
எதுவுமே இல்லாமல்...

மலரை நுகரும் வண்டுகளாய்
மாறி மாறி பறந்துதிரிந்தும்
மனதுக்கு இதமாய் எதுவும்
இன்னுமே கிட்டவில்லை...

கோடிக் கோடியாய் 
கொட்டிக்கிடந்தும்
மாடி மாடியாய் 
ஏற்றங்கண்டும் இதுவரை
முழுமையாயதனை அடையவில்லை...

அறிவுக்களஞ்சியங்கள் 
அகிலத்தை ஆண்டாலும்
அகக்கலையகத்தை 
ஆண்டுகொள்ள அவையின்னுமே
கிட்டிச்சேரவில்லை...

நேற்றைய பொழுதுக்காய்
இன்றைய பொழுதுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்
நாளை பொழுதுகள்
அடைந்துகொள்ள முடியாமல் 
தேடிக்கொண்டே இருக்கின்றது
நிம்மதியெனும் ஜீவ ஊற்றினை... 

(பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகை டிசம்பர் 2012 மாத இதழில்  வெளிவந்தது)


முட்க‌ள் முளைக்குஞ்சாப‌ம்!!

வாழ்க்கை ஒரு நாடக மேடை
வாழ்தல் அதில் வேடக்காட்சி
உறவுகள் இங்கு பாத்திர அமைப்பு
உரிமைகள் எல்லாம் பொய்யின் அமைப்பு...

உன்னகை வெறும் அலங்காரச் சாயந்தான்
எண்ணினால் ஒவ்வொன்றும் பிரம்மையின் வடிவம்தான்
நட்பெல்லாம் வெறும் நேரக்கடத்தல்தான்
உட்பொருள் ஒன்றிலா மாயக்கிடக்கைதான்...

அன்பென்ற பொருளோ அட்டைப்பட புகழ்ச்சிதான்
ஆழமா யூடுருவா ஆயுள்ளில்லா பூச்சிதான்
வம்பென்றே விலகிடும் வலிமையில்லா உறவுதான்
நம்பிநீயும் சென்றிட்டால் வாழ்க்கையுனக்கு வலியேதான்...

பாசமழையில் நனைத்திடும் வார்த்தையெலாம் பொய்மைதான்
வாச‌ம்வீசும் ம‌ல்லைகையாய் ம‌ல‌ரும்நேச‌ம் வெறுமைதான்
தேச‌ச்சுவ‌ரில் ம‌னித‌மெலாம் தோற்றுப்போன‌ காய‌ந்தான்
நேச‌க்கொடிக‌ள் வ‌ள‌ர்த்துவிட்டால் முட்க‌ள் முளைக்குஞ்சாப‌ந்தான்...!!!

Monday, December 10, 2012


"ஒரு சுறங்கை பேரீச்சம் பழங்கள்" சிறுகதை தொகுதியில் என்னை


 பாதித்தவை பற்றிய சிறுகுறிப்பு





 யாத்ரா' கவிதை இதழின் ஆசிரியரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளரும், அறிவிப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் மொழி பெயர்ப்பு இலக்கியமான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதை தொகுதியானது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட அரபுமொழியில் பிரசவமான மூலக்கதைகளாகும். அதனை  தமிழிலக்கிய உலகுக்கு மொழிபெயர்த்து தந்துள்ளார் நூலாசிரியர்.

நூலின் முன்னுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் லறீனா  அப்துல் ஹக் அவர்கள் அருமையாக ஆழமாக தந்திருப்பது, வாசலிலேயே வண்ண அலங்காரங்களுடனும் ஆனந்தத்துடனும் கிடைக்கும் வரவேற்புப்போல மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. நூலாசிரியர் பற்றியும் ஏனைய மொழி இலக்கியங்கள் பற்றியும் , இச்சிறுகதை பற்றிய விமர்சனமாகவும் தனது முன்னுரையை விரிவுபடுத்தி அழகுபடுத்தியிருப்பது இந்நூலுக்கு கிடைத்த மகுடமாக காணப்படுகிறதெனலாம். அதேவேளை நேர்த்தியான, தொகுபிற்கு பொருத்தமான அட்டைப்படமும் நூலுக்கு வலுசேர்த்திருக்கின்றது.

ஏனைய மொழி இலக்கியங்களை நாம் தரிசிக்கமுடியாமக்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறான இலக்கியங்களை நாம் வாசிக்கும்போது அது எமது இலக்கிய வளர்ச்சிக்கும்  வாசிப்பிற்கும் மிகுந்த உறுதுணையாக காணப்படுவதோடு பல்வேறுவகையான வார்த்தை நுட்பங்களையும் கலையம்சங்களையும் எமக்குள் ஊடறுத்துக்கொள்ள உதவுகின்றது.அப்பேருதவியை தமிழுக்கு தந்த நூலாசிரியரை வாழ்த்துவதோடு நன்றியினையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.

மொழிபெயர்ப்பு எனும் அம்சமானது மிகப்பெரிய சவாலான விடயமே.'கரணம் தப்பினால் மரணம்' எனும் கூற்றுக்கிண‌ங்க மிகுந்த அவதானத்தோடு மேற்கொள்ளப்படவேண்டியது. இப்பாரிய விடயத்தினை ஆசிரியர் மிகத்திறம்பட ஆற்றியிருக்கின்றார் என்பதனை இந்நூலை வாசிக்கும்போது எம்மால் புரிந்துகொள்ளமுடிகின்றது.

இச்சிறுகதை தொகுதியில் முத்தான பத்து சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.'கதையை படித்து முடிந்ததும் கூட அதன் தாக்கத்திலிருந்து யாராலும் உடனடியாக வெளிவர முடியாது' எனும் ஆசிரியரின் முன்குறிப்பு கூற்று மிகச்சரியானதே. ஏனெனில் இந்நூலை வாசித்துமுடித்த எனக்குள்ளும் அந்ததாக்கம் இளையோடியதை எனது அநுபவத்தினூடாக நான் கண்ட உண்மை.அதிலும் குறிப்பாக 'கருப்புப்பூனை' எனும் கதையே என்னை வெகுவாகப்பாதித்தது என்பதனையும் கூறவிரும்புகின்றேன்.

'விசர்நாய்க்கடி'என்ற முதலாவது சிறுகதை ஈராக்கின் அதிபர் சாதாம் ஹூசைன் ஆட்சிக்காலத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. அதாவது ஓர் அடக்குமுறையுடன் கூடிய தான்தோன்றித்தன ஆட்சிமுறைமையினை மிகத்துல்லியமாக வெளிப்படுத்திநிற்கின்றது.
'புகையிரதம்' என்ற இரண்டாவது கதையும் யுத்தக்கொடூரத்தின் பிரதிபலிப்பை சிறுவர் பாத்திரப்படைப்பினூடாக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிற்குமளவிற்கு ரசனையோடு ஆக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பினை அதிகரிக்கச்செய்யும் சூட்சுமமாக கையாளப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேயுரிய விளையாட்டுத்தனங்கள், இயல்புகள் என்பனவும், கதை நகர்ந்துசெல்லும் விதமும் மிக ரசனை. கதையை வாசித்து முடித்ததும் குழந்தைகளை நினைத்து வருந்தாமல் இருக்கவே முடிவதில்லை.

'விற்பனைக்கான அற்புதங்கள்'சிறுகதை நகைச்சுவை ததும்பும் விதத்தில் "ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்" என்பதனை அருமையாக விளக்கியிருக்கும் இக்கதை மிகுந்த படிப்பினையை சொல்லியிருக்கின்றது. நூலின் பெயர்சொல்லும் 'ஒரு சுறங்கை பேரீச்சம்பழங்கள்' எனும் கதை 'மண் பொன் பெண்' எனும் மூன்று அம்சங்களில்  'பெண்' பற்றியதான மோகத்தின் இழப்பீடு பற்றிய மிக ஆழமான கருவை அற்புதமாக நகர்த்தியிருப்பதும் இக்கதையில் வரும் பாத்திரப்படைப்புக்களும் சுவாரஸ்யத்தை தருகின்றது.

'காஸாவிலிருந்து ஒரு கடிதம்' மனதை உருக்கும் அற்புதமான கதை. சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய நண்பனுக்கு எழுதப்படும் கடிதமாக இக்கதை செல்கின்றது. யுத்தத்தின் எதிரொலிகளையும் எது நடப்பினும் சொந்தமண்ணை விட்டு வெளியேறத்துணியாத காட்சியமைப்பும் நெஞ்சத்தை நெகிழச்செய்கின்றது.'கருப்புப்பூனை' முற்றிலும் மாறுபட்ட சுவாரஸ்யமான விடய‌த்தினை செதுக்கியிருக்கின்றது. எத்தனையோ ஆவி சம்பந்தமான கதைகளையும் உண்மைச்சம்பவங்களையும் படித்திருப்போம். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டு நிற்பது இவ்வாறான ஏனைய மொழி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கச்செய்கின்றது என சொல்லலாம்.

இவ்வாறு 'சிவப்புப் புள்ளி' எனும் தலைப்பில் பெண்களின் அடிமைத்த‌னங்கள், திருமணம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக 'நெடுநாள்வாசி' என்ற தலைப்பில் சிறைவாசம் அநுபவிக்கும் ஓர் இராணுவ வீரனது கதையாகும். அவன் சிறை செல்லும் விதமும் சிறைக்குள் நடக்கும் சமபவங்களுமாக தொடர்கின்றது. இறுதி முடிவு நல்ல சுவாரஸ்யத்தோடு முடிவடைகின்றது. பார்க்கப்போனால், நாட்டிலுள்ள கல்விமான்கள், அரசியலுடன் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட ஆளுமை மிக்கவர்கள் இச்சிறையில் இருப்பது ஆச்சரியமாயும் வேதனையான விடயமாகவும் கணப்படுகின்றது. அதேவேளை இக்கதையில் அதிகமான பாத்திரப்படைப்புக்கள் காணப்படுவது  'சிறுகதை' என்ற தரத்தை மீறிவிட்டதோ என எண்ணத்தோன்றிற்று.ஆனால் சுவாரஸ்யம் குன்றாமல் வாசகரை சலிப்படையச்செய்யாமல் நகர்ந்தவிதம் பாராட்டச்செய்தது.

"ஒரு சுரங்கை பேரீச்சம்ப‌ழங்கள்" மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும். வேற்றுமொழி இலக்கியங்கள் மீதான ஈர்ப்பினை அதிகரிக்கச்செய்ய்யும் ஒவ்வோர் சிறுகதையும் தனித்தனிச்சிறப்புடன் காணப்படுவதோடு ஒவ்வொரு கதையின் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களை தந்திருப்பது பொருத்தமானதாகவும் மிகப்பிரயோசனமானதாகவும் காணப்படுகின்றது. அரபுதேசத்து மக்களையும் அவர்களின் கலாச்சாரம், பண்புகள், குணாதிசயங்கள், உணவுவகைகள்,ஆளுமைகள், என ஓர் நீளமான அநுபவத்தினை இந்நூலினூடாக பெற்றுக்கொள்ளமுடிந்தது தமிழ்மொழி வாசகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். எனவே மொழிபெயர்ப்பின் மூலம் ஓர் புதிய இலக்கியவீச்சுடன் தமிழிலக்கிய வரலாற்றில் தடம்பதித்திருக்கும் 'ஒரு சுரங்கை பேரீச்சம்பழங்கள்' நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் இதுபோன்ற பலமொழிசார் நூல்களை தமிழுலகிற்கு தரவேண்டுமென்று வாஞ்சிக்கின்றேன்.



Sunday, October 28, 2012


"தாக்கத்தி" கவிதை நூலின் மீதான ரசனைவெளிப்பாடு!!


அலையோசை அலவலாவும் அம்பாறை மாவட்டத்து சாய்ந்தமருதின் மைந்தன் கவிஞர் சம்சுதீன் ஜனூஸ் அவர்களின் கன்னிப்படைபாக கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது "தாக்கத்தி" எனும் நாமம் சூட்டப்பட்ட கவிதைத்தொகுப்பு.தலைப்பிலேயே தன் உண்ர்வுகளுக்கு உயிரூட்டி சாதாரண மக்களின் வாழ்வியலோடும் இயல்பான இயற்கையான மனவுணர்வுகளோடும் கோர்க்கப்பட்ட இத்தொகுப்பை கல்முனை தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் முதல் வெளியீடாக பிரசவமாக்கி பெருமைகொள்கின்றது.

  ஆரம்பத்திலேயே ஆசிரியர் ஜனூஸ் அவர்கள் தனது கவிதையின் மீதும் அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் மிக அழகாக ஆணித்தரமாக ஒருவிடயத்தை குறிப்பிடுகின்றார். "உண்மைக்கு விலங்கிட்டும் பொய்மையை பூசி மினுக்கியும் யதார்த்தத்தை விழுங்கிவிட்டும் பொய்மைக்கால் குதிரையோடும் ஒடு 'எளவும்' விளங்காத ஒப்பனைகளோடும் பொம்மலாட்டமாட விருப்பமில்லை . எனது துயரங்களுக்கு துணைந்ன்ற நிதர்சனமான மொழியையே எனதான கவிதைகளுக்கு வரிகளாக்கியுள்ளேன். மேல்மிச்சமாய் கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை" என்ற அவரது மனவுணர்வை தொகுப்பின் எல்லா பக்கங்களிலும் உணரமுடிகின்றது. புதுக்கவிதையாக பூத்துநிற்கும் அத்தனை கவிதைகளும் வாசிப்பிற்கும் கவிதை நேசிப்பிற்கும் ஏற்றதாக யாத்திருப்பதை வாசித்தபின் நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.

 ஒரு தந்தையின் எண்ணவோட்டத்தை தன் பிள்ளையின் மீதுள்ள ஆச்சரியங்களையும் எதிர்பார்ப்புக்களையும் "முத்தல்" என்ற தனது முதல் கவிதையிலேயே மொட்டவிழ்த்திருக்கின்றார்.
    'எனதான பச்சிளம் பருவத்திற்கு
   எதிமறையாக இருக்கின்றான் மகன்
   யாம் சொல்வதை பார்க்கிலும்
   அவனிடமிருந்து
   உதிர்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையிலும்
   உயிர் தெரிக்கின்றது'

      'முத்தியது என்னால்
    எனைவிடவும் முத்தலாய் இருக்கின்றான்
    எனதான மகன்'

      என்ற வரிகளில் இக்காலத்து பிள்ளைகளின் வயதுக்கு மீறிய சிந்தனை வளர்ச்சியையும் தேடலின் விளைவுகளையும் ஒரு தந்தையாக இருந்து விளக்கியிருக்கும் கவிஞரின் நிதர்சனமான பார்வையினை  பாராட்டச்செய்கின்றது.  
"அழகான பிச்சைக்காரி" என்ற தலைப்பில் நம் சமூகத்தில் காணப்படும் மிகக் கேவலமான மனித(மிருக) வக்கிரங்களை படம்பிடித்து காட்டியுள்ளார் கவிஞர். சவுக்கடியாய் வீசப்பட்டுள்ள வரிகள் உணர்வுள்ள மனங்களை தொட்டு அவர்கள் வெட்கப்படுவார்கள் என்றால் அது இக்கவிதையின் வெற்றியென்றே வாகை சூடலாம்.
    "விரல் உரசி
    ஒன்றுக்கு பத்து ரூபாய்
    கொடுக்கும் சில விழிகளின்
   விரசமான மோகவிண்ணப்பங்களில்
   அந்த அழகான பிச்சைக்காரி
  கூனிக்குறுகிப் போகின்றாள்"
என்ற வரிகளில் அடிமட்ட எண்ணங்கொண்ட காமப்பிசாசுகளை சுட்டிக்காட்டியுள்ளார் உணரப்படவேண்டிய வரிகள்.

    இத்தொகுப்பின் பெயரிலே அதாவது "தாக்கத்தி" எனும் தலைப்பில் ஏழை விவசாயிகளின் தாக்கத்தி பற்றி கூறும் வரிகளில் நவீனத்தின் பாதிப்பையும் பழமையின் முறிவையும் அதனாலுண்டாகும் மனச்சோர்வுகளையும் வெளிப்படுத்தி வாசகனையும் வருந்தச்செய்திருக்கின்றார் கவிஞர்.இவ்வாறு ஒவ்வொரு தலைப்பின் கீழும் வாழ்வியல் யதார்த்தங்களை வரிகளாக்கி வாசகனை கவிதையின்பால் யாசகனாக்கிவிட்டிருப்பது தொகுப்பின் பெருமையே.

  காதலை தொடாத கவிஞர்களில்லை எனும்போது கவிஞர் ஜனூஸ் அவர்கள் மட்டுமென்ன விதிவிலக்கா? "எனக்குள் பேசப்படுகின்ற தேவதை" "காதல் சருகுகள்" "மரணம்+அவள்" "காதல் சுனாமி" "ஈர்ப்புவிதி" போன்ற தலைப்புக்களில் காதல் பற்றிய அலசல்களையும் காதல் வலிகளையும் வரிகளாக்கி கவிதையின்பால் ஈர்ப்பை இழையோடவிட்டிருப்பது சிறப்பு. அதேவேளை 'பெண்களை புரியவில்லை'என்ற கவிதையில் கவிஞரின் வித்தியாசமான பார்வை வியக்கவைக்கின்றது
     "எனக்கு ஏதுமென்றால் ஏங்கித்தவிக்கும்
     என் அமாவின் அன்புக்கு அர்த்தம்
     என்னவென்று புரியவில்லை" என்றும்,

     "இறுதியில்
     நான் நேசித்த காதலிக்கு
    நேற்று திருமணமாம் என்று
    யாரோ சொல்லிச் சென்றபோது
    எனக்கு என்ன செய்வதென்றே
    புரியவில்லை"
          என்றும் பெண்களை பற்றியதான சந்தேகங்களை சீராய் கோர்த்துவிட்டிருப்பது பெண்கள் பற்றியதான புரிதலில் கவிஞர் இன்னும் சந்தேக உணர்வில் இருப்பது புரிகின்றது.

  எந்தக்கவிதையை மேற்கோள்காட்டி விளக்கம் கொடுப்பதென்றே புரியவில்லை அத்தனை கவிதைகளிலும் நிதர்சனங்களை திரைவிலக்கி காட்டியிருப்பது வாசிப்பிற்கும் வாசகப்பார்வைக்கும் இதமாக இருக்கின்றது. இவ்வாறு புரட்டிய பக்கங்களில் புண்பட்ட நெஞ்சமாய் "அறிவிப்பாளனுக்கொரு அஞ்சலி" என்ற த‌லைப்பில் மனம் கலங்கியே நின்றதை மறுப்பதற்கில்லை. பலவருட நினைவுகளை முன்னிழுத்துச்சென்று வானொலி நிகழ்ச்சிகளுக்குள் ஊறிப்போன அந்த நாட்களையும் அறிப்பாளர் கனேஷ்வரன் ஐயா அவர்களின் நிகழ்ச்சியின் நினைவுகளையும் மீட்டுப்பார்த்ததில் மகிழ்ச்சியென்றாலும் அவரின் மரணசெய்தி ஏனோ மனதை நிதானமிழ‌க்கச் செய்தது.

"இறந்தும் இறவாத
உனது நினைவலைகள்
தமிழ்கூறும் இதயமெங்கும்
இரு வரிக்கவிதைகளாய்
இனியெல்லாம் நிலைத்திருக்கும்" என்ற கவிஞரின் வரிகளோடு எனது அஞ்சலியையும் ஆத்மார்த்தமாய் தெரிவித்துக்கொள்கின்றேன் மெளனமாக.

 சமூக அவலங்களில் ஒன்றான "கடன்" என்ற பிரச்சனை 'வட்டிக்காரி' என்ற கவிதையில் தலைநீட்டியுள்ளது. வெளிநாட்டு பயணத்தின் மோகம் வயதுபேதமின்றி ஆட்கொள்ளப்படுதலையும் அதனாலுண்டாகும் விளைவுகளையும் அநுபவித்தவர்களிடம் கேட்டால் புரியும். அதனை
 'பாழாய்ப்போன
வெளிநாட்டாசை படுத்தியபாடு
வட்டியினால் வந்தது
என் வாழ்க்கைக்கு
நல்ல கேடு' என்று விளக்கியுள்ளார் கவிஞர்.

  பொதுவாக சாதாரண ஒருவரின் கற்பனைக்கும் ஒரு கவிஞனின் கற்பனைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகின்றது. கல்லையும் கலையாகக்காட்டும் வித்தை, கண்ணுக்கு தெரியாத விடயத்தையும் காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை ஒரு கலைஞனில் ஆயுதத்திற்கு உண்டு. அதனை கவிஞரின் பல கவிதைகளில் ரசிக்கமுடிந்தது. "இயற்கையின் பிரகடனம்" ஷாத்தான் குடிகொள்ளும் கன்னக்குழிகள்" போன்ற தலைப்புக்களில் கவிஞரின் கற்பனை அநுபவம் கவிதையை மெறுகேற்றியுள்ளது.

 அதிகமாக ஊர்வழக்கில் கிராமத்து சாயலில் பல கவிதைகள் படைக்கப்பட்டிருப்பது நூலின் கனதியை அதிகப்படுத்தியிருக்கின்றது. அன்னையின் அன்பு, தந்தையின் அரவணைப்பு,கல்லூரி நினைவுகள், காதலின் ஸ்பரிசங்கள், வாலிபவிளையாட்டுக்கள்,கிராமத்தின் பசுமையான‌ நினைவுகள் நிகழ்வுகள்,சமூகத்தின் மீதான கரிசனைகள், யுத்தத்தின் வடுக்கள் என்று ஏராளமான மனவுணர்வுகளில் படைத்திருக்கும் கவிஞர், கவிதைகளில் ஆங்காங்கே ஆங்கில சொற்பிரயோகத்தை பயன்படுத்தியிருப்பது வாசிப்பின்போது சிறிய இடறலை உணர்ந்தேன். பல இடங்களில் நகைச்சுவை உணர்வுகளை இழையோடவிட்டிருப்பது சிறப்பாக அமைந்திருக்கின்றது.

  நான்கூறிய ஆங்கில சொற்பிரயோகமும் நகைச்சுவை உணர்வுகளுடன் சேர்ந்து இன்றைய விடலைப்பருவத்தின் 'காதல்' தரும் விளைவுகளையும்
    "சாரதா இன்டைக்கு
   'சைன்ஸ் படிக்குது
   என்ட நண்பன் நல்லதம்பியோ
  'சைக்கோ எபெக்டாகி'
 அங்கொடைக்கு நன்கொடையாய் போயிட்டான்'
                     என்ற கவிதையில் மேற்கோள்காட்டலாம். ஆனாலும் இதற்கு பதில் தருவதைப்போல  "வை திஸ் கொல வெறி" என்ற கவிதையில் ஒரு நிதர்சனமான உண்மையினை கண்டபோது வாயடைத்துப்போனேன். இங்கேதான் கவிஞர் வெற்றிபெற்று நிற்கின்றார். என்னதான் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் கொள்கைகள் கோட்பாடுகள் என கடைபிடித்தாலும் நிஜ வாழ்க்கையில் சில நெகிழ்வுகளையும் தளர்வுகளையும் சந்திக்கவேண்டியவர்களாகவே எமது சூழ்நிலைகள் பின்னப்பட்டுள்ளது.

   இவ்வாறு சிறந்த அநுபவ நூலாக காணப்படும் கவிஞர் ஜனூஸ் அவர்களின் தாக்கத்தி கவிதையை நேசிக்கும் வாசிக்கும் யாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த அநுபவத்தையும் திருப்தியையும் வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்வியலையும் கலையையும் போலிகள் அகற்றப்பட்ட நிஜங்களையும் கவிதையாக்கி தந்த கவிஞரை மனப்பூர்வமாக வாழ்த்துவதோடு இன்னும் பல படைப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்

  ந‌ன்றி
 த.எலிசபெத் (ராஜ்சுகா)

Saturday, October 6, 2012


கன்னித்தமிழாகவே...


என்னைத்தோற்றுத்தான்
உன்னை வெல்லமுடிந்தது
நான் நானாக இருப்பதை விட‌
நான் நீயாக இருப்பதை விரும்பும்
நியாயவாதி நீ...

எழுத்துக்கள் எப்படியோ-உன்
எண்ணங்கள் மட்டும்
எனக்கு முரணானவை
இதயத்துக்கு வலிக்கும்-ஆனாலுன்
இதழ்கள் அப்பாவியாயிருக்கும்
மனம் புண்படும்-ஆனாலுன்
முகம் பால் வடிக்கும்...

பெண் விடுத‌லை சுத‌ந்திர‌ம் ப‌ற்றி
உன் எழுத்துக்க‌ள் உக்கிர‌மாய்
குர‌ல் கொடுத்திருந்த‌து -உன்னுட‌ன்
சேர்ந்து உண்ணாத‌
ப‌ல‌ நேர‌ங்க‌ள் என‌க்கு
ப‌ட்டினியாய் க‌ழிந்திருந்த‌து...

ம‌ன‌ம் விட்டு பேசிய‌து ந‌ம்
ம‌ண‌நாளில் ம‌ட்டுமாக‌க்கூட‌
இருந்திருக்க‌லாம்
ம‌ன‌ம் திற‌க்கும் போதெலாம்-நீ
புத்த‌க‌ம் திற‌ந்துவைத்திருப்பாய்
இர‌வுக‌ள் ப‌க‌லாக‌வும்
ப‌க‌ல்க‌ள் இர‌வாக‌வும்
வேற்றுக் கிர‌க‌வாசிபோல‌
வீட்டுக்குள் நீ...

நான் உன் அடிமையென்ப‌தை
தெளித‌மிழில் "இவ‌ள் மெள‌னி"யென்று
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காய் ப‌ட்ட‌ம் கொடுத்திருக்கிறாய்...

கடைத்தெரு முத‌ல்
க‌ல்யாண‌ வீடுவ‌ரை என் ப‌ய‌ண‌ங்க‌ள்
பாதை வெறுக்கும்
பாத‌ங்க‌ளாக‌த்தானிருந்தது-என்
புடவை விண்ணப்பங்கள் கூட சில நேரங்களில்
புத்தகமாகத்தான் வீட்டுக்கு வந்திருக்கின்றன...

உன்னையே சுற்றும்
உள்ள‌ம‌றியாது -நீ
உல‌கையே சுற்றிவ‌ந்தாய்
அர‌ங்க‌ம் காணா ஊமைக‌விக‌ளாய்
அந்த‌ர‌ங்க‌மாயெனை புதைத்துக்கொண்டிருக்கிறேன்...

த‌னிமை சாம்ராஜ்ய‌த்தில் நான்
தலை‌மை ‌வ‌கித்தாலும்-நீ
மேற்பார்வைக்கேனும் வ‌ருவ‌தில்லை
நான் உண்ப‌தில் உற‌ங்குவ‌தில் உடுத்துவ‌தில்
உன் விம‌ர்ச‌ன‌ம் ஆம் இல்லை ம‌ட்டுமே...

த‌மிழை சுவாசிக்கிறாய்
த‌லைவ‌ண‌ங்குகிறேன்
தார‌த்தின் சுவாச‌த்தையேன்
த‌ண்டிக்கிறாய்
ப‌ரிசுக‌ளும் ப‌த‌க்க‌ங்க‌ளும் நீ வென்ற‌தாய்
ப‌டுக்கைய‌றை முத‌ல் ப‌ளிச்சிடுகிற‌து
ப‌ட்ட‌ம் கொடுத்த‌வ‌ர் எவ‌ரோ...

என‌க்கான‌ உன் விட்டுக்கொடுப்புக‌ள் இல்லை
நான் பெற்றுக்கொண்ட‌ உரிமை நீ
மீத‌ம் வைக்கும் தேநீரொன்றுதான்...

உல‌குக்கெலாம் த‌மிழூற்றிக்கொடுத்தாய்
நானின்றும் க‌ன்னித்த‌மிழாக‌வே...

Friday, September 14, 2012

பகிர்வு கட்டுரை தொகுதி மீதான ரசனை வெளிப்பாடு

  வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கணித ஆசிரியரும் எழுத்தாளருமான சீனா.உதயகுமார் அவர்களின் அண்மைய வெளியீடாக 'பகிர்வு'கட்டுரைத்தொகுதிஇலக்கியத்துள் கால்பதித்துள்ளது.முழுமையாக இந்நூலில் ஆசிரியர் உதயகுமார் அவர்கள் ஒரு சிறந்த வாசகனாய் நல்ல விமர்சகனாய் வெளிப்பட்டுள்ளார். தான் வாசித்த நேசித்த விடயங்களை மற்றவர்களோடு பகர்ந்துகொள்ளும்போது அது மற்றவர்களின் வாசிப்புத்திறனையும் வளர்த்துவிடுகின்றது அநத விடயத்தினை இக்கட்டுரை தொகுதியானது முழுமையாக மேற்கொண்டுள்ளது எனலாம்.

பகிர்வு எனும் பொருத்தமான தலைப்பும் அட்டைப்படமும் சிறப்பாக அமைந்துள்ளதுடன் நூலுக்கு அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் அவர்களின் கனதிமிக்க அணிந்துரை ம்க்கிய இடத்தினை பெறுகின்றது.புரிதலின் முழுமையினை இவ்வணிந்துரை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.அந்தவகையில் இத்தொகுப்பினை 4 பகுதிகளாக வகுத்து தனது கருத்தை கச்சிதமாக வழங்கியுள்ள தமிழ்நேசன் அடிகளாரின் பாணி நூலின் விளக்கங்களை இன்னும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளமையை முக்கியமாக குறிப்பிடலாம்.

பரந்துபட்ட வாசிப்புத்தேடலுனூடாக தான் அநுபவித்த விடயங்களை வித்தியாசமான கோணத்தில் சுவாரஸ்யமாக பகர்ந்துள்ளவிதம் நூலின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கின்றது எனலாம். 20 தலைப்புக்களில் அமைந்த கட்டுரை தொகுதியானது, "தங்கத்தமிழ் மலையின் பரகசியம்" எனு முதலாவது தலைப்பில் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்களின் இலக்கியப்பணியின் விரிவினையும் பேராசிரியரின் ஆளுமையினையும் திறமைகளையும் சிறப்பாக எடுத்தியம்பி அவருக்கு 'தங்கத்தமிழ் மலை' என்ற மகுடத்தினையும் கொடுத்திருப்பது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.

'சிரிப்பில் தோன்றிய சிந்தனை சிற்பி' என கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் பற்றியும் அவரின் திறமைகள் சாதுரியங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி சிரிப்பின் மகத்துவத்தை தனது இரண்டாவது கட்டிரையுல் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் ஆறுதிருமுருகன் அவர்களையும் அவருடன் தான் பெற்ற நட்பினையும் நெகிழ்ந்து போற்றியுள்ளார்.அதேவேளை கவிஞர் மூ.மேத்தா அவர்களின் எழுச்சிமிக்க கவிதைகளை அடையாளப்படுத்தி விபரித்துள்ளமையும் பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் பாடல்வரிகளை மேற்கோலிட்டு தனது ரசனை வெளிப்பாட்டை தந்துள்ள விதமும் லயிக்கச்செய்கின்றது. அதேவேளை ஈழத்து கவிஞர்கள் பற்றியும் அவர்களின் கவிதைகள் பற்றிய தேடலும் முக்கிய இடத்தினை பெறுகின்றது.

 'சிந்தனை செய்! சிரி மனமே' எனும் தலைப்பில் ஆங்கில ஆசிரியரான ஷெரிடன் ,ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கையினூடாக சிந்திக்கவும் சிரிக்கவும் கூடிய சம்பவத்தினை விபரித்துள்ளார். சாதியம் பற்றிய விடயத்தினை தொட்டு மிக நேர்த்தியான, சமூகம் சிந்திக்கக்கூடிய வகையில் ஆராய்ந்திருப்பது வரவேற்கக்கூடியது. சாதி ஒழிப்புபற்றிய பாடங்களும் ஆக்கங்களும் இலக்கியங்களும் அதாவது அதனை வகைப்படுத்தி தெளிவுபடுத்தும் விடங்களினால் உண்மையில் சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை என்பதனை ஆழமாக சொல்லியுள்ள விதம் நிச்சயமாக சிந்திக்கச்செய்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இவ்வாறு கல்வி, விளயாட்டு, சமூகம்சார்ந்த விடயங்கள், இலக்கிய கர்த்தாக்கள் என பல்வேறு  தளங்களில் தனது கருத்துக்களை கட்டுரையாக்கியுள்ள ஆசிரியர் ஓர் சிறந்த விமர்சகராக வெளிப்பட்டுள்ளார்.வாசகர்களை நகரவிடாது பற்றிக்கொள்ளும்படியான இவரது எழுத்து உண்மையில்  வாசிப்புக்கு ஏற்ற சிற‌ந்த ஒரு தொகுதி என்பதில் ஐயமில்லை. அதேவேளை அணிந்துரையில் குறிப்பிட்டதுபோல 'ஒரு தொகுப்பிற்குள் பலவகையான கட்டுரைகளை கொண்டுவர முயற்சித்திருக்காமல் ஒரே வகையான கட்டுரைகளை மட்டும் கொண்டுவந்திருந்தால் நூலின் கனதி இன்னும் அதிகரித்திருக்கும்'  என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

புதியதேடல், வித்தியாசமான பார்வை, சுவாரஸ்யமான ரசனை வெளிப்பாடு, இலகுவான மொழிநடை என்ற பல்வேறு அம்சங்களை தாங்கி வந்துள்ள 'பகிர்வு' கட்டுரை தொகுதியானது இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கக்கூடிய தரத்துடன் பிரசவமாகியுள்ளது. செம்மையாக அதனை தந்த ஆசிரியர் சீனா.உதயகுமார் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல சமூகத்துக்கு வரமாகக்கூடிய நூலகளை வழங்கவேண்டுமென்ற பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றேன்.


நூல்: பகிர்வு கட்டுரை தொகுதி
ஆசிரியர்: சீனா.உதயகுமார்
தொடர்புகளுக்கு:0783015144



நன்றி!

Thursday, September 6, 2012

ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால்........ 29.06.2016 கல்குடா நேசன் இணையத்தில்

ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால்...


'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று ஆடவர்களின் வாழ்வியலை, அவர்களின் வெற்றி தோல்விகளை பெண்களின் தலையில் திணித்துவிட்டு/ பழி சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்வது இந்த ஆண்களின் வேலையாகிவிட்டது. ஒருவர‌து திறமை, நற்பண்புகள், அறிவாற்றல், அநுபவம் என பல்வேறு காரணிகளால்தான் ஒவ்வொருவரினதும் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.


பெண்களால் அழிந்தவர்கள் என பார்க்கும்போது,அது ஆண்களின் பழக்கவழக்கங்கள், 'பெண்மோகம்' எனும் பற்பலான அம்சங்களால் தாங்களாகவே தேடிக்கொள்ளும் விபரீதமே தவிர இது பெண்களால் ஆனது என சொல்லமுடியாது. இதற்கு உதாரணமாக சில ஆண்களின் அந்தரங்க வாழ்க்கை அநுபவங்களை கிளறிப்பார்த்தால் நன்றாக புரியும்.

இங்கேயும் இவ்வெற்றி தோல்விகளை அண்மையில் நான் வாசித்து என்னை சிந்திக்க வைத்த  இரண்டு ஆண்களின் வாழ்க்கையினை வைத்து நம் வாதத்தினை இலகுவாக விளங்கலாம்.இவர்களின் வாழ்க்கையில் 'பெண்கள்' எனும் அம்சம் எவ்வாறு பங்குவகிக்கின்றது,உண்மையான வெற்றி தோல்வி என்பது என்ன என்பதுபற்றி அறியலாம்.


ஆண் பெண்(கணவன் மனைவி)உறவென்பது ஒருவர் பாவிக்கும் பற்தூரிகை போன்றது. இதற்குமேல் ஒரு விளக்கம் தேவையில்லை என எண்ணுகின்றேன். ஆனால் அதற்காக குறிப்பிட்ட காலம் பாவித்துவிட்டு புதிய பற்தூரிகை ஒன்றை வாங்கவேண்டுமே என்றெல்லாம் கேட்கக்கூடாது.
தெளிவுபடுத்துவதற்காக அல்லது வலியுறுத்திக்கூறுவதற்காகத்தான் அந்த உதாரணம். சரி விடயத்துக்கு வருவோம்.

நெப்போலியனிம் குதிரைப்படை வீரனுக்கும் படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் 1802ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுமாஸ் ஓர் சிறந்த எழுத்தாளர். தான் வாழ்ந்த 60 ஆண்டு காலப்பகுதியில் 1200 புத்தகங்களை எழுதி சாதனைப்படைத்த இவரே உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளன் என்றும் உலகில் எந்த எழுத்தாள‌னும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின்மூலம் சம்பாதித்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். 1823ல் பாரிஸுக்கு சென்ற இவர் எழுடுமாஸ் எழுதிய 'மூன்றாம் ஹென்றி' என்ற நாடகம் பெருமையை தேடித்தந்ததோடு மக்கள் மத்தியில் வரவேற்பையும் புகழையும் பணத்தையும் அள்ளிவழங்கியது.

இவ்வாறு தனது திறமையினால் உயர்நிலைக்கு வந்த டுமாஸ் பெண்மோகத்தினால் உயரம், குள்ளம், சிவப்பு, கருப்பு என பல வண்ணப்பெண்களின் அழகு அவரை ஆட்டிப்படைத்ததாக சொல்லபடுகின்றது. அதனால் அவரது மனைவி தனது குழந்தையுடன் அவரைவிட்டுப்பிரிந்து சென்றார் இப்பிரிவு அவரது காதல் லீலைகளுக்கு வசதியாகாப்போக எப்போதும் பெண்களின் மத்தியிலேயே காலங்கடத்தத்தொடங்கிய டுமாஸ் இப்பழக்கத்தினால் தனது அத்தனை சொத்துக்களையும் இழக்கத்தொடங்கினார். இறுதியில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாது  தனது ஆடைகளை விற்றே வாழ்ந்தார்.

'கலையின் சிகரம்' என பெர்னாட்ஷாவினால் அழைக்கப்பட்ட எழுத்தாளர் அலெக்சாண்டர் டுமாஸ் தனது முறைகேடான பழக்கத்தினாலும் கண்ணியமில்லாத பண்பினாலும் சம்பாதித்த அனைத்தையும் இழந்து கடைசியாக 1870ம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார்.


இதனை அழிவதும் பெண்ணாலே என சொல்லமுடியாது ஒருவனின் தனிப்பட்ட விடயங்களே ஆதிக்கம் செலுத்துகின்றது என அதிக விளக்கம் சொல்லாமலே விளங்கிக்கொள்ளமுடியும். அதுபோலவே இன்னுமொரு பிரபலமான ஒருவரின் வாழ்க்கை முறையை பார்ப்பதினால் அறியலாம். அவர்தான் உலகில் முதலாவது பணக்காரரான 'மைக்ரோ சொப்ட்' நிறுவ‌னத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். இவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தே இப்பெரிய நிலமைக்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.



பில்கேட்ஸை பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதால் அதுபற்றி பேசத்தேவையில்லை ஆனால் அவர்பற்றி கவிஞர் பா.விஜய் அவர்கள் தனது கவிதையில் சொல்லியிருக்கும் ஒரு விடயத்தினை நோக்குவதன் மூலம் நமது தலைப்பிற்கு தேவையான விடயத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

"கேட்ஸின் வெற்றிக்கு
ஒரு அந்தரங்க காரணம் அவர்
அறையில் வீசியதே இல்லை
அழகிகளின் வாசனை"

எத்தனை அழகான வரிகளில் எத்தனை ஆழமான, ஓர் பெரிய விடயத்தினை தெளிவாக எடுத்தியம்பியுள்ளார். இக்கவிதையில், 'அவர் அறைகளில் வீசியதே இல்லை ஒரு பெண்ணின் வாசனை' என குறிப்பிடவில்லை மாறாக 'அழகிகளின் வாசனை' என்றே குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.

இதன்மூலம் நாம் மிக தெளிவாக ஒரு விடயத்தினை விளங்கிக்கொள்ளலாம். ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால் 'ஒரு பெண்' என்று சொல்வதைவிட அவனின் திறமையும் சிறந்த பண்புகளுமே என்று கூறுவதுதான் சாலச்சிறந்தது என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்த விடயம் இந்த இருவரின் வாழ்க்கை முறைமை அதற்கு கைகொடுத்துவிட்டது. ஏதோ நான் சொல்லவந்ததை சொல்லிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி.

நன்றி!

த.எலிசபெத்












Thursday, February 16, 2012

உழைப்புக் கத‌(தை)!!!

நாலு வெத வெதக்கையில‌
நாத்து நட்டு மகிழயில‌
ஏழு ஏழ்கடலு
எழும்பி கை தட்டுதையா...

ஏர்பிடிச்சி உழுதோமுங்க‌
ஊர்செழிக்க உழைச்சோமுங்க‌
நார்நாரா போகுமட்டும்
நாட்டுக்காக விளைஞ்சோமுங்க...

கூட(டை)சொம தலையிலங்க‌
கூடக் கூட அழுத்துதுங்க‌
வாட காத்து மழையிலயு
ஓடியாடி வளையிறோமுங்க...

வேதனந்தா கூடலீங்க
வேர்வ மணம் மாறலீங்க‌
ஆதவனா உங்க வாக்கு
வந்து வந்து போகுதுங்க...

அலைமேல வலை போட்டோம்
உலைவைக்க பட காணோம்
தலைமேல பயவோட்டம்
தத்தளிப்பேயெம் திண்டாட்டம்...

சொன்னதெல்லாம் கூலிக்கத(தை)
சொத்தில்லாத உழைப்புக்கத‌
பொன்னாக மண்ணையாக்க
பொறந்த எங்க சோகக்கத...

Saturday, February 11, 2012

காதலர் தின பரிசாய்...

இல்லறத்தில் இணைதலே
காதலின் வெற்றி யென்கின்றார் அதை
இல்லையென்றெ எதிர்க்கின்றேன்...

கண்களின் மோதலாலோ இல்லை
மோதல்களிலுண்டான காதலாகவோ
எமதான நேசம் வளர்ந்ததில்ல...

முகம் பார்க்காது
குணமு மறியாது
குறிக்கப்பட்ட நாளில்
மணவறையின் வெளிச்சத்தில்
மணவாளன் கைபற்றியபோது
மனதாலுணரப்பட்ட காதல்...

புரிந்துகொள்ளுதலை வாழ்வின்
வெற்றிக்குறியாய் இணைத்துக்கொண்டோம்
மனதறிந்து நடந்திடும் வித்தைகளும்
மறுக்காம லிதயத்தில் ஒட்டிக்கொண்டது
வேண்டுமென்றால் விட்டுக்கொடுக்கவும்
வேண்டாமென்றால் விட்டுவிலகவும்
கொண்ட நேசமே கொள்கை வகுத்துகொடுத்தது...

சின்ன சின்ன ஊடல்களுக்குள்ளே
சிதறடையச்செய்யும் சிக்கல்களையும்
சிலாகித்து சிரிப்புடன் முடித்துக்கொள்வோம்
எங்கள் பந்தியில் உணவுக்கோப்பைகள்
தனித்தனி நேரங்களில் வைக்கப்பட்டதில்லை
ஒளிவுகள் எதுவும் மறைவாய்
இருந்ததுமில்லை...

வருடங்கள் பலவற்றை விழுங்கிக்கொண்ட‌
எங்கள் மணவாழ்வில்
பிளவுகளே யில்லா பிணைப்பைத்தந்த‌
படைத்தவனுக்கு நன்றியாய்
இக்கவி சாற்றுகின்றேன் -உங்களுக்கு
காதலர்தின பரிசாய் கையளிக்கின்றேன்...

கவிதைப்புரட்சி !!

மரபுச்சாதம் வடித்து
புதுக்கவி குழம்புவைத்து
வரப்போகும் கணவனுக்கு
வாய்க்குருசியாய் பங்கிடுவேனென‌
வதந்தி பரப்பிடுகிறாளென் தோழி....

புகுந்த வீட்டிலுன்
புதுக்கவியெலாம் செல்லாது
வகை வகையாய் சமைக்கும்
வசியமறிந்தி டென்கிறாளென் அக்கா...

சிந்தனைப் புரட்சியாலுன் சமூக
சீர்திருத்தமெலாம் போதும்
சந்தோஷமான குடும்பமுருவாக்க அம்மாவிடம்
கற்றுக்கொள்ளென கண்டித்தாரப்பா...

பேனையோடு எனைக்கண்டால்
காகிதங்களை பதுக்கிடும் தங்கை
பூனைபோல பதுங்கியிருந்து
புன்னகை செய்கிறாளன்பில்....

சமவுரிமை பேசுமெனக்கிங்கு
சண்டைபோடமுடியவில்லை
அமைதிகாக்க நெஞ்சமெனை
ஆணையிட்டே அடக்குகின்றது...

கவிஞர் அமல்ராஜ் அவர்களின் "பெண்களின் சுய வட்டமும் ஆண்களின் அடக்குமுறையும்" என்ற கட்டுரைக்கான எனது பதில் கருத்து

//ஆண்களை  பல  வகைப்படுத்தலாம்  பெண்கள். அதற்காக  அவர்களை  ஒரு பொதுவான  வட்டத்திற்குள்வைத்து  பொதுமைப்படுத்தாதீர்கள். பல  நல்ல ஆண்கள் வருகிறார்கள். உங்கள்  கேவலமான பார்வை அவர்களையும் மாற்றிவிடுகிறது. முதலில் ஆண்கள் பற்றிய அந்த அடக்குமுறை சிந்தனையை மாற்றுங்கள். வரும்  கணவன்  பெண்களை  புரிந்தவனாக நிற்சயம் வருவான்.//
http://rajamal.blogspot.com/2012/02/blog-post_05.html?spref=fb


 மிக ஆரோக்கியமான ஒரு ஆய்வினை பிரதிபலித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.உங்கள் கருத்தை ஆதரித்தாலும் அதனை அப்படியே ஆமென்று அமோதித்திட முடியாது ஏனெனில் அதற்கான காரணத்தை சொல்ல ஆசைப்படுகின்றேன்.

திருமணத்திற்கு பின்னரான ஒரு பெண்ணின் மனநிலையும் வாழ்க்கை முறையும் மாற்றமடைவது இயல்பு அதை எவரும் ம‌றுப்பதற்கில்லை. எப்போதும் தான் வாழப்போகும் சூழல், குடும்பம் போன்றனவே  பெண்ணின் சுதந்திரம்,உரிமை பற்றிய விடயங்களை தீர்மானிக்கின்றது.எங்களது திட்டங்கள் தீர்மானங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே ஒரு புகுந்தவீட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது ஏனெனில்,ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு விதங்களில் வேறுபட்டு காணப்படுவதே அதற்கு காரணம்.ஒரு பெண் தனது இயல்புகள் குணங்கள் திறமைகள் என்பதனை எச்சந்தர்ப்பத்திலும் இழக்க விரும்புவதில்லை மாறாக இதனை திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் தொடரமுடியுமா என்பதனை கணவனும் அவனது குடும்பமுமே தீர்மானிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையியே காணப்படுகின்றது. உண்மையில் இதனை ஆணாதிக்கப்போக்கு என்று நேரியான கருத்தாக முன்வைக்கமுடியாது என்றாலும் மறைமுகமாக இதைத்தான் காணமுடிகின்றது.

ஒரு பெண் தனது கணவனுக்கு டங்கி நடக்கவேண்டுமென விரும்புவது, ஆணுக்கு பயந்தோ அல்லது தனக்கு தானே போட்டுக்கொள்ளும் வேலி என்றோ பொருட்படாது. மாறாக தனக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கையும் குடும்பமும் ஆரோக்கியமானதாகவும் அன்பானதாகவும் உருவாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியுமே தவிர தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் தங்களை ஒரு வட்டத்துக்குள்ளே அடக்கிக்கொள்ளும் அடிமைச்சிந்தனை அல்ல.

உண்மையில் திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் தனது சுய விருப்பு வெறுப்புக்களை ஒத்திவைக்கும் போது காலப்போக்கில் அவ்வியல்புகள் ஒதுங்கிக்கொள்கின்றது என் கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன். உதாரணத்திற்கு, தனது நண்பர்களுடன் (ஆண்,பெண் நண்பர்கள்)சகஜமாக பழகுவதிலிருந்து தனது தனிப்பட்ட தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் போதும் (ஒரு புடவை வாங்குவது என்றாலும்)குடும்ப வாழ்வில் சிறு கீறல்விழ சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.இச்சிறு சிறு விடயங்களே சந்தேகம், சண்டைகள் என ஆரம்பித்து விவாகரத்து வரை கொண்டு செல்கின்றது.

இவ்வாறான உரிமைச்சண்டைகளும் பிரிவுச்சமாச்சாரங்களும் மேலைத்தேய கலாச்சாரத்துக்கு வேண்டுமென்றால் சரியாக அல்லது உரிமை வென்றெடுத்த‌
சாதனையாக இருக்கலாம்.மாறாக நாம் வளர்க்கப்பட்ட வளருகின்ற சமூகம், பழக்கவழக்கங்கள்,பண்பாட்டு கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் வேறுபட்டு கட்டுபட்டு நிற்கின்றது.
ஒரு பெண் தனது சுய விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற தலைப்படும்போது ஒரு ஆணால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை அல்லது அங்கீகரிக்கும் "பெரிய மனது" இல்லையென்றுதான் கூறவேண்டும்.இச்சந்தர்ப்பத்தில் அவர்களை சங்கடப்படுத்த கூடாது என்பதற்காகவும் அன்பான குடும்பத்தையும் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்கவேண்டுமென்ற பாரிய பொறுப்புணர்ச்சியை கொண்டதினாலுமே பெண்கள் திருமணத்திற்கு பின்னரான வாழ்வில் தனது கணவன் குடும்பத்துக்கு ஏற்றவாறு தன்னை தயார்செய்து கொள்கின்றாள். (இத‌னை எனது தாயாரின் வாழ்க்கை முறையிலேயே நான் அநுபவபூர்வமாக உணர்ந்துகொண்டேன்)

எத்தனை ஆண்கள் தனது மனைவியின் வீட்டுவேலைகளில் பங்கெடுத்துக்கொள்கின்றார்கள்? இந்த விடயத்தில்கூட சமமாக நடந்துகொள்ள தெரியாத ஆண்களிடம் நாங்கள் எப்படி எங்கள் தனித்துவத்தை காப்பாற்றிக்கொள்வது?
'ஒரு சுடுநீர்கூட வைக்கத்தெரியாது', 'சமைத்து வைக்கும் உணவையே போட்டு உண்ணவும் முடியாது' என்று எத்தனை ஆண்கள் சொல்வதை கேட்டிருக்கின்றோம் இதனைத்தான் இவர்கள் ஆண்களின் தனித்துவம் என்ரு எண்ணிகின்றார்களோ என்னவோ புரியவில்லை.

எனவே திருமணத்திற்கு பின்னரான வாழ்வில் ஒரு பெண் தன்னை தீர்மானிப்பது அவளுக்கு அமைகின்ற "புகுந்த வீடு" என்கின்ற விடயத்தை வைத்துத்தான்.இவ்வாறு பெண்கள் தங்களது சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ளவும் உரிமையினை காப்பாற்றிக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளும் முயற்சியினால் இன்று எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருப்பதை எம்மால் காணமுடிகின்றது.இதற்கு காரணம் அவள் அவளாக இருப்பதை அவளது குடும்ப சூழல் நிராகரிப்பதனால்தான். இவற்றை பார்த்துப்பழகிய எந்தப்பெண்ணும் தனக்கு வரப்போகும் கணவன் இப்படித்தான் இருப்பான் என்ற திட்டவட்டமான தீர்மானமின்றி திருமணத்திற்கு பின்னரான காலத்தில்தான் புகுந்த வீட்டு சூழ்நிலைகளை வைத்து தன்னை தீர்மானித்துக்கொள்கின்றாள் என்பதே என் தாழ்மையான கருத்து.

Saturday, January 28, 2012

மழை நதி கடல் கவிதை தொகுப்பு மீதான எனது ரசனைப்பார்வை





 "மழை நதி கடல்" எனும் இயற்கையின் நாமம் சூட்டி இயற்கையை மொழிபெயர்த்திருக்கும் மிக இயற்கையான மொழிநடையில் வாழ்வின் அங்கங்களை வடித்த ஓர் அழகிய கவிதைத்தொகுப்பு, அட்டாளைச்சேனை கவிஞர் இனியவன் இஸாறுதீன் அவர்களுக்கு சொந்தமானது. இந்த அற்புத கவிதைகளை வாசித்துமுடித்த போது மனம் ஆனந்தக்கூத்தாடியது. அத்த‌னை அற்புதம் அத்தனை அதிசயம்.
    "நான் புறப்பட்ட இடம் நீ
    உன்னிடமே வந்து
   சேரப்போகின்றேன் நீ
   எங்கிருக்கின்றாய் இறைவா? என்ற வினாவோடு தனது ஆரம்ப கவியான 'இறைவா உன்னிடம்' என்ற தலைப்பில் வினவியிருந்தாலும் கவிஞர்,
      "மழையில்
      உன் அருளைக்காண்கின்றேன்
      மின்னலில்
      உன் கையெழுத்தைக்
     காண்கின்றேன்" என இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் இறைவனை காணும் விதத்தினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையை மாத்திரம் இவரது கவிவிரல்கள் தொட்டுக்காட்டவில்லை ஒவ்வொரு உறவுகளையும் பாசப்பிணைப்புக்களையும் இந்த தேசத்தில் யுத்தம் செய்த கொடூரங்களையும் தமிழரின் அவல நிலமைகளையும் கவிஞர் பேசும்போது உணர்வுகள் கொந்தளித்துப்போகின்றது. இதனை தனது தொன்னூற்றொரு தலைப்பின் கீழும் வெளிப்படுத்தியிருக்கும் விவேகம் வியக்கவைக்கின்றது.
தாய்மையை சொல்லும் போதும் தாரத்தினை சொல்லும்போதும் கவிஞரின் கவிதைகள் எந்தளவிற்கு பெண்மையை மதிக்கின்றது போற்றுகின்றது என்பது அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
    " தாய்தான் எல்லாம்
     அவள்தான்
     இரக்கத்தின் சிகரம்
    பாசத்தின் சமூத்திரம்
    மானுடத்தின் நதிமூலம்" என்று தாய்மையினை உச்சத்தில் வைத்து போற்றும் அவர், 'தாய்','தந்தை' எனும் தலைப்பில் இருவரையும் பாடியிருக்கும் அதேவேளை 'தமிழாசிரியருக்கு' என்ற கவிதை வரிகள் எம்மையெல்லாம் நம் பாடசாலைக்காலத்திற்கே சுமந்து செல்கின்றது.

பொதுவாக கவிஞர்களின் வரிகளில் காதல் தோல்விக்கு பெண்களே காரணமென்று அவர்களை குற்றஞ்சொல்லும் அல்லது பழிக்கும் விதமாகவே கவிதை புனைதிருப்பர்கள். ஆனால் இக்கவிஞரின் கவிதைகளில் எந்த இடத்திலும் பெண்மையை பழிக்கும் வரிகளை பார்க்கவேயில்லை. இங்குதான் கவிஞரின் தாயுள்ளம் பிரகாசித்து நிற்கின்றது.இதற்கு அடையாளமாக 'மணமங்கைக்கு', 'தாரம்' போன்ற கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.
   "நான்
   குறிஞ்சிப்பூவை மட்டும்
   கொள்ளை கொள்பவன்
  ஏனெனில் அது
  மலைஜாதி மலர் என்பதற்காக மட்டுமல்ல‌
  மலர்களில் அபூர்வமலர் என்பதற்காகவும்தான்" என்றும்
      " என் பிரியமானவளே
      என் பிராணவாயுவே
      உன் கவிதை தன்னை
      என் கரங்களால் வரைந்தாலும்
      உன் மகத்துவம் சொல்ல‌
      என் கவித்துவம் போதாது" என்றும் பெண்மையை அலங்கரித்த கவிஞரை வாழ்த்துவதில் தவறேதுமில்லை.
இந்த தேசத்தை கூறுபோட்டு சிதைத்த யுத்தத்தின் காயங்களை 'மரணித்துக்கொண்டிருப்பவனா? மரணத்துள் வாழ்பவனா?' 'ஒரு கைதியின் பாடல்','சுதந்திரம்' போன்ற தலைப்புக்களில் ஆதங்கப்பட்டிருக்கின்றார்.
    "உள்ளே இருக்கவிடாமலும்
    வெளியே போகவிடாமலும்
    என்னைத்தடுக்கின்றது
   மரண பயம்" என்று ஒட்டுமொத்த அவலத்தினையும் நான்கு வரிகளுக்குள் அடக்கிவிட்டிருக்கின்றார்.கனத்துப்போன இதயத்துடன் வாசித்துக்கொண்டிருக்கையில் விழி நீர் கோர்த்துக்கொள்கின்றது. இவ்வாறு வேதனையின் விம்பங்கள் கவிதையில் தெளிக்கப்பட்டிருந்தாலும் சமத்துவத்தினையும் உரிமையினையும் சுதந்திரத்தையும் வலியுறுத்தி 'சுதந்திரம் வேண்டும்' என்ற கவிதையில் உக்கிரமக்க போரிட்டிருக்கின்றார்.
கவிஞரின் இந்த மனஆதங்கங்கள் நிறைவேறவேண்டுமென்று ம‌னம் பிரார்த்தித்துக்கொள்கின்றது.

எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு களைகளுள் முக்கியமாக காணப்படுவது சீதனப்பிரச்சனையே.இதனை விபச்சாரம் என்று கண்டித்திருப்பது
    "ஆடையணிந்து கொண்டு
    ஆபாசம் விற்கின்றோம்
    சீதனம் வாங்கியே
   விப‌ச்சாரம் செய்கின்றோம்" என்ற வரிகள் உள்வாங்கமுடிகின்றது. பெண்களை வெறும் போகப்பொருளாகவும் தேவைக்கு உபயோகிக்கும் சாதனமாகவுமே பார்க்கும் இச்சமூகத்தில் ஆண் பெண் சமத்துவத்தினை விதைத்திட மிகவும் முயற்சிசெய்கின்றார் கவிஞர்.'எயிட்ஸ்', 'கற்பு என்பது' எனும் தலைப்பினூடாக காதலின் உன்னதத்தினையும் காமத்துன் அருவருப்புக்களையும் அருமையாக படம் பிடித்துக்காட்டி பெண்மையை போற்றியிருக்கின்றார் கவிஞரின் வரிகளினூடாக சமுகம் தன்னை அவதானித்தல் சிறந்த ஓர் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப உதவிசெய்யும்.
ஆறறிவு பெற்ற மனிதனே படைப்புக்களில் உயர்ந்த படைப்பென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில் 'நெற்கதிகளே' 'மண்புழுக்களே' 'சுமைதாங்கி' 'எறும்புகளின் ராச்சியம்''மரம்' பூக்கள்' எனும் தலைப்புக்களில் அந்த எண்ணத்தினை தவிடுபொடியாக்கி விட்டிருக்கின்றார்.விலங்குகளிடமும் இயற்கையிடமும் இருக்கும் மனிதப்பண்புகள் மனிதனிடம் இல்லாததை அத்த்னை வலிமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.அதிலும் 'சிலந்தியுடன் ஒரு செவ்வி'என்ற கவிதையில் மனிதனுக்கு அருமையான போதனை சொல்லப்பட்டிருக்கின்றது.
   " விடாமுயற்சிதான்
   திருவினையாக்கும் என்பது
  எங்கள் நம்பிக்கை" என சிலந்தி சொல்லுவதாய் ஒரு ஆய்வினை செய்துகாட்டி மனிதனை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் மனிதப்பண்புகள் இருப்பதை எடுத்துக்கட்டியுள்ளார்.
கவிஞர்களால் மட்டும்தான் கவிதை எழுத முடியுமா உன்னாலும் கவிதை எழுத முடியும் என 'உனக்கும் கவிதை வரும்'என்ற கவிதையில்
"உள்ளத்தின் பாதிப்பில்
உணர்ச்சிகளின் பூரிப்பில்
உயிர்ப்புற்ற கருப்பொருளின் பாலிப்பில்
சிந்தித்துப்பார்
உனக்கும் கவிதை வரும்" என்று அனைவரையும் கவிதை எழுத அன்போடு அழைக்கின்றார். அடடா நம்மாலும் கவிதை எழுதமுடிந்துவிடுமா என வாசகனையும்கூட கவிஞனாக்கிப்பார்க்க ஆசைப்படுகின்றார். அதிலும் மனிதனின் பருவங்கள் மூன்றிலும் கவிஞனை காணும் விதம் அடடா என ஆச்சரியப்பட வைக்கின்றது.
 " கிழவனைப்போல சிந்தித்து
 குழந்தையாய் வாழும்
வாலிப மனிதன்" என்று அதனை வரிகளாக்கி எம்மையும் அதிசயப்பட செய்துவிட்டார்.
இவ்வாறு இயற்கையோடு ஒன்றிப்போன கவிஞரின் தொகுப்பின் இருதி கவிதைகள் மீண்டும் இலங்கையின் கோரமான காயங்களை தொட்டுப்பார்த்திருக்கின்றது.
" பூமி காத்திருந்தது
 பூப்பறிக்கும் விதைகளுக்காக‌
விழுந்ததென்னவோ
இரத்தத்துளிகள்" என்ரு வேதனையை வரிகளாக்கிய கவிஞர்,
 " எத்தனை துயர் வந்தாலும்
புன்னகையில்
முகம் கழுவிப்பார்
புதுப்பொழிவு உன்னில்வரும்" என நம்பிக்கையூட்டி எம்மை உற்சாகப்படுத்திவிட்டிருக்கின்றார்.புத்தகத்தின் கடைசி ஏட்டில் விரல்படும் வரையில் விரயமில்லாத ஓர் உயரிய அநுபவத்தினை தந்திருக்கும் இத்தொகுப்பின் கவிதைகள் தனித்துவத்துடன் வேறுபட்டு நிற்கின்றது.

கண்களாலே தரிசிக்கமுடியாத கரடுமுரடான வார்த்தைகளை கொண்டு புனையும் எத்தனையோ கவிதைத்தன்மையினை உடைத்துக்கொண்டு அதனை விடுவித்து, கருத்தை கவர்ந்திழுக்கும் எளியநடையில் எல்லாரும் அறியக்கூடிய வகையில் இருக்கும் மொழிநடை, வாசகனை பரவசப்படுத்துகின்றது.கவிதைகளை வாசித்து முடித்ததும் அமைதியான மன இயல்பும், திருப்தியையும் உணரக்கூடிய ஓர் அருமையான கவிதைத்தொகுப்பு இவ்வியற்கை கவிஞரின் அற்புதமான படைப்பு.

எளிமையிலே இயற்கையையும் அதனூடாக இதயத்தினையும் தொட்ட கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நன்றி
த.எலிசபெத்

Thursday, January 26, 2012

சில்லறைக்கவிதைகள்!!

01.உன் பெயரெழுதி
ஓராயிரம் முறைரசித் தேன்
என் மனதறிந்து
ஒவ்வொரு முறையும்வெட்கித் தேன்!!

02.கொடுக்கும் தலைப்பில்
எழுதும் கவிதை போல‌
நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நம்தவிப்பில் எழுதும் கவிதைபோல‌
காதல் திருமணம்...!!

03.நட்பு வளர்க்கும் கருவியென்றா
பொய்மையை பட்டைதீட்டுகிறாய்
கற்பு போன்று அன்பை வளர்க்கும்
நட்புக்கென்ன பதிலுரைப்பாய்....!!!

04.வலிந்து பெற்ற இன்பங்கள்
வழிந்து போயிடு மொருநாள்
தெளிந்து வாழ்தல் நலமே என்றும்
வலிதான் வாழ்வில் வழியே

05.உனக்கான விதிகளை உடனே செய்திடு
உதவிகள் வருமென்று நினைப்பதை மறந்திடு
தினக்கூலி யானாலும் தன்மானங் காத்திடு
தினந்தினம் வெற்றிதான் வென்றிடு...

06.ஒற்றைப் பார்வை
ஓரிரு வார்த்தைகள்
ஓராயிரம் மெளனங்கள்
விடையில்லாத வினாக்கள்
விடுவிக்க முடியாத புதிர்கள்
தொடரும் புதுமைகள்
தொடமுடியாத தூரத்தில் நீ !!!


07.உன்
நிழலாய் இருந்திடவே
ஆசைகொண்டேன் -நீயோ
எனக்கு
நிலவாய் தெரிந்திடவே
ஆவல்கொள்கின்றாய்

Tuesday, January 10, 2012

புனிதங்களை கற்றுத்தேரு!! thuruvam

ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...

தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...

பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கும்
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...

குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...

வயிறுபெருத்து வளர்ச்சி காணும்
நோய்களேராளம் எண்ணிப்பாரு
கயிறுபோல சிறுத்து நிற்கும்
ஏழைமருந்து நீர்தான் பாரு..

கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...

பிறந்தநாளும் மணந்தநாளும் தவறாது
விழாக்காணும் ரசித்துப்பாரு
மறந்துபோன எல்லாநாளும்
அன்பால் மகிழும் உணர்ந்துபாரு...

புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...


Saturday, December 31, 2011

நல்வாழ்வின் விடியலாய் பிறக்கட்டும் [2012]



கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...

பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோட‌ழியட்டும்
உக்கிர‌மான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...

ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...

கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...

வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானத‌ர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!‌

Saturday, November 19, 2011

ஊரும் உலகமும்

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்
தூக்கிவைத்து கொண்டாடுவார்
தூரப்போனதும் பந்தாடுவார்...

அன்பொழு கப்பேசுவார் அடிமனதில்
அழிக்கவே திட்டம் தீட்டுவார்
உதவி யென்றதும் யோசிப்பார்
உதவ வில்லையென்றால் தூசிப்பார்...

சொத்திருந்தால் கூடவே சேர்ந்திருப்பார்
சோறில்லா திருந்தால் சேதிகேட்டிடார்
ஊர்ப்பிள்ளைக்கு ஜோடி தேடிவைப்பார்
தம்பிள்ளை புகழ் பாடியே வைப்பார்...


ஊரிலுள்ள ஓட்டைகளையெல்லாம் தேடுவார் தம்
ஓட்டைகளை உள்ளுக்குள் வைத்துமூடுவார்
பணம் எவ்வளவும் பத்தாதென்பார்
பணத்துக்காக எதையும் பத்தவைப்பார்...

நண்பனென்றே சேர்ந்திருப்பார்
சந்தர்ப்பம் வந்தால் சேருமடிப்பார்
முகஞ்சுழிக்க பேசமாட்டார் எம்மில்
முன்னேற்றங் கண்டால் பொறுக்கமாட்டார்...

புன்னகையில் பூக்கள் மலர்த்துவார்
புற்றுப்பாம்பாய் விஷத்தையும் தெளிப்பார்
நல்லவர்களென்றே தம்மை காட்டுவார்
நாகமாயாக கொஞ்சமும் தயங்கார்...

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்

Monday, November 14, 2011

புனிதங்களை கற்றுத்தேரு

ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...


தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...


பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கு
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...


குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...


கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...


புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...

Sunday, November 13, 2011




02.சண்டித்தனத்தால் வந்ததல்ல‌
தண்டித்ததால் வந்த காதல்கணக்கு
பாண்டித்தியத்தை பறைசாற்றவல்ல இது
பாசங்களை சிதைத்த பழையபிணக்கு...


03.கண்மூடி சிந்தித்ததில்வந்த‌
கல்வியறிவில்லாக் காதல்
காலாகாலமாய் பேணுஞ்சாதிக்கு
கல்லடி தந்திடும் சொல்லடிமோதல்...



04.ஆயிரத்தில் ஒருத்தியென்றாய் என்னை
ஆயிரம் பேருக்குள் தொலைத்துவிட்டு
தொல்லையென்று தொலைத்தாயா இல்லை
தொலைவிலிருப்பதால்
தொலைத்தாயா?


05.அதிகஞ் செய் வதைவிட‌
ஆழமாய்ச் செய்வதே
இறவாம லிருக்குமாம்!!


06.நல்லதையே விதையுங்கள்
   அறுப்பது உங்கள்
   பிள்ளைகளாகக்கூட இருக்கலாம்


தீ நல்லதுதான் 

தீபமாய் எரிவதென்றால்-எழுதும்

மையெல்லாம் சிறந்ததுதான்-தீ

மையெல்லாம் அழிவதென்றால்...

Saturday, November 5, 2011

உயிரில் பூத்ததுங்க‌.....

அடியே கருவாச்சி
நாந்தூங்கி நாளாச்சி
உன்னநா சந்திச்சி
உள்மனசும் பித்தாச்சி...

வேல செய்யயில‌
வேல்விழி ஞாபகந்தான்
நாள கடத்துறேன்டி
நானுமுன கைப்பிடிக்க...

பக்கத்தில நீயும்வந்தா
பக்குனுதான் தீப்பிடிக்க‌
பார்வ ஒன்னவீசுறியே
பாவலனா நானுமானேன்...

கூலிவேல செஞ்சிடுவேன்
கூடைகூட தூக்கிடுவேன்
கூடவே நீயுமிருந்தா
குட்டி சொர்க்கம் தந்திடுவேன்...

கால நேரங்கூடிடுமா
காவல் தெய்வமேவிடுமா
சாதி ரெண்டுமட்டுமின்னு
சட்டம் இங்கவந்திடுமா...

அப்பனாத்தா சண்டையில‌
அஞ்சி நிக்குது பிஞ்சுமனம்
தப்புதான்னு புரிஞ்சாத்தா
நாம ஒன்னா சேர்ந்திடலாம்...

எட்டிநின்னு சொல்லிடுவோம்
தட்டி கேட்டு ஜெயிச்சிடுவோம்
க‌ட்டிவச்சு அடிக்கவந்தா
முட்டிதள்ளி முளைச்சிடுவோம்...

நிறத்தப்பார்த்து வந்ததில்ல‌
நிஜமாய் உயிரில் பூத்ததுங்க‌
மறக்க சொல்லி எந்திரிச்சா
மலையக்கூட சாச்சிடுவோங்க...



14.11.2011 அன்றைய "இருக்கிறம்"  சஞ்சிகையிலும்,



 தமிழ் ஓதர்ஸ் இலும் வெளியான எனது கவிதை


-நன்றி இருக்கிறம்-
-நன்றி தமிழ் ஓதர்ஸ்-

நடைமுறையிலில்லை

 தினகரன் பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை [01.11.2011]


ஆதாயமே தேடலாகியதால்
அன்பென்பதற்கு மதிப்பேதுமில்லை
பணமே வாழ்வியலாகியதால்
பண்பிற்கும் பெறுமதியில்லை...

சுயநலமே சொந்தமாகியதால்
சுற்றமெல்லாம் நினைவிலில்லை
வன்மங்களே நிறைந்து போனதால்
வசந்தமெல்லாம் நடைமுறையிலில்லை...

மன்னிப்பென் பதை மறந்துபோனதால்
மனிதமென்பது மதிக்கப்படுவதில்லை
மனங்களெலாம் சுருங்கிப்போனதால்
மண்ணில் நன்மைகள் தொடரவில்லை...

இரக்கமென்பது மறைந்து போனதால்
இதயங்களை யெவரும் காண்பதில்லை
இயலாமைகளை தோள்களில் சுமப்பதால்
இன்பங்களெலாம் அருகில் வருவதில்லை...

நட்பென்பது  தூரப்போனதால்
நகைச்சுவைகளும் இருகிப்போனது
சிரிப்புக்களை சேர்க்க தவறியதால்‍ மனித‌
சிறப்புக்க ளெத்தனையோ இழந்துபோனது...

Saturday, October 15, 2011

பட்டாம்பூச்சி கவிதை

01.சோறுபோடாத்தொழிலென்றலும்
சோர்ந்திடா எழிலிதில்
மூளை மட்டுமேயிதில்
மூதனத்தின் முதலாக‌
மொழிவளம் மட்டுமேயிதில்
பணபலமாக...
உழைப்பை உறிஞ்சிக்கொள்ளு முலக மேனோ
உழைப்பாளியை கண்டுகொள்வதேயில்லை[ எழுத்தாள‌ன்]

02.முடிந்தவரை நல்லவளாயிருக்கவே
முயற்சிக்கி றேனெனினும்
முடியாமற் போகுமத் தருணத்தில்தான்
முரண்டுபிடிக்கிறே னெனை
முதிர்க்கன்னியென உச்சரிக்கையில்...

03.என் வேர்களறுபடு மோசை கேட்டும்
வேடிக்கை பார்த்துகொண்டு தானிருக்கிறேன்
போ ரொன்று புரிந்தெழும்பிடாது
போதாத காலமென்றிருந்திட்டேன்
வாய்மையே வெல்லுமென்று...

ஓங்கி ஒலிக்கப்போகிறோம்.....



காயங்கள் காய்ந்தாலும்
வடுக்களென்றும்
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...

வெற்றிக்களிப்பில்
வீரமெனப்படுவது
மூழ்கிக்கிடப்பினும்
முறித்துப்போட்ட எம்
முழு நிலவுகளை எந்த வானம்
முழுமையாக தந்திடும்...

இருகிய இதயத்தினை
இறைவழியின் துணைகொண்டு
சுமைக‌ளின் வ‌ழித‌னை
சுத்த‌மாய் ம‌ற‌க்க‌த்தான்
நித்த‌மும் ம‌கிழ‌த்தான்
நிக‌ழ்கால‌ந்த‌னை தேடுகிறோம்...

உற‌வுக‌ளை இழ‌ந்து
உரிமைக‌ளை துற‌ந்து
ஊன‌ப்ப‌ட்ட‌போதும்
உள்ள‌த்தால் எழுந்திட‌வே -ந‌ம்பிக்கையில்
ஊன்றி நிற்கின்றோம்...

விழுந்த‌வை விதைக‌ள‌ல்ல‌ எங்க‌ள்
விடிய‌ல்க‌ள்
வான‌ம் தொலைத்த‌ நில‌வாய்
வாழ்வுத‌னை தொலைத்த‌ எம‌க்கு
முகாம்க‌ளே முகாந்த‌ர‌மான‌து
அக‌தி இல‌ச்சினையே
அந்த‌ஸ்தான‌து...

போதும் போதுமிறைவா
போகும் வ‌ழித‌னை த‌ந்திடு
புதிய‌ பாதை க‌ண்டிட‌
புத்துண‌ர்ச்சி த‌ந்திடு
புய‌ல்க‌ளை நாமும் எதிர்த்திட‌...

விடைக‌ளுக்குள்ளே
வினாவெழுப்பும் விள‌ங்காத‌வ‌ர்க‌ளாய்
விழித்த‌தெல்லாம் போதும்
ஒளிப‌றித்த‌ த‌ழைக‌ளை
ஒதுக்கிவிட்டு
ஒற்றுமை குர‌லோடு
ஓங்கியொலிக்க‌ப் போகிறோம் -சுமைக‌ளையும்
ஒழிக்க‌ப்போகிறோம்...


ஐப்பசி மாத [AUGUST] ஞானம் இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமான எனது கவிதை.

Saturday, October 8, 2011

மனக்கிடக்கைகள்.....

01.பழகிய இடமும்
புழங்கிய பொருளும்
கைமாறினால் மனம்
கலங்கியே போகுது!!

02.பொய்யுரைப்பினும்
மெய் யென்றெண்ணிடும்
என்னிடத்திலா -நீ
மெய்யாகவே
பொய்யுரைக்கின்றாய்...

03.ஒன்று மட்டும்
ஒருபோதும் உருவாவதில்லை
ஒன்றிலிருந்தே
ஒன்று உருவாகிறது!!

04.உணர்வுகளை யூற்றி வார்க்கையில் யாப்பும்
புணர்ந் தொழுகிட கூடுமோ-கனன்று
எரிந்திடும் வார்த்தை கோர்க்கையில்-மரபும்
எளிதி லொழுகிட கூடுமோ...

05.நீயில்லா ஓர்போழ்தும்
தீப்பிழம்புக்குள் மரணதண்டனை...
நீரில்லா தாமரையாய்
நிமிடத்திற்குள் வாழ்விழப்பு...
விழிக்கனல்கள் வாழ்வை
விரயமாகிடுமுன் விரைந்திடு-வசந்தத்தை
விடியச்செய்திடு....

எல்லாம் ஓர் கணக்கு

உண்மைதான் எல்லா மோர்
உண்மையேதான்...

புன்னகை செய்வது முதல்
புண்ணாக்குவது வரையில் எல்லாமே
கணக்குத்தான்...

வட்டமான வாழ்வுக்குள்ளே
எட்ட நிற்கும் அத்தனையும்
கணக்கேதான்
வ‌ரவுக்குள் மட்டுமல்ல‌
உறவுகளுக்குள்ளும் கணக்குதான்...

பணத்தை பறிமாறிக்கொள்வது முதல்
மனங்களை பறிமாறிக்கொள்வது வரையில்
கணக்குதான்...

இதயங்களும் இயற்கையும் அரித்தரித்து
இயல்புகளை இழந்துபோகையில்
மரித்துப்போகும் பண்புகளால்
கணக்கும்கூட கனத்து
கணக்காகிப்போனது உண்மைதான்
எல்லாம் ஓர் உண்மையேதான்...!!!

06.10.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

விடைகாணா ஒளிதனிலே...


இலங்கையின்
இதயமாம் மலையகம்
வியர்வை சிந்தி வருந்துவோரில்
ஒருவராம் எம்மினம்...

அதிகாலைச் சேவ‌லோடு
அந்த‌ர‌ப்ப‌ட்டு எழும்பிடு
அவ‌ச‌ர‌த்தொழிலாளிக‌ளாம்
சூரியோத‌ய‌ம் அஸ்த‌மிக்கும்வ‌ரை
சுழ‌ன்றிடும் இய‌ந்திர‌ங்க‌ளாம்...

சுழ‌ற்றிய‌டிக்கும் காற்றான‌லும்
சுடுகின்ற‌ வெயிலானாலும்
சுறுசுறுப்பாயிய‌ங்கிட‌னும் இல்லையேல்
சுடுசொல் கேட்டிட‌னும்...

ம‌ழையும் வெயிலும்
மாறி மாறி பொழிந்தாலும்
ம‌றைவிட‌மிலாது மாண்டிட‌னும்
ம‌லைக‌ளிலே
ம‌ர‌ங்க‌ளாய் நாமும் நின்றிட‌னும்...

கூடை மட்டும் நிர‌ம்பிட‌னும் அவ‌ர்க‌ளுக்கெம்
குறைக‌ள் ஒன்றும் கேட்டிடாது
பாத‌ம் க‌டுக‌டுக்க‌ பார‌மாயினும் அவ‌ர்க‌ளையெம்
ப‌ட்டினி ஒன்றும் பாதித்திடாது...

தேச‌ம் வ‌ள‌ர‌வே எம்
தேக‌ம் வ‌ருத்தினோம்
வைய‌ம் செழிக்க‌வே எம்
விய‌ர்வையினை ஊற்றினோம்...

வ‌றுமையை ம‌ட்டும் ப‌ல‌னாய்க்கொண்டோம்
வ‌ச‌ந்த‌த்தை நாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடிய‌லின் வ‌ழித‌னை தேயிலைய‌டித‌னில் தேடுகிறோம்
விடைகாணா ஒளித‌னில் தொட‌ர்ந்து(ம்)
தொலைந்தே போகிறோம்...

29.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

Saturday, October 1, 2011

சொந்தமென்று..

எத்தனைபேர் சொந்தமென்று
எவருமில்லை எனக்காக...

ஊர்ப்போய்ச் சேரத்தான்
உவகையோடு பயணித்தேன்
உயிருக்குள் உயிரையூற்றி
உள்ளன்புக்குள் உணர்வுகளை பொத்தி
உலகை வெல்லத்தான் காத்திருந்தேன்...

கண்கொண்டு திரைவிலக்கி
கனவுகளை அரங்கேற்றி
காதல் நான் வளர்த்திருந்தும்
கண்ணீர் குடத்துக்குள்ளேதான்
கண்ணயர முடிந்திருந்தது...‌

நேச‌ங்க‌ளை தேக்கிவைத்து குள‌த்து நீராய‌து
பாச‌ங்க‌ளை ப‌துக்கிவைத்து விழ‌ல் நீராய‌து...

வாலிப‌ வேட்கைக்குள்
வ‌ள‌ர்ந்த‌து சோக‌ங்க‌ள் ம‌ட்டும்
இள‌மையின் தோட்ட‌த்துக்குள்
பிற‌ந்த‌து ஏமாற்ற‌ங்க‌ள் ம‌ட்டும்...

பிற‌ப்பில் குற்ற‌ம் காண‌வே விழைந்தேன்
இறப்பில் தேற்ற‌ம் தேட‌வே முனைந்தேன்
சுற்றமெங்கும் சூனிய‌ங்க‌ளாய் உண‌ர்ந்தேன்
ம‌ற்றதெல்லாம் சூறாவ‌ளியால் சிதைந்தேன்...

எத்த‌னை பேர் சொந்த‌மென்று
எவ‌ருமில்லை என‌க்காக‌
எதைக்கொண்டு தேற்றுவ‌து
என் ம‌ன‌தின் சுக‌ம் காக்க‌...

தொட‌ர‌ட்டும்



உனக்கு மெனக்கும்
உறவுப்பாலம் ஒன்றில‌
உதவிப்பயணம் மட்டுமே
உணர்வலைகளில் ஒன்றின‌...

உதட்டோடு சிரித்தும்
உணர்வோடு பிரிந்தும்
உள்ளத்தால் துரத்தும் ஓர்
உறவறியா நிறுத்தம்...

உரிமைக‌ள் தொட‌ர்ந்தும்
ஊமைநில‌வ‌ர‌ங்க‌ள் தொட‌ரும்
உண்மைக‌ளை தொட‌
உன் நாவுமென் நாவும்
உள்ளுக்குள்ளே உறையும்...

தொட‌ர‌ட்டும்
தொட‌ரும் நில‌வ‌ர‌ங்க‌ள்
தொட‌ர்பு இல்லாத‌வையும் ம‌ன‌த்
தொடுகையில் உண‌ர‌ப்ப‌டு மென்ப‌தால்...