Saturday, January 28, 2012

மழை நதி கடல் கவிதை தொகுப்பு மீதான எனது ரசனைப்பார்வை





 "மழை நதி கடல்" எனும் இயற்கையின் நாமம் சூட்டி இயற்கையை மொழிபெயர்த்திருக்கும் மிக இயற்கையான மொழிநடையில் வாழ்வின் அங்கங்களை வடித்த ஓர் அழகிய கவிதைத்தொகுப்பு, அட்டாளைச்சேனை கவிஞர் இனியவன் இஸாறுதீன் அவர்களுக்கு சொந்தமானது. இந்த அற்புத கவிதைகளை வாசித்துமுடித்த போது மனம் ஆனந்தக்கூத்தாடியது. அத்த‌னை அற்புதம் அத்தனை அதிசயம்.
    "நான் புறப்பட்ட இடம் நீ
    உன்னிடமே வந்து
   சேரப்போகின்றேன் நீ
   எங்கிருக்கின்றாய் இறைவா? என்ற வினாவோடு தனது ஆரம்ப கவியான 'இறைவா உன்னிடம்' என்ற தலைப்பில் வினவியிருந்தாலும் கவிஞர்,
      "மழையில்
      உன் அருளைக்காண்கின்றேன்
      மின்னலில்
      உன் கையெழுத்தைக்
     காண்கின்றேன்" என இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் இறைவனை காணும் விதத்தினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையை மாத்திரம் இவரது கவிவிரல்கள் தொட்டுக்காட்டவில்லை ஒவ்வொரு உறவுகளையும் பாசப்பிணைப்புக்களையும் இந்த தேசத்தில் யுத்தம் செய்த கொடூரங்களையும் தமிழரின் அவல நிலமைகளையும் கவிஞர் பேசும்போது உணர்வுகள் கொந்தளித்துப்போகின்றது. இதனை தனது தொன்னூற்றொரு தலைப்பின் கீழும் வெளிப்படுத்தியிருக்கும் விவேகம் வியக்கவைக்கின்றது.
தாய்மையை சொல்லும் போதும் தாரத்தினை சொல்லும்போதும் கவிஞரின் கவிதைகள் எந்தளவிற்கு பெண்மையை மதிக்கின்றது போற்றுகின்றது என்பது அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
    " தாய்தான் எல்லாம்
     அவள்தான்
     இரக்கத்தின் சிகரம்
    பாசத்தின் சமூத்திரம்
    மானுடத்தின் நதிமூலம்" என்று தாய்மையினை உச்சத்தில் வைத்து போற்றும் அவர், 'தாய்','தந்தை' எனும் தலைப்பில் இருவரையும் பாடியிருக்கும் அதேவேளை 'தமிழாசிரியருக்கு' என்ற கவிதை வரிகள் எம்மையெல்லாம் நம் பாடசாலைக்காலத்திற்கே சுமந்து செல்கின்றது.

பொதுவாக கவிஞர்களின் வரிகளில் காதல் தோல்விக்கு பெண்களே காரணமென்று அவர்களை குற்றஞ்சொல்லும் அல்லது பழிக்கும் விதமாகவே கவிதை புனைதிருப்பர்கள். ஆனால் இக்கவிஞரின் கவிதைகளில் எந்த இடத்திலும் பெண்மையை பழிக்கும் வரிகளை பார்க்கவேயில்லை. இங்குதான் கவிஞரின் தாயுள்ளம் பிரகாசித்து நிற்கின்றது.இதற்கு அடையாளமாக 'மணமங்கைக்கு', 'தாரம்' போன்ற கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.
   "நான்
   குறிஞ்சிப்பூவை மட்டும்
   கொள்ளை கொள்பவன்
  ஏனெனில் அது
  மலைஜாதி மலர் என்பதற்காக மட்டுமல்ல‌
  மலர்களில் அபூர்வமலர் என்பதற்காகவும்தான்" என்றும்
      " என் பிரியமானவளே
      என் பிராணவாயுவே
      உன் கவிதை தன்னை
      என் கரங்களால் வரைந்தாலும்
      உன் மகத்துவம் சொல்ல‌
      என் கவித்துவம் போதாது" என்றும் பெண்மையை அலங்கரித்த கவிஞரை வாழ்த்துவதில் தவறேதுமில்லை.
இந்த தேசத்தை கூறுபோட்டு சிதைத்த யுத்தத்தின் காயங்களை 'மரணித்துக்கொண்டிருப்பவனா? மரணத்துள் வாழ்பவனா?' 'ஒரு கைதியின் பாடல்','சுதந்திரம்' போன்ற தலைப்புக்களில் ஆதங்கப்பட்டிருக்கின்றார்.
    "உள்ளே இருக்கவிடாமலும்
    வெளியே போகவிடாமலும்
    என்னைத்தடுக்கின்றது
   மரண பயம்" என்று ஒட்டுமொத்த அவலத்தினையும் நான்கு வரிகளுக்குள் அடக்கிவிட்டிருக்கின்றார்.கனத்துப்போன இதயத்துடன் வாசித்துக்கொண்டிருக்கையில் விழி நீர் கோர்த்துக்கொள்கின்றது. இவ்வாறு வேதனையின் விம்பங்கள் கவிதையில் தெளிக்கப்பட்டிருந்தாலும் சமத்துவத்தினையும் உரிமையினையும் சுதந்திரத்தையும் வலியுறுத்தி 'சுதந்திரம் வேண்டும்' என்ற கவிதையில் உக்கிரமக்க போரிட்டிருக்கின்றார்.
கவிஞரின் இந்த மனஆதங்கங்கள் நிறைவேறவேண்டுமென்று ம‌னம் பிரார்த்தித்துக்கொள்கின்றது.

எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு களைகளுள் முக்கியமாக காணப்படுவது சீதனப்பிரச்சனையே.இதனை விபச்சாரம் என்று கண்டித்திருப்பது
    "ஆடையணிந்து கொண்டு
    ஆபாசம் விற்கின்றோம்
    சீதனம் வாங்கியே
   விப‌ச்சாரம் செய்கின்றோம்" என்ற வரிகள் உள்வாங்கமுடிகின்றது. பெண்களை வெறும் போகப்பொருளாகவும் தேவைக்கு உபயோகிக்கும் சாதனமாகவுமே பார்க்கும் இச்சமூகத்தில் ஆண் பெண் சமத்துவத்தினை விதைத்திட மிகவும் முயற்சிசெய்கின்றார் கவிஞர்.'எயிட்ஸ்', 'கற்பு என்பது' எனும் தலைப்பினூடாக காதலின் உன்னதத்தினையும் காமத்துன் அருவருப்புக்களையும் அருமையாக படம் பிடித்துக்காட்டி பெண்மையை போற்றியிருக்கின்றார் கவிஞரின் வரிகளினூடாக சமுகம் தன்னை அவதானித்தல் சிறந்த ஓர் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப உதவிசெய்யும்.
ஆறறிவு பெற்ற மனிதனே படைப்புக்களில் உயர்ந்த படைப்பென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில் 'நெற்கதிகளே' 'மண்புழுக்களே' 'சுமைதாங்கி' 'எறும்புகளின் ராச்சியம்''மரம்' பூக்கள்' எனும் தலைப்புக்களில் அந்த எண்ணத்தினை தவிடுபொடியாக்கி விட்டிருக்கின்றார்.விலங்குகளிடமும் இயற்கையிடமும் இருக்கும் மனிதப்பண்புகள் மனிதனிடம் இல்லாததை அத்த்னை வலிமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.அதிலும் 'சிலந்தியுடன் ஒரு செவ்வி'என்ற கவிதையில் மனிதனுக்கு அருமையான போதனை சொல்லப்பட்டிருக்கின்றது.
   " விடாமுயற்சிதான்
   திருவினையாக்கும் என்பது
  எங்கள் நம்பிக்கை" என சிலந்தி சொல்லுவதாய் ஒரு ஆய்வினை செய்துகாட்டி மனிதனை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் மனிதப்பண்புகள் இருப்பதை எடுத்துக்கட்டியுள்ளார்.
கவிஞர்களால் மட்டும்தான் கவிதை எழுத முடியுமா உன்னாலும் கவிதை எழுத முடியும் என 'உனக்கும் கவிதை வரும்'என்ற கவிதையில்
"உள்ளத்தின் பாதிப்பில்
உணர்ச்சிகளின் பூரிப்பில்
உயிர்ப்புற்ற கருப்பொருளின் பாலிப்பில்
சிந்தித்துப்பார்
உனக்கும் கவிதை வரும்" என்று அனைவரையும் கவிதை எழுத அன்போடு அழைக்கின்றார். அடடா நம்மாலும் கவிதை எழுதமுடிந்துவிடுமா என வாசகனையும்கூட கவிஞனாக்கிப்பார்க்க ஆசைப்படுகின்றார். அதிலும் மனிதனின் பருவங்கள் மூன்றிலும் கவிஞனை காணும் விதம் அடடா என ஆச்சரியப்பட வைக்கின்றது.
 " கிழவனைப்போல சிந்தித்து
 குழந்தையாய் வாழும்
வாலிப மனிதன்" என்று அதனை வரிகளாக்கி எம்மையும் அதிசயப்பட செய்துவிட்டார்.
இவ்வாறு இயற்கையோடு ஒன்றிப்போன கவிஞரின் தொகுப்பின் இருதி கவிதைகள் மீண்டும் இலங்கையின் கோரமான காயங்களை தொட்டுப்பார்த்திருக்கின்றது.
" பூமி காத்திருந்தது
 பூப்பறிக்கும் விதைகளுக்காக‌
விழுந்ததென்னவோ
இரத்தத்துளிகள்" என்ரு வேதனையை வரிகளாக்கிய கவிஞர்,
 " எத்தனை துயர் வந்தாலும்
புன்னகையில்
முகம் கழுவிப்பார்
புதுப்பொழிவு உன்னில்வரும்" என நம்பிக்கையூட்டி எம்மை உற்சாகப்படுத்திவிட்டிருக்கின்றார்.புத்தகத்தின் கடைசி ஏட்டில் விரல்படும் வரையில் விரயமில்லாத ஓர் உயரிய அநுபவத்தினை தந்திருக்கும் இத்தொகுப்பின் கவிதைகள் தனித்துவத்துடன் வேறுபட்டு நிற்கின்றது.

கண்களாலே தரிசிக்கமுடியாத கரடுமுரடான வார்த்தைகளை கொண்டு புனையும் எத்தனையோ கவிதைத்தன்மையினை உடைத்துக்கொண்டு அதனை விடுவித்து, கருத்தை கவர்ந்திழுக்கும் எளியநடையில் எல்லாரும் அறியக்கூடிய வகையில் இருக்கும் மொழிநடை, வாசகனை பரவசப்படுத்துகின்றது.கவிதைகளை வாசித்து முடித்ததும் அமைதியான மன இயல்பும், திருப்தியையும் உணரக்கூடிய ஓர் அருமையான கவிதைத்தொகுப்பு இவ்வியற்கை கவிஞரின் அற்புதமான படைப்பு.

எளிமையிலே இயற்கையையும் அதனூடாக இதயத்தினையும் தொட்ட கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நன்றி
த.எலிசபெத்

Thursday, January 26, 2012

சில்லறைக்கவிதைகள்!!

01.உன் பெயரெழுதி
ஓராயிரம் முறைரசித் தேன்
என் மனதறிந்து
ஒவ்வொரு முறையும்வெட்கித் தேன்!!

02.கொடுக்கும் தலைப்பில்
எழுதும் கவிதை போல‌
நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நம்தவிப்பில் எழுதும் கவிதைபோல‌
காதல் திருமணம்...!!

03.நட்பு வளர்க்கும் கருவியென்றா
பொய்மையை பட்டைதீட்டுகிறாய்
கற்பு போன்று அன்பை வளர்க்கும்
நட்புக்கென்ன பதிலுரைப்பாய்....!!!

04.வலிந்து பெற்ற இன்பங்கள்
வழிந்து போயிடு மொருநாள்
தெளிந்து வாழ்தல் நலமே என்றும்
வலிதான் வாழ்வில் வழியே

05.உனக்கான விதிகளை உடனே செய்திடு
உதவிகள் வருமென்று நினைப்பதை மறந்திடு
தினக்கூலி யானாலும் தன்மானங் காத்திடு
தினந்தினம் வெற்றிதான் வென்றிடு...

06.ஒற்றைப் பார்வை
ஓரிரு வார்த்தைகள்
ஓராயிரம் மெளனங்கள்
விடையில்லாத வினாக்கள்
விடுவிக்க முடியாத புதிர்கள்
தொடரும் புதுமைகள்
தொடமுடியாத தூரத்தில் நீ !!!


07.உன்
நிழலாய் இருந்திடவே
ஆசைகொண்டேன் -நீயோ
எனக்கு
நிலவாய் தெரிந்திடவே
ஆவல்கொள்கின்றாய்

Tuesday, January 10, 2012

புனிதங்களை கற்றுத்தேரு!! thuruvam

ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...

தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...

பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கும்
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...

குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...

வயிறுபெருத்து வளர்ச்சி காணும்
நோய்களேராளம் எண்ணிப்பாரு
கயிறுபோல சிறுத்து நிற்கும்
ஏழைமருந்து நீர்தான் பாரு..

கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...

பிறந்தநாளும் மணந்தநாளும் தவறாது
விழாக்காணும் ரசித்துப்பாரு
மறந்துபோன எல்லாநாளும்
அன்பால் மகிழும் உணர்ந்துபாரு...

புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...


Saturday, December 31, 2011

நல்வாழ்வின் விடியலாய் பிறக்கட்டும் [2012]



கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...

பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோட‌ழியட்டும்
உக்கிர‌மான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...

ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...

கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...

வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானத‌ர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!‌

Saturday, November 19, 2011

ஊரும் உலகமும்

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்
தூக்கிவைத்து கொண்டாடுவார்
தூரப்போனதும் பந்தாடுவார்...

அன்பொழு கப்பேசுவார் அடிமனதில்
அழிக்கவே திட்டம் தீட்டுவார்
உதவி யென்றதும் யோசிப்பார்
உதவ வில்லையென்றால் தூசிப்பார்...

சொத்திருந்தால் கூடவே சேர்ந்திருப்பார்
சோறில்லா திருந்தால் சேதிகேட்டிடார்
ஊர்ப்பிள்ளைக்கு ஜோடி தேடிவைப்பார்
தம்பிள்ளை புகழ் பாடியே வைப்பார்...


ஊரிலுள்ள ஓட்டைகளையெல்லாம் தேடுவார் தம்
ஓட்டைகளை உள்ளுக்குள் வைத்துமூடுவார்
பணம் எவ்வளவும் பத்தாதென்பார்
பணத்துக்காக எதையும் பத்தவைப்பார்...

நண்பனென்றே சேர்ந்திருப்பார்
சந்தர்ப்பம் வந்தால் சேருமடிப்பார்
முகஞ்சுழிக்க பேசமாட்டார் எம்மில்
முன்னேற்றங் கண்டால் பொறுக்கமாட்டார்...

புன்னகையில் பூக்கள் மலர்த்துவார்
புற்றுப்பாம்பாய் விஷத்தையும் தெளிப்பார்
நல்லவர்களென்றே தம்மை காட்டுவார்
நாகமாயாக கொஞ்சமும் தயங்கார்...

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்

Monday, November 14, 2011

புனிதங்களை கற்றுத்தேரு

ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...


தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...


பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கு
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...


குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...


கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...


புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...

Sunday, November 13, 2011




02.சண்டித்தனத்தால் வந்ததல்ல‌
தண்டித்ததால் வந்த காதல்கணக்கு
பாண்டித்தியத்தை பறைசாற்றவல்ல இது
பாசங்களை சிதைத்த பழையபிணக்கு...


03.கண்மூடி சிந்தித்ததில்வந்த‌
கல்வியறிவில்லாக் காதல்
காலாகாலமாய் பேணுஞ்சாதிக்கு
கல்லடி தந்திடும் சொல்லடிமோதல்...



04.ஆயிரத்தில் ஒருத்தியென்றாய் என்னை
ஆயிரம் பேருக்குள் தொலைத்துவிட்டு
தொல்லையென்று தொலைத்தாயா இல்லை
தொலைவிலிருப்பதால்
தொலைத்தாயா?


05.அதிகஞ் செய் வதைவிட‌
ஆழமாய்ச் செய்வதே
இறவாம லிருக்குமாம்!!


06.நல்லதையே விதையுங்கள்
   அறுப்பது உங்கள்
   பிள்ளைகளாகக்கூட இருக்கலாம்


தீ நல்லதுதான் 

தீபமாய் எரிவதென்றால்-எழுதும்

மையெல்லாம் சிறந்ததுதான்-தீ

மையெல்லாம் அழிவதென்றால்...

Saturday, November 5, 2011

உயிரில் பூத்ததுங்க‌.....

அடியே கருவாச்சி
நாந்தூங்கி நாளாச்சி
உன்னநா சந்திச்சி
உள்மனசும் பித்தாச்சி...

வேல செய்யயில‌
வேல்விழி ஞாபகந்தான்
நாள கடத்துறேன்டி
நானுமுன கைப்பிடிக்க...

பக்கத்தில நீயும்வந்தா
பக்குனுதான் தீப்பிடிக்க‌
பார்வ ஒன்னவீசுறியே
பாவலனா நானுமானேன்...

கூலிவேல செஞ்சிடுவேன்
கூடைகூட தூக்கிடுவேன்
கூடவே நீயுமிருந்தா
குட்டி சொர்க்கம் தந்திடுவேன்...

கால நேரங்கூடிடுமா
காவல் தெய்வமேவிடுமா
சாதி ரெண்டுமட்டுமின்னு
சட்டம் இங்கவந்திடுமா...

அப்பனாத்தா சண்டையில‌
அஞ்சி நிக்குது பிஞ்சுமனம்
தப்புதான்னு புரிஞ்சாத்தா
நாம ஒன்னா சேர்ந்திடலாம்...

எட்டிநின்னு சொல்லிடுவோம்
தட்டி கேட்டு ஜெயிச்சிடுவோம்
க‌ட்டிவச்சு அடிக்கவந்தா
முட்டிதள்ளி முளைச்சிடுவோம்...

நிறத்தப்பார்த்து வந்ததில்ல‌
நிஜமாய் உயிரில் பூத்ததுங்க‌
மறக்க சொல்லி எந்திரிச்சா
மலையக்கூட சாச்சிடுவோங்க...



14.11.2011 அன்றைய "இருக்கிறம்"  சஞ்சிகையிலும்,



 தமிழ் ஓதர்ஸ் இலும் வெளியான எனது கவிதை


-நன்றி இருக்கிறம்-
-நன்றி தமிழ் ஓதர்ஸ்-

நடைமுறையிலில்லை

 தினகரன் பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை [01.11.2011]


ஆதாயமே தேடலாகியதால்
அன்பென்பதற்கு மதிப்பேதுமில்லை
பணமே வாழ்வியலாகியதால்
பண்பிற்கும் பெறுமதியில்லை...

சுயநலமே சொந்தமாகியதால்
சுற்றமெல்லாம் நினைவிலில்லை
வன்மங்களே நிறைந்து போனதால்
வசந்தமெல்லாம் நடைமுறையிலில்லை...

மன்னிப்பென் பதை மறந்துபோனதால்
மனிதமென்பது மதிக்கப்படுவதில்லை
மனங்களெலாம் சுருங்கிப்போனதால்
மண்ணில் நன்மைகள் தொடரவில்லை...

இரக்கமென்பது மறைந்து போனதால்
இதயங்களை யெவரும் காண்பதில்லை
இயலாமைகளை தோள்களில் சுமப்பதால்
இன்பங்களெலாம் அருகில் வருவதில்லை...

நட்பென்பது  தூரப்போனதால்
நகைச்சுவைகளும் இருகிப்போனது
சிரிப்புக்களை சேர்க்க தவறியதால்‍ மனித‌
சிறப்புக்க ளெத்தனையோ இழந்துபோனது...

Saturday, October 15, 2011

பட்டாம்பூச்சி கவிதை

01.சோறுபோடாத்தொழிலென்றலும்
சோர்ந்திடா எழிலிதில்
மூளை மட்டுமேயிதில்
மூதனத்தின் முதலாக‌
மொழிவளம் மட்டுமேயிதில்
பணபலமாக...
உழைப்பை உறிஞ்சிக்கொள்ளு முலக மேனோ
உழைப்பாளியை கண்டுகொள்வதேயில்லை[ எழுத்தாள‌ன்]

02.முடிந்தவரை நல்லவளாயிருக்கவே
முயற்சிக்கி றேனெனினும்
முடியாமற் போகுமத் தருணத்தில்தான்
முரண்டுபிடிக்கிறே னெனை
முதிர்க்கன்னியென உச்சரிக்கையில்...

03.என் வேர்களறுபடு மோசை கேட்டும்
வேடிக்கை பார்த்துகொண்டு தானிருக்கிறேன்
போ ரொன்று புரிந்தெழும்பிடாது
போதாத காலமென்றிருந்திட்டேன்
வாய்மையே வெல்லுமென்று...

ஓங்கி ஒலிக்கப்போகிறோம்.....



காயங்கள் காய்ந்தாலும்
வடுக்களென்றும்
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...

வெற்றிக்களிப்பில்
வீரமெனப்படுவது
மூழ்கிக்கிடப்பினும்
முறித்துப்போட்ட எம்
முழு நிலவுகளை எந்த வானம்
முழுமையாக தந்திடும்...

இருகிய இதயத்தினை
இறைவழியின் துணைகொண்டு
சுமைக‌ளின் வ‌ழித‌னை
சுத்த‌மாய் ம‌ற‌க்க‌த்தான்
நித்த‌மும் ம‌கிழ‌த்தான்
நிக‌ழ்கால‌ந்த‌னை தேடுகிறோம்...

உற‌வுக‌ளை இழ‌ந்து
உரிமைக‌ளை துற‌ந்து
ஊன‌ப்ப‌ட்ட‌போதும்
உள்ள‌த்தால் எழுந்திட‌வே -ந‌ம்பிக்கையில்
ஊன்றி நிற்கின்றோம்...

விழுந்த‌வை விதைக‌ள‌ல்ல‌ எங்க‌ள்
விடிய‌ல்க‌ள்
வான‌ம் தொலைத்த‌ நில‌வாய்
வாழ்வுத‌னை தொலைத்த‌ எம‌க்கு
முகாம்க‌ளே முகாந்த‌ர‌மான‌து
அக‌தி இல‌ச்சினையே
அந்த‌ஸ்தான‌து...

போதும் போதுமிறைவா
போகும் வ‌ழித‌னை த‌ந்திடு
புதிய‌ பாதை க‌ண்டிட‌
புத்துண‌ர்ச்சி த‌ந்திடு
புய‌ல்க‌ளை நாமும் எதிர்த்திட‌...

விடைக‌ளுக்குள்ளே
வினாவெழுப்பும் விள‌ங்காத‌வ‌ர்க‌ளாய்
விழித்த‌தெல்லாம் போதும்
ஒளிப‌றித்த‌ த‌ழைக‌ளை
ஒதுக்கிவிட்டு
ஒற்றுமை குர‌லோடு
ஓங்கியொலிக்க‌ப் போகிறோம் -சுமைக‌ளையும்
ஒழிக்க‌ப்போகிறோம்...


ஐப்பசி மாத [AUGUST] ஞானம் இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமான எனது கவிதை.

Saturday, October 8, 2011

மனக்கிடக்கைகள்.....

01.பழகிய இடமும்
புழங்கிய பொருளும்
கைமாறினால் மனம்
கலங்கியே போகுது!!

02.பொய்யுரைப்பினும்
மெய் யென்றெண்ணிடும்
என்னிடத்திலா -நீ
மெய்யாகவே
பொய்யுரைக்கின்றாய்...

03.ஒன்று மட்டும்
ஒருபோதும் உருவாவதில்லை
ஒன்றிலிருந்தே
ஒன்று உருவாகிறது!!

04.உணர்வுகளை யூற்றி வார்க்கையில் யாப்பும்
புணர்ந் தொழுகிட கூடுமோ-கனன்று
எரிந்திடும் வார்த்தை கோர்க்கையில்-மரபும்
எளிதி லொழுகிட கூடுமோ...

05.நீயில்லா ஓர்போழ்தும்
தீப்பிழம்புக்குள் மரணதண்டனை...
நீரில்லா தாமரையாய்
நிமிடத்திற்குள் வாழ்விழப்பு...
விழிக்கனல்கள் வாழ்வை
விரயமாகிடுமுன் விரைந்திடு-வசந்தத்தை
விடியச்செய்திடு....

எல்லாம் ஓர் கணக்கு

உண்மைதான் எல்லா மோர்
உண்மையேதான்...

புன்னகை செய்வது முதல்
புண்ணாக்குவது வரையில் எல்லாமே
கணக்குத்தான்...

வட்டமான வாழ்வுக்குள்ளே
எட்ட நிற்கும் அத்தனையும்
கணக்கேதான்
வ‌ரவுக்குள் மட்டுமல்ல‌
உறவுகளுக்குள்ளும் கணக்குதான்...

பணத்தை பறிமாறிக்கொள்வது முதல்
மனங்களை பறிமாறிக்கொள்வது வரையில்
கணக்குதான்...

இதயங்களும் இயற்கையும் அரித்தரித்து
இயல்புகளை இழந்துபோகையில்
மரித்துப்போகும் பண்புகளால்
கணக்கும்கூட கனத்து
கணக்காகிப்போனது உண்மைதான்
எல்லாம் ஓர் உண்மையேதான்...!!!

06.10.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

விடைகாணா ஒளிதனிலே...


இலங்கையின்
இதயமாம் மலையகம்
வியர்வை சிந்தி வருந்துவோரில்
ஒருவராம் எம்மினம்...

அதிகாலைச் சேவ‌லோடு
அந்த‌ர‌ப்ப‌ட்டு எழும்பிடு
அவ‌ச‌ர‌த்தொழிலாளிக‌ளாம்
சூரியோத‌ய‌ம் அஸ்த‌மிக்கும்வ‌ரை
சுழ‌ன்றிடும் இய‌ந்திர‌ங்க‌ளாம்...

சுழ‌ற்றிய‌டிக்கும் காற்றான‌லும்
சுடுகின்ற‌ வெயிலானாலும்
சுறுசுறுப்பாயிய‌ங்கிட‌னும் இல்லையேல்
சுடுசொல் கேட்டிட‌னும்...

ம‌ழையும் வெயிலும்
மாறி மாறி பொழிந்தாலும்
ம‌றைவிட‌மிலாது மாண்டிட‌னும்
ம‌லைக‌ளிலே
ம‌ர‌ங்க‌ளாய் நாமும் நின்றிட‌னும்...

கூடை மட்டும் நிர‌ம்பிட‌னும் அவ‌ர்க‌ளுக்கெம்
குறைக‌ள் ஒன்றும் கேட்டிடாது
பாத‌ம் க‌டுக‌டுக்க‌ பார‌மாயினும் அவ‌ர்க‌ளையெம்
ப‌ட்டினி ஒன்றும் பாதித்திடாது...

தேச‌ம் வ‌ள‌ர‌வே எம்
தேக‌ம் வ‌ருத்தினோம்
வைய‌ம் செழிக்க‌வே எம்
விய‌ர்வையினை ஊற்றினோம்...

வ‌றுமையை ம‌ட்டும் ப‌ல‌னாய்க்கொண்டோம்
வ‌ச‌ந்த‌த்தை நாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடிய‌லின் வ‌ழித‌னை தேயிலைய‌டித‌னில் தேடுகிறோம்
விடைகாணா ஒளித‌னில் தொட‌ர்ந்து(ம்)
தொலைந்தே போகிறோம்...

29.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

Saturday, October 1, 2011

சொந்தமென்று..

எத்தனைபேர் சொந்தமென்று
எவருமில்லை எனக்காக...

ஊர்ப்போய்ச் சேரத்தான்
உவகையோடு பயணித்தேன்
உயிருக்குள் உயிரையூற்றி
உள்ளன்புக்குள் உணர்வுகளை பொத்தி
உலகை வெல்லத்தான் காத்திருந்தேன்...

கண்கொண்டு திரைவிலக்கி
கனவுகளை அரங்கேற்றி
காதல் நான் வளர்த்திருந்தும்
கண்ணீர் குடத்துக்குள்ளேதான்
கண்ணயர முடிந்திருந்தது...‌

நேச‌ங்க‌ளை தேக்கிவைத்து குள‌த்து நீராய‌து
பாச‌ங்க‌ளை ப‌துக்கிவைத்து விழ‌ல் நீராய‌து...

வாலிப‌ வேட்கைக்குள்
வ‌ள‌ர்ந்த‌து சோக‌ங்க‌ள் ம‌ட்டும்
இள‌மையின் தோட்ட‌த்துக்குள்
பிற‌ந்த‌து ஏமாற்ற‌ங்க‌ள் ம‌ட்டும்...

பிற‌ப்பில் குற்ற‌ம் காண‌வே விழைந்தேன்
இறப்பில் தேற்ற‌ம் தேட‌வே முனைந்தேன்
சுற்றமெங்கும் சூனிய‌ங்க‌ளாய் உண‌ர்ந்தேன்
ம‌ற்றதெல்லாம் சூறாவ‌ளியால் சிதைந்தேன்...

எத்த‌னை பேர் சொந்த‌மென்று
எவ‌ருமில்லை என‌க்காக‌
எதைக்கொண்டு தேற்றுவ‌து
என் ம‌ன‌தின் சுக‌ம் காக்க‌...

தொட‌ர‌ட்டும்



உனக்கு மெனக்கும்
உறவுப்பாலம் ஒன்றில‌
உதவிப்பயணம் மட்டுமே
உணர்வலைகளில் ஒன்றின‌...

உதட்டோடு சிரித்தும்
உணர்வோடு பிரிந்தும்
உள்ளத்தால் துரத்தும் ஓர்
உறவறியா நிறுத்தம்...

உரிமைக‌ள் தொட‌ர்ந்தும்
ஊமைநில‌வ‌ர‌ங்க‌ள் தொட‌ரும்
உண்மைக‌ளை தொட‌
உன் நாவுமென் நாவும்
உள்ளுக்குள்ளே உறையும்...

தொட‌ர‌ட்டும்
தொட‌ரும் நில‌வ‌ர‌ங்க‌ள்
தொட‌ர்பு இல்லாத‌வையும் ம‌ன‌த்
தொடுகையில் உண‌ர‌ப்ப‌டு மென்ப‌தால்...

Saturday, September 24, 2011

உன் எதிர்காலத்துக்காய்

அழகென்று தானுனை யணைத்தேனென் ஆருயிராக‌
அடியெடுத்து வைத்திடுமெவ் வேளையிலும் அடியேனாக‌
அன்பினாலே நாள்தோறும் ஆண்டே னன்னையாக‌
ஆகாதென்றே தள்ளிவிட்டாய் நானும் பாவியாக...

புவிமீதின் பூவையரை பூவாய் நினைந்தேன்
புரியாவுன் பார்வையினில் தீயா யணைந்தேன்
விழிதேடிய வழியினில் நீயே ஒளியானாய்
விடைதந்த வாழ்வையேன் பிடுங்கியெறிந்தாய்...

காதலென்ன வெறும் காசென்றா யெண்ணினாய்
கானலெண்ணத்தினால் கடல் கடப்பதென்றா யெண்ணினாய்
உயிரை உயிராலுணர்ந்து உணர்வினை உள்வாங்கி
உடல்வேகுமத் தருணம்வரை உருகிடுதலே...

வேற்றுநாட்டு சொந்தத்தால் வேண்டாத வனானேனோ
வேலையொன் றில்லாததால் தீண்டாதவ னானேனோ
ஆண்பிள்ளையுன் அன்பினா லழிந்ததை யறிவாயா
வீண்பிள்ளையா னதுன் பழியாலதை புரிவாயா...

காட்டுக் கத்தலினா லென்காதல் உணர்த்தியிருப்பேன்
காவிச்சென்ற இதயமதை கூவி யழைத்திருப்பேன்
காதலர்நம் கடந்தகால முழுதும் சொல்லியிருப்பேன்
கன்னியுன் னெதிர்காலம் நினைந்து மெளன‌மாய் விம்மியிருந்தேன்

Sunday, September 11, 2011

வஞ்சந்தீர்க்கும் வசந்தங்கள்

நாட்களினி டைவெளி நம்மை பிரித்தது
நாளும் பொழுதும் நமதன்பை வளர்த்தது
காட்டி னிருள்போல் காயங்கள் தொடர்ந்தும்
காதலொன்றே நெஞ்சினில் மருந்தாகவே...

நெஞ்சத்தி னாழ‌த்தில் நெருப்பாய் கனன்றும்
நெடுநேர விழித்திருப்பில் நேசமும் எரியா
வஞ்சந் தீர்க்கும் வசந்தங்கள் கூடி
வஞ்சியின் வயதோடு போராடுதே...

பாதையோர பூக்களுமே பகிடியாயெனை பார்க்க‌
பாதம்வைத்து நடைபயில பெண்மையும் தயங்க‌
வாதையோடு வழிநெடுகிலும் வாரிவைத்த உன்நினைவில்
வானம்வரை யிடைவெளியாய் தெரிகின்றதே...

கடல்தாண்டி கனந்துய்க்க என்மன்ன வா
கனவுகளை மூட்டை கட்டினாய் என்மன்னவா
தடல்புடலான மணவாழ்க்கை என்மன்ன வா
தனிமையாய் போனதே என்மன்ன வா...