Thursday, May 30, 2013

எனக்குள் நான் நானாக‌

****     ****    ****    ****    ****    *****    ****    *****    ****      ****      ****     ****    ****
****     ****    ****    ****    ****    *****    ****    *****     ****     ****      ****     ****    ****


     இந்த நிமிடங்களில் என் மன அழுத்தங்கள் எனை கொன்றுபோட்டிருக்கவேண்டும் இறைவனின் மாபெரும் இரக்கத்தினால் உயிரை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றேன் என நினைக்கின்றேன். இதயத்தை திறக்கமுடியாத நிர்ப்பந்தம் எனக்கு, அப்படி மற்றவரிடம் என் உள்ளக்கிடக்கையை உடைத்துக்காட்டினால் சிலநேரங்களில் அது அவர்களுக்கு சலிப்பையோ அல்லது என்மீது வெறும் அநுதாபமோ இல்லை அவர்களுக்கு ஒரு பாரமாகவோ போய்விடும் என்ற ஒரே காரணத்துக்காக என் சுமைகளை நானே சுமக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கு அமைதியை தருகின்றது ஆனால் சிலநேரங்களில் அவ்வழுத்தங்களை குறைப்பதற்காகவே என் பேனைகளுக்கு சிரமங்களை கொடுத்துக்கொண்டிருப்பேன் அவை அநேகமாக கவிதையாகவே பதிலையும் தந்துவிடும்.  அந்த ஆறுதலே என்னை இயல்பாக இயங்கவைத்துக் கொண்டிரு க்கின்றன எனலாம்.

   சின்ன சின்ன விடயங்களுக்கும் சோர்ந்துவிடும் இயல்பைக்கொண்டாலும் அதனை அடுத்தடுத்த நிமியங்களுக்குள் மறந்திட முயற்சிப்பேன் ஆனாலும் வாழ்க்கையின் அடித்தளம் ஆனந்தம் என்று நினைக்கும் விடயங்களில் அவ்வாறான மனப்போக்கை ஏற்படுத்திக்கொள்ளமுடியவில்லை. எத்தனையோ அடிகளுக்கூடாக பயணிக்கும் என் வாழ்க்கைப்படகு சிலநேரங்களில் கவிழ்ந்து என்னை கலங்கடித்துவிடும் அச்சந்தர்ப்பங்களில் நான் மீண்டு வருவதற்கு நீண்ட நாட்களை எடுத்துக்கொள்வேன்.ஒரு சிறிய விடயத்திற்கும் என்னில் காணப்படும் அதிகமான எதிர்பார்ப்புதான் காரணமோ என்று தோன்றுகின்றது








அவ்வாறான ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்திய விபத்தை அண்மையில் சந்தித்தேன். எதை என் கனவாக, வாழ்வாக இன்பமாக இதயமாக ஜீவனாக இன்னும் உலகத்தில் மிக உயர்ந்த விடயமாக எண்ணியிருந்தேனோ அது என்னை விட்டு  நான் நினைத்திடாத அதிகதூரத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டது. வெறும் கண்ணீரால் சரிசெய்திட முடியாமல் நான் தவிப்பதும் இதயத்தின் அத்தனை வலுவையும் இழந்து நிர்கதியாக நிற்பதும் மற்றவர்களுக்கு முன்னால் என்னை சாதாரணமாக காட்டிக்கொள்வதும் எனக்கு மிகச்சிரமத்தை ஏற்படுத்தியது அப்போது மரணத்தின் ஏக்கம் மட்டுமே என்னை தாலாட்டிக்கொண்டிருக்கும் ஆனாலும் கோழைத்தனத்தின் வெளிப்பாடாக அதனை நான் அடக்கிக்கொன்றுவிடுவேன்.










  வாழ்க்கை என்றால் என்ன? அதனை எவ்வாறு வாழ்வதனால் சந்தோசமாக இருக்கமுடியும் எதனை தவிர்த்து எவ்வாறான விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் எமக்கான நிறைவை எட்டமுடியுமென்ற விடயங்களை நான் இதுவரை சிந்தித்ததே இல்லை ஏனெனில் அதனை சிந்திக்கவேண்டுமென்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அன்பான அழகான ஓர் குடும்பம் என்ற ஒன்றுமட்டுமே என்னை எந்தவித எண்ணங்களுக்கும் இழுத்துச்செல்லவிடாது தடைசெய்துகொண்டிருந்தது ஆம் வெறும் அன்பாலும் பாசத்தாலும் அரவணைப்பினாலும் மட்டுமே நிறைந்திருந்த என் குடும்பத்தாரிடம் அதிகமான பாசமும் நேசமும் கொட்டிக்கிடந்ததை இப்போதுதான் என்னால் முழுமையாக உணரமுடிகின்றது காரணம் இந்த உலகத்துக்குள் கொஞ்சம் தலையைப்போட்டுப் பார்த்ததால்தான். 





உலகம் ரொம்ப பெருசு மட்டுமில்லை ரொம்பவும் ரவுசு மிக்கதுதான் இங்குள்ள எதிர்பார்ப்புக்கள் மிக விசித்திரமாக இருக்கின்றது. ஒன்றை பெறுவதற்கு எதை வேண்டுமென்றாலும் செய்யத்துணியும் மனங்கள், வெறும் பணத்துக்காகவே பழகும் உறவுகள், நட்புகள், பா(வே)சங்கள் என பட்டியலிட்டு வைக்கலாம். இதெல்லாம் எதற்கு? ஏன் இப்படி நடந்துகொள்கின்றார்கள் என நினைக்க மலைப்பாக இருப்பதோடு வேதனையாகவும் இருக்கின்றது உண்மையான அன்பு பாசம் உறவுகளுக்கு இந்த உலகில் பெறுமதியற்றுப்போவதை நினைக்கையில் மனம் வெம்பி வெடிக்கின்றது. ஏன் எல்லா விடயங்களும் "பணம், பதவி, பகட்டுக்களுடனே முடிந்துவிடுகின்றது? அதைத்தாண்டி மனித மனங்களை உணரவும் பெறுமதியான உறவுகளை அணுகவும் முடியாமல் எதனை அடைவதற்காக மனிதம் மாண்டு மற்றவர்களையும் கொன்று வாழ்கின்றது? இந்த வினாக்களுக்கு பதிலற்று இன்றைய நாட்களில் மிகவும் மனம் குழம்பிப்போயுள்ளேன் இதற்கு விரைவில் பதில் கிடைக்குமா?????







   நான் ஏழை. என்னிடம் எந்த பூர்வீக சொத்துக்களோ, வசதிகளோ இல்லையென்பதனை முதன்முறையாக உணர்ந்த சந்தர்ப்பம் இப்போதுதான் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இதுதான் நிஜம். மூன்று வேளையும் போதுமான போஷாக்கான உணவு, ஆடைமுதல் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்த சந்தர்ப்பங்கள் கல்வி கண்டிப்பு தம்பியின் சண்டை தங்கையின் குறும்பு என் குழப்படிகள் அப்பாவின் பிரம்படிகள் அம்மாவின் அனுசரிப்பு என்று அனைத்தும் அளவாக என எங்கள் மட்டத்தில் ஒரு வசதியான வாழ்க்கை. எதிர்காலத்திற்கென எதனையும் சேமிக்காத குறைகூட இன்றுதான் பெரிதாக அதுவும் பூதாகரமான குற்றம் என தெரியவந்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தகுதிக்கேற்ற தொழில், வரும்படிக்கேற்ற வாழ்வு என அமைதியாக பயணித்த படகுக்குள் தகுதி என்ற பெருஞ்சூறாவளி என் வாலிபத்திலும் மிகவேகமாய் சுழற்றியடித்து என்னை நிலைகுலையச்செய்தது





அன்பு என்றால் என்ன? இன்றைய என் கேள்விக்கு பதிலில்லை மனம் சம்பந்தப்பட்டதாக உறவுகளின் முக்கியத்துவமாக எனதளவில் கருதப்பட்ட இந்த அன்பு ஒன்றுமில்லாததாய் நிற்கின்றது. என் முழுமையான விடயங்களை பகிரவும் வெளிப்படுத்தவும் நான் தெரிந்துகொண்ட விடயத்தில் நான் தவறிவிட்டேனா இல்லை ஏமாந்துவிட்டேனா என்று தெரியவில்லை ஆனால் என் அன்பை உணரவில்லை என்றுமட்டும் தெரிந்துகொண்டேன் அதுவும் உறவுகள் வெறும் பணத்துடனே மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது என்ற பெரிதான தத்துவார்த்தத்தையும் கற்றுக்கொண்டேன். அதற்காக இந்த உலகமே பணந்தான் வாழ்க்கை அதுசம்பந்தப்பட்டவைகள்தான் சந்தோஷம் என கூக்குரலிட்டாலும் என் எண்ணங்களளவில் அன்பு ஒன்றுதான் உயர்ந்தது என்ற கோட்பாட்டை மீறமாட்டேன் அதற்காக இதனை போதிப்பதற்கும் இறங்கிவிடமாட்டேன் விழலுக்கு நீர் இறைத்து நான் வியாதிப்படவிரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச்சொல்லிட முடியும் இறுதியில் அன்புதான் ஜெயிக்கும் ஏனெனில் என்னதான் ஒருவன் ஆஸ்தியிலும் ஆடம்ப‌ரத்திலும் வசதியிலும் சலுகைகளிலும் புரண்டாலும் ஒரு நாள் நிச்சயம் இந்த அன்புக்காக ஏங்கிடும் காலம் வரும் இதுதான் இயற்கை இதுதான் இறைவனின் விதி.






  சரி அதுபோகட்டும் காதலுக்கு ஏனுங்க இந்த தகுதி அந்தஸ்தெல்லாம் பார்க்குறீங்க? கல்யாணம் தான் பெரியவர்களால் பார்த்து செய்யப்படுவதால் சம்பிரதாயம் சடங்கு என்று ஆயிரம் காரணங்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்து ஒருவருக்கொருவர் ஒத்துப்போகும் தன்மையுடன் இருந்து இவர் நம் வாழ்க்கைக்கு பொருத்தமானவர் என்ற நிச்சயம் வந்தபின் ஏன் திடீரென்று கல்யாணம் நெருங்கும்போது மனம் வெறுத்து பணப்பொருத்தம் பார்க்கின்றீர்கள்? உங்கள் காதல் புதுமைதானுங்கோ. தனக்கு இப்படித்தான் ஒரு வாழ்க்கை அமையவேண்டுமென்று நினைத்தால் அதற்கு ஏற்றபடி ஒருவரை சந்தித்தித்தாலோ அல்லது அமைந்தாலோ இணைவதுதானே நியதி? அதைவிட்டு எல்லாம் முடிந்து காதலும் கசக்கும் தருவாயிலா உங்கள் ஆளுமைகளையும் ஆசைகளையும் அளவெடுத்து அமைத்திட முனைவீர்கள்? வாழ்க்கையின் அடித்தளமே அன்பிலும் அனுசரிப்பிலுமே இருப்பதை நம்மில் பலபேர் உணர்ந்துகொள்ளாமலில்லை ஆனால் உணரப்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுவிடுகின்றது உணர்ந்திடும்போது எல்லாம் காலாவதியாகியும் விடுகின்றது.

எது எப்படியோ அன்பில்லா எல்லாமே அர்த்தமில்லா ஆதாயங்கள்தான். உங்கள் உறவுகளை நிச்சயித்துக்கொள்ளுமுன் சிந்தித்து செயற்படுவது நன்று ஏனெனில் பாதிக்கப்படுபவரின் நிலையோ அதோகதியாகப்போய்விவது மட்டுமல்ல அவரின் வாழ்க்கையே சிலநேர‌ங்களில் கேள்விக்குறியாகிவிடும்


அடடா எங்கேயோ என் பிரச்சனையில் ஆரம்பித்து எதிலோ கொண்டுவந்து முடித்துவிட்டேன் உண்மைதானுங்க எதாவது ஒன்றை பேசத்துவங்கினால் சந்து சாக்கடை என்று வேறுஎதிலோ வ‌ந்துமுடிந்துவிடுவது இயற்கைதானே அதைத்தான் என் பேனாவும் செய்துவிட்டது ஆனால் இதில் இரண்டு நன்மை இருக்கின்றது ஒன்று என் மனது கொஞ்சம் இலேசான திருப்தியை உணர்ந்ததோடு சில பிரச்சனைகளை மேலிடையாக தொட்டுக்காட்டிய இன்பமும் இதயத்தில் ஒட்டிக்கொண்டது.











நன்றி 
மீண்டும் ஒரு பிரச்சனையில் சந்திப்போம்

Tuesday, May 28, 2013

துருவ நட்சத்திரம் ஊடகவியலாளர் விக்கி விக்னேஷ் 28.05.2013

http://www.thuruvam.com/2013/05/php_28.html

சவாலான விடயங்களை சந்திப்போமா என்பதே சவாலாக இருக்கிறது: விக்கி விக்னேஸ்


ஊடகத்துறை என்பது, அம்மா, அப்பா, சகோதரர், மாமா இவ்வாறான உறவு முறைகளுக்கு அப்பால் புதிய பெயரிடப்படாத ஒரு உறவு முறையை எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது. இதனை அனுபவிக்கும் போதுதான் உணரமுடிகிறது என்று கூறுபவர் ஊடகவியலாளர் விக்கி விக்னேஸ்.


ஊடகத்துறையின் மீதான காதலோடும் அதீத ஈடுபாட்டோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவரை துருவ நட்சத்திரத்துக்காக சந்தித்தோம். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் இவர் பாடகராக கவிஞராக ஊடகவியலாளராக என்று  பலதிறமைகளுடன் வலம்வரும் இவர் ஓர் துடிப்புள்ள இளைஞர். இவரின் கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் நேர்காணலில் இணைந்துகொள்வோம்.

கேள்வி: உங்களைப் பற்றி...?

பதில்: ஆர்.பரமேஸ்வரன் மற்றும் வீ.ஜோதிமலர் ஆகியோரின் முதலாவது மகனாக நான் பதுளையில் பிறந்தேன். சுதாகரன், ரூபன் என இரண்டு சகோதரர்கள். நான் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள். மனைவி பெயர் வித்யா. கல்வியை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு முதல் 13ஆம் ஆண்டு (உயர்தரம்) வரையில் ஆறு பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கிறேன். 

கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப பயிற்சிகளை பெற்றுள்ளேன். அத்துடன் (Chamber Orchestration)  செம்பர் ஒர்கஸ்ட்ரேசன் மற்றும் ஜேஸ் ஆகிய இசை வகைகளை கற்றுள்ளதுடன் தொடர்ந்து வேறு இசை வகைகளை கற்று வருகிறேன். சவுண்ட் என்ஜீனீரிங் துறையில் டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ளேன். கடந்த எட்டு வருடங்களாக இசை மற்றும் ஒலி தொடர்பான தேடுதலில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி: உங்களுடைய ஊடகத்துறை பிரவேசம் பற்றி?

பதில்: பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் 2003 - 2005ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருந்தபோது, இருந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலியான ஊவா சமூக வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றினேன். அதுவே ஊடகத்துறையின் முதல் படி.

கவிதை உள்ளிட்ட எழுத்து விடயங்களில் கொஞ்சம் திறமை இருந்ததால், அதை அறிந்த ஆசியர்கள் என்னை இந்த துறையில் ஊக்கப்படுத்தினர். 2006ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து ஊவா வானொலியுடனேயே இருந்தேன். இந்நிலையில் அப்பா திடீரென இறந்துவிட, நிலைமை தடுமாறியது. ஏதேனும் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எனினும் இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தால், ஊடகத்துறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இதனால் ஊடகத்துறை சார்ந்த தொழிலையே எதிர்பார்த்திருந்தேன். காத்திருந்ததற்கு பயனாக ஊவா வானொலியுடன், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இணைந்து நடத்திய முழக்கம் என்ற நிகழ்ச்சி குழுவோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு வருடகாலம் பணியாற்றியிருந்த வேளையில், 2008ஆம் ஆண்டு சூரியன் எப்.எம். செய்திப்பிரிவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.


கேள்வி: ஊடகம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய செயற்பாடுகள் ஆர்வங்கள் பற்றி?

பதில்: இசையில் சாதிக்க வேண்டும் என்பதற்காவே நான் ஊடகத்துறையை தெரிவு செய்தேன். இதற்கான முயற்சிகளையே தற்போதும் மேற்கொண்டு வருகிறேன். இதுதவிர கவிதை எழுதுவதுண்டு. எழுதிவைத்த சிறுகதைகள் நாடங்கள் என ஏராளமாக வீட்டில் உள்ளன. சில பத்திரிகைகளிலும் வந்துள்ளன.

கேள்வி: செய்தியாசிரியர் எனும்போது சவாலானதும் சுவாரஸ்யமானதும் பொறுப்பானதுனான தொழில். இதில் நீங்கள் சந்தித்த சவாலான விடயம் பற்றி?

பதில்: சவாலான விடயங்களை சந்திக்க கிடைக்குமா என்பதே தற்போதைய சூழ்நிலையில் சவாலான விடயமாக இருக்கிறது. வானொலி செய்தி ஆசிரியராக பணியாற்றுகின்ற நிலையில், செய்திகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட கால கட்டுப்பாடு உள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய சவாலான விடயம்.

நான் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுக்கும்போது உங்களுடைய இலட்சியம் என்ன என்று என்னுடைய ஆசிரியர் என்னை கேட்டபோது, ஒரு ஊடகவியலாளராக வரவேண்டும் என்று கூறிய நினைவு இருக்கிறது. பின்னர் இந்த இலட்சியம் 11ஆம் தரத்தில் வைத்து மாறிவிட்டது என்பது வேறு கதை. ஆனால் இந்த பதிலை கூறும்போது, உண்மையில் ஊடகத்துறை மீது அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருந்தது. மிகுந்த சவாலான துறையாகவே இதனை கருதினேன்.

ஆனால், அந்த எண்ணத்துக்கு தற்போது தீனி கிடைத்ததா? என்றால், பதிலளிக்க தடுமாறுவேன் செய்திகளின் மிக குறைந்த பெறுமதியையே கொண்டுசெல்ல கூடியதாக இருக்கிறது என்ற மனக்குறை இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி, வெளிக்கொணரப்பட்ட பல்வேறு செய்திகளை நான் வெற்றிகரமாக சந்தித்த சவாலாகவே கருதுகிறேன்.


கேள்வி: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பாராட்டுக்கள் குறித்து கூறுங்கள்?

பதில்: 2004ஆம் ஆண்டு பாடசாலை மட்ட கவிதை போட்டிகளுக்கான ஜனாதிபதி விருது கிடைத்து. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இந்த விருதினை பெற்றேன். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு பதுளையில் நடைபெற்ற இளைஞர் சேவைகள் கழகத்தின் 'யௌவன ப்ரதீபா' என்ற விருது, மீண்டும் கவிதைப் போட்டிக்காக வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்திருந்தது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு புஸல்லாவையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் 
ஊடகவியலாளருக்கான கௌரவ விருது வழங்கப்பட்டது. பின்னர் இறுதியாக கடந்த மாதம் மலையக கலை கலாசார மற்றத்தின் இரத்ன தீபம் விருது வழங்கப்பட்டது. 

கேள்வி: ஊடகத்துறையில் செய்திச் சேவைக்கான‌ ஆர்வம் இளையவர்களிடம் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: பொதுவாக ஊடகத்துறை மீதான நாட்டம் இளைஞர் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது என்றே நான்கூறுவேன். ஆனால் அவர்கள் அறிவிப்புத்துறையை அதிகமாக விரும்புகின்றனர். எனினும் செய்தி சார்ந்த ஊடகத்துறை குறித்த ஆர்வமான இளைஞர்களையும் சந்தித்திருக்கிறேன். 

நமது சமுகத்தின் கலை, கலாசார விழுமியங்களுடன், சமூக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் ரீதியான விடயங்கள் அடுத்த சந்ததிக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை ஊடகத்துறையின் ஊடாகவே செய்ய முடியும். இதன் பொருட்டே சூரியன் எப்.எம். செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.இந்திரஜித்துடன் இணைந்து, நாங்கள், இளைஞர் மத்தியில் செய்தி ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்பை ஏற்படுத்தவும், அதில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறோம்

ஊடகத்துறையில் பங்குகொள்ள விரும்பும் இளைஞர்களுக்காக இணையத்தளம் மூலமான கற்கை நெறிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன்மூலம் இணையத்தளம் மற்றும் கடிதம் மூலம் இளைஞர்கள் ஊடகத்துறை குறித்து கற்றறிந்து கொள்வதுடன், அதற்கான
சான்றிதழ்களை வழங்கி, தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.


கேள்வி: மக்கள் பிரச்சினைகளை நேரடியாக சந்தித்த‌ அனுப‌வங்களை சொல்லமுடியுமா?

பதில்: நேரடியாக சென்று மக்களை சந்தித்த அனுபவங்கள் குறைவு. எனினும் மக்களின் பிரச்சினைகளை முதலில் தெரிந்துக்கொள்ளும் தரப்பினராக நாங்கள் இருக்கிறோம். சில சமயங்களில், பிரச்சினைகளுக்கு என்ன செய்வதென்று அறியாது, நெஞ்சம் கனத்த தருணங்களும் உண்டு. ஊடகத்துறை என்பது, அம்மா, அப்பா, சகோதரர், மாமா இவ்வாறான உறவு முறைகளுக்கு அப்பால், புதிய பெயரிட படாத ஒரு உறவு முறையை எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது. இதனை அனுபவிக்கும் போதுதான் உணரமுடிகிறது.

கேள்வி: செய்தியாளர்கள் சந்திக்கின்ற முக்கிய பிரச்சினை எது?

பதில்: குறிப்பாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் செயற்படுகின்ற ஊடகங்களில் பணியாற்றும் போது, தமிழ் சார்ந்த செய்திகளை மாத்திரம் கொண்டு செல்வதில் எப்போதுமே சிக்கல் இருக்கும். அனைத்து மேலோரும், தமிழறிந்தவர்களாக இருந்தால் இந்த சிக்கல் இருக்காது.

செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. சில அரசியல் நிலைமைகளை கருதி, செய்திகளை உறுதிப்படுத்த வேண்டியதரப்பினர் பின்னிற்கின்ற நிலைமை காணப்படுகிறது.

கேள்வி: சூரியனில் கடமையாற்றும் அனுபவம் பற்றி?

பதில்: சூரியன் எப்.எம்.இல் கடமையாற்றுவேன் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை. அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கவில்லை. காரணம் நான் ஊவா வானொலியில் கடமையாற்றிய போதே தெரிந்துவிட்டது, அறிவிப்பு என்பது எனக்கான துறை இல்லை என்று. நான் மிகப்பெரிய வானொலி ரசிகனாகவும் இருக்கவில்லை. ஓய்வு நாட்களில் காலை கட்டிலில் இருந்து எழும் வரையில் சூரிய ராகங்களை கேட்டு, லோசன் அண்ணாவின் கேள்விகளுக்கு பதில் வழங்குவதோடு எனக்கும், சூரியனுக்கும் இடையிலான தொடர்பு முடிந்துவிடும்.

ஆனால், அப்பா இறந்த பின்னர் ஏதேனும் செய்ய வேண்டும், ஆனால் ஊடகத்தைவிட முடியாது என்ற தர்மசங்கடத்துடன் இருந்த காலத்தில், சூரியன் செய்திப்பிரிவில் கடமையாற்றும் வாய்ப்பை தற்போதைய செய்தி முகாமையாளர் இந்திரஜித்தே வழங்கினார். 

தற்போது சூரியனின் செய்திப்பிரிவு, சிரேஷ்ட செய்தி ஆசிரியர் வீ.எஸ்.சிகாமணி, எம்.சதீப்குமார், ஸ்ரீ நாகவாணி ராஜா, எம்.ஜீ.கிரிஷ்ணகுமார் ஆகியோருடனும், முகாமையாளர் இந்திரஜித்தின் கீழும் பணியாற்றுவது சுகமான அனுபவமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இதனை ஒரு தொழில் என்று கூறுவதைவிட, நான் இன்னும் பாடசாலை ஒன்றை கல்வி கற்று வருவதாகவே கருதுகிறேன். சூரியன் எப்.எம். ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் கற்பதற்கு சிறந்த இடமாகவே இருக்கிறது.



(நேர்காணல்: ராஜ் சுகா)

Sunday, May 19, 2013

மனம் பற்றி என்ன அறிவாய்?



நம்பிக்கைதான் வாழ்க்கை இந்த‌
நம்பிக்கையால் வாழ்வை இழந்தால்
அது ஏமாந்துபோதல் என‌
அர்த்தம் சொல்லலாகுமோ

அப்பட்டமாய் செய்யும் துரோகங்கள்
ஆறாத அடிமனக்காயங்கள்
உயிரை வெறுக்கும் வேதனைகள்
உலகை தொலைக்கும் வலிகள்
இத்தனையுந் தந்து இயல்பாயிருக்கும்
நீயொரு அதிசயந்தான்

மனம் பற்றி என்ன அறிவாய்?
அன்பை பற்றி உன்
அகராதி சொல்வதென்ன?
அழகை ருசிக்கும் ஆனந்தமா
அங்கங்கள் ர‌சிக்கும் வேகமா
சொத்துக்களின் தரமறிந்து
சொந்தங்கள் உருவாக்கிடும்
போலித்தனமா
உன் அகராதியில் மனம் என்பதற்கு
பொருள்தான் என்ன?

எத்தனை உறவுகளை உருவாக்கிக்கொண்டாலும்
எல்லா உறவுக்கும் முடிவதில்லை
எதிர்பார்ப்பில்லா அன்பினைதருவதற்கு
சுயநலமில்லா காதலோடு
சூதுகளறியாமல்
சுற்றிசுற்றிவந்த எனக்கு
சூடு வைத்து கண்ணீர்தருகின்றாய்
உனது நியாயங்களின் அர்த்தம்
இன்றுவரை புரியவில்லை



சந்தர்ப்பங்களால் சந்தித்த நம்
சந்திப்புக்கள்
சந்தேகங்களால் உடைவது
சாகத்தூண்டும் கொடுமையடா உன்
சிந்தனைக்கது எட்டாமலிருப்பது ஏன்?

பெண்மையை வெறும்
தேகமாய்ப் பார்க்குமுன் எண்ணங்கள்
உண்மையாயுரும் காதலையுணர்ந்திடாதா?
வாழ்க்கையின் அடித்தளங்கள்
அன்பினால் இடப்படுதலே
வானுயர்ந்த கட்டிடமாய் எழும்பிடும்
என்பதனை எப்போது அறிவாய்?

இறுதியாய் என் உறுதியாய்ச் சொல்லுகின்றேன்
இதயம் நிறம்மாறும் விந்தையல்ல‌
காதல் அற்புதமான பொக்கிஷம்
நம்பிக்கை புனிதமான உணர்வு
அன்பு சகலருக்கும் கிடைக்காத வரம்
தகுதி அந்தஸ்து பணம் பதவி
சொத்து சுகங்கள் தாண்டிய‌
ஓர் உன்னதம் தெரிவதே
உண்மையான காதல்

நான் ஆழமாய் கட்டிய
என் அத்தனை சாம்ராஜ்யத்தையும்
அடியோடு தகர்த்தெறிந்துவிட்டாய்
இரக்கமேயில்லாமல் சாம்பலாக்கிவிட்டாய்
உன்னால் அன்பென்ற நாதத்தை
இனியெப்போதும் ரசித்திடமுடியாது
ஒன்று காம‌மாய்ப் பார்ப்பாய்
இல்லை காசாய்ப் பார்ப்பாய்
இது உனக்கான துரதிஷ்டம்

போராடினேன் அன்பை அறிவிக்க‌
கோபித்தேன் பாசத்தை உணர்த்திட‌
விலகியிருந்தேன் நேசத்தை உருவாக்க‌
இப்போதும் உன் அலட்சியங்கள்
உன்னை குணப்படுத்தியிருக்கவில்லை

உனக்கான என் பிரார்த்தனைகள் தொடரும்
என் நேசம் பொய்த்துப்போவதில்லை


Saturday, May 18, 2013

காதலும் அதுபோலத்தான்!!





நம் நாட்கள் அழகானவைகள்
நம் புன்னகைகள் அன்பானவைகள்
நம் பயணங்கள் சுவாரஸ்யமானவைகள்
நம் கோபங்கள் நேசமானவைகள்
நம் காயங்கள்கூட காதலுக்கானவைகள்

பிரிவை கனவில்கூட நான்
விரும்பிடுவதில்லை
அதுதரும் வலியை
அற்பநொடியேனும் உண‌ரவிரும்பவில்லை

என் கோபங்கள் உனை காயப்படுத்தவல்ல‌
என் காதலை வெளிப்படுத்தவே
நம் இடைவெளிகள் இன்னொரு
உறவுக்கான வழிகளல்ல நம்
உறுதிக்கான வழிகளே...

உன்னை விட்டுவிடுவதற்கும்
இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பதற்கும்
நான் தியாகியல்ல
உனக்கு தாயானவள்


நம் அந்தரங்கள் நமக்கானவை
நான்குபேர் சொல்வதற்கது
நாடகமேடையல்ல‌
காதல்
இருவருக்கிடையிலான ஆத்மார்த்தம்
மூன்றாம் நபரின் மூக்குநுழைத்தலல்ல அது
முத்தமானாலும் சரி
யுத்தமானாலும் சரி...


நட்பு வேறு
காதல் வேறு
காதலி நண்பியாக இருக்கலாம்
நண்பி காதலிபோல் இருக்கக்கூடாது

இதயம் ஒன்றாக இருப்பதுதான்
இதயத்துக்கும் நல்லது
அதைத்தாங்கும்
உயிருக்கும் நல்லது
காதலும் அதுபோலத்தான்!!










நானெப்படி





என் விழிகளை கேட்டிருந்தால்
ஒன்றைக்கொடுத்திருப்பேன் 
நீயென் ஜீவன் உனை
பகிர்ந்து கொடுத்தால்
நானெப்படி உயிர்ப்பேன்??





தவிக்கவிட்டுப் போகின்றது...





என் நிஜத்திலிருந்து
நிழல் மட்டுமென்னை -தனியே
தவிக்கவிட்டுப் போகின்றது...

உயிரை இயக்கிய சுவாசமின்று
தனியே பிரிந்து செல்கின்றது...

தன் குழந்தையை தெருவில்
கதறக்கதற தவிக்கவிட்ட தாயைப்போல‌
என் ஜீவன் எனைக்கடந்து போகின்றது...

உரிமை கொண்டாடிய‌
அத்தனை நிஜங்களும்
கல்லறை வாசலைதிறந்து விட்டு
கலைந்து போகின்றது...

கானங்கள் பாடிய குயிலின்று நான்
குயிலில்லை காகமென்று
கரைந்துகொண்டு பறக்கின்றது...

தேவதை வேடத்து அரக்கி
முகமூடி கலைந்த அச்சத்தில்
முரட்டுத்தனமாக பல்லிளித்துக்காட்டுகின்றாள்...


நான் வாழ்ந்த பசுமைகள் இளமையை
நார்நாராய்க் கிழித்து
நடுவீதியில் இயல்பாய் வீசி
எனைக் கடந்துபோகின்றது...

மீண்டும் என் ஜீவன்
சுவாசத்தை உயிர்ப்பித்திடாதா
மீள எனதன்புக்குள்ளது
மூழ்கிடாதா...

இந்த இளமைக்குள் உனைத்தவிர‌
இனியொரு இன்பங்களில்லை
இந்த இதயத்துக்குள் உனைத்தவிர‌
இன்னொரு உறவுக்கு உரிமையில்லை...

இந்த உயிர் சுவாசிக்கவேண்டுமாயின்
உன் மூச்சுக்காற்று வேண்டும்
இல்லையெனில்
மண்ணுக்கு உணவாகுமேயன்றி
மனிதருக்கு உறவாகுவதில்லை
நீயிதை உணரமாட்டாய் தெரியுமெனக்கு
நிச்சயம் உணர்ந்தழுவாய் என்
கல்லறை வாசலுக்குமுன் அப்போது
உன் கண்ணீர்ச்சொட்டு
என் உயிர்க்காதலை உணர்ந்து உருகும்!!!






Thursday, May 16, 2013

அ ல் கா




அ ல் கா


கருவாகாமல்
உருவான என்சொந்தம்
உருப்பெறுமுன் சிதைந்து
உருக்குலைந்தது
மீண்டும் அவள் வரமாட்டாள்
கல்லறையாக்கப்பட்ட என்
கருவறைக்குள்!!


Wednesday, May 15, 2013

கானலென்று...





மனித வெடிகுண்டுகளால்
தகர்க்கப்பட்ட இதயமிது...

வலிகளனைத்தையும் தாங்கிய
வைரம் பாய்ந்த இதயமிது...

பாலைவனத்து மழைத்துளியாய் அந்த‌
ஒற்றைப்புன்னகை துளிர்த்தபோதுதான்
வலியாக உணர்த்தப்பட்டது...

அந்த ஒவ்வொரு துளியும்
விஷந்தடவிய கானலென்று!!

ரணங்களே....




வலிகளே எனைச் செதுக்கும்
உளிகளானது
விழிவடிக்கும் துளிகளை நான்
துடைத்தெறிவதில்லை -அவை
சிதறிவிடாமல்
உள்ளத்தில் சேமித்துக்கொள்கின்றேன்
ரணங்களே என் உயிர்ப்பை
உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதால்...

சாத்தியமில்லை..



****     ****         *****          *****

தீப்பந்தமாய் எரிந்த அன்பின்று
நீரில் வீழ்ந்த தீப்பெட்டியானது..

மீண்டும் எரிவது அத்தனை
சாத்தியமில்லை...

காலத்தின் வேகத்திடமும் -சில‌
காயங்களின் மருந்துகள்
தீர்ந்தே போய்விடுகின்றன‌???

Tuesday, May 14, 2013

யாருக்கு யார்???


வானுக்கு
நிலவு சொந்தமென்று
மேகம் சொல்கின்றது
யாருக்கு யார் சொந்தமிந்த‌
இயற்கையின் படைப்பினிலே...

Sunday, May 12, 2013

தாக்கங்களும் பூக்களாகும்!!





உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது


இயலாமைகளை சுட்டிக்காட்ட‌
இமையிதழ்களில் கதறுவதே- இவளின்  
வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை


வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்


அன்பெனும் முகமூடிதரித்த‌
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது 'நம்பிக்கை'யென்று


பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய்‍ -அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட‌
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்


இனியவள் வாசலுக்குள் கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும் காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில் தாக்கமெல்லாம் பூக்களென்று!!

Saturday, April 27, 2013

ஆண்களின் இதய அகராதியில் பெண்களின் அர்த்தம் இதுவா?


?????????????????????????????????????????????????????????????????????????????????????????????




இதயத்தில் நீண்ட நாட்களாக கனன்று கொண்டிருந்த ஒரு விடயம். இதனை மூன்று சம்பவங்களினூடாக சந்தித்தேன் அவை எரிந்த சுவாலைக்குள் எண்ணையை வார்த்துவிட்டுக்கொண்டிருந்தாலும் எப்படி ஆரம்பிப்பதென்று வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் அதன் அவசியம் இன்றென்னை பலவந்தப்படுத்தியது எப்படியும் இதனை எழுதவே வேண்டுமென்று. விடயத்தை சொல்லி ஒவ்வொன்றையும் என் அறிவுக்கெட்டியவரை விபரிக்கின்றேன் சாதக பாதக, உடன்பாட்டு எதிர்வினைக்கருத்துக்களோடு நீங்களும் இதில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.


சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனையும் முற்போக்கு சிந்தனையின் உச்சகட்ட வளர்ச்சியினாலும் தொழிநுட்ப நாகரிக வளர்ச்சியின் மிதமிஞ்சிய அபகரிப்பினாலும் தண்டவாளம் விட்டு தாண்டவமாடுகின்ற ஓர் அவலத்தையே இங்கு பதிய விளைகின்றேன்.ஆண் பெண் உறவுமுறையின் அநிச்சையான போக்கு வழிசமைத்துத்தந்த விபரீதத்தை விலாசமிட நினைக்கின்றேன்.

நான் குறிப்பிட நினைக்கும் விடயத்தின் மூலங்கள் மூன்றும் இவைதான்,



01.எனது அலுவலகத்தின் சக பெண் உத்தியோகத்தரின் தோழிக்கு நடந்த சம்பவம்

02. எனது குடியிருப்புக்கு அருகில் தற்காலிகமாக வந்து குடியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம்

03. ஓர் ஆண் பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்த கேள்வி

                 இவை மூன்றும்தான் இன்றெந்தன் அவஸ்தையை அதிகப்படுத்தியது.






ஆண் பெண் நட்பு, காதல் போன்ற விடயங்களில் இன்று எத்தனை வீதமான உண்மை இருக்கின்றது என நிச்சயித்துக்கூறமுடியாது ஏனெனில் 90% மான இணைப்புக்கள் வெறுமையான போலிகளை மட்டுமே சுமந்துகொண்டிருக்கின்றன என்பதனை ஆயிரம் உதாரணங்கள் கூறி நிரூபித்திடமுடியும் ஆனால் நானிந்த மூன்று விடயங்களை மாத்திரமே கையிலெடுக்கின்றேன்.

என் சக அலுவலக உத்தியோகத்தர் பானு அவரது பால்ய சிநேகிதிகள் நிலுகா(சகோதர மொழி பேசுபவர்), ரேணு. இவ்விருவரும் ஆடைவிரும்பிகள் இவர்கள் இருவரும் பிரபலமான நகரத்தில் குறிப்பிட்ட அந்தக்கடைக்கு செல்வது வழக்கம். கடை உரிமையாளரோ(தமிழர்) ரேணுவுக்கு தெரிந்த நண்பர் என்பதால் நிலுகாவும் அவனுடன் நட்பானாள் நாளடைவில் அதுவே காதலாக உருமாறியது. முழுமையான அன்புடனும் நம்பிக்கையுடனும் (அப்படி அவள் நினைத்துக்கொண்டாள்)தொடர்ந்த அவர்களது காதல் விவகாரம் ரேணுவுக்கு தெரியாது. நிலுகாவை அவன் மணம் செய்துகொள்வதாகவும் தனக்கு ஒரு வாழ்வென்றால் அது உன்னோடுதான் என்றும் அவளை சந்தித்தது தான் செய்த புண்ணியம் என்றும் பல்வேறு வார்த்தைக்களினூடாக அவளது நம்பிக்கைக்கு பாத்திரமானான். தன்னை உயிராக நேசிக்கும் அவனை தன் உலகென வலம்வந்தாள் எல்லாமே அவன் மட்டும்தான் என்ற முழுமையான நிலையில் அவனிடம் தன்னையே இழக்கநேரிட்டுள்ளது. அந்நிலையில் ஒருநாள் அலுவலகம் வந்தவேளையில்தான் நிலுகாவின் உலகம் அவள்தலைமீதே வந்துவிழுந்தது ஆமாம் ரேணுவின் கையில் அவளது தோழன் அந்த கடை உரிமையாளனது திருமணப்பத்திரிகை. தன்னை சுதாகரிக்கத்தெரியாதவளாய் பானுவை குளியலறைப்பக்கம் அழைத்தாள் விபரமொன்றுமறியாத பானு அவள்பின்னே ஓடினாள்  பானுவிடம் எல்லா விடயங்களையும் சொல்லி கதறியழுத நிலுகாவை தேற்றினாள் அவனுக்கு திருமணமும் நடந்தேறியது. சமூகத்துக்கும் குடும்பத்தின் கெளரவத்துக்கும் பயந்து அவள் தனது கர்ப்பத்தை கலைத்தாள் தன் காதலோடு சேர்த்து ஆனாலும் தன்னால் எதனையும் மறக்கமுடியவில்லையென்று இன்று தன 40வது வயதிலும் தனிமரமாக அதுவும் பட்டமரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். இது என் கற்பனையோ அல்லது இவ்விடயத்தை உணர்த்துவதற்காக நான் புனைந்த உருவகக்தையோ அல்ல 100% உண்மைக்கதை.






அடுத்தவிடயம் அந்த கர்ப்பிணிப்பெண். முதல் கதைபோலவே இவளும் அவனது நம்பிக்கை வார்த்தைகாளால் தன் பெண்மையை இழந்தவள் ஆனால் இப்பெண்ணுக்கு பெற்றார் இல்லை உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்தவளுக்கு அவனது நட்பு/ காதல் ஆலையில்லா ஊருக்கு இழுப்பம்பூவைப்போல இருந்தது. கர்ப்பத்துக்குப்பின்னர் அவனுக்கு காதல் கசக்க அவளை அநாதரவாக விட்டுவிட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டான் இந்த விவகாரம் காரணமாக நீதிகிடைப்பதற்காகவே அவள் அவனைதேடி வந்திருக்கின்றாள் (அவளது உறவினர்களும் அவளை ஏற்கமுடியாதென்று கூறிவிட்டனர்) அக்கம்பக்கத்து மக்களின் உதவியுடன் காவற்துறையில் முறையீடு செய்து அவளது குழந்தைக்கு தந்தை அவன் தான் என்று உலகத்துக்கு கூறுவதற்காக மட்டும் அவனுடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டாள்.









மூன்றாவது விடயம், அண்மையில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான ஓர் ஆணின் கேள்வி. அது இதுதான், " நான் பெருமைக்காக சொல்லவில்லை எனக்கு பலபெண்களுடன் தொடர்பு இருக்கின்றது ( அடி செருப்பால நாயே இது உனக்கு பெருமையா??? மனதுக்குள் கச‌ந்துகொண்டேன்) ஏன் பெண்கள் மிக இலகுவாக தங்கள் உடலை கொடுக்க முன்வந்துவிடுகின்றார்கள்? " என்பதுதான். இந்த ராமனில் கேள்வியில் பதில் சொன்னவர் ஒரு பெண்ணாயிருந்தால் ஆடிப்போயிருக்கவேண்டும் அவர் நிதானமாக ஒரு பதிலை முன்வைத்திருந்தார் " பெண்களுக்கு முழுமையான நம்பிக்கை கிடைத்தபின் அதற்கு பிரதியுபகாரமாக தன்னிடம் உள்ள மேன்மையானதை கொடுக்கவிரும்புவாள் தன்னைவிட அவளிடன் வேறெதுவும் பெரிதாக தெரிவதில்லை எனவேதான் தன் அன்பை காதலை வெளிப்படுத்த நம்பிக்கையின் உச்சகட்ட வெளிப்பாடாக இவ்வாறு நடந்துவிடுகின்றது" என தனது பதிலை தந்திருந்தார்.




ஆக காதல் (நாம் மிகப்புனிதம் என நினைத்துக்கொண்டிருந்தது) என்பது தனது உடல் தேவையை பூர்த்திசெய்து கொள்ளும் ஓர் வழிமுறையாக கையாளப்படுவதையே இன்றை காதல்விவகாரங்கள் உணர்த்திநிற்கின்றது. ஆனால் நான் காதலைப்பற்றி பேசவரவில்லை உண்மையான காதல்களும் இங்கு இல்லாமலில்லை (பொறுக்கியெடுத்தால் ஒரு 20%).



ஒரு ஆண் தன் காதலியுடன் பழகும்போது எவ்வாறான மனநிலையுடன் நெருங்குகின்றான் பெண்ணை வெறும் உடல்தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாகவே அவனது பார்வையை மதிப்பிடலாமா? இங்கு நான் குறிப்பிட்ட விடயங்களின் மூன்று ஆண்களுமே ஒரேவிதமான மன இயல்பை கொண்டவர்களாகவே என்னால் பார்க்கமுடிகின்றது. உண்மையில் ஒரு பெண் தனக்கு நம்பிக்கையானவன் தன் எதிர்காலத்தில் இவன்தான் என ஒருவனை முழுமையாக நம்புமிடத்து தன்னை எல்லா வகையிலும் அர்ப்பணிக்க தயாராகவே இருக்கின்றாள் இதனாலேயே பல நம்பிக்கை துரோகங்கள் மிக இயல்பாக நடந்தேறிவிடுகின்றது.(இதில் 'நீ என்னை நம்பவில்லையா என்ன இது தொடுவதற்குகூட எனக்கு உரிமையில்லையா?' என்ற பாசாங்கோடு நாடகத்தில் உணர்ச்சிமிக்க வரிகளையும் போட்டுக்கொ(ல்)ள்வார்கள்)  இங்கு அந்த மூன்றாவது சம்பவத்து ராமனின் எண்ணவோட்டத்தைப்பார்த்தால் பெண்கள் எல்லோரும் கொஞ்சம் பழகியவுடன் படுக்கையை பகர்ந்துகொள்வார்கள் என்ற கீழ்த்தரமான சிந்தனையுடனேயே பெண்களை பார்க்கின்றார் அவரது பார்வையில் பெண்கள் வெறும் தீனிப்பொருள் அவ்வளவுதான். ஆனால் அந்தப்பெண் இவ்வாறானதொரு நிலமைக்கு வருவதற்கு தன்னுடைய பிழையினை அவனால் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. அவனால் எவ்வாறான வார்த்தைகள் வழங்கப்பட்டிருக்கும் அவளின் எதிர்காலத்துக்கான வாக்குறுதிகள் எத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருக்கும் என உங்களாலும் என்னாலும் புரிந்துகொள்ளமுடியும்  என நினைக்கின்றேன்.











பெண்ணானவள் அவளது காதலைத் தன் வாழ்க்கையாக நினைப்பவள் இவன்தான் தன் எதிர்காலம் என அவளுக்கான நம்பிக்கைவருமிடத்து எதனையும் செய்ய துணிபவளாகவே தன்னை இனங்காட்டுகின்றாள் இதுவே ஆண்களுக்கு இலகுவாகிப்போய்விடுகின்றது. உண்மையில் இங்கு நம்பிக்கை என்பது பிழையா அல்லது காதல் என்பது பிழையா? ஆண்கள் பெண்களை வெறும் படுக்கைக்கு பயன்படுத்தப்படும் பொருளாக அல்லது தேவையாக மட்டுமா பெண்களைப்பார்க்கின்றார்கள்? அவர்களது இதய அகராதியில் பெண்கள் என்பவர்கள் இத்தனை மலிவான அர்த்தத்திலா மதிக்கப்படுகின்றார்கள் என்ற என் வினாக்கள் நீள்கின்றது விடையில்லாமல். இவ்விடயம் படித்த படிக்காத பெரிய உத்தியோகம் கூலித்தொழில் என்பவையான எந்த பாகுபாடுமின்றித்தான் பார்க்கவேண்டும் ஏனெனில் எந்தத்தரத்தில் இருந்தாலும் இவர்களுக்குள் இவ்விடயத்தில் ஒரேவிதமான பார்வை இருப்பதாகத்தான் என்னால் அவதானிக்கமுடிந்தது.


இங்கு காதலிக்கும்போது உடல்ரீதியான தொடர்பு சரியென்று  நான் வாதிடவர‌வில்லை அதற்கு தூண்டுதலாயிருக்கின்ற காரணியை வெளிப்படுத்தியுள்ளேன் அவ்வளவுதான். இந்த நம்பிக்கை துரோகங்களை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள், பெண்கள் மீதான பலியாக சுமத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நம்பிக்கை என்ற ஒரே ஒருவிடயம்தானா ஏமாற்றத்தின் திறவுகோலாக காணப்படுகின்றது?



இதற்கெல்லாம் ஒரே தீர்வாக பெண்கள் மீதான பார்வை மாறவேண்டும் அவர்களை உணர்வுள்ள இதயமுள்ளவர்களாக பார்க்கவேண்டும். தாங்கள் வழங்குகின்ற நம்பிக்கை வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்கவேண்டுமென்று மனதளவிலாவது நினைக்கவேண்டும். காதல் ஓர் அழகான விடயம் பல நல்ல சமூக மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய அருமையான விடயம் அதனை இதுபோல கீழ்த்தரமான காரியங்களால் நாம் மாசுபடுத்திவிட்டோம் அத்துடன்  பெண்கள் மிக நிதானமாக கவனமாக ஆண்களுடன் பழகவேண்டும் எடுத்த எடுப்பிலேயே அவர்களின் அத்தனை வார்த்தைகளுக்கும் ஆமாசாமி போடக்கூடாது என்பதுதான் என்னால் இதிலிருந்து உணரமுடிந்தது.





இதெல்லாம் பார்க்கும்போது காதலிக்காமல் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு செல்வது எல்லாவற்றிற்கும் சிறந்ததுபோல் விளங்கிகின்றது அப்பாகிட்ட உடனே சொல்லனும் நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே என்று.







Saturday, April 20, 2013

அறிவிப்பாளினி நாகபூசனி. (20.04.13)


http://ta.indli.com/v/1096485



வெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி


ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது என சமூகநிலை குறித்து வெதும்புகின்றார் இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத்துறையில் பிரபல மூத்த பெண் அறிவிப்பாளினியான நாகபூசனி.


வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர் என்ற பன்முகங்களைக்கொண்ட இவர் சிறந்த நடிகையாகவும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அண்மையில் அவரை சந்தித்தபோது எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக‌  தருகின்றோம்.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தினை எமது துருவத்தின் வாசகர்களுக்கு கூறுங்களேன்? 

பதில்: நான் நாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம்வரை கற்று யாழ். ப்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் பூர்த்துசெய்துவிட்டு தற்போது  நீங்கள் நன்கறிந்த இலங்கை வானொலி தென்றலின் நிரந்தர அறிவிப்பாளராகவும் வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி: அறிவிப்புத்துறையில் பெற்றுக்கொண்ட‌ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில்: அனுபவம் நமக்கு சிறந்த ஆசான். உலகம் என்கின்ற கல்விக்கூடத்தில் மரணம்வரை கற்கவேண்டியவை. கற்கவேண்டிய மனித மனங்கள் ஏராளம். அறிவிப்புத்துறை என்கின்ற சாகரத்தில் நீந்திக் கால்பதித்த பின்னும் இந்த கலைக்கூடத்தினை கற்பதே ஒரு புதிய அநுபவமாகத்தான் இருக்கின்றது. மிகத்தொலைவிலிருந்து நான் நேசித்த வானொலி, நான் ரசித்த குரல்கள் அருகே நெருங்கியதும் ஏற்பட்ட பிரமிப்பு, உலக அறிவிப்பாளர்களுக்கே அன்னையாய் திகழும் தாய் வானொலியின் துறைசார் ஜாம்பவான்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு, செய்தி என்பது எப்படி, அறிவிப்பு விளம்பரம் என்பன பற்றியெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டு பட்டைதீட்டப்பட்டு ஒவ்வொரு படியாக முன்னேறும்போது வரவேற்பும் உண்டு எதிர்ப்பும் உண்டு. இவையெல்லாமே இன்றுவரை தொடரும் எனதான அற்புதமான அனுபவங்களே.


கேள்வி: உங்களுடைய அறிவிப்புத்துறை சார்ந்த பணிகள் பற்றி கூறமுடியுமா?

பதில்: இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் அதேவேளை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன். பல விளம்பரங்களில் தோன்றியுள்ள நான் மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றேன். ஊடகம் சம்பந்தமான கற்கை நெறிகளுக்கு அவ்வப்போது விரிவுரையாற்றச் செல்வதுமுண்டு. கையடக்கத்தொலைபேசி இணைப்பில் (டயலொக்) உங்களுக்கு செய்தியும் கூறியிருக்கின்றேன்.

கேள்வி: இன்றுவரை இத்துறையில் நிலைத்து நிற்கும் வெற்றியின் ர‌கசியம் பற்றி?

பதில்: இந்த இரகசியம் வெற்றியாளராய் என்னை நீங்கள் குறிப்பிடக் காரணமான ரசிகர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது. வெற்றி என்பது முதலிடமென்பதும் நிரந்தரமானதல்ல என்று கூறப்பட்டாலும் சில மனிதர்கள் எப்போதும் வெற்றியாளராக முதலிடத்தில் திகழக்காரணம் அவர்களின் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கேள்வி: நீங்கள் கடந்துவந்த துறைசார்ந்த பாதையில் கசப்பான அல்லது மறக்கமுடியாத சம்பவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பதில்: கசப்பான மருந்துகள்தானே கடுமையான நோய்களை குணப்படுத்தும். இனிப்பை பகிர்ந்தளித்தால் மகிழ்ச்சி. எனவே, இனிமைதராத கசப்பை பகிர்ந்துகொள்ள வேண்டாமே.


கேள்வி: சினிமா தவிர்ந்த கலை, இலக்கியம் சார்ந்த நம்நாட்டு படைப்புக்களுடன் கூடிய நிகழ்ச்சிகளுக்கு நேயர்களிடையே எப்படியான வரவேற்பும் பங்களிப்பும் காணப்படுகின்றது?

பதில்: இப்போதெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்களே அதிகம் வரவேற்கப்படுகின்றன என்ற கூற்றை பொய்ப்பிக்கும்படி நேயர்களின் பங்களிப்பு நல்ல பல நிகழ்ச்சிக்கு கிடைக்காமலில்லை. உதாரணமாக 'அந்திநேரச் சிந்துகள்' என பல வருடங்களுக்கு முதல் நான் படைத்த இலக்கிய நிகழ்ச்சிக்கு இன்று தமிழமுதம் என்ற பெயரில் நேயர்களின் பங்களிப்போடு ஒலிபரப்பாகின்றது. இதன்மூலம் இலக்கியதேடல்களில் ஈடுபடுகின்றார்கள் என் அன்பு நேயர்கள் என கூறமுடியும்.

தேடித்தேடி வாசிக்க வேண்டும் அதிலே சிறந்தவற்றை பொறுக்கியெடுத்து தமிழன்னைக்கு சூட்டவேண்டுமென்று இலக்கிய உலகுக்கு தம் பங்களிப்பை வழங்குகின்றார்கள். செவிமடுத்தல், கற்றல், படைத்தல், தேடல் என நேயர்களது பயணம் ஆரோக்கியமானதாய் அமைகின்றது. உலகம் இயந்திரமயமானாலும் மேலைத்தேய நாகரிகம் குழிபறித்துக் கொண்டிருந்தாலும் இதயத்தின் ஈரமும் பண்பாட்டின் பக்குவமும் விழுமியத்தினை விழுந்துவிடாமல் காக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் கலை இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் இன்றும் கரகோஷத்தைப் பெறுகின்றன.

கேள்வி: அறிவிப்புடன் எழுத்துத்துறையிலும் உங்களுடைய திறமை பதிக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: சின்னஞ்சிறு வயதுமுதல் வாசிப்பில் நிறைந்த ஆர்வம். அம்புலிமாமாவில் தொடங்கியது விபரம் புரிந்த வயதில் அதுவே கவிதை கதை எழுத அடித்தளமிட்டிருக்கலாம். பாடசாலைக் காலத்தில் நானே எழுதி நான் மட்டும் சுவைத்து யார் கண்ணிலும் பட்டுவிடாமல் அழித்தொழித்தது பசுமையாய் இன்னும் நினைவில் நிற்கின்றது. பாடசாலைக்காலம் முடிய எழுத்தில் திரும்பிய கவனம் பத்திரிகை, சஞ்சிகை, வானொலி என்பவற்றுக்கு கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற இலக்கியநயமாக வலம்வந்தது. அதன் தொகுப்பாக 'நெற்றிக்கண்' என்ற எனது கவிதைத்தொகுப்பு பிரசவமானது.


கேள்வி: வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இளையவர்களின் வருகையும் வேகமும் துரிதமாக காணப்படும் அதேவேளை குறுகிய காலத்திலேயே அவர்கள் பின்வாங்கிப்போகும் நிலை காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: இளையவரோ, மூத்தவரோ எவராயிருப்பினும் தான்சார்ந்த துறையில் தம்மை வளர்த்துக்கொள்ள தவறிவிட்டால் காணாமல்போய்விட வேண்டியதுதான். நேயர்களால் சிறப்பான ஒருவராக இனம்காணப்படும் பட்சத்தில் ஒரு அறிவிப்பாளனுக்கு நிச்சயமாய் நிரந்தர இடங்கிடைக்கும். வருடக்கணக்கில் துறைசார்ந்திருந்தும் இடம்பிடிக்காதவர்களும் உண்டு வந்தவுடன் தமக்கென தனிமுத்திரை பதித்தவர்களும் உண்டு. பலாத்காரமாய் பாராட்டினை பெற்றுவிட முடியாது. தகைமை திறமை மொழியாற்றல் இருந்தால் வெற்றிநிச்சயம்.

கேள்வி: பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தூண்டுகோலாக, பெண்களிடமும் குறைபாடுகள் இருக்கிறதா அல்லது இதற்கான முழுப்பொறுப்பும் சமூகத்திடம்தான் காணப்படுகின்றதா? இதில் உங்களது நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது?

பதில்: ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல இதற்கும் நாம் இருபக்கங்களுமே காரணம் என்றுதான் கூறவேண்டும். தீ நம்மை தீண்டும்வரை கண்டும் காணாதிருந்துவிட்டு சுட்டவுடன் அலறித்துடிக்கும் நிலையே இயல்பாகிவிட்டது. ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது?

கேள்வி: எதிர்காலத்தில் உங்களுடைய இலட்சியமும் உங்களுக்கு கிடைத்த வெற்றியின் மகுடங்கள் பற்றியும் கூறுங்கள்? 

பதில்: ஒரு இலக்கைவைத்து நான் பயணிக்கவில்லை. இட்டாருக்கு இட்டபடி ஈசன் செயலே என்பது என் நம்பிக்கை. நிறைய கற்கவேண்டும் நான் சார்ந்த துறையில் என்சேவை ஒப்பற்றதாயிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். வெற்றியின் மகுடம் என்பது விருதெனக்கருதினால்,

கலாசார அமைச்சினால் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, கலாசார அமைச்சினால் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது அத்துடன் இன்னும் சில பட்டங்களையும் சொல்லலாம். வெற்றியின் மகுடமென்பது தகைமை என்றும் கருதலாம் என்பதால்,

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அறிவிப்பாளராய் அழைக்கப்பட்டமை, சார்க் மாநாட்டுக்கு ஆரம்ப அறிவிப்பாளராக பங்குகொண்டமை, அணிசேரா நாடுகளின் மாநாட்டு அறிவிப்பாளராக பங்குகொண்டமை, மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் எனக்கு 2ஆம் இடம் கிடைத்ததனையும் குறிப்பிடலாம். இது வெளிநாடொன்றில் கிடைத்த மகுடமென்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கேள்வி: வளர்ந்து வருகின்ற இளைய அறிவிப்பாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் ஆலோசனைகள்?

பதில்: தளம்பாத நிறைகுடமாய் திகழ உங்கள் துறையில் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எத்துணை உயர்ந்தாலும் தற்பெருமையை துணைக்கு அழைக்காதீர்கள். அவரவர் எண்ணப்படியே அவரவர் ஆகின்றார். எனவே, எண்ணங்கள் உயர்ந்தவையாகட்டும்.

(நேர்காணல்: ராஜ் சுகா)

நீ நம்புவதைப்போல‌




குளியலறைச் சுவர்களுக்கு மட்டுமெ
முழுமையாய்த் தெரிந்த -என்
துக்கங்கள்...

தண்ணீர்க் கரங்கொண்டு
கண்ணீர்க் கழுவிடும் -அந்த‌
நீர்க் குழாய் இவை
நீயறிந்திடாத என் மறுபக்கம்....

தீனி கண்ட காகம்போல‌
கூவி அறிவிக்காத என்
ரணங்கள்

இப்போதும் நீ நம்புவதைப்போல‌
வெறும் புன்னகை மட்டுந்தான்...

ஆறுதலுக்காக
அடுத்தவரிலென் சுமையிறக்க‌
விரும்பாதவள் நானென்பதை
நீயறிந்திட வாய்ப்பில்லைதான்...

மகிழ்வுகளை மட்டுமே -நீ
விரும்பிடுவதால்!!

Friday, April 19, 2013

பதாதையிடுங்கள்!!



திருமணங்கள் புரிந்திட‌
இருமணங்கள் வேண்டியதில்லை
பெரும்பணங்கள் பொழிந்திடும்
வரும்படிக ளுண்டென்றால்
மட்டும் போதும் -இதுவும்
வாழ்க்கைதந்த பிரம்படிதான் -நல்ல‌
படிப்பினைதான்...

காதலின் எல்லைகளை
கல்யாணத்தில் முடிச்சிட‌
காலம் பார்த்திருந்த தருணங்களவை...

விருப்பங்களை பொறுப்பெடுத்தவர்களின்
பொறுப்பான நெருப்புக்களிவை
ஒவ்வொன்றாய் கேட்கப்பட்டது காதல்
ஒன்றுக்கும் பதிலில்லாது தீட்டுப்பட்டது...

பட்டங்கள் ஏதேனும் பெயருக்கு
பக்கத்திலுண்டா?

அரசாங்க அதிகாரியா -உமக்கு
வரும்படி வசதியாயிருக்கின்றதா?

சீர் சினத்திக்கொன்றும் குறையில்லையே?

தாம்பூலம் மாற்ற தடையில்லையே?

ஆங்கிலமெல்லாம் அசாத்தியமாய்
வந்துவிழ வேண்டும் என்ற‌
வரிசைக்கசையடியை
விழாத குறையாய் காதில்
வாங்கி பத்திரப்படுத்தப்பட்டது...

இல்லாத ஒவ்வொன்றுக்குமாய்
இருக்கு மந்த அழகிய ஒன்று
இருந்த இடமே இல்லாதழிந்திடுமா
இறைவா இதுதான் நியதியா??

ஏனோ
அநியாயமாய் ஓருன்னதம்
புதைத்தொழிக்கப்படுகின்றது
புனிதமென்று பேசப்பட்ட காதலுக்கு
புதைகுழி தோண்டப்படுகின்றது
நேசத்தில் பிணைக்கப்பட்ட ஓர் உயரிதம்
கொஞ்சங்கொஞ்சமாய் உருக்குலைக்கப்படுகின்றது...

இனியெவரும் உரைக்காதீர்
காதல் வெறும் அன்பென்று..

தகுதி
தராதரம்
அந்தஸ்து
பட்டம்
பதவியென்று
பகடைகளால் கோர்க்கப்பட்ட‌
பகட்டு என்று பதாதையிடுங்கள்!!




Thursday, April 18, 2013

நானும் வாழ்கின்றேன்



உங்கள் நியாயங்கள்

உங்களுக்கு நீங்களே
கொடுத்துக்கொண்ட கெளரவங்கள்

தகுதிக்கேற்ப உறவுதேடும்
குணங்கள்

அப்பட்டமாய் செய்திடும்
நம்பிக்கை துரோகங்கள்

நயமாய்ப்பேசி
நியாயங்களை கொன்றிடும்
சந்தர்ப்பவாதங்கள்

இவைதான் உலகில்
நடுநிலைவாதமென்றால்,

என் இதயத்தை அறுத்தெறிந்துவிட்டு
நானும் வாழ்கின்றேன்
உங்களைப்போல மனிதனாக!!

கல்லறை கட்டிவிடு



 # காலமாய்ப்போன நம்
காதலுக்கு
கல்லறை கட்டிவிடு
பாரதிபோ லுன்
விரல்கள் பேசினாலும்
இயேசுவைப்போல உன்னால்
உயிர்ப்பிக்கமுடியாது!!








@ மானசீக தொடுகைகூட‌
மணமான அநுபவந்தான்
நான்
மறுமணம் புரிந்திட‌
விரும்பவில்லை