Saturday, July 23, 2016

கல்குடா நேசனின் 40வது படைப்பாளியாக கவிஞர் கஜன் சச்சிதானந்தன்

http://kalkudahnation.com/45485









வாராவாரம் கல்குடாநேசன்  இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள் கலைஞர்கள் கவிஞர்களை  சந்தித்துவருகின்றோம். அவர்களின்  திறமை ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்தவகையில் இவ்வாரமும் ஓர்  இளைய  படைப்பாளியை அறிமுகம் செய்வதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா  நேசனின் 40வது படைப்பாளியாக அறிமுகமாகின்றவர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த கவிஞர்  கஜன் சச்சிதானந்தன் அவர்கள்  வளர்ந்துவரும் படைப்பாளிகளுள் குறிப்பிட்டு  சொல்லக்கூடியவர். கவிதை  சிறுகதை பேச்சு  போன்ற  இலக்கிய  துறைகளில் அதீத  ஈடுபாடு  கொண்ட  இவர் கவியரங்குகளில் சிறப்பாக  கவிபாடக்கூடிய திறமைகொண்டவ‌ர்.

தகவல்  தொழினுட்பத்துறையில்  உயர்கல்வியை  நிறைவுசெய்துவிட்டு  அதே துறையில்  தொழில்புரியும் கஜன்  அவர்கள் //கவியரங்க மேடையில் யாப்பு  முறையில் எழுதப்பட்டவற்றை வாசித்துகொண்டிருப்பதில் பயன்கிடையாது  என்பது  என்னுடைய  திண்ணம்// என  காத்திரமான  காரசாரமான கருத்துக்களோடு  மனந்திறக்கின்றார்.

மிக இளையவராக இருப்பினும்  மிக நல்ல குணங்களையும் பொறுமையுடன்  நிதானமுள்ளவராகவும் தனது  வார்த்தைகள் திறமைகளை முன்னெடுக்கும் இவர்  சிறப்பான  விடயங்களை எங்களோடு  பகிர்ந்துகொண்டார்.  அவரின் முழுமையான  நேர்காணலை வாசித்து எமது  வாழ்த்துக்களையும் நல் ஆலோசனைகளையும் வழங்கி இவ் இளைய  கவிஞருக்கு கைகொடுப்போம்



01. எழுத்தின்மீது எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

வாசிப்பும் நேசிப்பும்தான் எழுத்தின் மீதான ஈடுபாடு ஏற்பட காரணமாக இருக்க முடியும். சிறுவயதிலிருந்தான வாசிப்பு பழக்கமும், பாடசாலைகளில் கட்டுரைகள் எழுதுவதில் காட்டிய ஆர்வமும்தான் ஒரு கட்டத்தில் பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதுவதற்கான உந்துசக்தியை எனக்கு தந்நது. அதனுடைய வெளிப்பாடாக பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே பத்திரிகைளுக்கு எழுத ஆரம்பித்த விட்டேன். நான் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய முதல் கட்டுரைக்கு பத்திரிகை கொடுத்த அங்கீகாரம் தொடர்ச்சியாக சிறுகதை, கவிதை போன்றவற்றையும் பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது.


02. எவ்வகையான இலக்கிய படைப்புக்களில் ஆர்வம்காட்டி வருகின்றீகள்?

சமூகம், சினிமா மற்றும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற துறைசார் படைப்புகளை உருவாக்குதிலும், மேடைப் பேச்சுக்கள், பட்டிமன்றங்கள்; மற்றும் கவியரங்களிலும் பங்குபற்றுவதிலும் ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.


03. உங்கள் தொழிற்துறை பற்றி?

எனது தொழில்துறை இலக்கிய துறையிலிருந்து முற்றாக மாறுபட்ட, தகவல் தொழில்நுட்பதுறையில் உயர்கல்வியை மேற்கொண்டு தற்போது அத்துறையில் கடமையாற்றிவருகிறேன்.


04. நீங்கள் கலந்துகொண்ட போட்டிகள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பற்றி?


கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஓர் இணையத்தளம் நடத்திய கவிதைப்போட்டியில் எனது “சுமை தாஙகி” எனும் கவிதை சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டமையும், இவ்வருடம் இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார திணைக்களத்தினால், உலக கவிதைத் தினம் 2016 ஐ முன்னிட்டு; வெளியிடப்பட்ட "மானுடம் பாடும் கவிதைகள்" எனும் தமிழ் கவிதைத் தொகுப்பில் எனது “கருகும் மொட்டுக்கள்” எனும் கவிதை இடம் பிடிந்திருந்தமையும், கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாதம் 2015ஐ முன்னிட்டு, வவுனியா பொதுசன நூலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில், எனது “வாழ்க்கையின் அர்த்தம் தேடி” என்ற சிறுகதைக்கு இரண்டாம் இடம் கிடைத்தமையும், திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் சர்வதேச அளவில் நடாத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில், எனது “கனவின் நிஜம்” எனும் சிறுகதை இரண்டாம் இடம் பெற்றமையும், கடந்த வருடம் எனது கனவு மேடையான கம்பன் மேடையில் பேசுகின்ற வாய்ப்புக் கிடைத்தமையும், கவிதை, சிறுகதை மற்றும் பேச்சு துறைசார்ந்த அண்மைய வெற்றிகள் என்பதை விட அங்கீகாரங்களாக கருதுகிறேன்.

;
05. உங்களது கவியரங்க அநுபவங்கள் பற்றி?

கவிதைகளை நிறைய எழுதியிருந்தாலும் கூட, ஆரம்ப காலங்களில் கவியரங்களிலே பங்கு பற்றியது கிடையாது. அதற்கான முதல் வாய்ப்பு, நான் பாடசாலைக் காலத்தின் பின்னர் இலக்கிய துறைக்குள் மீண்டும் பிரவேசிப்பதற்கு அடித்தளத்தாக இருந்த தமிழ் மாமன்றத்தினுடைய நிகழ்வு ஒன்றில்தான் கிடைத்தது. நிறைய கவியரங்களை பார்த்து சுவைத்ததனாலும், கவியரங்களில் பங்கு பற்றுவர்களினுடைய நெருங்கிய நட்பினாலும் கவியரங்கம் மீதான ஆர்வம் மிக அதிகமாகவே இருந்தது. கவிதைகளே ஓரளவுக்கேனும் எழுதத் தெரிந்த எனக்கு, என் கூட இருந்தவர்களுடைய உந்துசக்தி கவியரங்களில் பங்கு பற்றுக்கின்ற ஆர்வத்ததை மேலும் தூண்டியது. அதன் காரணமாக தொடாச்சியாக ஆலயங்களின் திருவிழாக்கள் நூல் வெளீயீடு மற்றும் பொது நிகழ்வுகளில் இடம் பெறுகின்ற கவியரங்களில் பங்கு பற்றி வருகிறேன். கவியரங்களில் கிடைக்கின்ற கைத்தட்டல்கள்தான் அதற்கான வெற்றி. அந்த வகையில் கவியரங்கம் சார்ந்த ஓர் திருப்திகராமான நிலை எனக்கு இருந்தாலும், இன்னும் அத்துறை சார்ந்து என்னை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மேலும் முல்லைதீபன் அண்ணாவின் தலைமையில் அதிகளவான கவியரங்களில் பங்கேற்றுகிருக்கின்றமையால், அவர் போன்று, சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கவிதைகளை எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது.

 
06. கவியரங்க கவிதைகள் எவ்வாறு அமையவேண்டும்? இதில் உங்களது முன்னோடி வழிகாட்டிகள் பற்றி?


கவியரங்க கவிதைகளென்று தனிச்சிறப்புண்டு. கவியரங்க மேடையிலே யாப்பு முறையில் எழுதப்படடவற்றை வாசித்து கொண்டிருப்பதில் பயன் கிடையாது என்பது என்னுடைய எண்ணம்.  காரணம் அரங்கத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்பது உடனடியாக புரிய வேண்டும். கவிதையினுடைய முதல் வரியிலியே அவை கவரப்பட்டு எமது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். கவியரங்க தலைப்பிற்கும், கவியரங்கு நடக்கும் இடத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமாக கவிதை இருத்தல் வேண்டும். தலைப்பை பல்வேறு கோணங்களில் அணுகும் வகையிலும் அதே வேளை கேட்பவர் சலிக்காத வகையிலும், உடன் விளங்கிக் கொள்ளும் விதத்திலும், சுவைபட கவிதை அமைதல் முக்கியமானது. சந்தங்களிற்கும், நகைச்சுவையான வரிகளுக்கும் அதே வேளை சமூகம் சார்ந்த விடயங்களிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கவியரங்க கவிதைகள் அமைந்தால் நிச்சயமாக அனைவராலும் ரசிக்கப்படும்.
கவியரங்களிலே எனது முன்னோடி என்று பார்த்தால், மானசீகமாக எப்போதுமே கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்தான். அவரை விட நேரடியாக நான் கவியரங்கத்தில் நுழைவதற்கு காரணமாகவும் எனக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் என்றால் தமிழ் மாமன்றத்தைச் சேர்ந்த மதுரகன் அண்ணாவைத்தான் குறிப்பிட முடியம். மேலும் தமிழ் மாமன்றத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுனுடைய வழிகாட்டுதல்கள் என்றும் எனக்கு உந்துசக்தியாக இருக்கின்றது.


07. இலக்கியத்தில் நீங்கள் சாதிக்க நினைக்கும் விடயங்கள்?


இலக்கியத் துறைசார்ந்;த நிறைய கனவுகள் என்னிடத்தில் உண்டு. கவிதைகள் பற்றிய சரியான தெளிவோடு, கவிதை துறையில் ஓர் மைல்கல்லாக அமைகின்ற கவிதைத்  தொகுதியை வெளியிட வேண்டும். அத்துடன் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட வேண்டும். மற்றும் பேச்சுத் துறை சார்ந்த ரீதியில் மேலும் என்னை வளப்படுத்தி, சிறந்த ஓர் பேச்சாளாராக வர வேண்டும். இது போன்று இலக்கிய துறைசார் கனவுகளுக்கும் தேடலுக்கும் எனக்கு என்றுமே எல்லை கிடையாது.


08. உங்கள் குடும்பம் பற்றி?


என்னுடைய தந்தை கமநல சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றி, தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அவர்தான் என்னுடைய இலக்கிய துறைசார்நத முதலாவது குரு ஆவார். எனது தாய், எப்போதும் என்னுடைய வழிகாட்டி. அவர்களை விட எனக்கு உந்து சக்தியாக இருக்கும் சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் கொண்ட குடும்பத்தில் கடைசிப்பிள்ளை நான்.


09. இன்றைய இளையவர்களின் படைப்புக்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


இன்றைய இளையவர்களின் படைப்புக்கள் பற்றி சற்று எனக்கு முரண் கருத்தே உண்டு. ஆங்காங்கே சரியான வழிகாட்டுதல்களோடு, தரமான படைப்புக்களை இளம் படைப்பாளிகள் தந்தாலும் கூட, அதிகமான படைப்புக்கள், சரியான வழிகாட்டுதலின்றி பத்தோடு பதினொன்றான வருகின்ற படைப்புக்காளகவே இருக்கின்றது. சரியான வழிகாட்டுதலும் ஆலோசனைகளும், நேர்மையான விமர்சனங்களும் அவர்களுக்கு கிடைக்குமாக இருந்தால் தரமான படைப்புகளை அவர்களாலும் வெளியிட முடியம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


10. "இப்போதெல்லாம் கணிசமான கவிதைகள், இலக்கிய வகையறாக்களுக்குள் உள்வாங்கப்படுகின்றது. சில படைப்புக்கள் எவ்வித திருத்தங்களோ ஆலோசனைகளோ இன்றி நூலாக்கம் பெறுகின்றது இது இலக்கிய தொய்வாக காணப்படுகின்றது" என பல மூத்தவர்களின் கருத்துகளாக இருக்கின்றது இது உங்களின் பார்வையில் எவ்வாறாகின்றது?


நிச்சமாக அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இன்று நூலக்கம் பெறுகின்ற சில படைப்புகளை எந்த வகைக்குள் அடக்குவது என்று தெரியவில்லை. இவ்வாறு நூலக்கம் பெறுகின்ற சில தரமற்ற படைப்புக்கள் இரண்டு விதமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒன்று அப் படைப்பை படைக்கின்ற படைப்பாளி, தான் படைக்கின்ற படைப்பு சரியானது என்ற ஓர் எடுகோளிற்கு வருகின்றார். அப் படைப்பின் பின்னால் அவருக்கு கிடைக்கின்ற பட்டங்களும், வாழ்த்துக்களும், கௌரவிப்புக்களும் அவரை ஓர் குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி விடுகின்றது. அவருடைய தொடர்ச்சியான படைப்புக்களும் அந்த குறுகிய வட்டத்திற்குள்ளேயே வெளிவரப்போகின்றது. இது படைப்பாளி சார்ந்த பாதிப்பு. அடுத்தது சமூகம் சார்ந்த பாதிப்பு, அப்படைப்பு இலக்கிய துறையிலே வலம் வரப்போகிறது. எங்களுடைய அடுத்த அடுத்த தலைமுறை அந்த படைப்பை, அத்துறை சார்ந்த உதாராணமாக எடுத்துக்கொள்ளப் போகிறது. இதன் காரணமாக அவர்களும் அதே போன்ற படைப்பை வெளியிட சந்தர்பங்கள் உண்டு. நாம் அதன் காரணமாக எமது அடுத்த தலைமுறையும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறது. ‘நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறான செயற்பாட்டிற்கும் பின்னாலும் ஒரு தலைமுறையே தவறாக வழிநடத்தப்படுகிறது’ என்பதை படைப்பாளிகள் கவனத்தில் கொண்டால் தரமான படைப்புக்கள் வெளிவரும்.


11. விமர்சனங்கள், ஆலோசனைகள் எப்படியாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?


நேரடியாகவும் நேர்மையாகவும் விமர்ச‌னங்கள் அமைய வேண்டும். நிறைகளை மட்டும் குறிப்பிடாமல் குறைகளையும் சுட்டிக்காட்டுதோடு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதே நேரம் நேர்மையான நடுநிலையான விமர்சனங்களையும், தரமான படைப்புகளை நோக்கி நகர்த்துகின்ற ஆலோசனைகளையும், பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்கின்ற மனநிலை படைப்பாளர்கிடையே உருவாக வேண்டும் அல்லது இன்னும் செம்மைப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன்.


12. மூத்த இலக்கியவாதிகளின் கருத்துக்களோடு இளையவர்களின் கருத்து எப்போதும் முரண்பட்டுக்கொண்டே இருப்பதனை அவதானிக்கமுடிகின்றது, இது எல்லா சந்தர்ப்பத்திலும் பொருத்தமாகுமா?


எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது. ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் பொருந்தும். காரணம் தலைமுறைக்கிடையிலான கால இடைவெளியின் வித்தியாசம் சில மாற்றங்களை மன ரீதியிலே ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதே. மாற்றங்களை விரும்புகிறவர்கள் இளையவர்கள். மாற்றங்களை விரும்பாதவ‌ர்கள் மூத்தவர்கள். இருவரும் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் இணைந்து பயணித்தால் முரண்பாடுகளைத் தடுத்து. இலக்கியம் எனும் வண்டி சீராக பயணிக்க வழிசமைக்கும்.


13. உங்களது அநுபவத்தின்படி மூத்தவர்களின் ஊக்கப்படுத்தல்கள் பற்றி?

நிச்சயமாக அவர்களுடைய ஊக்கபடுத்தல்களோ ஆலோசனைகளோ இன்றி இத்துறை சார்ந்த வெற்றிகரமாக எம்மால் பயணிக்க முடியாது. அந்த வகையில் மூத்தவர்களின் ஊக்கப்படுத்ததல்கள் எனக்கு கிடைத்திருக்கிறது கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், இளையவர்களை அரவணைத்து இலக்கியத் துறைக்குள்ளே அழைத்து செல்கின்ற, வளர்ச்சிகளைக் கண்டு பூரிப்படைகின்ற, இளையவர்களின் பயணத்திற்கு வழிவிட்டு, வழிபடுத்துகின்ற மனப்பக்குவம் இன்னும் ஏற்பட வேண்டுமோ என அவ்வப்போது தோன்றுவதும் தவிர்க்கமுடியாததே.


14. இலகுவாக கிடைக்கும் இணைய விருதுகள் பாராட்டுக்கள்  பட்டங்கள் பற்றி?


எதுவமே மலிவாக, இலகுவாக கிடைத்துவிட்டால் அதனுடைய மதிப்பு குறைவென்பது யாதார்த்தம். விருதுகள், பட்டங்கள் என்பவைகளை வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி இருக்க வேண்டும். தகுதியற்ற கிடைக்கின்ற எதுவும் நிச்சமாக வெற்றியை நோக்கி நகர்த்தாது. 


15. இவ்வாரான விருதுகள் பல படைப்பாளிகளுக்கு ஊக்கப்படுத்தலாக அமைகின்றது என்ற கருத்தும் காணப்படுகின்றது உண்மையில் இது ஆரோக்கியமான ஒன்றா?

ஆரோக்கியமானது அல்ல. அதற்கு ஒரு வகையில் அவற்றை எந்த வகையில் படைப்பாளிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் காரணமாக இருக்கிறது. இணைய விருதுகள், பட்டங்கள், பாரட்டுக்கள் படைப்பாளிகளிற்கு ஊக்கத்தைக் கொடுத்தாலும் கூட, அவர்களை ஓர் குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விடுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். அவற்றை வெறும் அங்கீகாரங்களாக் கொண்டு அடுத்த அடுத்த படிநிலைகளில் பயணிக்க படைப்பாளிகள் தயாராக இருக்க வேண்டும்.


16. கவிதையுடன் ஒப்பிடுகையில் சிறுகதை இலக்கியத்தின் வருகை மிகக்குறைவே, இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதற்கான காரணம் என்ன?


சிறுகதை இலக்கியத்தின் வருகை குறைவு என்பதை விட கவிதையின் வருகை அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதற்கான காரணம் படைப்பை நுகர்பவர்களே. கவிதையை விரும்பி வாசிப்பதைப் போல சிறுகதை இலக்கியத்தை விரும்பி வாசிப்பவர்கள் ஓப்பீட்டளவில் குறைவு. ஒரிரு வரிகளில் கருத்தை சொல்வதாக கவிதை அமைந்து விடுகிறது. குறுகிய நேரத்திற்கும் அதை அவர்களால் நுகர முடிகிறது. ஆதாலல் அதை நோக்கியே படைப்பாளிகளும் சரி வாசகர்களும் சரி நகர்த்தப்படுகிறார்கள். இன்னொரு காரணம் புதுக்கவிதையின் வரவிற்கு பின்பு, கவிதை எவரும் எழுதிவிடாலம் என்ற ஓர் துர்ப்பாக்கிய நிலைமையும்தான்.


17. பேசப்படக்கூடிய, காலத்தால் அழியா இலக்கியத்திற்குரிய பண்புகளாக இன்றைய இளையவர்களுக்கு கூற நினைக்கும் பண்புகள் பற்றி?

எங்களுடைய இலக்கியம் என்பது எங்களுடைய வாழ்க்கையை எங்களுக்கு சொல்வது. இலக்கியத்திற்கென்று ஒரு பார்வை, ஒரு நோக்கு, வரையறை, உத்தி முதலிய எல்லாம் இருக்கின்றன. தொன்மை வாய்ந்த இலக்கியங்களை தாங்கி வந்த நாம், அவற்றை சிதைக்காது, அப் பாதையை விட்டு விலாகது, இந்த காலத்தினுடைய அம்சங்களையும் அத்துடன் ஆரேக்கியமான முறையில் இணைத்து பயணிப்பாதாக அமைய வேண்டும் என கருதுகிறேன்.
கவிக்கோ சொன்னது போல 
“கவிஞன்
காலத்தால் செய்யப்பட்டவன் அல்லன்
காலத்தைச் செய்பவன்”
இது கவிஞனுக்கு மட்டுமல்ல எந்த ஒரு படைப்பாளிக்கும் பொருந்தும். காலத்தை அழிக்காத காலத்தைச் செய்கின்ற பண்புகளைக் கொண்டமைந்தால்  போதுமானது.


18. ஈழத்து இலக்கிய படைப்பாளிகளில் உங்களை கவர்ந்தவர்கள்?

எஸ்.பொ, சிற்பி, செங்கை ஆழியன், கவிஞர் முருகையன், கவிஞர் நீலாவணன், கம்பவாரிதி இ.ஜெயராஜ், ஷோபா சக்தி, ஜே.கே



19. எவ்வகையான  விடயங்களை உங்களது  படைப்புக்களில் முன்னிறுத்த  நினைக்கின்றீர்கள்? நீங்கள் விரும்பும்  சமூக மாற்றங்கள்?


படைப்பாளியினுடைய படைப்புக்கள் ஒன்று அனுபவங்களினூடக பிறக்கின்றது. இன்னொன்று கற்பனையினூடு பிறக்கின்றது. இந்த இரண்டு விதங்களிலும் என்னுடைய படைப்புக்கள் உருவாக வேண்டும் என நினைக்கிறேன். எங்களுடைய சமூகம் சார்ந்து ஏற்பட வேண்டிய நல்ல மாற்றங்களை வாசகர்களிடத்தே கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் கடந்த வந்த பாதைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு அதற்குள் வாசகர்களை நிறுத்திவிடாமல், அடுத்த படிநிலைகளில் அவர்களை அழைத்துச் செல்லுகின்ற விதத்திலே எனது படைப்புக்கள் அமைய வேண்டும் என கருதுகிறேன். அத்துடன் வாசகன் நினைத்துப் பார்க்க முடியாத, அனுபவித்திராத கற்பனை உலகத்திற்கும் அவனை அழைத்து செல்லுகின்ற படைப்புக்களையும் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சமூகம் சார்ந்து இன்றைய உலகிற்கேற்ப, அதே நேரம் எங்களுடைய வழிமுறைகளிலிருந்து விலகாத மாற்றங்களை நான் விரும்புகிறேன். தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற, சமூக அக்கறை கொண்ட, தன் சார்ந்த மட்டுமல்லாமல் இந்த சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற, மனிதநேயம் மிக்க மனிதர்களை முற்றுமுழுதாக கொண்டதான ஓர் நல்ல மாற்றத்ததை நான் விரும்புகிறேன்.


20. பெண்களுக்கெதிரான  வன்முறைகள்  பற்றி சொல்ல விரும்புவது?


“மொட்டுக்கள் விரியும் முன்பே – சில
மூடர்கள் கையில் சிக்கி
பழி தீர்ப்பிற்காய் அற்ப ஆசைக்காய்
பலியாகும் செய்தி வெறும் செய்தியாகவே தொடர்கிறது…!” 

இது என்னுடைய ‘கருகும் மொட்டுக்கள்’ என்ற கவிதையில் இடம்பிடித்த வரிகள்.
பெண் என்பவள் இந்த உலகத்திலே மதிக்கப்பட வேண்டியவள். அவர்களை வெறும் போகப் பொருள்களாகவோ, உடலங்களாகவோ பார்க்கின்ற பார்வை மாற வேண்டும். இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகவே இருக்கின்றன. அவைகளை தண்டனைகளினால் மட்டுமே தவிர்க்க முடியுமா எனத் தெரியவில்லை. வன்முறைக்கான அடிப்படை காரணங்கள் கண்டறியப்பட்டு, அடிப்படையிருந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

“மலராகும் மொட்டுகள்
மனிதாபமின்றி மண்ணோடு  போகுதே
மனிதமே நீயிருந்தால் கருக்காமல் விடு
மலராகத் துடிக்கும் நம் மொட்டுகளை…!”


21. இன்றைய  பெண்களின் எல்லா துறைகளிலுமான வளர்ச்சி  பற்றியும் அவர்களின் நாகரிக போக்குகள் பற்றி நீங்கள்  சொல்லவிழைவதும்?


வளர்ச்சி நாகரீகப்போக்கு இரண்டும் இரு திசைகளில் பயணிப்பதாக நினைக்கிறேன். பெண்களினுடைய எல்லாத் துறைகளிலுமான வளர்ச்சி உண்மையாக மேம்பட்டு இருக்கின்றது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கு பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவே இருக்கின்றது. சமூகம் சார்ந்து பெண் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கடந்து அவளால், ஆண்;களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்க முடிகின்றது என்றால் அது நிச்சயம் பெருமைப்படக்கூடிய விடயம்.
வளர்ச்சி இப்படி ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், நாகரீகப் போக்குகள் தொடர்பாக பெண்கள் சற்று நல்  மாற்றங்களை நோக்கி நகர வேண்டுமோ எனத் தோன்றுகிறது. இன்றைய நாகரீக உலகம் பெண்களை மட்டுமல்லாமல், ஆண்களையும் தவறான பாதைகளுக்குள் இட்டுச்செல்வதற்கான வழிவகைகளே அதிகம். துறை சார்ந்து வளர்ச்சியடையக்கூடிய தன்னம்பிக்கையும், சமூக சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவமுடைய இன்றைய பெண்களால், நாகரீக மாற்றத்தின் சில தவறான விடயங்களிலிந்து நிச்சயமாக விடுபட முடியும். ஒவ்வொரு பொண்ணும், தன் சர்ந்த வரையறைகளோடும், சுய கட்டுப்பாடுகளோடும் பயணிக்க நினைத்தால், நாகரீக மாற்றங்களை எதிர்கொண்டு பயணிக்க முடியும் என கருதுகிறேன்.


22. எமது  வாசகர்களோடு  பகிர்ந்துகொள்ள  நினைப்பது?


என்னுடைய கவிதைகளின் சில வரிகளினுடாக சில விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

“எழுத்தை எழுதி நூலாய்க் கோர்த்து
எண்ணிய இடம் செல்ல
எடுத்த காலம் கடந்து
எண்ணிய நொடியில் எழுத்தை
எண்ணியபடி எழுதிக் கொள்ள கிடைத்த
ஏடு இணையம்…!”

இன்றைய எழுத்துக்களுக்கான களத்தினை இணையம் தந்திருக்கின்றது.
இன்றைய இணைய உலகிலே எழுத்தாளர்களுக்கும் இணைய வாசகர்களுக்கும் சமூகம் தொடர்பான மிகப்பெரிய பொறுப்பு உண்டு. எழுத்ததாயும் மட்டுமே நம்மிடம் எஞ்சியுள்ளது. இணைய மற்றும் சமூக வலைத்தள வரவிற்கு பின்னர் எவரும் எழுதாலாம் என்ற நிலைமை  ஏற்பட்டுவிட்டது. இதற்கு வாசகர்களும் ஒருவித காரணம் என நினைக்கிறேன். ஆகவே தரமான எழுத்துக்களுக்கான ஊக்குவிப்புகளையும், தரமற்ற எழுத்துக்களை செம்மைப்படுத்துகின்ற கருத்துக்களையும் வாசகர்கள் தருவதற்கு தயாராக இருக்க வேண்டும். வாசகர்காள்தான் எப்போதும் படைப்பாளியினுடைய வழிகாட்டிகள்.

“அழியாத எழுத்துக்களை
அழகழகாய் செதுக்கிடுவோம்
அடுத்த அடுத்த தலைமுறையும்
நம் எழுத்தின் சுவட்டை பின் தொடரட்டும்”

ஒரு படி மேலே செல்

இருக்குமிடத்திலிருந்து 
ஒரு படி மேலே செல்
உயரத்திலிருப்பவனால்தான் -தான்
உள்ள இடத்தை 
உன்னிப்பாய் பகுத்தறியலாம்
மாற்றங்கள் செய்பவன் நீயென்பதால்
உன்னிடம் கூறவந்தேன் -எப்போதும்
உயரத்தையே விரும்பு.....

பிள்ளையில்லா தாயை

பிள்ளையில்லா தாயை தாக்கும்
பிள்ளையில்லையா எனும் வார்த்தைபோல்
நூல் வெளியிடவில்லையா எனும்
வார்த்தையில் குறுகிப்போகின்றேன்.....

திருமணங்கள்

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் 
பல திருமணங்கள் -ஏனோ
நரகமாகிவிடுகிறது....

உன்னை சந்தித்த நாள்முதலாய்

உன்னை சந்தித்த நாள்முதலாய்
உனக்காய் ஒருவரி எழுதவில்லை
என்னை உணர்ந்த அந்நாழிகைமுதல்
உன்னை நினைக்க மறக்கவில்லை....


சக்தி fmன் இதய‌ராகம் நிகழ்ச்சியில் 22.08.2016  ஒலிபரப்பாகியது 

தினக்குரல் வாரமலரில் கவிஞர் முல்லைத்தீபன் வே அவர்களின் நேர்காணல்.. 17.07.2016






  • முப்பது வருடத்திற்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் முடிவை பெரும் அழிவுகளின் மத்தியில் சந்தித்த முல்லை மாவட்டத்தை பிறப்பிடமாகவும் தனது கலை இலக்கிய செயற்தளமாகவும் கொண்டு இயங்கி வருகிறார் திரு.முல்லைத்தீபன். ஈழத்து இலக்கியத் தடத்தில், போருக்குப் பிந்தைய காலத்தில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல இளயவர்களுக்கு மத்தியில் இவரது பங்களிப்புக்கள் காத்திரமாக அமைந்து வருகிறன. பிரதேச பண்பாட்டுப் பேரவை உறுப்பினராக இருக்கும் இவர் பேராதெனியவில் இளங்கலைமானி முடித்தவர் பொது நிர்வாகத் துறையில் முதுகலைமானியைத் தொடர்கிறார். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக தேசிய பத்திரிகைகள், வானொலிகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தியும், நூல் வெளியீடுகளை நடாத்தியும் வருகிறார். சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உளவியல் உளவளத்துணை பாடநெறியையும் பயின்றவராவார். அண்மைக்கால பல இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகள், கவியரங்கங்கள், பட்டிமண்டபங்களில் இளவல்கள் பலரை அடையாளப்படுத்தி வெளிக்காட்டி வரும் ஓர் தமிழாசிரியர். ஆதலால்.. இவரை இவ்வார தினக்குரலின் 'மஞ்சரி' நேர்காணலுக்காய் சந்தித்தோம்...


  • 01. தங்களைப் பற்றி?

  • * ஈழத்திருநாட்டின் வடதிசையில் நானிலங்கள் ஒருங்கேயமைந்த காடும் காடு சார்ந்த இடமுமாகிய அடங்காப்பற்றாம் வன்னிப் பெருநிலப்பரப்பின் முல்லை மாவட்டமே எனது பிறப்பிடமும் வளர்ப்பிடமுமாகும். சிறுவயதிலிருந்தே பேச்சு, கவிதை, தாலலையம், வில்லுப்பாட்டு, நாடகங்கள் மற்றும் கூத்துக்கள் என பல்வேறு பாத்திரங்களை ஏற்றுள்ளேன். அம்மாவும், அம்மம்மாவுமே எனது குடும்பமாகும். தாயார் ஒரு பாடசாலை அதிபர் என்பதை விடவும் சிறந்த விளையாட்டு வீராங்கனை மற்றும் கலை இலக்கிய ஆர்வம் நிரம்பப்பெற்றவர். அதனால்தான் கலை இலக்கிய ஈடுபாடுமிக்க ஓர் தமிழாசிரியராக என்னால் கடமையாற்ற முடிகிறது. கரடுமுரடான கிரவல்ப் பாதையின் காலச்சக்கரத்தில் நான் வேகமாக இலக்கை அடைய வேண்டும் எனும் அவாவுடன் எம்மிளைய பிள்ளைகளையும் கொண்டு நகர்த்த வேண்டும் எனும் பேரவாவும் அதனோடிணைந்த மிடுக்கும் என்னிடம் இருக்கிறது என்பதில் பெருமைப்படுவேன்.
  • 02. உங்கள் நூலுருவாக்கங்கள் பற்றி..?
  • * கடந்த 2009 ல் செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் வைத்து 'நம்பி(க்)கை வை' எனும் கவிதை தொகுப்பை வெளியிட்டேன். அச்சந்தர்ப்பத்தில்.. அவ்விடத்தில் இப்பேற்பட்ட படைப்பொன்றின் தேவையை கருத்திற்கொண்டு இத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நொந்து நூலாகியிருந்த எம்மவரை ஆற்றுப்படுத்தக் கூடியதாய் அக் கவிதைகள் அமைய வேண்டும் என்பதில் கவனமாகவும் நிதானமாகவும் இருந்தேன். தொடர்ந்து.. கடந்த 2014 ல் வவுனியாவில் 'கடவுளிடம் சில கேள்விகள்' எனும் இரண்டாவது கவிதை தொகுப்பு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வெளியிடப்பட்டது. "யாருக்காகவும் யாரவது இருக்கிறார்களா என்றால்.. எவருக்காகவும் எவருமே இல்லை என்பதே விடையாகும்" இதனால் படைத்தவனிடமே பல்வேறு கேள்விகளை உரிமையுடன் கேட்டிருந்தேன். மேலும்.. 2015 ல் முல்லை மாவட்ட கவிதை எழுதும் 72 ஆர்வலர்களை இணைத்து 'முல்லைக் க(வி)தைகள்' எனும் மாவட்ட ரீதியான முதலாவது கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டேன். இதனை மூத்தவர்கள், இளையவர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களையும் இணைத்து முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனின் வாழ்த்துரையுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வெளியிட்டிருந்தேன். அத்துடன் இவ்வருடத்திற்கான மூன்று நூல்கள் பதிப்பிலுள்ளன. காலம் கனிந்தால் அதன் தடம் பற்றி வடம் பிடிக்க ஆவலோடுள்ளேன்.

  • 03. படைப்பாளி ஒருவரின் எதிர்பார்ப்பு எவ்வாறிருக்கிறது..?
  • அவர்தம் நிலைக்கேற்ப எதிர்பார்ப்புக்கள் வேறுபடலாம். இருப்பினும் சமூகப் பற்றுடன் ஆத்மார்த்தமாக ஒரு படைப்பை வெளியிடுபவர் அது தொடர்பான ஆரோக்கியமான விமர்சனத்தையும் அதற்கான அங்கீகாரத்தையுமே பிரதானமாக எதிர்பார்க்கிறார். அனைத்திற்கும் பின்புதான் வருமானம். ஆனால்.. படைப்புருவாக்கத்தின் மூலம் படைப்பாளியின் முழுமையான எதிர்பார்ப்புக்களும் பூர்த்தியாகிறதா என்றால் ஒப்பீட்டளவில் குறைவென்றே கூறலாம்.

  • 04. சமகாலத்தில் வழங்கப்படும் பட்டங்கள், விருதுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
  • மலிவாகவே வழங்கப்படுகிறது. அதைவிட கொடுமை தமக்குத் தாமே வைத்துக்கொள்ளும் தான்தோன்றிப் பெயர்கள். இதனால் காத்திரமான ஆழுமைகளும் கனதியான படைப்புக்களும் காலாவதியாக்கப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சில இடங்களில் பட்டங்களும் பொன்னாடைகளும் சில்லறைத்தனமாக விளங்கினாலும்.. எந்த ஒரு சமூகப்பற்றுடைய சிறந்த சிந்தனாவாதியும் இப்பேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் எதிர்பார்ப்பதே இல்லை என்பதற்கு எமக்குள்ளேயே வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் பலரை நாம் அடையாளப்படுத்தலாம். 05. காலம் தாண்டி பேசப்படக்கூடிய இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என கருதுகிறீர்கள்..?
  • உண்மையாக இருக்க வேண்டும். பக்கச்சார்போடு போற்றுதல், புளுகுதல் அல்லது தூற்றுதல், தூக்கியெறிதல் இன்றி சொல்லவேண்டியதை தற் துணிவுடன் எழுத வேண்டும். எழுதுகோலை கால மாற்றம் தடம் புரள வைக்குமானால்.. அதற்கேற்ப அமைதி காத்தலே பொருத்தமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக.. போருக்கு முந்திய-பிந்திய எழுத்தாக்கத்தின் முரண்நிலையைக் கூறலாம். ஆகவே.. காலத்தின் கண்ணாடி உண்மையாகும் தெளிவாகவும் இருந்தாலே காலம் தாண்டி பேசப்படும்.

  • 06. 'ஒரு படைப்பின் மீதான விமர்சனம்' என்பதை எவ்வாறு நீங்கள் நோக்குகிறீர்கள்..?
  • * உண்மையில் படைப்பின் மீதான ஆராய்வு, திறன் ஆய்வு, விமர்சனம் என்பவற்றிற்கிடையே சின்னச் சின்ன வேறுபாடிருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் பொதுவாக பார்த்தால் போற்றிப் புகழ் மொழியாகவோ.. அன்றில், பிய்த்து எடுத்து சப்பிக் குப்பைத் தொட்டியில் கணக்கெடுக்கப்படாமல் போட முற்படுவதாகவேதான் இருக்கிறது. ஆனாலும்.. பட்டதை சட்டென சுட்டும் குணமும், தட்டிக்கொடுக்கும் தார்மீக பொறுப்பும், படைப்பை வாசகனுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாகவும் இருக்க.. பல திறன் மிகு விமர்சகர்கள் இன்னும் பொது வெளிகளுக்கு தேவைப்படுகிறார்கள். மலிந்த சந்தையில் குவிந்து கிடக்கும் விமர்சகர்கள் மத்தியில் நடுநிலை சிந்தராவாதிகளின் வரவும் அவசியமமானதாக இருக்கிறது.
  • 07. எழுத்தாக்கத்துறையிலும் 'பிரபலமேனியா' எனக் கூறப்படுவது பற்றி..?
  • * என்னிடம் இவ்வாறான திறமைகள் இருப்பதாக நானே கூறிக்கொள்ளல் தம்பட்டம் அடித்தல் அல்லது தற்பெருமை பேசல் எனப்படலாம். ஆயினும்.. நான் இவற்றை செய்தேன் அல்லது செய்கிறேன் எனப் பொது வெளியில் கூறும் போதுதானே தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள் எனும் வாதமும் உண்டு. எது எப்படி இருப்பினும்.. அளவுக்கு அதிகமாகே தம்மைத்தான் கவிஞர் என்றும் படைப்பாளி என்றும் எழுத்தாளர் என்றும் இலக்கிய மகா அரசர்கள் எனவும் பெயர் வைத்துக்கொண்டலைவது ஒரு வகையில் 'பிரபலமேனியா' தான். பல்வேறு விதமான மனநோய்களில் இதுவுமொன்றெனக் கருதுகிறேன். 08. பெண்படைப்பாளிகளின் வளர்ச்சிகுறித்து உங்கள் கருத்து? பொதுவாகவே இதர பல துறைகளைப்போல் பெண் படைப்பாளிகளின் வரவு குறைவுதான். ஆனாலும் சமகாலத்தில் குறிப்பிடக்கூடிய பல பெண்களிடமுள்ள அசாத்தியமான பெருந்தற்துணிவான படைப்புக்கள் வியக்க வைக்கின்றன. அரசியல், பாலியல் என்று ஒருகாலத்தில் அச்சப்பட விடையங்களை ஓர்மத்துடன் ஆணித்தரமாக வெளிப்படுத்துகின்றனர். சமகால நம் 'ஆண்டாள்கள்' இவர்கள். இலை மறையாக இருக்கும் இன்னும் பலர் தம்மைத்தாமோ அல்லது பிறராலோ அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.
  • 09. அண்மைக்காலமாக கவியுலகில் அடிக்கடி ஏகப்பட்ட கவிஞர்கள் உருவாகி வருகிறார்களே..?
  • * சீரிய சிந்தையுடை நற் பேற்றுக் கவிஞர்கள் இன்றும் வறுமையில் வாட..! கூனிக்குறுகிச் சாக...! சில ஆயிரங்களும்.. நல்லாக்கதைக்க நாலு பேரும் கிடைத்தால் ஒரே இரவில் கவிஞராகலாம். அதற்குச் சில அழைப்பிதழ்ப் பெயர் விரும்பிகளும், ஒலிவாங்கிப் பிரியர்களும் ஆதரவாகவிருப்பதே மேலும் ஆதங்கத்தைத் தருகிறது. மூத்தோரால் தட்டிச் செதுக்கி சீர் செய்யப்பட்டு வரும் சந்தர்ப்பங்களை இளையோரும் நளுவ விடுகிறார்கள். அவசர இயங்கு தளத்தில் 'அவசர கவிஞர்கள்' ஆகிறார்கள். இதனால் வேகமாக இப்பாதையிலிருந்து இவர்கள் காணாணல்ப் போவதுடன் மூத்தவர்களின் விருப்பத்திற்குரிய தன்மையினையும் அதனூடாக அடுத்த படிக்கு முன்னேறும் வாய்ப்பினையும் தவற விடுகிறார்கள். பின்னர் தமக்கான ஆதரவு இல்லையென புலம்புகிறார்கள். ஆகவே பாதையோரக் கல் பல உளியடிகளைப் பெற்று சிலையாவது போல் கவிஞர்களை காலம்தான் தட்டிச் செதுக்க வேண்டும்.
  • 10. இறுதியாக.. வெளிவரும் படைப்புக்களுக்கான போதிய ஆதரவும் தட்டிக்கொடுப்பும் இருப்பதாக உணருகிறீர்களா..?
  • உண்மையில் தாராளமாகக் கிடைக்கிறது. இதனை எனது அனுபவத்தினூடாகக் கூறுகிறேன். வளர்ந்தவர்கள் பிறரை வளர்க்க விரும்புகிறார்கள். வளர வேண்டியவர்கள் வளரத் துடிக்கிறார்கள். ஆக.. ஆதரவில்லை என்பது, இவர்களுக்கான இடைத்தொடர்பிலேயே தங்கியுள்ளது. சமூகப் படைப்பாளியின் தொடர்பாடல்த் திறனில் விரிசல் ஏற்படும் போது அது படைப்பாக்கச் செயற்பாட்டின் ஆதரவுத் தன்மையை இழக்கிறதே தவிர வெளிமட்டத்தில் தட்டிக்கொடுத்தல் இல்லை எனும் பொருள் படாது. ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பதை முழுமையாக வாசகரே தீர்மானித்தாலும் இலக்கிவாதிகள், சமூகமட்ட அதிகாரிகள் மற்றும் ஊடகங்களே வாசகரது தீர்மானத்திற்கான ஊக்கிகளாகும். அந்த வகையில் என்னைப்பொறுத்த வரை இம் முக்கூட்டுறவென்பது எனக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். ஆதலால்.. என்றும் என்னோடிருக்கும் இவர்களையும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நண்பர்களையும், எதையும் "கண்ட படி கதைக்கும்" என்னலனில் அக்கறை கொண்ட அன்பர்களையும், என் அடி மனதின் ஆழத்திலிருந்து பறிக்கும் நன்றிப் பூக்களோடு நெஞ்சம் நெகிழ்ந்து நினைவிற் கொள்கிறேன்.


ஆண் பெண் நட்பின் ஆழம்

ஆண் பெண் நட்பின் ஆழம், ஆயுள் என்பன திருமணத்திற்கு பின்னர், கணவனாலே தீர்மானிக்கப்படுகிறது....

மொழிபெயர்த்துவிடாதே

என் மௌனத்தை 
மொழிபெயர்த்துவிடாதே
நம் உறவின் அர்த்தங்கள்
சிலவேளைகளில் சிதைந்துவிடலாம்

என் வழிகளில் பல வலிகள்

என் வழிகளில்-பல‌
பல வலிகள்
கடந்து வந்த போதிலும்
நடந்த ஒன்றும் வலிக்கவில்லை
கிடந்த முட்கள் ஒன்றாகி-நிம்மதியை
கிட்டிச்சேர விடாத போதும்
இடைக் கிடைவந்த தைரியங்கள்
தடைகளை தாண்டச்செய்தது
மாயைகளை உணரமுடிந்தது
மனதை தேற்ற முடிந்தது என்றாலும்
என் வழிகளிலின்னும்-பல‌
பல வலிகள்...

Thursday, July 21, 2016

தூக்கமாட்டாயோ இறைவா.....


காற்றை தொலைத்த காலமா- நான்
நேற்றில் மகிழ்ந்த கானலா
தூற்றும் உறவுகள்தான் எனதா- எனை
தூக்கமாட்டாயோ இறைவா.....

வரங்களில் ஒன்றிது...

ஏமாற்றங்களை சுமந்தே
ஏற்றங்கள் கண்டுவிடு
வேதனையை வைத்துக்கொண்டே
வாழ்ந்து முடித்துவிடு
இறைவன் எனக்களித்த‌
வரங்களில் ஒன்றிது...

Thursday, July 7, 2016

திட்டுவாங்குவார் என்னிடம்.....

எதிர்ப்பார்ப்புக்களை கொன்று
இயல்புகளை இருத்திக்கொண்டேன்
எத்தனை தடவைதான்- இறைவன்
திட்டுவாங்குவார் என்னிடம்...!!

Sunday, July 3, 2016

2016 ஜூலை மாத தமிழன்24 சஞ்சிகையில்...


முதல் சந்தர்ப்பம்

பெண்களுக்கெதிரான வன்முறைக்கு 
ஆண்களால் குரல்கொடுக்கப்படும் 
முதல் சந்தர்ப்பம்
தனது அன்னை, 
தந்தையால் 
மனவேதனைக்குட்படும்போது 
கொதித்தெழும் மகனால்......

Thursday, June 30, 2016

எப்போதும் இலக்குகள்

வானத்தை குறிவையுங்கள்
மேகத்தை கடக்கும்
வெற்றியினையாவ தடையலாம்
எப்போதும் இலக்குகள்
உயரமானதாவே இருக்கட்டும்...

துடித்துப்போனேன்!!

வாழ்க்கையை தொலைத்தபோதுகூட - நான்
வாய்விட்டழ வில்லை
ஏழ்மையில் திளைத்தபோதோ
ஏராளமாய் துடித்துப்போனேன்!!

உனக்குள் தீயாய் எரியட்டும்

வாழப்பிறந்தவர்நாம் -தாரகையே
வாழ்வை அட மானம் வைப்பதேனோ
தாழ் விதென்றெண்ணி தரணியில் -உம்புகழ்
தளைக்க வழி தேடாயோ.....

உடம்பை மூலதனமாக்கிய உனக்குள் -உயிரான
நம்பிக்கை வாழ்வதனை மறந்தாயோ
உன்பிள்ளைக்காய் பெண்சமூகத்தை
உலகம் பழிக்க செய்வாயோ.....
மூச்சு நின்றுவிடு முன் வாழ்ந்துவிடு
பேச்சு அடங்குமுன் சாதித்துவிடு.....

கல் உடை
கடைகளுக்கு சமைத்துகொடு
பத்துப்பாத்திரம் தேய்
பலவீடுகளை சுத்தம்செய்...
வாழ்வதற்கு வழிகளுண்டு
கல்வி இல்லையென கலங்காதே
சல்லி இல்லையென சரியாதே
உனக்குள் தீயாய் எரியட்டும்
வாழ்தலின் வழிமுறைகள்....

Tuesday, June 28, 2016

குழிகளில்தானே

நீங்களெனக்கு
வெட்டிய குழிகளில்தானே
நட்டுவைத்தேனென்னை

இப்போ
எட்டிப்பார்த்து
திட்டுவதென்ன..

மாண்டுபோகாது
மலர்ந்துவி்ட்டேனென்றா????

ஒரேநாளில்தான்

மகிழ்ச்சி இறந்ததும் -நான்
மரணித்ததும் ஒரேநாளில்தான்
மலர்ச்சியோடு இருப்பதென்னவோ -அந்த
மனதுக்காகத்தான்....



நினைவுகள்தான்

புத்தகங்களை
கலைத்து அடுக்கும்
சுகத்தினை தந்தது - உன்
நினைவுகள்தான்....

எல்லா புத்தகத்திலும்
ஏதோ ஒருவரியில் -நம்
இறந்தகால சுகங்கள்
இறவாமல் வாழ்ந்துகொண்டிருப்பதால்.....