Saturday, December 31, 2011

நல்வாழ்வின் விடியலாய் பிறக்கட்டும் [2012]



கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...

பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோட‌ழியட்டும்
உக்கிர‌மான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...

ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...

கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...

வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானத‌ர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!‌

Saturday, November 19, 2011

ஊரும் உலகமும்

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்
தூக்கிவைத்து கொண்டாடுவார்
தூரப்போனதும் பந்தாடுவார்...

அன்பொழு கப்பேசுவார் அடிமனதில்
அழிக்கவே திட்டம் தீட்டுவார்
உதவி யென்றதும் யோசிப்பார்
உதவ வில்லையென்றால் தூசிப்பார்...

சொத்திருந்தால் கூடவே சேர்ந்திருப்பார்
சோறில்லா திருந்தால் சேதிகேட்டிடார்
ஊர்ப்பிள்ளைக்கு ஜோடி தேடிவைப்பார்
தம்பிள்ளை புகழ் பாடியே வைப்பார்...


ஊரிலுள்ள ஓட்டைகளையெல்லாம் தேடுவார் தம்
ஓட்டைகளை உள்ளுக்குள் வைத்துமூடுவார்
பணம் எவ்வளவும் பத்தாதென்பார்
பணத்துக்காக எதையும் பத்தவைப்பார்...

நண்பனென்றே சேர்ந்திருப்பார்
சந்தர்ப்பம் வந்தால் சேருமடிப்பார்
முகஞ்சுழிக்க பேசமாட்டார் எம்மில்
முன்னேற்றங் கண்டால் பொறுக்கமாட்டார்...

புன்னகையில் பூக்கள் மலர்த்துவார்
புற்றுப்பாம்பாய் விஷத்தையும் தெளிப்பார்
நல்லவர்களென்றே தம்மை காட்டுவார்
நாகமாயாக கொஞ்சமும் தயங்கார்...

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்

Monday, November 14, 2011

புனிதங்களை கற்றுத்தேரு

ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...


தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...


பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கு
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...


குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...


கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...


புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...

Sunday, November 13, 2011




02.சண்டித்தனத்தால் வந்ததல்ல‌
தண்டித்ததால் வந்த காதல்கணக்கு
பாண்டித்தியத்தை பறைசாற்றவல்ல இது
பாசங்களை சிதைத்த பழையபிணக்கு...


03.கண்மூடி சிந்தித்ததில்வந்த‌
கல்வியறிவில்லாக் காதல்
காலாகாலமாய் பேணுஞ்சாதிக்கு
கல்லடி தந்திடும் சொல்லடிமோதல்...



04.ஆயிரத்தில் ஒருத்தியென்றாய் என்னை
ஆயிரம் பேருக்குள் தொலைத்துவிட்டு
தொல்லையென்று தொலைத்தாயா இல்லை
தொலைவிலிருப்பதால்
தொலைத்தாயா?


05.அதிகஞ் செய் வதைவிட‌
ஆழமாய்ச் செய்வதே
இறவாம லிருக்குமாம்!!


06.நல்லதையே விதையுங்கள்
   அறுப்பது உங்கள்
   பிள்ளைகளாகக்கூட இருக்கலாம்


தீ நல்லதுதான் 

தீபமாய் எரிவதென்றால்-எழுதும்

மையெல்லாம் சிறந்ததுதான்-தீ

மையெல்லாம் அழிவதென்றால்...

Saturday, November 5, 2011

உயிரில் பூத்ததுங்க‌.....

அடியே கருவாச்சி
நாந்தூங்கி நாளாச்சி
உன்னநா சந்திச்சி
உள்மனசும் பித்தாச்சி...

வேல செய்யயில‌
வேல்விழி ஞாபகந்தான்
நாள கடத்துறேன்டி
நானுமுன கைப்பிடிக்க...

பக்கத்தில நீயும்வந்தா
பக்குனுதான் தீப்பிடிக்க‌
பார்வ ஒன்னவீசுறியே
பாவலனா நானுமானேன்...

கூலிவேல செஞ்சிடுவேன்
கூடைகூட தூக்கிடுவேன்
கூடவே நீயுமிருந்தா
குட்டி சொர்க்கம் தந்திடுவேன்...

கால நேரங்கூடிடுமா
காவல் தெய்வமேவிடுமா
சாதி ரெண்டுமட்டுமின்னு
சட்டம் இங்கவந்திடுமா...

அப்பனாத்தா சண்டையில‌
அஞ்சி நிக்குது பிஞ்சுமனம்
தப்புதான்னு புரிஞ்சாத்தா
நாம ஒன்னா சேர்ந்திடலாம்...

எட்டிநின்னு சொல்லிடுவோம்
தட்டி கேட்டு ஜெயிச்சிடுவோம்
க‌ட்டிவச்சு அடிக்கவந்தா
முட்டிதள்ளி முளைச்சிடுவோம்...

நிறத்தப்பார்த்து வந்ததில்ல‌
நிஜமாய் உயிரில் பூத்ததுங்க‌
மறக்க சொல்லி எந்திரிச்சா
மலையக்கூட சாச்சிடுவோங்க...



14.11.2011 அன்றைய "இருக்கிறம்"  சஞ்சிகையிலும்,



 தமிழ் ஓதர்ஸ் இலும் வெளியான எனது கவிதை


-நன்றி இருக்கிறம்-
-நன்றி தமிழ் ஓதர்ஸ்-

நடைமுறையிலில்லை

 தினகரன் பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை [01.11.2011]


ஆதாயமே தேடலாகியதால்
அன்பென்பதற்கு மதிப்பேதுமில்லை
பணமே வாழ்வியலாகியதால்
பண்பிற்கும் பெறுமதியில்லை...

சுயநலமே சொந்தமாகியதால்
சுற்றமெல்லாம் நினைவிலில்லை
வன்மங்களே நிறைந்து போனதால்
வசந்தமெல்லாம் நடைமுறையிலில்லை...

மன்னிப்பென் பதை மறந்துபோனதால்
மனிதமென்பது மதிக்கப்படுவதில்லை
மனங்களெலாம் சுருங்கிப்போனதால்
மண்ணில் நன்மைகள் தொடரவில்லை...

இரக்கமென்பது மறைந்து போனதால்
இதயங்களை யெவரும் காண்பதில்லை
இயலாமைகளை தோள்களில் சுமப்பதால்
இன்பங்களெலாம் அருகில் வருவதில்லை...

நட்பென்பது  தூரப்போனதால்
நகைச்சுவைகளும் இருகிப்போனது
சிரிப்புக்களை சேர்க்க தவறியதால்‍ மனித‌
சிறப்புக்க ளெத்தனையோ இழந்துபோனது...

Saturday, October 15, 2011

பட்டாம்பூச்சி கவிதை

01.சோறுபோடாத்தொழிலென்றலும்
சோர்ந்திடா எழிலிதில்
மூளை மட்டுமேயிதில்
மூதனத்தின் முதலாக‌
மொழிவளம் மட்டுமேயிதில்
பணபலமாக...
உழைப்பை உறிஞ்சிக்கொள்ளு முலக மேனோ
உழைப்பாளியை கண்டுகொள்வதேயில்லை[ எழுத்தாள‌ன்]

02.முடிந்தவரை நல்லவளாயிருக்கவே
முயற்சிக்கி றேனெனினும்
முடியாமற் போகுமத் தருணத்தில்தான்
முரண்டுபிடிக்கிறே னெனை
முதிர்க்கன்னியென உச்சரிக்கையில்...

03.என் வேர்களறுபடு மோசை கேட்டும்
வேடிக்கை பார்த்துகொண்டு தானிருக்கிறேன்
போ ரொன்று புரிந்தெழும்பிடாது
போதாத காலமென்றிருந்திட்டேன்
வாய்மையே வெல்லுமென்று...

ஓங்கி ஒலிக்கப்போகிறோம்.....



காயங்கள் காய்ந்தாலும்
வடுக்களென்றும்
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...

வெற்றிக்களிப்பில்
வீரமெனப்படுவது
மூழ்கிக்கிடப்பினும்
முறித்துப்போட்ட எம்
முழு நிலவுகளை எந்த வானம்
முழுமையாக தந்திடும்...

இருகிய இதயத்தினை
இறைவழியின் துணைகொண்டு
சுமைக‌ளின் வ‌ழித‌னை
சுத்த‌மாய் ம‌ற‌க்க‌த்தான்
நித்த‌மும் ம‌கிழ‌த்தான்
நிக‌ழ்கால‌ந்த‌னை தேடுகிறோம்...

உற‌வுக‌ளை இழ‌ந்து
உரிமைக‌ளை துற‌ந்து
ஊன‌ப்ப‌ட்ட‌போதும்
உள்ள‌த்தால் எழுந்திட‌வே -ந‌ம்பிக்கையில்
ஊன்றி நிற்கின்றோம்...

விழுந்த‌வை விதைக‌ள‌ல்ல‌ எங்க‌ள்
விடிய‌ல்க‌ள்
வான‌ம் தொலைத்த‌ நில‌வாய்
வாழ்வுத‌னை தொலைத்த‌ எம‌க்கு
முகாம்க‌ளே முகாந்த‌ர‌மான‌து
அக‌தி இல‌ச்சினையே
அந்த‌ஸ்தான‌து...

போதும் போதுமிறைவா
போகும் வ‌ழித‌னை த‌ந்திடு
புதிய‌ பாதை க‌ண்டிட‌
புத்துண‌ர்ச்சி த‌ந்திடு
புய‌ல்க‌ளை நாமும் எதிர்த்திட‌...

விடைக‌ளுக்குள்ளே
வினாவெழுப்பும் விள‌ங்காத‌வ‌ர்க‌ளாய்
விழித்த‌தெல்லாம் போதும்
ஒளிப‌றித்த‌ த‌ழைக‌ளை
ஒதுக்கிவிட்டு
ஒற்றுமை குர‌லோடு
ஓங்கியொலிக்க‌ப் போகிறோம் -சுமைக‌ளையும்
ஒழிக்க‌ப்போகிறோம்...


ஐப்பசி மாத [AUGUST] ஞானம் இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமான எனது கவிதை.

Saturday, October 8, 2011

மனக்கிடக்கைகள்.....

01.பழகிய இடமும்
புழங்கிய பொருளும்
கைமாறினால் மனம்
கலங்கியே போகுது!!

02.பொய்யுரைப்பினும்
மெய் யென்றெண்ணிடும்
என்னிடத்திலா -நீ
மெய்யாகவே
பொய்யுரைக்கின்றாய்...

03.ஒன்று மட்டும்
ஒருபோதும் உருவாவதில்லை
ஒன்றிலிருந்தே
ஒன்று உருவாகிறது!!

04.உணர்வுகளை யூற்றி வார்க்கையில் யாப்பும்
புணர்ந் தொழுகிட கூடுமோ-கனன்று
எரிந்திடும் வார்த்தை கோர்க்கையில்-மரபும்
எளிதி லொழுகிட கூடுமோ...

05.நீயில்லா ஓர்போழ்தும்
தீப்பிழம்புக்குள் மரணதண்டனை...
நீரில்லா தாமரையாய்
நிமிடத்திற்குள் வாழ்விழப்பு...
விழிக்கனல்கள் வாழ்வை
விரயமாகிடுமுன் விரைந்திடு-வசந்தத்தை
விடியச்செய்திடு....

எல்லாம் ஓர் கணக்கு

உண்மைதான் எல்லா மோர்
உண்மையேதான்...

புன்னகை செய்வது முதல்
புண்ணாக்குவது வரையில் எல்லாமே
கணக்குத்தான்...

வட்டமான வாழ்வுக்குள்ளே
எட்ட நிற்கும் அத்தனையும்
கணக்கேதான்
வ‌ரவுக்குள் மட்டுமல்ல‌
உறவுகளுக்குள்ளும் கணக்குதான்...

பணத்தை பறிமாறிக்கொள்வது முதல்
மனங்களை பறிமாறிக்கொள்வது வரையில்
கணக்குதான்...

இதயங்களும் இயற்கையும் அரித்தரித்து
இயல்புகளை இழந்துபோகையில்
மரித்துப்போகும் பண்புகளால்
கணக்கும்கூட கனத்து
கணக்காகிப்போனது உண்மைதான்
எல்லாம் ஓர் உண்மையேதான்...!!!

06.10.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

விடைகாணா ஒளிதனிலே...


இலங்கையின்
இதயமாம் மலையகம்
வியர்வை சிந்தி வருந்துவோரில்
ஒருவராம் எம்மினம்...

அதிகாலைச் சேவ‌லோடு
அந்த‌ர‌ப்ப‌ட்டு எழும்பிடு
அவ‌ச‌ர‌த்தொழிலாளிக‌ளாம்
சூரியோத‌ய‌ம் அஸ்த‌மிக்கும்வ‌ரை
சுழ‌ன்றிடும் இய‌ந்திர‌ங்க‌ளாம்...

சுழ‌ற்றிய‌டிக்கும் காற்றான‌லும்
சுடுகின்ற‌ வெயிலானாலும்
சுறுசுறுப்பாயிய‌ங்கிட‌னும் இல்லையேல்
சுடுசொல் கேட்டிட‌னும்...

ம‌ழையும் வெயிலும்
மாறி மாறி பொழிந்தாலும்
ம‌றைவிட‌மிலாது மாண்டிட‌னும்
ம‌லைக‌ளிலே
ம‌ர‌ங்க‌ளாய் நாமும் நின்றிட‌னும்...

கூடை மட்டும் நிர‌ம்பிட‌னும் அவ‌ர்க‌ளுக்கெம்
குறைக‌ள் ஒன்றும் கேட்டிடாது
பாத‌ம் க‌டுக‌டுக்க‌ பார‌மாயினும் அவ‌ர்க‌ளையெம்
ப‌ட்டினி ஒன்றும் பாதித்திடாது...

தேச‌ம் வ‌ள‌ர‌வே எம்
தேக‌ம் வ‌ருத்தினோம்
வைய‌ம் செழிக்க‌வே எம்
விய‌ர்வையினை ஊற்றினோம்...

வ‌றுமையை ம‌ட்டும் ப‌ல‌னாய்க்கொண்டோம்
வ‌ச‌ந்த‌த்தை நாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடிய‌லின் வ‌ழித‌னை தேயிலைய‌டித‌னில் தேடுகிறோம்
விடைகாணா ஒளித‌னில் தொட‌ர்ந்து(ம்)
தொலைந்தே போகிறோம்...

29.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

Saturday, October 1, 2011

சொந்தமென்று..

எத்தனைபேர் சொந்தமென்று
எவருமில்லை எனக்காக...

ஊர்ப்போய்ச் சேரத்தான்
உவகையோடு பயணித்தேன்
உயிருக்குள் உயிரையூற்றி
உள்ளன்புக்குள் உணர்வுகளை பொத்தி
உலகை வெல்லத்தான் காத்திருந்தேன்...

கண்கொண்டு திரைவிலக்கி
கனவுகளை அரங்கேற்றி
காதல் நான் வளர்த்திருந்தும்
கண்ணீர் குடத்துக்குள்ளேதான்
கண்ணயர முடிந்திருந்தது...‌

நேச‌ங்க‌ளை தேக்கிவைத்து குள‌த்து நீராய‌து
பாச‌ங்க‌ளை ப‌துக்கிவைத்து விழ‌ல் நீராய‌து...

வாலிப‌ வேட்கைக்குள்
வ‌ள‌ர்ந்த‌து சோக‌ங்க‌ள் ம‌ட்டும்
இள‌மையின் தோட்ட‌த்துக்குள்
பிற‌ந்த‌து ஏமாற்ற‌ங்க‌ள் ம‌ட்டும்...

பிற‌ப்பில் குற்ற‌ம் காண‌வே விழைந்தேன்
இறப்பில் தேற்ற‌ம் தேட‌வே முனைந்தேன்
சுற்றமெங்கும் சூனிய‌ங்க‌ளாய் உண‌ர்ந்தேன்
ம‌ற்றதெல்லாம் சூறாவ‌ளியால் சிதைந்தேன்...

எத்த‌னை பேர் சொந்த‌மென்று
எவ‌ருமில்லை என‌க்காக‌
எதைக்கொண்டு தேற்றுவ‌து
என் ம‌ன‌தின் சுக‌ம் காக்க‌...

தொட‌ர‌ட்டும்



உனக்கு மெனக்கும்
உறவுப்பாலம் ஒன்றில‌
உதவிப்பயணம் மட்டுமே
உணர்வலைகளில் ஒன்றின‌...

உதட்டோடு சிரித்தும்
உணர்வோடு பிரிந்தும்
உள்ளத்தால் துரத்தும் ஓர்
உறவறியா நிறுத்தம்...

உரிமைக‌ள் தொட‌ர்ந்தும்
ஊமைநில‌வ‌ர‌ங்க‌ள் தொட‌ரும்
உண்மைக‌ளை தொட‌
உன் நாவுமென் நாவும்
உள்ளுக்குள்ளே உறையும்...

தொட‌ர‌ட்டும்
தொட‌ரும் நில‌வ‌ர‌ங்க‌ள்
தொட‌ர்பு இல்லாத‌வையும் ம‌ன‌த்
தொடுகையில் உண‌ர‌ப்ப‌டு மென்ப‌தால்...

Saturday, September 24, 2011

உன் எதிர்காலத்துக்காய்

அழகென்று தானுனை யணைத்தேனென் ஆருயிராக‌
அடியெடுத்து வைத்திடுமெவ் வேளையிலும் அடியேனாக‌
அன்பினாலே நாள்தோறும் ஆண்டே னன்னையாக‌
ஆகாதென்றே தள்ளிவிட்டாய் நானும் பாவியாக...

புவிமீதின் பூவையரை பூவாய் நினைந்தேன்
புரியாவுன் பார்வையினில் தீயா யணைந்தேன்
விழிதேடிய வழியினில் நீயே ஒளியானாய்
விடைதந்த வாழ்வையேன் பிடுங்கியெறிந்தாய்...

காதலென்ன வெறும் காசென்றா யெண்ணினாய்
கானலெண்ணத்தினால் கடல் கடப்பதென்றா யெண்ணினாய்
உயிரை உயிராலுணர்ந்து உணர்வினை உள்வாங்கி
உடல்வேகுமத் தருணம்வரை உருகிடுதலே...

வேற்றுநாட்டு சொந்தத்தால் வேண்டாத வனானேனோ
வேலையொன் றில்லாததால் தீண்டாதவ னானேனோ
ஆண்பிள்ளையுன் அன்பினா லழிந்ததை யறிவாயா
வீண்பிள்ளையா னதுன் பழியாலதை புரிவாயா...

காட்டுக் கத்தலினா லென்காதல் உணர்த்தியிருப்பேன்
காவிச்சென்ற இதயமதை கூவி யழைத்திருப்பேன்
காதலர்நம் கடந்தகால முழுதும் சொல்லியிருப்பேன்
கன்னியுன் னெதிர்காலம் நினைந்து மெளன‌மாய் விம்மியிருந்தேன்

Sunday, September 11, 2011

வஞ்சந்தீர்க்கும் வசந்தங்கள்

நாட்களினி டைவெளி நம்மை பிரித்தது
நாளும் பொழுதும் நமதன்பை வளர்த்தது
காட்டி னிருள்போல் காயங்கள் தொடர்ந்தும்
காதலொன்றே நெஞ்சினில் மருந்தாகவே...

நெஞ்சத்தி னாழ‌த்தில் நெருப்பாய் கனன்றும்
நெடுநேர விழித்திருப்பில் நேசமும் எரியா
வஞ்சந் தீர்க்கும் வசந்தங்கள் கூடி
வஞ்சியின் வயதோடு போராடுதே...

பாதையோர பூக்களுமே பகிடியாயெனை பார்க்க‌
பாதம்வைத்து நடைபயில பெண்மையும் தயங்க‌
வாதையோடு வழிநெடுகிலும் வாரிவைத்த உன்நினைவில்
வானம்வரை யிடைவெளியாய் தெரிகின்றதே...

கடல்தாண்டி கனந்துய்க்க என்மன்ன வா
கனவுகளை மூட்டை கட்டினாய் என்மன்னவா
தடல்புடலான மணவாழ்க்கை என்மன்ன வா
தனிமையாய் போனதே என்மன்ன வா...

கருமுகிலே....கருமுகிலே

கவிமழை பொழிந்திட்டாய் கருமுகிலே
கலைந்தெங்கே போகிறாய் கருமுகிலே
பாக்களால் நனைத்திட்டாய் கருமுகிலே
பூத்த துமண் பூக்களாய் கருமுகிலே...

வெடித்திட்ட உதடுகளாய்
வெந்திட்ட மண்தரையை
மழைக் கரத்தீண்டலால்
மருந்திட்டாய் கருமுகிலே...

உறங்கிக்கிடந்த மரங்களும்
மடிந்தே கிடந்த புற்தரைகளும்
நீட்டியெழுந்து உன்னால்
நிமிர்ந்து நிற்கிற‌து க‌ருமுகிலே...

வெட்டிக்க‌தை பேசியே
விய‌ர்வை துடைக்கு மெங்க‌ள்
விட‌லைப்ப‌ருவ‌ம் ம‌ண்ணை
விடாப்பிடி யாய்க்கொத்தியே
விளைநில‌மாக்குது க‌ருமுகிலே...

ப‌துங்கியே யிருந்திட்ட‌
ப‌ள்ளிச்சிட்டுக்க‌ள்
ப‌ற‌ந்து ப‌ற‌ந்து பாதையிலே
க‌ள்ளக்குளிய‌லிடுகிற‌து க‌ருமுகிலே...

தூர்ந்துபோன குள‌க்க‌ரையும்
தூசு ப‌டிந்த‌ தெருக்க‌ளும்
காவிபிடித்த‌‌ சித்திர‌மாய்
அழுக்காடை மூட்டைக‌ளும்
ப‌ல்வ‌ரிசை காட்டியே
ப‌ளிச்சென‌ சிரிக்குது க‌ருமுகிலே...

வ‌ள்ள‌லாய் வ‌ந்திட்டாய் க‌ருமுகிலே
வ‌ள‌மாக்கி வ‌ழிந்திட்டாய் க‌ருமுகிலே
வாழ்வுக்கொளி யூட்டினாய் க‌ருமுகிலே
வைய‌முனை போற்றுது க‌ருமுகிலே...

இன்ப‌ மிது வன்றோ



ஐந் திரு மாத‌ங்க‌ளா யென்ம‌ணி வ‌யிற்றில்
நிந்த‌னை யோடே சும‌ந்தே னென் க‌ருவை -இந்
நாள் ம‌ட்டும‌தை என்குழ‌ந்தை யென்றுண‌ர‌வில்லை
நான் பெற்றுக் கொள்ள‌வும‌தை விரும்பிட‌வில்லை...

என் னைபுதைத்து முளைத்தெழுந்த‌  குழ‌ந்தாய்
நின் சோக‌க் க‌ருவாய் ஏனிங்கு ம‌ல‌ர்ந்தாய் -விண்
ம‌ழை போலொரு க‌ண்ணீர்க்க‌தை என‌க்குண்டு
ம‌ன‌ம் விட்டுசொல்லிட‌வே ம‌ன‌மொன் றிங்கில்லை...

ஊர்வாய் க‌ளையிழுத்து மூடிட‌வே என‌துற‌வுக‌ள்
பேர் காப்பாற்றிக் கொள்ள‌ ம‌ண்ணிலே -வேர்
விட்டு போன‌த‌ம் கெளர‌வ‌ம் காத்திட‌வேயென்
விட‌லை ப‌ருவ‌ம‌தை வீணாக்கிய‌ விரோத‌க்க‌ருவிது...

ம‌ண‌வாள‌ன‌து பேரும‌றியா முக‌ம‌றியா பேதையாய்
க‌ன‌வினில் ஜொலித்த‌ யென் க‌ற்ப‌னைக‌ள் -என‌
தாசையின் தாட்ப‌ரிய‌ங்க‌ளை ய‌ழித்து புகுத்திய‌
தாழாமையில் உருவான‌ தாய்மை யின்ப‌ம‌ல்ல...

மெய்தொட்டே யெழுதுகிறேன் ம‌ன‌தில் காய‌மே
தாய்மையில் வ‌யிற்றை நானும்த‌ட‌வி -சேய்
யென‌ நினைந்து ம‌ச‌க்கையில் ம‌கிழ்ந்த‌துமில‌
க‌ல்லைச் சும‌ப்ப‌தாய் கல்லாய்த்தான் விழித்திருந்தேன்...

ப‌த்துமாத‌த் தின்ப‌ல‌னாய் தாய்மையின் வ‌லியெனை
சித்த‌ங் க‌ல‌ங்க‌ச் செய்கையிலே சிசுவுனை -ப‌த்
திர‌மாயுல‌க‌ங்காண‌ச் செய‌வென‌ ப‌கைமையும் ம‌ற‌ந்தேன்
தாய்மையின் ம‌க‌த்துவ‌மிதோ த‌ர‌ணியில் ந‌ற்பேறிதோ...

பூரித்திட்ட‌ நெஞ்ச‌ம‌து பூமுக‌முனை க‌ண்ட‌தும்
வாரிய‌ணைத் திட்டெ  னைம‌ற‌ந்தே கொஞ்சிய‌தும் -பாரி
போலென‌து ம‌ன‌மும் பாலூட்டி துஞ்சிய‌தும்
போர்க்க‌ப்ப‌லென் குண‌மே மூழ்கிற்றே உன‌த‌ழுகையில்...

நினைவில் நின்றவை

01.சோ(so) சோவென ஆங்கில மழை அழகிய‌

தமிழ றிவிப்புக்களில்...


02.முயற்சியிலா பயிற்சியும்

சுழற்சியிலா முயற்சியு மென்றும்

சரித்திரம் படைப்பதில்லை...


03.அழ வேதோன்றிய தெனக்கு

அழ கில்லை யென்பதால்...


04.புன் சிரிப்பானது

பெண் சிறப்பானது...


05.கைப் பிடிப்பாயென காலமெலாம் கனாக்கண்டேன்

கைப் பிடியுடன் காலங்கரைந்துமுனை காணவில்லை...

Thursday, September 8, 2011

மனதில் தோன்றியது

1.எண்ணிலடங்கா ஆசைகளோடு
மண்ணிலடங்கிய ஆத்மாக்களின்
கண்ணீரடக்க வோயிந்த‌
புண்ணியதானம்!!

11.நட்பென்ற நாமகரணத்தில்
நமதுறவு நீண்டுகொண்டாலும்
நாமறியாத ஏதோவொன்று
நமக்குள் இழையோடுவதையறி கின்றாயா??

111.வாகன நெரிசலும்
வாழ்விட‌ நெரிசலும்
வாழ்க்கையை நெருக்கிவிடுகின்றது
தலைநகரில்!!

iv.நீர் மேல்
நிலா எழுதும்
நிச‌ப்த‌ம் இந்த
நிம்மதியான இர‌வில்
பெள‌ர்ண‌மி ஸ்ப‌ரிச‌மாக‌....

Saturday, September 3, 2011

எனது பார்வையும் கவிஞ‌ரின் பதிலும் (கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களின் "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதைத்தொகுப்பு)


எனது 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' பற்றி மனம் திறக்கும் ஓர் இலங்கை இளம் பெண் எழுத்தாளர் த.எலிசபெத்...


வணக்கம், இறுதியான பல சர்ச்சைகளை உருவாக்கிய அந்த இலக்கியப் பதிவைத் தொடர்ந்து இப்பொழுது எனது மனம் பூரிக்கும் ஒரு சுகமான பதிவை கொண்டுவருகிறேன். எனது கவிதைப் படைப்பான 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' என்கின்ற நூலை ரசித்து வாசித்த வளர்ந்துவரும் இளம் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான ராஜ் சுகா (த.எலிசபெத்) எனக்கு மின்னஞ்சலிட்ட தனது ரசனைக் குறிப்பு இது. பல உண்மைகளை அப்படியே சொல்லியிருக்கிறார். பெண் என்கின்ற தளத்திலிருந்து பார்த்தபடியால் பல ஆண் வரிகள் அவருக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் எதையும் தவாறாக சொல்லவில்லை. (என்று நினைக்கிறேன்). சரி அவருடைய அந்த மடலைப் படியுங்கள்.

உங்கள் கருத்திற்கும், ரசனைக்கும் மிக்க நன்றிகள் சுகா.. உங்கள் எழுத்துப் பயணமும் வெற்றிகராமனதாக தொடர வாழ்த்துக்கிறேன்.


கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களுக்கு வணக்கம்!


தங்களின் எழுத்துக்களை முதன்முதலில் முகப்புத்தகத்தின் வாயிலாகவே தரிசிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.புதுக்கவிதைகளிலும் யதார்த்தபூர்வமான நகைச்சுவையுண‌ர்வுடன் கூடிய உங்களது எழுத்துக்களே என்னை ரசிக்கத்தூண்டியது.உண்மையில் இன்றைய இலக்கிய உலகில் மரபுக்கவிதையை தவிர்த்து புதுக்கவிதைகளுக்குள் ஓர் புரட்சியே நடந்துகொண்டிருக்கின்றது.எத்தனையோ மூத்த இலக்கியவாதிகளின் கடுப்புக்களுடனும் கண்டிப்புக்களுடனும் வளர்ந்துவரும் இப்புதுக்கவிதை சாம்ராஜ்யத்தில் உங்களுடைய கவிதைகளுக்கும் சிறந்த களம் உண்டு என்பதனை தொகுப்பை வாசிக்கும்போதே உண்ர்ந்துகொண்டேன்.
"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற தொகுப்பின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அதன் எதிரலைகள் எண்ணற்ற எண்ணங்களை உருவாகிவிடும் சிறந்த கருத்துக்களமாக காணப்படுகின்றது வாழ்த்துக்கள்.
"தியாகம் அவள் பெயர்" என்ற தாய்மைக் கவியூடே ஆரம்பித்து சிறப்பித்திருப்பது வ‌ரவேற்புக்குரியது.அதில்,


" ஊர் உறங்கியும்
உறங்காத‌
உன் தாலாட்டும்
இன்னும் என்
காதுகளில் கேட்கும்
ரகுமானின் 'ஜெய் கோ'தான்"...

என்று தாலாட்டையும் இளைஞர்களின் இரவுநேர இசை மயக்கத்தையும் வர்ணித்துள்ளவிதம் ரசனை.அதிகமாக காதல் கருக்களை சுமந்துவந்த கவிதைகள், பலவிதமாக காதலை நோக்கியிருக்கின்றது."நீதான் அவள்" கவிதையில் காதலை ஏக்கத்தோடு பார்க்கின்ற வரிகளாகவும் "நீ நட்பு காதல்" தலைப்பில்,புரியும்போது விளங்காத காதல் பிரியும்போது உணர்கையில், காதலுக்கேயுரிய தடுமாற்றங்களின் வரிகளாகவும்,"கல்லறைக்கனவு" கவிதையில் ஒருதலைக்காதலின் ஓரங்க வலிகளை உண‌ர்த்தும் விதமாகவும்,"ஒரு ரயில் பயணம்" "ஒரு காதல் காவியம்" "அடங்காத காதல்" "மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" "கடற்கரை காதல்" என பல்வேறு கோணங்களில் கவிஞரின் பார்வை இளையவர்களின் மனதை வருடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

சின்ன சின்ன வரிகளோடு சித்திரம்போல் வரையப்பட்டுள்ள இத்தொகுப்பு பார்வைக்கும் வாசிப்புக்கும் புரிதலோடு நயந்துகொள்கின்றது.ஒவ்வொரு கவிதையும் சமூகத்தை வித்தியாசமான சிந்தனைகொண்டு தொட்டிருப்பதும் நிஜங்களின் பிரதியாக வெளிப்பட்டிருப்பதும் கவிதைகளுக்கு மேலும் கனத்தை சேர்த்திருக்கின்றது.இன்னும் கவிதையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகின்றது.

"முதிர்க்கன்னி" என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை அணுகியிருப்பது கவிஞரை பாராட்டச்செய்கின்றது.இங்கு கவிஞர் இனியவன் இஸாருதீன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது,


"கிழவனாக சிந்தித்து
குழந்தையாக வாழும்
வாலிப மனிதன்"

என அவர் குறிப்பிட்டது இங்கு நிஜமாகியிருப்பதில் மகிழ்ச்சியளிக்கின்றது.

அத்தோடு தேசத்தின் கடந்த கால வடுக்களின் வலிகளை கண்முன் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வரிகள்."செத்தா போய்விட்டேன்" கவிதையில்,


" ஒற்றைக்காலும்
ஒற்றைக்கையும்
ஒற்றையாய் நிற்க என்
இதயம் மட்டும்
இரட்டையாய் அடிக்கிறது
இறந்துவிடுவதா
இல்லை மறந்து
வாழ்ந்து விடுவதா?"

என்ற வினாக்களுக்கு இதயம் ஓர் கணம் நின்றியங்குகின்றது.அதே உணர்வை "முள்ளிவாய்க்கால் முடிவுரை" "பயணங்கள் முடிவதில்லை" ஆகிய கவிதைகளிலும் உணர முடிந்தது.

பொதுவாக பெண்களை குறைகூறாத ஆண்கள் மிக அரிது கவிஞர் மட்டுமென்ன விதிவிலக்கா? தனது "புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்" என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார்,


"மானத்திற்கும்
ஆடைக்கும்
சம்பந்தமேயில்லை இவள்
அகராதியில்
பாவம்,
வெளியில் தெரிபவை
அவள் அங்கங்கள் மட்டுமல்ல‌
வெளிறிப்போன நம் கலாச்சாரமும்தான்!"

என கலாச்சாரத்துக்காய் கவலைப்பட்டுள்ள கவிஞர், "நீதான் அவள்" என்ற கவிதையில்,


" என்
இளமையின் தாகம்
உன்னுடைய தேகம்
தீருமா என் சோகம்
இதுவா காதல் வேகம்?

என்பதனையும் அவரே உணர்த்தியிருக்கின்றார்.இதே விடயத்தினை " மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" கவிதையிலும் காணலாம்.இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்,எதிர்பார்ப்பதும் நீங்களே எதிர்ப்பதும் நீங்களே தான்.எதை வெறுப்பதாய், கண்டிப்பதாய் வெளியில் சொல்லுகின்றீர்களோ அதையே உள்வாங்கிக்கொள்ள முனைவது இந்த ஆண்களின் இயற்கையான இயல்பு என்பதை அழகாக கவிவரிகளில் தந்துள்ளார் வாழ்த்துக்கள்.

எவ்வளவுதான் நம்முடைய வளர்ச்சி உயரத்திலிருந்தாலும் எமது பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் பழைய வாழ்வின் நிழல்களில் ஒதுங்கிப்பார்ப்பதும் மனதுக்கு இனிமையான ஒன்றே அவ்வுணர்வுகளை கவித்துவத்துடன் காணும்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் மனம் குதுகலிக்கின்றது.அந்த இதத்தினை " எனது ஆட்டோகிராப்" "ஊர்ப்பக்கம்" ஆகிய கவிதைகளில் காணலாம்.

உடைத்து வைக்கப்பட்ட மாதுளம்பழத்தினைப்போல கவிதைகள் அனைத்தும் கண்களையும் கருத்தினையும் கவர்ந்துள்ளது.ஓர் நல்ல புத்தகத்தினை வாசித்த திருப்தியும் பெறுமதியான சிந்தனை வெளிப்பாட்டினை ரசித்த நிறைவும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றது.எத்தனை ஆர்வத்துடன் முதற்பக்கம் ஈர்த்ததோ அதே ஆவலோடு கடைசி ஏடுவரை தொடர்ந்தது இத்தொகுப்பினதும் கவிஞரினதும் வெற்றி எனலாம்.


இன்னும் பல்வேறு தளங்களுடன் சிறந்த களம் காணவும் இப்பெரிய இலக்கிய உலகில் உங்களுக்கென ஓர் சிறப்பான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


நன்றி
த.எலிசபெத்

Tuesday, August 30, 2011

"மீண்டு வந்த நாட்கள்" கவிதை தொகுப்பு மீதான இரசனைக்குறிப்பு

றாக்கை
நூல் : மீண்டு வந்த நாட்கள்
ஆசிரியர்: வதிரி.சி.ரவீந்திரன்
வெளியீடு : எஸ்.கொடகே சகோதரர்கள்
விலை: 250/=

 சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்கள், பாடசாலை பருவத்திலிருந்தே கவிதைமீது ஆர்வம் கொண்டிருந்தார். அதன் விளைவாக  1971ம் ஆண்டு 'ஈழநாடு' பத்திரிகையிலும் அதேயாண்டில் 'பூம்பொழில்' இலக்கிய சஞ்சிகையில் பிர‌சர‌மான‌ "எங்க‌ள் எதிர்கால‌ம்" என்ற‌ க‌விதையூடாக‌ இல‌க்கிய‌ உல‌கிற்குள் பிர‌வேசித்தார்.
 நாற்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ இல‌க்கிய‌ உல‌கில் இவ‌ர‌து ப‌ங்க‌ளிப்பு இருந்தாலும் இந்த‌ "மீண்டு வ‌ந்த‌ நாட்க‌ள்" தொகுப்பே முத‌ற் தொகுதியாக‌ வெளிவ‌ந்துள்ள‌து.க‌விஞ‌ரின் வெளிநாட்டுப்ப‌ய‌ண‌ம், அர‌ச‌த்துறையில் தொழில் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளினால் கால‌ம் தாழ்ந்த‌மையான‌து வேத‌னைக்குறிய‌ விட‌ய‌மே.
 "மீண்டு வ‌ந்த‌ நாட்க‌ள்" க‌விதை தொகுப்பான‌து, புதுக்க‌விதை க‌விதைத்துளிக‌ள், மெல்லிசைப்பாட‌ல‌க‌ள் என‌ மூன்று ப‌குதிக‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.க‌ட‌ந்த‌ கால‌த்தினை அப்ப‌டியே ப‌திய‌ம் போட்ட‌ க‌ருக்க‌ளை தாங்கிவ‌ந்துள்ள‌ க‌விதைக‌ள் மிக‌ எளிய‌ ந‌டையோட்ட‌த்தில் வாச‌க‌னை ம‌கிழ்வித்துள்ள‌து.சிர‌ம‌ங்க‌ளின்றி வாசிக்க‌க்கூடிய‌ இக்க‌விதைக‌ள் ச‌மூக‌த்தின் எல்லா த‌ள‌ங்க‌ளையும் எல்லா த‌ர‌ப்பின‌ரையும் தொட்டுக்காட்டியுள்ள‌ வித‌ம் சிற‌ப்ப‌ம்ச‌மாக‌ காண‌ப்ப‌டுகின்ற‌து.
அன்றாட‌ வாழ்வினில் அவ‌திறுயும் நில‌மைக‌ளை வெளிப்ப‌டுத்தியிருக்கும் க‌விஞ‌ர், த‌ன‌து "புதிய‌ க‌தை பிற‌க்கிற‌து" என்ற‌ க‌விதையில்,
" அடிமை குடிமைக‌ள் என்ற‌ நினைப்போ?
நாமும் ம‌னித‌ர்க‌ள் தாம்
ப‌ழைய‌ ந‌யினார் கால‌ம்
பாறி விழுந்த்திட்டுது
எங்க‌ள் உழைப்பை இன்னும் உறிஞ்ச‌வா
எண்ணுகிறீர்?
வையும் ப‌ண‌த்தை விரும்பினால்
தூக்கும் முட்டியை கையில்
ந‌யினார் பார்க்கிறார்
புதுமையாக‌ அவ‌னை"
         என்று ஒரு அடிமைத்த‌ன‌ எதிர்ப்பு ப‌ற்றியும் விடுத‌லை ப‌ற்றியும் ஆவேச‌மாக‌ பேசியிருக்கும் இக்க‌விதை போல‌ "புதிய‌ன‌ புகுத‌ல்" க‌விதையும் ப‌ழைய‌ன‌ க‌ழிந்து புதிய‌ வ‌ர‌லாற்றை உருவாக்கிடுமோர் உத்வேக‌த்தூண்ட‌ல்க‌ளாய் அமைந்திருப்ப‌து பாராட்ட‌ச்செய்கின்ற‌து. அதும‌ட்டும‌ன்றி ந‌ம‌து ச‌மூக‌த்தில் புரையோடிப்போயிருக்கும் மூட‌ந‌ம்பிக்கைக‌ள், சாதிப்பிர‌ச்ச‌னை, சுர‌ண்டும் வ‌ர்க்க‌த்தின் இய‌ல்புக‌ள், போலி கெள‌ர‌வ‌ம் போன்ற‌ குறைபாடுக‌ளை 'பாதை' 'உள்ள‌க்குமுற‌ல்' 'எழுத்து' 'அடிமைக்க‌ர‌ங்க‌ள்' 'நினைவை மீட்டிப்பார்', பாம்பு சாக‌வில்லை' என்ற‌ த‌லைப்பின் கீழ் திரைவில‌க்கி காண்பித்துள்ளார் க‌விஞ‌ர்.
ந‌ம‌து ச‌மூக‌த்தில் தொட‌ர்ந்து வ‌ந்த‌ பிர‌ச்ச‌னைக‌ளையும் தொட‌ர்ந்து கொண்டிருக்கும் அவ‌ல‌ங்க‌ளையும் வெளிப்ப‌டுத்தியுள்ள‌ இத்தொகுப்பான‌து எக்கால‌த்திற்கும் பொருந்த‌க்கூடிய‌ வெளிப்பாடாக‌வே காண‌ப்ப‌டுகின்ற‌து.த‌ன‌து ம‌ன‌ ஆத‌ங்க‌ங்க‌ளை வ‌ரிக‌ளாக்கியிருக்கும் க‌விஞ‌ரின் ச‌மூக‌த்தின் மீதான‌ பார்வையை மிக‌ இல‌குவாக்கி இல‌க்கிய‌ உல‌கிற்கு த‌ந்துள்ளார்.
 "மீண்டு வ‌ந்த‌ நாட்க‌ள்" உண்மையில் இவ‌ர‌து க‌விதைக‌ள் மீள‌ வ‌ந்த‌ நாட்க‌ளாக‌வும் வாச‌க‌ர்க‌ளுக்கு உற்சாக‌த்தை த‌ர‌க்கூடிய‌ மீட்சியாக‌வும் ந‌ல்ல‌ க‌விதைக‌ளை வாசித்த‌ திருப்தியையும் ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் எவ்வித‌ ஐய‌முமில்லை.
 ஆரோக்கிய‌மான‌ க‌விதைக‌ளை ப‌டைத்த‌ க‌விஞருக்கு ம‌ன‌ப்பூர்வ‌மான‌ வாழ்த்துக்க‌ளை தெரிவிப்ப‌தோடு இல‌க்கிய‌ உல‌கு வ‌ள‌ர்த்த‌ இவ‌ர‌து க‌விதைக‌ள் உங்க‌ள் க‌ருத்துக்க‌ளையும் க‌வ‌ரும் என்ப‌து திண்ண‌ம். என‌வே தொகுப்பினை வாசித்து உங்க‌ள் வாழ்த்துக்க‌ளையும் தெரிவித்திடுங்க‌ள்.

Saturday, August 27, 2011

"மீண்டு வந்த நாட்கள்" வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....

மீண்டு வந்த நாட்களின் வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....

 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டப அரங்கில் இனிதான ஒரு மாலை வேளையில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களுடைய "மீண்டு வந்த நாட்கள்"  கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பான ஓர் ஆரம்ப விழாவாக தொடங்கியது.
நிகழ்வுக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு சிறப்பு விருந்தினருடன் செல்லும்சந்தர்ப்பம் கிடைத்ததால் இரு அழைப்பாக அவ்விடம் சென்றேன்.தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் தான் சென்றேன்.அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் அதிகம் பேர் அமர்ந்திருக்கவில்லை அதனால் கொஞ்சம் பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன் படபடப்பும் காணாமல் போயேவிட்டது. முன் வரிசையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என எவரும் தென்படவில்லை,ஆனால் நான் அறிந்த சில முகங்களை நேரடியாக கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. சிலரை இவர்களாக இருக்கவேண்டுமென ஊகித்தேன் அநுமானம் சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் சபையும் நிறைந்துவிட்டது.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியற்துறை பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து வரவேற்புரை,நூல் அறிமுகம், வாழ்த்துரை, கருத்துரை என நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வருகைதந்த பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அரங்கம் ஓர் அறிவியற்கூடமாக எனக்கு காட்சிதந்தது.
கவிஞர் திரு.மேமன்கவி அவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி ஓர் இளைஞனைப்போல இயங்கிக்கொண்டிருந்தார்.சகல வேலைகளிலும் மும்முரமாக சிரித்த முகத்துடனும்,ஓர் வேகத்துடனும் நிகழ்ச்சியை சிறப்பித்துகொண்டிருந்தார்.
மேடையில் பேசிய அனைவரின் பேச்சுக்களும் கவிஞஎ வதிரி சி.ரவீந்திரன் அவர்களைப்பற்றியதாகவும் அவரின் கவிதைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களாகவே இருந்தது அதனால் கருப்பொருள் பிரள்வடையாமல் எமது கருத்துக்களும் சிந்தனைகளும் நிகழ்வுக்குள்ளே சுவாரஸ்யமாய் சுற்றிவந்து கொண்டிருந்தது.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிக்கப்பட்ட விடயம் குறிதவறி விழுந்துகொண்டிருக்கும் அத்தகைய சம்பவங்களில் துளியேனும் இங்கு நடைபெறாதது மகிழ்வைத்தந்தது.
அடுத்ததாக மூத்த இலக்கியவாதியும் மல்லிகை ஆசிரியருமான ஜீவா அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அநுபவமும் முதிர்ச்சியும் அவருடைய பேச்சின் பெறுமதியை இன்னும் கூட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட ஒருவிடயம், இன்றைய இளம் படைப்பாளர்களை பற்றியது அதாவது ஒரு தொகுப்பை வெளியிட்டதும் தங்களை பற்றிய பெறுமிதத்தில் இருப்பதாக சொன்னார் உண்மையில் அப்படி இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் இவர்களைப்போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பொறுத்துக்கொள்ள‌வேண்டியதும் உங்களைப்போன்றவர்களின் கடமையல்லவா? இளம் இரத்தம் சில விடயங்களில் வேகம், சில விடயங்களின் ஆவல் நிமித்தமாகவும் பிழைகள் நடப்பது இயற்கையே. இளம் படைப்பாளிகளை வளர்த்துவிடுங்கள் ஐயா என என் மனம் கேட்டுக்கொண்டது.

நிகழ்ச்சிகளை அமைதியாக ர‌சித்துக்கொண்டிருந்தேன் நேரம் மிக மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது வந்திருந்த எவரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள‌வில்லை  ஏனென்றால் என்னைதான்  யாருக்கும் தெரியாதே.
இவ்விழாவினை முழுமையாக இருந்து பங்குகொள்ளவேண்டும் என்ற ஆவலிலே வந்தேன் ஆனால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் ந‌டைமுறையிலுள்ள சில நிகழ்வுகளின் பயம் காரணமாகவும் பாதி நிகழ்வுடன் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன் நேரத்தை பார்த்தவண்ணம். மாலை மயங்கிவிழும் நேரம் இருள் மெதுவாக தன் கரம் கொண்டு ஏந்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில் நானும் எனது சகோதரியுமாக இருக்கையைவிட்டு எழுந்தோம். மனம் வேண்டாம் என சொல்லியும் காலம் போ என கட்டளையிட்டுக்கொண்டிருந்தது வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட திருப்தியுடன் இனிய நினைவுகளை சுமந்தவண்ணம் பாதையை நோக்கிநடந்தேன்.
    


















Monday, August 22, 2011

துளிக்க‌விதைக‌ள்

01.உன் நினைவுக ளென்(ன)னை
நிழலா(?)கத் தொடர்கின்றது
வெயிலில்லாத போதும்...!!

02.தேனுக்காவே வண்டுகள்
பூவுக்காக வருந்தியதில்லை
வானுக்காகவே யந்த நிலவு
விலகிச் சென்றதில்லை...!!

03.வளமில்லை பொருளில்
பலமில்லை யதனால்
நிலமில்லை எம்விதைகளுக்கிங்கு
களமில்லை யென்பேன்...!!

04.கவியூற்றுக்கள் உடைபடுகையில்
எரிம‌லையாக‌ குமுறுகின்ற‌ன‌
ஊற்றுக்களாக‌ கொப்ப‌ளிக்கின்ற‌ன‌
பாசிக‌ளாய் ம‌ட்டும்
ப‌டிந்துபோவ‌தில்லை!!

05.உன் வாயென்ன தேங்காய்த்துருவியா
தவறாய் நினைக்காதே
வார்த்தைகளெல்லம்
பூவாய் வந்து விழுகின்றது

06.உன்னையன்றி ஓர் மொழியும் தெரியாதெனக்கு-தமிழே
குற்றமின்றி கவிபுனையும் வழியை நீ விளக்கு

07.அன்னம் போல நம் செய்கைகள் இருக்கட்டும்
ஆறு போல் எம் வழிகள் தொடரட்டும்...

Tuesday, August 16, 2011

துலங்கிடுமோ மாயமான மாயமிது !!

 

 

 


வீடுகள் தோறும் வீதி வரையினில்
காடுகள் போலொரு கருமை படர்ந்தே
பாடுகள் தொடரும் பாதையெங்கிலும்
பாவம் எம்மக்காள் பயத்தினிலே...

வன்மம் நெஞ்சிலே வளர்த்த மிருகங்கள்
ஜென்மம் காத்திட வரைந்த உருவங்கள்
பெண்கள் மத்தியில் பீதியும் கிளம்பிட‌
பெலனில்லா மனங்களாய் புவியினிலே...

கல்லோடும் வாளோடும் காளையர்க ளிரவில்
பொல்லோடுந் தடியோடும் புலரும்வரை இருட்டில்
வல்லோர்கள் கூடிட்ட வேளையிலும் மாயனாய்
வந்ததும் பறந்தானாம் சிக்காமலே...

வாய்வழியாய் வந்திட்ட வதந்தியு மிங்கே
வானளவே விரிந்து வியாபித்தும் நின்றது
நோய் போலெமை பீடித்து மனதில்
நோக்க‌மெல்லாம் சிதறிட்டு பித்தானது...

காவலோனே காவலோனே காத்திரமாய் நீரும்
பாவப்பட்ட மக்களினை காத்திடுவீர் பாரும்
ஏவலோனாய் வந்துபோகும் மாயந்தனை தீரும்
ஏளனமேசெய்யாமல் வேகமாய்நீவீர் வாரும்...



இக்கவிதை 22.08.2011 அன்றைய இருக்கிறம் சஞ்சிகையில் பிரசுரமானது.

ஐப்பசி மாத [AUGUST.2011] மல்லிகை இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமானது

Friday, August 12, 2011

வேகமாய் நீள்கின்றது!!

சோகந்தனை சொல்லிடவும்
சொந்தமென்று எவருமில்லை
சோதனையை சுமந்திடவும்
இதயத்தினில் வலிமையில்லை...

ஆழ்ந்து அழத்தோன்றுகிறது
அடிமனதேனோ கனத்திடுகிறது
ஆனந்தங்கொண்ட நெஞ்சமின்று
ஆறுதலின்றியே அடங்கியிருக்கிறது...

தோல்வியினால் வீழ்ந்திடவே
கோழையல்ல என்நெஞ்சம்
வேள்வியினால் ஏழ்ந்திடவே
வாழ்வினிலே என்தஞ்சம்...

எண்ணை தீர்ந்த விளக்கிது
என்னை தீயாய் வளர்த்திட்டேன்
மண்ணைபோல விளைந்திட‌
கல்லையும் காலமாய்கொண்டிட்டேன்...

பாதை வேகமாய் நீள்கின்றது
பயண‌ம் எனையும் சூழ்கின்றது
வழியை எங்கோ தொலைத்திட்டேன்
விழியை ஒளியாய் தொடர்ந்திட்டேன்...








லண்டன் தமிழ் வானொலிக்கு என்றன் நன்றிகளுடன் சில வார்த்தைகள்

  தேசம் கடந்துவாழும் நேசங்களுடன் கிட்டிய ஓர் உறவுப்பாலந்தனை வழங்கிய லண்டன் தமிழ் வானொலி பொறுப்பாளர் திரு நடாமோகன் அவர்களுக்கும் "கீதாஞ்சலி" நிகழ்ச்சியின் அறிவிப்பாளினி திருமதி ஷயிப் மலிக் அவர்களுக்கும் வானொலியின் சகல அங்கத்தவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

  31.07.2011 அன்றைய கீதாஞ்சலி நிக‌ழ்ச்சியில் எனது நேர்காணலை ஒலிபரப்பி புதிய படைப்பாளியாக தமிழ் நெஞ்சங்களுக்கு மத்தியில் என்னை அடையாளப்படுத்தியதில் மகிழ்வடைகின்றேன்.இந்நேர்காணலை மீண்டும் ஒலிபரப்பி நேயர்களின் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் இணைத்து எனது கவிதைகளை உங்கள் பார்வையில் ஆராய்ந்து நல்ல பகர்ந்துகொண்டபோது உண்மையில் எனது கவிதைகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பாதாக உணர்ந்துகொண்டேன்.அந்த அனுபவத்தினை பெற்றுத்தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.நிறந்த நேசத்தோடு வளமான வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகர்ந்துகொண்ட தமிழ் உறவுகளுக்கு எனது நன்றியினை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

  திரு நடாமோகன் அண்ணா அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். உங்களது கவி விமர்சனம் உண்மையில் என் மனதை நெகிழவைத்தது. அத்தோடு எனது குறைகளையும் உணரமுடிந்தது.நீங்கள் தந்த ஆதரவும் ஊக்குவிப்பும் எனது உற்சாகத்தை இன்னும்ம் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. இன்னும் உங்களின் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் எதிர்ப்பார்த்திருகின்றேன்.

  நான்குவரிக் கவிதைகளுக்கு கிடைத்த வாழ்த்துக்கள் என் கவிகளுக்கு உரமூட்டியிருக்கிறது ஆனாலும் ஷயிப் மலிக் அக்கா அவர்கள் ஒரு வளர்ந்த கவிஞருக்கு தரக்கூடிய  வாழ்த்துக்களை அல்லது மகுடத்தினை பகர்ந்தது அதிகப்படியென்றாலும் உங்களின் பரந்த மனதிற்கும் ஊடகத்திற்கே இருக்கக்கூடிய சமநிலைப்பார்வைக்கும் என் சிரந்தாழ்த்துகின்றேன்.

  திரு நடா அண்ணா சொன்ன‌துபோல குழந்தையென்றால் அதை குழந்தையாத்தான் பார்க்கவேண்டும் வெள்ளைக்குழந்தை, கருப்புக்குழந்தை குண்டு குழந்தை, மெல்லிய குழந்தையென்ற பாகுபாடிருக்கக்கூடாது. இக்கொள்கையினை உங்களின் நிகழ்ச்சியினூடாக அறிய முடிந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் நிகழ்ச்சிகள் வளரவேண்டும் சிறப்படைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

  சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்.

நன்றி!
-த.எலிசபெத்-












ஓருயிர்

நீயும்
நானும்
ஒன்று
இரண்டு
நூறு
ஆயிரமென
எண்ணிக்கை
கடந்தின்று
ஓருயிர்
ஓரித‌ய‌மானோம் ந‌ம்
ம‌ண‌(ன‌)நாளில்

சின்னச் சின்ன சிந்தனைகள்

01.உனக்கு எதிரி நீயேதான்!!

உன்னை வென்றுபார்-இதோ
உலகையும் வென்றிட்டாய்...

உள்ளந்தனை உற்றுப்பார்-இதோ
உண்மைகளை கண்டிட்டாய்...

உபாதைகளை தாண்டிப்பார்-இதோ
உயரங்களை அடைந்திட்டாய்...

உனக்கு எதிரி நீயேதான்
உன்னை வென்று பார்!!


02.வாலிபத் திரை கிழிகையிலேதான்
வாழ்க்கையை நீயும‌றிகிறாய்
வ‌ச‌ந்த‌ங்க‌ளிருக்கும் போதோ
விழி மூடியே துயில்கிறாய்!!

03.நீதியின் பாதைக‌ள்
நீண்டு சென்றாலும்
வ‌ழிய‌தின் ந‌டுவிலே
வ‌லித்து நிறுத்திடுகிற‌து
பாத‌ங்க‌ள்!!

04.நெருக்க‌ப்ப‌டும் போதெல்லாம்
நொருங்கி விடாதே
வ‌ருத்தப்பட்டுன் ம‌ன‌மெல்லாம்
திருத்த‌ப் ப‌டுவ‌தைய‌றிந்திடு!!

05.பொருந்தாக் காத‌லினால்
பொல்ல‌டி ப‌டுவ‌திலும்
பொசுக்கும் காத‌லையே
பொறுமையோடே க‌ழித்திட‌லாம்!!











Monday, August 8, 2011

ம‌ன‌தில் நின்ற‌வை வ‌ரிக‌ளாய்...

01.என் கனவுகளெலாம்
உனதான தென்பதற்காய்
என் விடியல்களையும்
இருட்டடிப்புசெய்ய விரும்பவில்லை!!


02.ஆழ்ந்த உறக்கத்தினில்
ஆலமரத்தினின் றேதோ
ஆத்மாவின் சலசலப்பு
மரத் தடிச்சூழவுள்ள மனங்களுக்கு
மர்மப் பீதி இரண்டுநாட்களாய்
மந்திரஞ் சொன்னபிறகே
மாயமாய் போனதெலாம்
இரண்டுநாள் வேலைநிறுத்தத்தில்
இன்று காலைதான் வந்ததுபோனது
குப்பை வண்டி!!


03.ச‌ட்ட‌த்தினை ம‌திக்க‌ச்சொல்கின்றோம்
ச‌ட்ட‌மெம் கையிலிருக்கும்போது
ச‌ட்ட‌த்தினை குத்த‌கைக் கெடுக்கிறோம்
ச‌ட்ட‌த்தின் கையில் நா மிரு(று)க்கும்போது!!


04.ம‌ன‌ம் முழுக்க‌
வ‌லியின் விம்ப‌ங்க‌ள்
வ‌ழிந்து கிட‌ந்தாலும்
ந‌ம்பிக்கை மின்மினிக‌ள்
சிற‌க‌டிக்க‌ த‌வ‌றுவ‌தில்லை!!


05.நீ சிவ‌னே என்ற‌தை
நான் இயேசுவே என்கின்றேன்
நீ அல்லா என்ப‌தை
நான் புத்தாவென்கின்றென்
அழைப்புக்க‌ள் வேறுப‌ட்டாலும்
மூல‌ மொன்றுதான்
முளைக‌ளும் கிளைக‌ளுந்தானிங்கே
முட்டுக்க‌ளை ப‌ர‌ப்பின‌!!






Thursday, August 4, 2011

மனிதனாய் வாழ்ந்திடலாம்!!

நோன்புதனை நோற்பதினால்
மாண்புதனை பெற்றிடலாம்
அன்புதனை கொண் டதனால்
அண்ண‌லினை கண்டிடலாம்...

நபி வழியில் நடப்பதனால்
நல் லொளியை பெற்றிடலாம்
தூஆக்கள் கேட்பதனால்
தூய வழி கொண்டிடலாம்...

உயிருள்ள நாட்க‌ளெலாம்
உண்மையாக‌ இருந்திடுவோம்
தீங்கு செய்யும் க‌ய‌வ‌ருக்கும்
ந‌ன்மைத‌னை செய்திடுவோம்...

தூற்றுத‌லை தூஷன‌த்தை
தூர‌த்திலே த‌ள்ளிடுவோம்
தூய‌வ‌ரின் வ‌ழிந‌ட‌ந்து
மாய‌ லோகை வெறுத்திடுவோம்...

குர் ஆனை ஓதுவதால்
குற்றங்களை உணர்ந்திடலாம்
மற்றவரை மன்னிப்பதால்
மனிதனாய் வாழ்ந்திடலாம்...

[ரமழான் பெருநாளை கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்]

சாதிநெறி சாகட்டும்


சாதிகளில்லையடி பாப்பா
சாதனைத்தலைவன்
சரித்திரம் படைத்திட்டா னேயவன் பாவிலே...

சதையை யறுத்திடும்போது
சாதியை யெதிலே தேடுவாயோ
சிவந்த குருதிக்கடலிலே எந்த‌
சா(ந)திமூலத்தை அறிவாயோ??

ஊற்றுக்கள் உறவாய் உதிக்கையில்
உனக்கு மெனக்குமேனடா
உரிமைச்சண்டைகள்...

தேசம் வேறில்லை
தேக‌ம் வேறில்லை
தோற்ற‌மும் வேறில்லை
வில‌ங்கென்றும் ம‌னித‌ரென்றும்
வித்தியாச‌ம் அறியாயோ...

ம‌னித‌க் க‌ழிவாய்
ம‌ன‌தின் வ‌ழியாய் உன்
சாதிச் ச‌ரித்திர‌த்தை
சாக்க‌டை யிலிட்டெரித்திடு
ச‌ந்தோச‌க்குலைச்ச‌ல்க‌ள் சாக‌ட்டும்...

ஊரெங்கும் உற‌வுச்சூரிய‌ன் உதிக்க‌ட்டும்
உல‌கெங்கும் உன்ன‌த‌வொளி ப‌ர‌வ‌ட்டும்...



[முகப்புத்தகச்சொந்தங்களின் கருத்துக்களையும் இணைத்துள்ளேன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகர்ந்து கொண்ட சகோதர சொந்தங்களுக்கு மகிழ்வுடன் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.]

· · Share · Delete